யமி [சிறுகதை]

நூதனாவின் பிறவிப் புழையில் மிக உச்ச வலியொன்று விட்டு விட்டுத் தெறித்தது.

திறமையான திரைப்பட எடிட்டர் செய்த ஹிப்ஹாப் மான்டேஜ் போல் கலவையான காட்சிகள் தோன்றின: இளஞ்சிவப்புக் கோடுகள், மெரீனா பீச், ராபியா ஆன்ட்டி, ரிக் வேதம், அம்மாவின் பிணம், டார்க் சாக்லேட், டிவி ரிமோட் அப்புறம் நவீனின் முகம்…


லோக்கல் அனஸ்தெடிக் செலுத்திக் கொண்டு உடல் மரத்துப் போகக் காத்திருந்தாள். மெல்ல வலது காலைத் தூக்கிப் பார்த்தாள். தூக்க முடிந்தது. அப்புறம் இடது காலை. பாதி வரை முடிந்தது. அப்புறம் இரண்டு கால்களையுமே அசைக்க முடியவில்லை.

தட்டுத் தடுமாறித் துருவற்று மின்னிய கத்தியைக் கையிலெடுத்து நடுக்கத்துடன் தனது வயிற்றில் வைத்தாள். மானசீகமாய் நீள அகலம் கணித்து விரிவுற்றிருந்த தொப்புளுக்கு மூன்று அங்குலம் கீழே கீறினாள். புதிய ரத்தம் அவசரமாய் எட்டிப் பார்த்தது. முகத்தைச் சுழித்து, பல்லைக் கடித்து வலியை அடக்கிக் கோடிழுத்தாள்.

அவள் படுத்திருந்த கட்டிலினருகே குனிந்து நின்று அவள் கைகளைப் பற்றியிருந்த நவீன் கண்களை மூடிக் கொண்டான். விடியல் விழிகளைத் திறக்கத் தொடங்கியது.

*

மொத்த நட்சத்திரங்களையும் உதிர்த்துப் பூரண நிர்வாணம் காட்டியது வானம். துகில் உரித்த பெண்ணின் கொலுசுகள் போல் திட்டுத்திட்டாய் மேகங்கள் சிணுங்கின. நிலா பிறந்தமேனியின் வனப்பில் மறுநாள் வளர்பிறையா தேய்பிறையா எனக் குழம்பியது.

சற்றே வெக்கையேறிய துவர்ப்புக் காற்று மெரீனாவின் மணற்பரப்பில் அம்மணமாய்ப் படுத்திருந்த நூதனாவையும் நவீனையும் தீண்டியும் தடவியும் தழுவியும் நகர்ந்தது.

நூதனாவின் வீங்கித் திரண்டிருந்த வயிற்றில் கைவைத்தான் நவீன். உள்ளே ரகசியம் கொண்டிருந்த சிசுவின் அசைவுகளை மொழிபெயர்க்க முயன்றான். அவன் கை மீது தன் கையை எடுத்து வைத்துக் கொண்டாள் நூதனா. மூன்று துடிப்புகள் ஒற்றைப் புள்ளியில் சங்கமித்தன. அவற்றின் வெம்மையில் பிரபஞ்சம் மெல்லத் தடுமாறியது.

“பையன் தானே?”

மெல்லக்கேட்ட நவீனின் கையைச் சட்டென வயிற்றிலிருந்து தட்டிவிட்டாள் நூதனா.

“இல்ல. பெண்.”

“பார்ப்போம்.”

“ம்.”

ஒருவேளை ஆணும் பெண்ணுமாய் இரட்டைகளாய் வந்து பிறந்து விடுமோ என்கிற எண்ணமெழுந்தது நூதனாவுக்கு. மனசு திடுக்கிட்டது. பேச்சை மாற்ற விரும்பினாள்.

“இன்னிக்குத் தேதி என்ன?”

“யாருக்குத் தெரியும்!”

“இப்ப ஏழாவது மாசம் நடக்குதுன்னு நினைக்கிறேன்.”

“வரும் போது வரட்டும். கணக்கு எதுக்கு?”

“ஒண்ணும் பிரச்சனை ஆகிடாதே?”

“ஏதும் ஆகாது. சும்மா குழப்பிக்காதே.”

“ம்.”

“தூக்கம் வருது எனக்கு. நீயும் தூங்கு.”

சொல்லி விட்டு அவளை நுட்பமான மென்மையுடன் அணைத்துக்கொண்டான். புலி ஒன்று அதன் குட்டியைக் கவ்விச் செல்வது போலிருந்த பக்குவம் அந்த முரட்டுச் சிறுபயலுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது என வியந்தாள். சூழலுக்குத் தகவமைத்தல்!

