சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

தமிழ் எழுத்தாள நண்பர்களுக்கு,

வணக்கம்.

அமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.

அதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும் ஒரு நல்ல தமிழ் எழுத்தாளர் நம்பிக்கையுடன் கிண்டிலில் காலடி எடுத்து வைக்கிறார்.

இக்கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை Pen to Publish - 2019 என்ற‌ இப்போட்டிக்கு தமிழில் நீள்படைப்புப் பிரிவில் 30 படைப்புகளும், குறும்படைப்புப் பிரிவில் 57 படைப்புகளும் காணக் கிடைக்கின்றன. இதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் இரண்டு உறுத்தல்கள்: 1) போட்டி தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நிறைவடைந்த நிலையில், இன்னும் அதே அளவு கால இடைவெளி தான் போட்டி முடியவும் மிச்சமிருக்கிறது என்ற சூழலில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவு. 2) தமிழின் புகழ் பெற்ற மற்றும் திறமையான எழுத்தாளர்களின் படைப்புகள் இப்பட்டியலில் இப்போதைக்கு அவ்வளவாய்க் காணக் கிடைக்கவில்லை. போட்டி புதிய‌வர்களுக்கானது மட்டுமல்ல; முன்னோடிகள் உள்ளிட்ட‌ எல்லாத் தரப்பினருக்குமானது எனும் போது இது ஓர் இடைவெளி என்றே படுகிறது.

அமேஸான் கிண்டில் Pen to Publish போட்டி பற்றி ஜெயமோகன் சுமார் ஒரு மாதம் முன் ஓரிரு கட்டுரைகள் அவரது தளத்தில் எதிர்மறையாய் எழுதியிருந்தார். நான் போட்டியின் நடுவராக மட்டும் இருந்திருந்தால் அது பற்றிய என் கருத்துக்களை முன்வைத்திருக்க முடியும். ஆனால் நான் அமேஸான் நிறுவன ஊழியனாகவும் இருக்கிற சூழலில் அதைத் தவிர்க்க வேண்டியவன் ஆனேன். தவிர, அது அவரது புரிதல், அனுபவம் மற்றும் நிலைப்பாடு. அதைச் சொல்ல அவருக்கு அத்தனை சுதந்திரமும் உண்டு. ஆனால் அதைத் தொந்தரவு செய்யாமல் பொதுவாக அது பற்றிச் சில கருத்துக்களைப் பகிர்வதில் பிழையில்லை என நினைக்கிறேன். ஆக இது அவருக்கான பதில் அல்ல.

1) அமேஸானில் மின்புத்தகம் பதிப்பிப்பது தீட்டு அல்ல. தமிழின் அத்தனை எழுத்தாளர்களும், அதாவது தன் எழுத்து வாசகரிடையே பரவலாக வேண்டும், அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணும் அத்தனை எழுத்தாளர்களும் கிண்டில் வந்தே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். என் கணிப்பு இது: அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழின் பொருட்படுத்தத்தக்க வாசகர்கள் அனைவரும் கிண்டில் வந்திருப்பார்கள்; அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் தமிழின் ஒட்டுமொத்த‌ வாசகர்களும் கிண்டில் வந்திருப்பார்கள். அதனால் அத்தனை லேசில் யாரும் கிண்டிலைப் புறந்தள்ளி விட முடியாது. நீங்கள் இன்றே கிண்டில் வருகிறீர்களா, சில ஆண்டுகள் கழித்தா என்பது தான் வித்தியாசம். சீக்கிரம் வருவது நல்லது என்பதை நான் விளக்க வேண்டியதில்லை. (ஜெயமோகனின் பெரும்பாலான நூல்கள் கிண்டிலில் கிடைக்கின்றன என்பதையும் கவனிக்கலாம். பட்டியல் இங்கே.)

