Posts

பெருங்களிறு [குறுநாவல்] - 4

Image
பெருங்களிறு - பாகம் 1: தலை   பெருங்களிறு - பாகம் 2: உடல்   பெருங்களிறு - பாகம் 3: கால் *   பாகம் 4: வால் மனதால் தனித்து விடப்படும்போதுதான் கொடூரமான தனிமையை அனுபவிக்கிறோம். ஒரு நாள் இரவு தம்மா யோசித்தபடி படுத்திருந்தாள். இப்படி வீம்பில் எல்லோரையும் ஒதுக்கி எதை அடையப் போகிறேன்? சந்தா இத்தனை ஆண்டுகளும் தினம் புணர்ச்சி கண்டவள், காலைக் கடன் போல் கலவியும் தினசரிகளில் அங்கமாகி விட்ட ஒன்று. திடீரென ஒற்றை ராத்திரியில் இனி உடற்சுகம் கிடையாது என்று சொன்னால் என்ன செய்வாள்? அதுதான் தடுமாறி விட்டாள். மின்சாவும் இத்தனை நாளும் என் காலைக் கட்டிக் கொண்டு கிடந்தவன். எத்தனையோ முறை கெஞ்சி இருக்கிறான், நான்தான் கறாராகப் பிடிவாதமாக இருந்து விட்டேன். அப்படிப் பட்டினி போட்டதன் விளைவாக சந்தா அழைத்ததும் சலனப்பட்டு விட்டான். தனக்கு உரிமை இல்லாத பெண் கலவிக்கு அழைக்கும் போது பெரும்பாலும் ஆண் மறுப்பதே இல்லை. அது அவனுக்கு வாய்ப்பு, அது அவனுக்கான‌ அங்கீகாரம். தவிர‌, அப்போது மறுத்தால் அது அவனது இயலாமை என்றும் தூற்றப்படும். அதைத் தவிர்க்க ஆண் இயல்பாகவே இணங்கிப் போகிறான். அது மனமோ உடலோ, எப்போதும் உறவைத் தேர்ந்தெடுக்கும்

பெருங்களிறு [குறுநாவல்] - 3

Image
பெருங்களிறு - பாகம் 1: தலை   பெருங்களிறு - பாகம் 2: உடல் *   பாகம் 3: கால் அமாவாசை இரவு நரதுவுக்கு நன்கு மதுவை ஊற்றிக் கொடுத்தாள் சந்தா. அன்று மிக உற்சாகமாகக் குடித்தான். வழக்க‌த்தை விட இரண்டு மடங்கு. வயிறு நிரம்பி விட்டது என்று சொல்லி உணவை மறுத்து விட்டுக் கலவிக்குத் தயாரானான். இடையிலேயே போதையில் மயங்கிச் சரிந்தான். அவனைத் தள்ளி விட்டு ஆடைகளைச் சரி செய்து அடுத்த அறைக்குப் போனாள் சந்தா. தம்மா உறங்கிக் கொண்டிருந்தாள். நீண்ட பயணம் இருக்கும் என்பதால் அவளைக் கொஞ்சம் தூங்கச் சொல்லி இருந்தாள். நள்ளிரவு கடந்திருந்தது. அவளை உலுக்கி எழுப்பினாள். தம்மா ஆழ்நித்திரைக்குள் செல்லாமல் புரண்டு கொண்டிருந்ததால் உடனே எழுந்து கொண்டாள். ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த மூட்டையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டாள். நிலவின் துணையற்ற அவ்விரவின் கைப் பற்றிப் பிரயாணத்துக்கு ஆயத்தமானாள். சந்தா கைகளில் விளக்கை எடுத்துக் கொண்டாள். குடிலில் இருந்து சப்தம் காட்டாமல் இருவரும் வெளியே வந்தார்கள். ரத்த நந்தகாவின் கொட்டகைக்கு வந்தார்கள். அங்கே மின்சாவும் மூட்டையுடன் தயாராக இருந்தான். அவனுக்கு அந்த‌ப் பயணமே ஒரு சாகசம் போல்