அப்படித் தன்னை மாற்றிக் கொள்ளும் உயிர்கள் மட்டுமே பிழைத்துக் கிடக்கின்றன.

“என்னால குழந்தையைப் பார்க்க முடியாதுல்ல.”

நவீனிடமிருந்து பதில் வரவில்லை. அவன் உறங்கிப் போயிருந்தான். அன்றைய பகல் முழுக்க அவன் தண்ணீர் தேடியலைந்து வந்திருந்த களைப்பு. நூதனா தன் கைகளால் அவன் முகத்தைத் தொட்டுத் தடவினாள். நெற்றி, கண்கள், மூக்கு, வாய். வாயை அகலத் திறந்து கொண்டு ஒரு குழந்தையைப்போல் அவன் தூங்குவதை உணர்ந்தாள்.

அது என்ன ஆண்டு என யோசித்தாள். உத்தேசக் கணக்கில் 2025 எனத் தோன்றியது. குழந்தையின் பிறந்த தேதி எல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பது எனக் கவலைப்பட்டாள்.

நூதனா நெடுநேரம் யோசனையாய் விழித்திருந்தாள். இருண்டிருந்த அவள் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. தன்னைப் போல முன்னொரு காலத்தில் கரையருகே கிடந்தழுத ஒருத்தியின் கண்ணீர் தான் கடலெனத் திரண்டதோ என்று நினைத்தாள். கடலலைகளின் ரீங்காரம் அவளைத் தொந்தரவு செய்தபடியே இருந்தது.

கண்ணயரும் சமயம் அதே மணலில் நிகழ்ந்த அவர்களின் முதற்கலவி நினைவுக்கு வந்தது. வானம் பார்த்துக் கண் திறந்திருந்த யோனி சிலிர்த்தது. புரண்டு படுத்தாள்.

*

பழைய செய்தித் தாள் பரப்பி மலங்கழித்து, டிஷ்யூவில் குதந்துடைத்து, அத்தாளைச் சுருட்டி, வீட்டிற்கு வெளியே சற்றுத் தொலைவில் துர்நாறிக் கிடந்த குப்பை மேட்டில் எறிந்து விட்டு வந்தாள் நூதனா. இருளைப் போல் அந்த வாடையும் பழகி விட்டது.

கிடைக்கும் தண்ணீர் என்பது குடிப்பதற்கு மட்டுமென்றாகி விட்டது. கை கழுவ, கால் கழுவ நீரைப் பயன்படுத்துவது எப்போதேனும் சாத்தியப்படும் சொகுசு. நீரை விடவும் காகிதங்கள் ஏராளம் கிடைக்கின்றன - செய்தித் தாள், கணிப்பொறி அச்சிட்ட தாள்கள், எவரோ கைப்பட எழுதிய தாள்கள், எதுவுமற்ற தூயவெள்ளைத் தாள்கள், பணம் என.

குளிப்பதென்றால் உலர்குளியல் தான். முதிர்காலை மிதவெயிலில் சுமார் கால் மணி நேரம் உட லின் எல்லாப் பகுதிகளிலும் வெளிச்சம், வெப்பம் நன்கு படுவது போல் வெவ்வேறு நிலைகளில் நிற்க, அமர வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் வியர்வை உடம்பெங்கும் ஊற்றெடுக்கத் துவங்கும். அழுக்குகளும், கிருமிகளும் அதில் அடித்து வரப்படும். பின்னர் ஈரிழைத் துண்டு கொண்டு அழுத்தம் திருத்தமாக உடம்பெல்லாம் பொறுமையாய்த் துடைத்தெடுக்க வேண்டும். ஒருமுறை ஆஃப்ரிக்க தேசத்திலிருந்து இறக்குமதியான கிருமிநாசினி ஜெல் ஒன்று ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் கிடைத்தது. சூரிய ஒளிக்குப் பதிலாக அதைச் சில தினங்கள் பயன்படுத்தினார்கள்.

ஓராண்டில் வீடும், வீட்டைச் சுற்றிய அவசியமானதோர் எல்லையும் விரல் நுனிக்கு வந்து விட்டது நூதனாவுக்கு. அதைத் தாண்டிச் செல்ல நவீனின் கைகள் வேண்டும்.

மூன்றாமவர் எவரேனும் பார்த்தால் அவளைப் பார்வையற்றவள் என்று சொல்லவே முடியாது. மூன்றாமவர் என்று எவரும் இப்பூமியில் இல்லை என்பது வேறு விஷயம்.

“நவீன், நாள் தள்ளிப் போகுதுடா.”

