பிரிவோம் சந்திப்போம்

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர் கடைசியாய்ப் பங்காற்றிய படைப்பு வெளியாகி, அது பற்றி மோசமாய் விமர்சனம் எழுத நேர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதுவும் அந்த ஒருவர் என் ஆதர்சமான சுஜாதா என்றெண்ணும் போது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆயினும் உணர்ச்சியை விட உண்மை முக்கியம் என்பதால்...

எழுத்தாளர் சுஜாதாவின் நாவலான "பிரிவோம் ச‌ந்திப்போம்" A.R.காந்தி கிருஷ்ணாவின் இயக்கத்தில் "ஆனந்த தாண்டவம்" என்கிற திரைப்படம் ஆகியிருக்கிறது. "படம் எப்படியிருக்கிறது?" என்ற கேள்வி என் போன்ற சுஜாதாவின் தீவிர வாசகர்களுக்கு embarrassing ஆன விஷயம் தான். ஆம். படம் பற்றி நேர்மையாய் சொல்ல வேண்டுமெனில் "குப்பை".

எண்பதுகளின் இறுதியில் இரு பாகங்களாய் "பிரிவோம் ச‌ந்திப்போம்" நாவலை ஆனந்த விகடனில் சுஜாதா தொடராய் எழுதிய போது, அது வாசகர் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றது. சுஜாதா எழுதியதில் பிடித்தது எது எனக் கேட்டால் அவர் வாசகர்களில் தொன்னூறு சதவிகிதம் பேர் "பிரிவோம் ச‌ந்திப்போம்" என்று சொல்லுவார்கள் - அதை ஓரளவுக்கு அவரும் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் அந்த நாவல் அதன் தகுதிக்கு மீறிப் புகழ் பெற்று விட்டதாகவே எண்ணுகிறேன். அதை விட சிறப்பான பல நாவல்களை அவர் எழுதியுள்ளார் (உதா: ஆதலினாற் காதல் செய்வீர், திசை கண்டேன் வான் கண்டேன், மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, ஆ...!, எப்போதும் பெண், நிலா நிழல், காந்தளூர் வசந்தகுமாரன் கதை, கரையெல்லாம் செண்பகப்பூ, விபரீத கோட்பாடு).

அவருடைய பிற படைப்புகளோடு ஒப்பிடாமல், தனியே நோக்குங்கால் "பிரிவோம் சந்திப்போம்" கூட நல்ல நாவல் தான். ஆனால் திரைப்படமெடுக்க அது சுத்தமாய் உதவாது - அதுவும் தமிழ் திரைப்படத்திற்கு. சுஜாதாவின் பல நாவல்கள் இப்படியானவை தான். இந்நாவலை படமாக்க முடிவு செய்ததே பிரதான‌ தவறு. அது பல்கிப் பெருகி படத்தை ஆக்ரமித்து விட்டது.

இதில் காந்தி கிருஷ்ணாவின் குற்றமும் ஏதுமில்லை. அவர் நாவலை முடிந்த வரை "அப்படியே" திரையில் கொண்டு வந்திருக்கிறார். அதற்கே அவரைப் பாராட்டலாம். ஆனால் அந்த "அப்படியே" பல இடங்களில் எதிர்மறையாகயும் அமைந்து விட்டது. பல காட்சிகள் மிகச் செயற்கையாக நாடகத்தனத்துடன் தெரிகின்றன. He did justification to the novel; but missed the cinema.

"பிரிவோம் சந்திப்போம்" நாவலைப் பொறுத்தவரை மதுமிதா தான் அதன் பிரதான‌ கவர்ச்சி - அதாவது prominent attraction. படத்தில் தமன்னா அந்தப் பாத்திரத்தை மிக‌க்கொடூரமாக‌ சிதைத்திருக்கிறார். பல இடங்களில் மதுமிதா கதாபாத்திரத்தின் ஆதார‌ குணமான முதிர்ச்சியின்மை என்பது மறந்து போய் மனநிலை குன்றியவரோ என எண்ண வைக்கிறார். Intolerable.

அவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் ரகு கதாபாத்திரம் ஏற்றிருக்கும் சித்தார்த். குரல் வேறு 7/G ரவிகிருஷ்ணாவை ஞாபகப்படுத்துகிறது (அவர் நிஜத்தில் மென்பொருளாளர் என்கிறார்கள். நடிப்பை விட்டு விட்டு தன் பிழைப்பைப் பார்க்கக் கிளம்பலாம் - புண்ணியமாவது மிஞ்சும்). சிட்டி மட்டும் ரசிக்க வைக்கிறார். எப்போதும் போல் அதே சுகமான நடிப்பு.

மற்றொரு ஆறுதல் - ருக்மிணி (என்ன அழகு!). அத்தனை அழகாக இருந்தும் ஆச்சரியமாய் நன்கு நடிக்கவும் செய்கிறார். "பொம்மலாட்டம்" படத்தில் முக்கிய பாத்திரமாய் இருந்தும் நிறையக் காட்சிகள் இல்லாததால், அவர் சிறந்த நடிகையும் கூட என்று இப்படம் புரிய வைக்கிறது. நித்ஸ்ரீயின் குரலில் "கனாக்காண்கிறேன்" பாடலுக்கு அவர் ஆடுகையில் இந்திரலோகம் தெரிகிறது.

வசன‌ங்களில் ஆங்காங்கே சுஜாதா நட்சத்திரமாய் மின்னுகிறார் (உதாரணம்: சாப்பாட்டை சிலாகித்து divine என்று சொல்வது). சுஜாதாவின் ஆயில் பெயின்டிங்கின் க்ளோசப்புடன் அவருக்கு அஞ்சலி செலுத்தித் துவங்கும் படத்தில், "பிரிவோம் சந்திப்போம்" நாவலைத் தழுவித்தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என டைட்டில் கார்ட் கூட போடவில்லை.

நல்ல வேளை சுஜாதா படத்தைப் பார்க்கவில்லை.

Comments

RESHSU said…
Dear CSK,

I had a same experience as you wrote about the film,

நல்ல வேளை சுஜாதா படத்தைப் பார்க்கவில்லை good.

Thanks
Sureshkumar.
Anonymous said…
படம் பார்த்து ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்.உம்முடைய அனைத்து கருத்துக்களையும் நான் ஏற்று கொள்கிறேன் ஒன்றை தவிர.ஏதோ ஒரு உதவாக்கரை இயக்குனர் எடுத்த இந்த படத்தை மனதில் கொண்டு சுஜாதாவின் அனைத்து நாவல்களும் திரைப்படமாக்க தகுதியற்றவை (பிரிவோம் சந்திப்போம் உட்பட) என்று கூறுவது சரியல்ல.
ருக்மிணி என்ன அழகு !!!! நல்ல ரசனை அய்யா உமக்கு.
செந்தில்
Kite said…
நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை. அனால் உங்கள் விமர்சனம் ஒரு சுஜாதா ரசிகனிடமிருந்து வந்தது போன்று இல்லை. நீங்கள் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறீர்கள்:
/

இதில் காந்தி கிருஷ்ணாவின் குற்றமும் ஏதுமில்லை. அவர் நாவலை முடிந்த வரை "அப்படியே" திரையில் கொண்டு வந்திருக்கிறார். அதற்கே அவரைப் பாராட்டலாம். ஆனால் அந்த "அப்படியே" பல இடங்களில் எதிர்மறையாகயும் அமைந்து விட்டது. பல காட்சிகள் மிகச் செயற்கையாக நாடகத்தனத்துடன் தெரிகின்றன. He did justification to the novel; but missed the cinema./

சுஜாதா உயிருடன் இருந்தவரை தன்னுடைய புதினங்கள் ஒன்று கூட தான் எழுதியவாறு எடுக்கப்படவில்லை எனப் பல இடங்களில் எழுதி வந்தார். காந்தி கிருஷ்ணாவால் அதைச் செய்ய முடிந்திருக்கிறதென்றால் நீங்கள் அவரைப் பாராட்டி இருக்க வேண்டும். அதை விடுத்து அவர் இதைச் சரியாகப் படமாக்கவில்லை என்று குறை சொல்வது சரியல்ல.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்