2) அடுத்து இந்தப் போட்டி. இதில் வெற்றி பெறும் படைப்புகள் தரமற்றவையாக இருக்கும் என்ற பிம்பமே தவறானது என நினைக்கிறேன். சென்ற ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற படைப்புகள் இரண்டையுமே நான் வாசிக்கவில்லை. அதனால் அவற்றைப் பற்றி நான் கருத்துக் கூற முடியாது. ஆனால் சென்ற ஆண்டு நடுவராய் இருந்த இரா.முருகன் முதல்தர எழுத்தாளர் மற்றும் ஆழமான‌ வாசகர். அவர் நல்ல படைப்பு ஒன்றையே தேர்ந்தெடுத்திருப்பார் என நம்புகிறேன். தவிர, ஒரே ஆண்டு தான் தமிழில் இந்தப் போட்டி நடந்திருக்கிறது. அதை வைத்தே இப்போட்டியின் தரம் பற்றி முத்திரை குத்துவது நியாயமே இல்லாத செயல். இந்த ஆண்டு பா. ராகவனும் நானும் இப்போட்டிக்கு நடுவர்கள். எந்தச் சமரசமும் இன்றி தரமான படைப்பைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறோம். ஆனால் அதில் எங்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது. முதல் சுற்றில் விற்பனை மற்றும் வாசக மதிப்பீட்டின் அடிப்படையில் வடிகட்டப்படும் முதல் ஐந்து படைப்புகள் மட்டுமே (ஒவ்வொரு பிரிவிலும்) நடுவர்களாகிய எங்களுக்கு அனுப்பப்படும். ஆக, அந்த வட்டத்துள் நின்று தான் எங்கள் தேர்ந்தெடுப்பு நிகழ முடியும். ஆக, நல்ல படைப்பு எழுதுவதுடன் அதை முறையாகச் சந்தைப்படுத்தவும் வேண்டும். இப்போதைக்கு இணைய திராவிட எழுத்தாளர்கள் குழாம் இதைச் சிறப்பாகச் செய்கிறார்கள். மற்றவர்களும் இதைச் செய்ய வேண்டும். அப்போது தான் எல்லாத் தரப்பிலிருந்தும் நூல்களை இறுதிப் போட்டிக்கு வர வைக்க‌ முடியும். நல்ல வாசகர்களும் போட்டிக்கு வரும் தரமான படைப்புகளை வாங்கியும், வாசித்து மதிப்பீடு செய்தும் அவை இறுதிச் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். இது ஒரு பெரும் கூட்டுச் செயல்பாடு தான்.

3) பிரபல எழுத்தாளர்களுக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள மனத்தடை இருக்கலாம். அவர்களுக்குச் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். ஏழெட்டு ஆண்டுகள் முன் அசோக மித்திரன் அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கினார். கல்கியில் வெளியிடப்படுவது எல்லாம் தூய‌ இலக்கியப் படைப்புகளா என்ன? அதன் நிறுவனரான கல்கியே இலக்கியவாதி என நவீன எழுத்தாளர்களால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. ஆனாலும் அசோகமித்திரனுக்கு அந்த இதழ் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள எந்த மனத்தடையும் இல்லை. இது நடந்த சமயத்தில் தமிழின் மிக மூத்த எழுத்தாளர் அவர்; நொபேல் பரிசு வாங்கத் தகுதி வாய்ந்த தமிழ் எழுத்தாளர் எனப் பேசப் பட்டுக் கொண்டிருந்தவர். ஆனால் எந்தத் தயக்கமோ கூச்சமோ இன்றி பொதுவாய் இளையோருக்கானதாய்க் கருதப்பட்ட போட்டியில் கலந்து கொண்டார். அது நல்ல விஷயம். ஜெயமோகனின் முதல் நாவலான ரப்பர் அகிலன் நினைவுப் போட்டியில் பரிசு பெற்றது. அகிலனை ஒரு நல்ல எழுத்தாளராக எப்போதுமே ஜெயமோகன் ஒப்புக் கொண்டவரில்லை. ஆனால் அவர் பெயரிலான ஒரு போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு எந்த மனத்தடையும் இருக்கவில்லை. போலவே ஈராண்டு முன் நடந்த தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் அழகியசிங்கர் கலந்து கொண்டு ஆறுதல் பரிசு பெற்றார். இப்படியான முன்னோடிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டாமா? ஆக, உங்கள் பிரபல்யம் அல்லது இலக்கிய ஸ்தானம் ஒரு பொருட்டே இல்லை. நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால் கலந்து கொள்வதே நல்லது. ரூபாய் ஐந்து லகரம் என்பது சிறிய தொகை அல்ல. தமிழின் வேறெந்தப் போட்டியின் பரிசுத் தொகையும் இதன் பக்கத்தில் கூட வர முடியாது. அதை வெல்ல உங்களுக்குத் தகுதி இருப்பதாக உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் களத்தில் இறங்கி மோதிப் பார்ப்பதே அழகு. Winners never quit and quitters never win என்பதை மறக்க வேண்டாம்.