சன்னல்வழி வந்துவிழுந்த சூரிய வெளிச்சத்தில் லயித்திருந்தவன் காதுகளில் துண்டு துண்டாய் அச்சொற்கள் விழுந்து மூளைக்கு நகர்ந்து புரிபட சற்று அவகாசமெடுத்தது.

“ஏய், நிஜமாவாடி?”

அவன் கேள்வியில் அர்த்தமில்லை தான். ஆனால் எல்லாச் சமயங்களிலும் ஒருவர் அர்த்தம் பொதிந்தே பேசிக் கொண்டிருக்க முடியுமா! அதுவும் உணர்ச்சிகள் கமழும் தருணங்களில் உளறல்களே உடன் வருகின்றன. உளறல் அர்த்தம் பெறும் கணங்கள்.

நூதனா அவன் முகத்தில் மிளிரும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து புன்னகைத்தாள். அதைத் தன் முகத்தில் பிரதியெடுக்க முயன்றாள். அவ்வளவு நன்கறிவாள் அவனை.

“தேதிலாம் தெரியல. ஆனால் நிச்சயம் ஒரு மாசம் மேல ஆகுது.

“எப்படி உறுதியாச் சொல்ற?”

“முந்தின அமாவாசையில் அம்மாவுக்குப் படையல் வெச்சு சாமி கும்பிட்ட அன்னிக்கு தான் பீரியட்ஸ் ஆனேன். அதுக்கு அப்புறமும் ஒரு முறை அமாவாசை வந்து போயி ரெண்டு வாரமாவது இருக்குமே. எப்படிக் கணக்குப் பார்த்தாலும் நாற்பது நாள் ஆகுது. இவ்ளோ நாளெல்லாம் தள்ளிப் போனதில்ல. மணியடிச்ச மாதிரி டான்னு வந்திடும்.”

“வாவ்.”

நூதனாவை அணைத்துக் கொண்டான் நவீன். அதில் ஒரு பெருமிதம் மினுங்கியது. ஆடையற்ற அவனிடமிருந்து ஆடையற்ற அவளுக்கு அது சட்டெனத் தொற்றியது.

அன்று உணவு தேடப் போகும் போது சிதிலமுற்றிருந்த க்ரீம்ஸ் ரோடு அப்போல்லோ கிளையை உடைத்து நுழைந்து நூதனா தாளில் கிறுக்கிக் கொடுத்திருந்த மருத்துவச் சாதனங்கள் எல்லாவற்றையும் கவனமாக எடுத்து மூட்டை கட்டிக்கொண்டான் நவீன்.

மருந்துகள், பரிசோதனைக் கருவிகள் முதல் அறுவைக்கான உபகரணங்கள் வரை அதிலிருந்தன. நூதனாவுக்கு நான்காமாண்டு மருத்துவப் பாடங்கள் நினைவிலாடின.

மறுநாள் காலை எழுந்ததும் நூதனா அவற்றிலிருந்து தடவிப் பார்த்து ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட்டை எடுத்து நவீனிடம் கொடுத்தாள். பிறகு அவன் தோளைப் பற்றிக் கொண்டு ஒற்றைக் காலைத் தூக்கி நாற்காலியில் வைத்து ஒரு நெகிழிக் குப்பியில் சிறுநீர் பெய்தாள். அதை நளினமாய் நவீனிடம் கையளித்துக் காலைக் கீழிறக்கினாள்.

“இதில் ஒரு ட்ராப் எடுத்து…”

“தெரியும்.”

பாக்கெட் பிரித்து சிகரெட் எடுக்கும் லாவகத்துடன் நவீன் அந்தக் கருவியை வெளியே எடுத்து அவளது சிறுநீரிலிருந்து ட்ராப்பரில் மூன்று துளியெடுத்து அதில் வைத்தான்.

சில நொடிகளில் அதில் ‘C’ என்பதற்கு நேராக ஓர் இளஞ்சிவப்புக் கோடு தோன்றியது.

“ஒண்ணு…”

நவீன் அடுத்து உச்சரிக்கவுள்ள சொல்லுக்காகப் பதற்றத்துடன் காத்திருந்தாள் நூதனா. கலைடாஸ்கோப் அருவ உருவங்கள் போல் அவளது முகத்தில் உணர்ச்சிகள் மாறின.

அடுத்து ‘T’ என்ற எழுத்துக்கும் நேராக மற்றொரு இளஞ்சிவப்புக் கோடு தோன்றியது.

“ரெண்டு!”

“ஹேய்ய்ய்…”

இருவரும் கத்திக் கொண்டு கட்டிக் கொண்டார்கள். நூதனாவின் கண்களின் ஈரம் நவீனின் மார்பில் பிசுபிசுத்தது. அவன் இதயத் துடிப்பு அவள் கன்னத்தில் அதிர்ந்தது.

