தொலைக்காட்சிப் பேய்

"யாவரும் நலம்" திரைப்படம் ஆவி போன்ற அமானுஷ்ய சமாச்சாரங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு கதை. யோசித்துப்பார்த்தால் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கையில்லாதவனான எனக்கு இப்படம் பிடித்திருக்கக் கூடாது. ஆனால் முரண்பாடாய் இப்படம் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. அது தான் கலையின் வெற்றி - கொள்கைகளைத் தாண்டிய சங்கதி அது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.


டைட்டில் கார்டில் தொலைக்காட்சியின் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் காட்சிகளைக் காட்டும் போதே டிவி தான் படத்தின் பிராதான பாத்திரம் என்பதை உணர்த்தி விடுகிரார்கள். முப்பது வருடங்களுக்கு முன் அகாலமாய் இறந்தவர்களின் ஆவி தொலைக்காட்சிக்குள் நுழைந்து, தம் சாவுக்கு காரணமானவனைப் பழி தீர்ப்பது என்று எழுதினால் முழுக்கதையையும் சொன்னது போலாகி விடும். அதனால் வேண்டாம்.

எட்டு பேர் கொண்ட மாதவனின் கூட்டுக்குடும்பம் ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு குடிபெயர்கிறது. அந்த அப்பார்ட்மெண்ட்டின் 13வது மாடியிலுள்ள 13 எண் கொண்ட அவர்கள் வீட்டில் மட்டும் 13:00 மணிக்கு தொலைக்காட்சியின் 13வது சேனலில் "யாவரும் நலம்" என்கிற நாடகம் ஒளிபரப்பாகிறது. அதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் இவர்கள் குடும்பத்திலும் நடக்க ஆரம்பிக்கிறது என்பது படத்தின் சுவாரசியமான ஆதார முடிச்சு.

மிக அழகாக திரைக்கதையை நகர்த்தி நம்மையும் இருக்கை நுனியில் அமர்ந்து பயப்பட வைக்கிறார்கள். பல இடங்களில் "அட!" (மாதவன் மாடி ஏற ஏற இரண்டாவது தளமே வந்து கொண்டிருப்பது, நாடகத்தின் டைட்டில் கார்ட் - கதை: ஈஸ்வரன், திரைக்கதை: காலதேவன், வசனம்: எ.ம.தர்மன், ஒளிப்பதிவு: கதிரவன் இயக்கம்: ஆத்மன், மாதவன் தன் அண்ணன் குழந்தைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு லிஃப்டில் செல்வது).

மாதவன் தான் இது போன்ற படங்களில் (அதாவது ஹீரோயிசமற்ற) நடிக்கத் தமிழில் தோதான ஒரே ஆள் என்பது ‍போல் ஆகிவிட்டார். நிறைய இடங்களில் வெளுத்துக் கட்டுகிறார் - அதுவும் அவர் பயப்படும் காட்சிகளில் (உதாரணம்: வீட்டுக்கு வெளியேயும், உள்ளேயும் நின்று தன்னைத் தானே செல்ஃபோனில் படமெடுத்து அதிரும் காட்சி, தான் தான் கொலையாளி என நினைத்து தன்னை வீட்டுக்குள் வைத்து பூட்டுமாறு கதறும் காட்சி).

அவர் மனைவியாய் வரும் நீத்து சந்திரா காமசூத்ரா படித்து அற்புதமாய் சிக்கன் தந்தூரி செய்கிறார் (இது புரிய வேண்டுமெனில் படத்தைப் பாருங்கள்). சரண்யா வழக்கம் போல். ப‌டத்தில் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களைக் காட்டிலும் அந்த டிவி நாடகத்தில் வருபவர்கள் தான் அதிகம் மனதில் நிற்கிறார்கள். மற்றப‌டி படம் முழுக்க முழுக்க மாதவன் ராஜ்யம். ஆனால் அது உறுத்தவேயில்லை என்பது தான் பெரிய‌ ஆச்சரியம்.

ஒளிப்பதிவு P.C.ஸ்ரீராம் என்று போடுகிறார்கள். நிஜமா? பாடல்களே தேவையில்லாத படத்துக்கு ஷங்கர்-இஷான்-லாய்க்கு எதற்கு சம்பளம் கொடுத்து வீணடித்திருக்கிறார்கள் எனப்புரியவில்லை. பின்னணி இசை மட்டும் பரவாயில்லை. ஒரு வீட்டுகுள்ளேயே முழுப்படத்தையும் எடுத்து விட்டதால் சமீர் சந்தாவுக்கு அதிகம் வேலையில்லை. படத்துக்கு முக்கிய பலம் ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங்கும் லக்ஷ்மி நாராயணனின் ஒலிப்பதிவும்.

நிறைய இடங்களில் டிவி சீரியல் அல்லது தொலைக்காட்சி நெடுந்தொடர் பார்ப்பது போலிருந்தாலும், படத்தின் ஒட்டுமொத்த உணர்வு திருப்திகரமாகவே இருக்கிறது. படத்தின் இறுதி முடிச்சு அவிழ்க்கப்படும் கணங்களில் திரையரங்க இருட்டில் பயத்துடன் என் மனைவி என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டாள். அது தான் ஒரு இயக்குநராய் விக்ரம் K. குமாரின் வெற்றி. இதை தமிழின் சிறந்த‌ பேய்ப்படம் என தைரியமாய் அறிவிப்பேன்.

என் மனைவியிடமே பயங்காட்டியிருக்கிறார்களே!

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்