4) ஆக, இந்தப் போட்டியில் கலந்து கொண்டால் நம் பற்றிய பிம்பம் கெட்டுப் போகும் என நினைத்து அஞ்ச வேண்டியதில்லை. நான் அமேஸான் நிறுவன ஊழியனாய் இல்லாமல் இருந்திருந்தால் கடந்த ஆண்டு நிச்சய‌ம் கலந்து கொண்டிருப்பேன், இந்த ஆண்டு கன்னித் தீவு நாவலைக் கூட அனுப்பி வைத்திருப்பேன். இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ரகசிய இச்சையுடன் இருக்கும் சிலபல எழுத்தாளர்கள் பெயர்களைக் காற்றுவாக்கில் கேள்விப்படுகிறேன். தயங்காமல் கலந்து கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள். அவ்வளவு கௌரவம் பார்த்தால் புனைப்பெயரில் கூட எழுதுங்கள். (ஆனால் வங்கிக் கணக்கு, PAN போனற விவரங்கள் உண்மையாய் இருக்க வேண்டும்.)

5) கிண்டில் போட்டி பற்றி தமிழ்ச் சூழலில் திணிக்கப்பட்டிருக்கும் அந்த எதிர்மறைப் பிம்பத்தை உடைக்கவே நான் விரும்புகிறேன். அதற்கு ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் ஆயிற்று. அதன் முதல் படியாக புதிய எழுத்தாளர்கள் மட்டுமின்றி தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும். ஓராண்டில் உருவாக்கப்பட்ட பிம்பத்தை அடுத்த ஆண்டு உடைக்க முடியாதா என்ன! ஆண்டுதோறும் தமிழின் சிறந்த நாவல் அல்லது சிறுகதைத் தொகுதி அல்லது கவிதைத் தொகுதி இப்போட்டியில் கலந்து கொண்டு வென்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். தக்கது வெல்ல‌வில்லை என்று புகார் சொல்லிக் கொண்டிருப்பதை விட தக்கது ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பது தானே முறை! முந்தைய தலைமுறை போல் இல்லை இத்தலைமுறை வாசகர்கள். அப்போது வெகுஜன எழுத்து, சீரிய(ஸ்) இலக்கியம் எனத் திட்டமான பிரிவினை இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் அது மெல்ல மெல்ல அழிந்து விட்டது. இப்போது வெகுஜன இதழான ஆனந்த விகடன் இலக்கியவாதிகளின் சிறுகதைகளைத்தான் வெளியிடுகிறது. இன்று பெரும் வாசகர்களைக் கொண்டவ‌ர்களான ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும், சாரு நிவேதிதாவும், மனுஷ்ய புத்திரனும், பெருமாள்முருகனும், பா.ராகவனும் சீரியஸ் எழுத்தாளர்கள் தாம். அப்படி இருக்கும் போது ஏன் அமேஸான் போட்டி வெகுஜன படைப்புகள் மட்டுமின்றி நல்ல இலக்கியங்களையும் அடையாளங்காட்டும் களமாக முடியாது? மேடை கோணல் எனச் சொல்லும் முன் ஆடிப் பார்க்கலாம் தானே! அதில் உண்மையிலேயே இழப்பதற்கு உங்களுக்கு ஒன்றும் இல்லை.