“அம்மா இருந்திருந்தா நல்லா இருக்கும்.”

நூதனாவின் குரலை உள்வாங்கித் தடுமாறி யோசித்து விட்டுச் சொன்னான் நவீன் -

“இப்ப உலகத்தில் ஒரே அம்மா நீ தான்.”

“கடைசி அம்மாவா?”

“ஒருவகையில் முதல் அம்மா!”

ரசித்துச் சிரித்தாள் நூதனா. எத்தனை ஆண்டுகள் அவளுக்கு எரிச்சலூட்டிய குரல். சட்டென சில காலத்தில் எல்லாம் தலைகீழாய் மாறி விட்டது பேரதிசயம் தான்.

அவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு அவன் வெளியே கிளம்பினான். குளிக்கச் சோம்பலாக இருந்தது அவளுக்கு. நெடுநேரம் ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட்டில் அந்த இரண்டு இளஞ்சிவப்புக் கோடுகளை ஆசையாய்த் தடவியபடியே படுத்திருந்தாள்.

*

நள்ளிரவில் உறக்கம் கலைந்த நூதனா நிதானமாய் எழுந்து சென்று வழக்கமான இடத்தில் வைத்திருந்த சொம்பை எடுத்துத் தண்ணீர் பருகினாள். முழுச் சொம்பு நீர் தீர்ந்த போதும் தாகம் அடங்கவே இல்லை என உணர்ந்து போது கவனமாய்த் தன் உடலைக் கவனித்தாள். உடம்பு பிடிவாதமாய்க் கோருவது நீரையல்ல எனப் புரிந்தது.

குளிர் உடம்பில் ஊடுருவி ஓர் ஊக்கி போல் மாயச் சமிக்ஞை தந்து கொண்டிருந்தது. மெல்ல நடந்து கட்டிலுக்கு வந்து நவீனின் வெற்றுமார்பில் கைவைத்து எழுப்பினாள்.

அன்றைய கலவி இரு மிருகங்களுடையது போல் மிக மூர்க்கமாக இருந்தது. அந்தக் கசப்பான இருளிலும் கண்ணாடித் துல்லியம் போல் நவீனை அங்குலம் அங்குலமாய் அளந்தலைந்தாள். தன் குற்றவுணர்வைத் தன் அகங்காரத்தால் எதிர்கொண்டாளோ என்பதாய் நவீனுக்குத் தோன்றியது. அன்று ஆட்டத்தில் அவள் கை ஓங்கியிருந்தது.

நவீன் நிறைந்த, நீடித்த புன்னகையுடன் அடிமை போல் அவளது இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து கட்டளைகளுக்குத் தாள்பணிந்து கீழ்படிந்தான். அதற்கு முன்பு அவளது அப்படியொரு முகத்தை அவன் கண்டதே இல்லை. கலவி தீர்ந்ததும் தனது கழுத்தைக் கடித்து ரத்தம் குடிப்பாளோ என எண்ணிக் கொண்டான். உச்சம் நிகழ்ந்து கொண்டிருந்த கணத்தில் அவன் பின்னந்தலை முடியைப் பற்றியிழுத்து உயிரற்றுத் துடித்த தன் கண்களில் முத்தமிடச் செய்தாள். அவன் உதடுகளில் உப்புக் கரித்தது.

“ஏய், ஏன்டி அழற?”

“ஒண்ணுமில்லடா. பேசாமப் படு.”

“சொல்லு. என்ன ஆச்சு?”

“டேய், எல்லா அழுகையும் துயரிலிருந்து எழுவதில்லை.”

“ம்.”

“சரி, என் கால் விரல்களுக்குச் சொடுக்கெடு.”

அவன் சட்டென எழுந்து அமர்ந்து கொண்டு அவளது பரிசுத்த நிர்வாணத்தின் மீது போர்வையை வீசி விட்டு அவள் இடது காலை எடுத்துத் தன் மார்பில் வைத்துக் கொண்டு சொடுக்கெடுக்கத் தொடங்கினான். அவள் கண்களை மூடிக் கொண்டாள். அக்கணம் தன்னை ராணியாக உணர்ந்தாள். மொத்த பூமிக்கும் மஹாராணியாக.

நிச்சயம் தன் வயிற்றில் அன்று கரு தங்கி விடும் எனத் தோன்றியது நூதனாவுக்கு.

*

ஒரு தேர்ந்த அறுவை நிபுணரின் நுட்பத்துடன் நூதனாவின் கால் விரல் நகங்களுக்கு நீல நிறப் பூச்சிட்டுக் கொண்டிருந்தான் நவீன். அவள் புன்னகையுடன் பார்த்திருந்தாள்.

“என் மீது உனக்குச் சந்தேகமே வராதுல்லடா.”