பெருங்களிறு [குறுநாவல்] - 2

Image
பெருங்களிறு - பாகம் 1: தலை   * பாகம் 2: உடல் தம்மா வழக்கம் போல் கொட்டடியில் இருந்த நரதுவுக்கும் மின்சாவுக்கும் குடுவையில் தேநீர் எடுத்துப் போய் கோப்பையில் ஊற்றினாள். மின்சா அதைப் பருகியபடி கேட்டான். “அண்ணா, இந்த வெள்ளை யானை ஏன் இப்படி இருக்கிறது?” “இப்படி என்றால்?” “அமைதியற்று “ம்ம்ம். அதைக் கேட்கிறாயா! இதற்குப் பின் ஒரு சிறிய கதை இருக்கிறது என்கிறார்கள்.” “என்ன அது?” “துயரக் கதை. பரவாயில்லையா?” “சொல்லுங்கள்.” தேநீர் பருகிக் காலிக் கோப்பைகளைத் தரும் வரை காத்திருந்து அவற்றை வாங்கிப் போவது தம்மாவின் வழக்கம். அன்று அப்பேச்சு ஆர்வம் ஊட்டியது. அவர்கள் சீக்கிரம் தேநீர் பருகி விடக்கூடாதே எனக் கவலைப்பட்டாள். அப்புறம் அங்கே நிற்க முடியாது. “ரத்த நந்தகாவுக்கு ஒரு பெண் துணை உண்டு. அதன் வழி ஓர் அழகிய‌ குட்டி யானையும் இருந்துள்ளது. பெட்டைக் குட்டி என்கிறார்கள். நம் ஆட்கள் சியாம் ஆக்ரமிப்புப் போரில் வெற்றி பெற்று ரத்த நந்தகாவை இங்கே அழைத்து வரும் போது குடும்பத்தோடா கூட்டி வருவார்கள்! மனைவியையும் மகளையும் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டார்கள்.  ரத்த நந்தகா குடும்பத்தைப் பிரிந்த துயர‌த்தில்தான் எல்

பெருங்களிறு [குறுநாவல்] - 1

Image
பாகம் 1: தலை மலைப் பாறையில் படர்ந்து பரவும் அருவியாய் இரவு மீது இருள் தழுவிக் கிடந்தது. யாகத்தின் மந்திர உச்சாடனம் போல் ராப்பூச்சிகள் சதா உளறிக் கொண்டிருந்தன‌. ரத்த நந்தகாவின் பரந்த முதுகின் மீது ஏறி அமர்ந்த போது தம்மாவுக்குக் கால்களின் சங்கமத்தில் குறுகுறுவென ஓர் உணர்வு ஓடியது. முதலில் அந்த வெண்யானையின் ரோமக் கம்பிகள் தன் அந்தரங்கத்தில் குத்துவதாகத் தோன்றி, இடுப்பாடை அள்ளிச் செருகித் தடுப்பு செய்தாள். அப்போதும் அந்த வினோதக் குறுகுறுப்பு நீங்கவில்லை. எனில் அது இல்லை. வேறு என்ன? யோசித்துக் கொண்டிருக்கும் போதே அடிவயிறு வலிக்க ஆரம்பித்தது. கண்களை இறுக மூடி வலி தாங்கிய சில கணங்களில் குருதி கசியப் பூப்படைந்தாள். அஃது புரிந்தோ புரியாமலோ வெள்ளைக் களிறு பிளிறியது!   அந்த‌ வாலைக் குமரியின் அறியாமையை, ஆர்வத்தை புது வனப்பும் மிகு வெட்கமும் ஆட்கொண்டன‌. அவளுக்குப் பின் அமர்ந்து, ஒரு கையில் அங்குசத்துடன் மறுகரத்தை அவளது வறிய இடையைச் சுற்றித் தயக்கமாகப் போட்டிருந்த‌ மின்சாவைச் சட்டென‌த் தள்ளி விட்டு யானையின் முதுகிலிருந்து சரிந்திறங்கி குடில் நோக்கி ஓடினாள் தம்மா. மின்சா புரியாமல் விழித்தான். ஏன் இவள

எழுத்தாளன் அரசியல் பேசலாமா?

ஓர் எழுத்தாளனின் அரசியல் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்ச் சூழலில் எப்போதும் கலவையான கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. அவன் சமகால‌ அரசியலை நேரடியாகப் பேச வேண்டும் என்பது முதல் அரசியல் குறித்து ஏதும் பேசவே கூடாது என்பது வரை அவற்றிடையே பார தூர வித்தியாசங்கள் இருக்கின்றன‌. இவற்றுக்கு உதாரணமாக உள்ள‌ எழுத்தாளர்களைப் பார்க்கிறோம். மனுஷ்ய புத்திரன், இமையம், சு. வெங்கடேசன், தமிழச்சி, கனிமொழி போன்றோர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கண்மணி குணசேகரன், ஜோ டி க்ரூஸ் போன்றோர் கட்சி உறுப்பினர் இல்லை என்றாலும் தீவிரமான சார்பெடுத்து அரசியல் பேசுகிறார்க‌ள். ஜெயமோகன் மீதும் அரசியல் சார்புள்ளவர் என்ற பார்வை இருக்கிறது. ஆனால் அவர் கிட்டத்தட்ட எல்லாத் தரப்பையும் கடுமையாக எதிர்த்தும் கொஞ்சம் ஆதரித்தும் எழுதியிருக்கிறார். சாரு நிவேதிதா எல்லோரும் வியக்கும் வண்ணம் எப்போதாவது எதையாவது எதிர்த்தோ ஆதரித்தோ எழுதுவார். பெருமாள் முருகன் முற்போக்கு தரப்பு. எஸ். ராமகிருஷ்ணனோ, யுவன் சந்திரசேகரோ என்ன அரசியல் தரப்பென எவருக்கும் தெரியாது. அக்காலத்தில் ஜெயகாந்தன் வெளிப்படையான அரசியல் சார்பு