எனக்கு இணையம் தெரியாது, கிண்டில் தெரியாது, எல்லாம் தாண்டி சந்தைப்படுத்துதல் பற்றிச் சுத்தமாய்த் தெரியாது என்றெல்லாம் சொல்பவர்களுக்கு: இது பற்றி நானும் பா. ராகவனும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதி வருகிறோம். அது போக, எழுத்தாளர்களுக்கு ஒரு சிறுபயிற்சி வகுப்பு போல் நடத்தலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோம். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஆக, பிரபல எழுத்தாளர்களே, நீங்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளுங்கள். எப்படி ஒரு புதிய எழுத்தாளருக்கு இது ஒரு திருப்புமுனையாய் இருக்குமோ அதே போல் உங்களுக்கும் இருக்கலாம். ஆம், எழுதி லகரத்தில் சம்பாதிப்பது என்பது நிஜமாகவே திருப்புமுனை இல்லையா, நண்பர்களே?

வாருங்கள். எழுதுங்கள். வெல்லுங்கள்.

- CSK

*

தொடர்புடைய பதிவுகள்:
http://www.writercsk.com/2019/09/pen-to-publish-2019.html
http://www.writercsk.com/2019/09/blog-post.html
http://www.writercsk.com/2019/09/blog-post_15.html
http://www.writercsk.com/2019/09/pen-to-publish.html

Comments

நாவல் சிறுகதைத் தொகுப்பு கட்டுரைத்
தொகுப்பு எல்லாம் பதிவு செய்யலாம்
இந்த ஆண்டு கூட ஒரு சிறுகதைத் தொகுப்பு கட்டுரைத் தொகுப்பு பதிவு
செய்திருக்கிறேன் சந்தை படுத்துவது
என்பது தான் புரியவில்லை!
நாமே போய் படியுங்கள் என்று ஆள்புடிக்க முடியமா? பொருள் வாங்க
வேண்டும் என்று வேறு சொல்கிறார்க்கள்! அதெல்லாம் தான்
புரியவில்லை!
முதல் கட்டத் தேர்வில் இடம்பெறும் 5இல் 2ஐத் தேர்வு செய்யும் பொறுப்பையேனும் நடுவர்களுக்கு வழங்கலாமே. 5ஐயும் அமேசானில் வணிகம் செய்பவர்களே தேர்வு செய்வது நெருடலாக உள்ளதே.
அமேசானில் வணிகம் செய்பவர்கள் செய்யும் தேர்வு சரியாகவே[பெரும்பான்மை] இருக்கும் என்று நிர்வாகம் நம்புகிறதா? இவர்களால் தேர்வு செய்யப்படாத படைப்புகளில் பரிசுக்கான தகுதியைப் பெற்ற படைப்புகள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றாகிறதே!
நீதிபதிகளுக்குப்
படிக்கக் கிடைப்பது
வெறும் ஐந்து புத்தகங்கள் தான்
என்றால் அது வியாபார திறமை
உள்ளவர்கள் புத்தகங்கள் என்று
சொல்கிறீர்கள்.
அப்படியானால் நல்ல புத்தகங்கள் எல்லாம் ஒதுக்கப்
பட்டு விடும் என்று நினைக்கிறேன்.
எழுத்து திறமையை விட வியாபாரம் செய்யும் திறமையுள்ளவர்கள் தான்
பயன்பெற முடியுமாஎன்பதை
தயவு செய்து விளக்குங்கள்!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்