“ஏன்?”

“உன்னைத் தவிர இந்தப் பூமியில் தான் வேற ஆம்பிளை யாருமே இல்லையே!”

“குழந்தை ஒண்ணு பிறந்தா அதைத் தான் கொஞ்சுவே.”

“எனக்கு நீ போதும்.”

“மனுஷ இனம் மறுபடி தழைக்க வேண்டாமா?”

“ம்.”

“இப்ப நாம வரலாற்றின் முக்கியத் தருணத்தில் நிக்கறோம். கிட்டத்தட்ட ஆதாம், ஏவாள் போல. மீண்டும் மானுடம் பிழைக்குமா இல்லையா என்பது நம் கையில் தான் இருக்கு. அதை நாம கொஞ்சம் பொறுப்பாகச் செய்யனும்னு தோனுதுடி.”

“பொம்பளைக்குக் குடும்பம் தான் உலகம். அதுக்காக என்ன வேணா செய்வா!”

“ஒரு டாக்டர் நீ. இப்படிப் பேசறயே!”

“கோர்ஸே முடிக்கலயே!”

“சரி, அரை டாக்டர்!”

“பிரதமர்னாலும் பொம்பள இப்படித்தான்.”

“சரி, பொம்பளயா ஆம்பிள சொல்றத லட்சணமாக் கேளு.”

“என்ன?”

“ஒரு குழந்தை பெத்துக்குவோம்.”

“சரி. அப்புறம்?”

“அப்புறமென்ன! வேலை முடிஞ்சுது. காலை ஆட்டாம வை கொஞ்சம் நேரம்.”

*

அன்று இரவு உணவு சூடுபடுத்திய ஓட்ஸும், மீன் ஊறுகாயும். ருசி என்பது மறந்து ஆண்டுகளாகிறது. இப்போது உணவு என்பது தவிர்க்கவியலா ஒரு கடமை மட்டுமே.

“நாம தப்புப் பண்றோமா, நூதனா?”

“சரி, தப்பு எல்லாம் விடு. வேற வழி இருக்கா?”

“இந்த உடலைக் கையாளவே முடியலைல?”

“எத்தனை ஞானிக்கு விளையாட்டுக் காட்டியது! சும்மா சிக்கிடுமா?

“புத்தர், காந்தி மாதிரியா?”

“ஆமா. ஆனா அவர்களும் கூட சில காலம் இருந்துட்டு தானே வெளியேறினாங்க.”

“இதைக் கொன்று புதைக்க மாத்திரை இல்லையா?”

“இருக்கு. ஆனா எதுக்கு?”

“ம். சில சமயம் உறுத்துது. உடம்பு ஒரு சுமை.”

“அப்படி இல்ல. காமம் என்பதே மனதில் விளையாட்டு தான். உடல் வெறும் கருவி.”

“அப்படியா சொல்ற?”

“யோசித்துப்பார். உண்மையில் கலவியின் போதான முன்விளையாட்டுகளில் பாதிக்கு மேல் எந்த உடற்கிளர்ச்சியும் தருவதில்லை. அது எதிர்ப்பாலின உடலின் மீதான தன் அதிகாரத்தை உறுதி செய்வதன் போதை தான். அதன் மீது தனக்குள்ள உரிமையைப் பிரஸ்தாபிக்கும் பெருமிதம் மட்டுமே. உதாரணமாக என் மார்பை நீ சுவைக்கும்போது எனக்கு உணர்நரம்புகள் தூண்டப்படும், ஆனால் உனக்கு அப்படி எந்த நேரடிச் சுகமும் கிடையாது. ஆனால் அதை மிகுந்த ஆர்வத்துடன் செய்கிறாய். காரணம் என்னை, என் அந்தரங்கத்தை வெற்றி கொண்டு விட்ட நிறைவு தான். அப்புறம் என்னை இன்பத்தை நோக்கி அழைத்துப் போகும் கர்வமாக இருக்கலாம். அதைச் செய்கிற மிதப்பு. எப்படிப் பார்த்தாலும் பாலியல் திருப்தியில் பெரும்பான்மை ஈகோதான். அதனால்தான் காமம் மண்டைக்குள் உள்ளது என்கிறார்கள். இடுப்புக்குக் கீழே இருப்பது வெறும் ஸ்விட்ச்.”

“இப்படி ஏதாவது சுயசமாதானத்துக்குச் சாக்கு சொல்லிக்க வேண்டியது தான்.”

“டேய், எதையாவது குழப்பிக்காதே.”

“ம்.”

“சிவனுக்குக் கண்ணப்ப நாயனார் கண் ரெண்டையும் கொடுத்தாப்ல, இதுக்காக நான் கொடுத்திருக்கேன். அதுக்காவது மதிப்புக் கொடுத்து கொஞ்சம் நோண்டாம இருடா.”

“ஸாரி.”

“ஆஊன்னா இதொண்ணைச் சொல்லிடு.”

“ம்.”

“கொன்றால் பாவம் தின்றால் போச்சு. தின்னாம இருந்தாத்தான் தப்பாகிடும்.”

தினம் ஏதாவது சந்தர்ப்பத்தில் உரையாடல் அங்கே போய்க் கொண்டு தான் இருந்தது.
போலவே தினம் தவறாமல் கொன்ற பாவத்தைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.

*

நவீன் அவள் மீதிருந்து எழுந்த போது நூதனாவுக்கு அம்மாவின் நினைவு வந்தது. மானசீகமாய் மன்னிப்புக் கோரினாள். விழியோரம் நீர் கசிந்து மணலை ஈரமாக்கியது.

நவீன் தன் ஆடைகளைப் பொறுக்கி எடுத்து, தட்டி அணிய முற்படுவதை உணர்ந்தாள்.

“நவீன்…”

“சொல்லு.”

“ட்ரெஸ் போடாதே.”

“மறுபடியுமா?”

“அடச்சீ… இல்ல.”

“அப்புறம்?”

“இனிமேல் நாம ட்ரெஸ் போட வேண்டாம்.”

“ஆ!”

“இந்த உலகில் இப்ப யாருமே இல்லை. உன்னையும் என்னையும் தவிர. ஆக, இது வரை நாம ட்ரெஸ் போட்டுட்டு இருக்க ஒரே காரணம் உன்கிட்ட என் உடம்பையும் என்கிட்ட உன் உடம்பையும் மறைச்சுக்கத் தான். இனி அதுக்கும் அவசியமில்லைல.”

“வாவ். ஆமா.”

தன் உடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு வந்து அவளை அணைத்து முத்தமிட்டான்.

நிகழ்ந்த கலவிக்கு நினைவாய் கழற்றிய உடைகளை மணலிலேயே விட்டு விட்டு நிர்வாணமாகவே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். குளிருக்கு உடல் பழகக் கொஞ்சம் நேரமெடுத்தது. நூதனா நவீனின் தோள் மீது சாய்ந்து கொண்டே வந்தாள். அவன் கரங்கள் அவள் இடையைச் சுற்றி வளைத்திருந்தன. அதில் உரிமையிருந்தது.

கடலலைகள் அவர்களின் உடைகளைத் தொடத்தொடர்ந்து முயன்று கொண்டிருந்தன.

*

அன்று தன்னை மெரீனா கடற்கரைக்குப் அழைத்துப் போகச் சொன்னாள் நூதனா.

நவீனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. சுமார் ஓராண்டு முந்தைய கசந்த சம்பவத்துக்குப் பின் அவர்கள் மெரீனா செல்வதே இல்லை. அதை நினைவுபடுத்த வேண்டாம் என்று நவீனும் அதைப் பற்றிப் பேச்செடுப்பதில்லை. ஆனால் இன்று அவளே கேட்கிறாள்.

வீட்டிலிருந்து நடந்து கண்ணகி சிலை சேர்ந்த போது இருட்டத் தொடங்கி இருந்தது.

இடையில் அவளுக்குக் கால் வலிக்கிறதென்றதும் சற்றும் யோசிக்காமல் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான். கடந்த ஆறு மாதங்களாய் - அவள் பார்வை இழந்ததில் இருந்து - அப்படித்தான். அவள் ‘ம்’ என்றாலே அவள் தேவையைப் புரிந்து கொண்டு அவளை உள்ளங்கையில் தாங்குகிறான். சில சமயங்களில் அவள் சொல்லாமலும்.

சிறுவயதிலிருந்து நூதனாவுக்கு மெரீனா தான் இஷ்டம்; நவீனுக்கு பெசன்ட் நகர். பெசன்ட் நகர் மெரீனாவை விட ஜனநெரிசல் குறைந்தும் ஒப்பிட்டால் மேலதிகச் சுத்தமாகவும் இருப்பதாகத் தோன்றும் நவீனுக்கு. மாறாக அந்தக் கூட்டம் தான் நூதனாவுக்குப் பிடிக்கும். மகிழ்ச்சி, துக்கம், கவலை, காமம் என்று விதவிதமான உணர்வுகள் ஒளிரும் முகங்கள். ஒரே முகத்தில் கணப்பொழுதில் ஒன்றிலிருந்து மற்றதற்குத் தாவும் வினோதமும் நிகழும். கடலும் அலையும் ரெண்டாம்பட்சம்.

இன்று மனிதர்களும் இல்லை; அவர்களைப் பார்ப்பதற்குக் கண்களும் இல்லை.

மனிதர்கள் மீதான அப்பிடிப்பு இல்லையென்றால் அவள் மருத்துவம் எடுத்திருக்க மாட்டாள். நூதனாவுக்கு கிண்டி பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியலும் சென்னை மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்தது. அவள் இரண்டாவதைத் தேர்ந்தாள். இறுதியாண்டு நுழையும் தருவாயில் தான் உலகம் சிதறிப் போனது.

அலைகள் அன்று சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டன. அதன் வீச்சு அவள் காதுகளை அச்சுறுத்தியது. அல்லது மனதின் சஞ்சலத்தால் நூதனாவுக்கு அப்படித் தோன்றியது.

அவள் நவீனின் கை பற்றிக் கொண்டு கடலில் கால் நனைத்தாள். முதல் அலையில் ஒரு ஜில்லிட்ட விரோதமும் அடுத்த அலையில் ஒரு ரகசிய அழைப்பும் இருந்தன.

அவள் தவறாமல் அந்த அலையின் அழைப்பை நவீனின் உள்ளங்கையில் அழுத்தித் தெரியப்படுத்தினாள். திடுக்கிட்டு நவீன் அவளைத் திரும்பி உற்றுப் பார்த்தாள். அவன் அப்படித் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து சின்னப் புன்னகையுடன் - அதில் அசலானவெட்கம் தடவியிருந்தது - லேசாய்க் தலையைக் குனிந்தாள். இத்தனை ஆண்டுகளில் நூதனா வெட்கப்பட்டு அன்று தான் பார்க்கிறான். நிலவொளியில் நூதனாவின் முகம் ஒரு தேவதைத்தனம் நிரம்பியதாய்த் தோன்றியது. குலதெய்வம் நினைவுக்கு வந்தது.

“ஆர் யூ ஷ்யூர்?”

“ம்.”

நவீன் சட்டென அவளை அள்ளியெடுத்துக் கொண்டு கரைக்கு வந்து கிடத்தினான். கடலும், நிலவும், காற்றும், வானும் அவர்களின் நிர்வாணத்துக்குச் சாட்சிகளாகின.

உலகின் கடைசி இரண்டு மனிதர்கள் மிக முதன் முறையாக அன்று கலந்தார்கள்.

*

நூதனா மெல்ல இருட்டுக்குப் பழகினாள். கால் நூற்றாண்டு காலமாய்ப் பழகிவிட்ட வெளிச்சத்தைக் கைவிடுவது அத்தனை சுலபமானதாய் இல்லை. நவீன் அவளுக்கு உதவினான். ஒவ்வொன்றாய்ச் சொல்லிக் கொடுத்தான். அவ்வப்போது எங்கேனும் இடித்துக் கொண்டாள். தடுமாறி விழுந்தாள். தளராமல் மீண்டெழுத்து முயன்றாள்.

ஆறு மாதங்களில் தனியே அவ்வீட்டுக்குள் உலவவும் தன் தினக்கடன்களைத் தானே பிசகின்றி முடிக்கவும் கற்றாள். நவீனின் மனநிலையைக்கூட அவன் அசையும் சப்தம் மற்றும் குரல் கொண்டே அறியப் பழகினாள். ஒருவகையில் அத்தனை ஆண்டுகளில் அல்லாது அவனது புதிய பக்கங்கள் அவளுக்குத் திறந்து கொண்டன. அதை மிகவும் ரசித்தாள். பார்வை என்பதே ஒருவகையில் கவனச் சிதறல் தான் எனத் தோன்றியது.

தன் அந்தரங்க மயிர்களைச் சிரைப்பது தவிர நூதனாவுக்கு அனைத்தும் வசப்பட்டது.

*

நவீன் கண் விழித்த போது சூரியன் உச்சிக்குப் போயிருந்ததை வீட்டுக்குள் நுழைந்த வெளிச்சத்தின் மூலம் உணர்ந்தான். முந்தைய நாள் மதுவின் நினைவில் இன்னும் தலை வலித்தது. கடைசியாய்த் தடுமாறித் தரையில் விழுந்தது நினைவுக்கு வந்தது. அவனது வாந்தியின் துர்நெடி நெடுநேரம் நாசியைத் தாக்கிக் கொண்டே இருந்தது.

இப்போது அவனறையின் கட்டிலில் கிடந்தான். எழுந்து வீட்டின் வரவேற்பறைக்கு வந்தான். தரை சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. அவனது உடைகளும் மாறியிருந்தன.

குற்றவுணர்வும் வெட்கமும் ஆக்ரமித்தன. பத்து வயது தாண்டி அவன் தாய் கூட அவனது நிர்வாணம் கண்டதில்லை. இப்போது நூதனா அவனுக்கு உடை மாற்றி இருக்கிறாள். சட்டென நூதனாவும் அதைப் பார்த்திருக்க முடியாதென உறைத்தது.

“குட்மார்னிங்.”

நூதனாவின் குரல் கேட்டுத் திரும்பினான். குளித்து முடித்துப் பளிச்சென்றிருந்தாள்.

“ம். ஸாரி.”

அவள் ஏதும் பேசவில்லை. இன்னும் அறையில் வாந்தியின் மணம் மிச்சமிருந்தது. நவீன் நடந்து போய் அறையின் ஜன்னல்கள் அத்தனையையும் திறந்து விட்டான்.

“நவீன்.”

“ம்.”

“இங்கே வா!”

அவளருகே போனான். மண்டியிட்டு அமர்ந்தான். அவன் தலையைக் கோதினாள்.

“எனக்கு உன்னோட கில்டி புரியுது நவீன். ஆனா அதுக்கு அவசியமே இல்ல.”

“ம்.”

“இது முழுக்க ரொம்ப கன்ஸ்ட்ரக்டிவான என் முடிவு. ரொம்ப யோசிச்சு எடுத்தது.”

“எதுக்காக?”

“உனக்காக, எனக்காக, நமக்காகத் தான்டா.”

“புரியல.”

“என்னால் ஒருபோதும் உன்னைப் பார்த்து…”

“…”

“அதனால் தான் கண்ணே வேண்டாம்னு.”

“கண்ணைக் கட்டிக் கொள்ளலாம் அல்லவா?”

“அது ஒரு சுயஏமாற்றாகத்தான் இருக்கும்.”

“ம்.”

“திருதராஷ்டிரனின் குருடும் காந்தாரி கண்ணைக் கட்டிக் கொண்டதும் ஒன்றா?”

“ம்.”

“எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு. காயம் ஆறட்டும். மனமும்.”

“எந்த அவசரமும் இல்ல. நடக்கலனாலும் தப்பில்ல.”

“கண்ணெல்லாம் புடுங்கிட்டு ரிஸ்க் எடுத்திருக்கேன்டா. இப்ப வேண்டாம்ங்கற?”

கபடமின்றிச் சிரித்தாள். அவனால் சிரிக்க முடியவில்லை. முயன்றான். புன்னகை மன்னன் கமல் நினைவு வந்தது. திடீரென யோசனை வந்தவனாய்க் கேட்டான் -

“ஆனால் நான் இப்படி எல்லாம் குற்றவுணர்வு கொள்ளவில்லையே!”

“நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் நவீன்.”

*

சுத்தமாய் ஒரு மண்டலத்தில் நூதனாவின் கண் பார்வை முழுக்கப் பறிபோனது.

கொஞ்சம் கொஞ்சமாய் அவள் பார்வையை இழப்பதைக் கையாலாகாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு மாற்று மருந்து சொன்னால் எப்பாடு பட்டேனும் எடுத்து வருவதாக எத்தனையோ முறை அந்த நாட்களில் கெஞ்சிப் பார்த்தான். அவள் ஒரு புன்னகையை மட்டுமே தந்தாள். அது அவனை மேலும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

அவள் தன்னைத் தண்டிப்பதற்கு பதில் அவளை வதைத்துக் கொள்கிறாளோ என்று நினைத்தான் நவீன். குழப்பத்திலும் குற்றவுணர்விலும் சிக்கிக் கொண்டு தவித்தான்.

அவள் ஏதேனும் பொருளை எடுக்கத் தடவித் தடவி நகர்வதைப் பார்க்கும் போது கதவிடுக்கில் சுண்டுவிரல் சிக்கிக் கொண்டது போல் உயிர் வலித்தது நவீனுக்கு.

ஓரிரவு நவீன் ஏதோ ஒரு டாஸ்மாக் கடையை உடைத்துக் குடித்து விட்டு வந்தான்.

அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே வாடை சூழ்ந்ததில் புரிந்து விட்டது நூதனாவுக்கு. இத்தனை ஆண்டுகளில் அவள் அறிந்து ஒருபோதும் நவீன் குடித்ததில்லை. லிக்கர் சாக்லேட் கூடத் தொட மாட்டான். வைன் சேர்த்த கேக் ஆகாது. அவ்வளவு ஆச்சாரம். அவனை அவளுக்கு முழுக்கப் புரிந்ததால் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்.

நூதனாவின் அமைதி மேலும் அவனை ஆத்திரப்படுத்தியது. கத்தத் தொடங்கினான்.

“உன்னால தான்டி நாயே எல்லாம்…”

“…”

“எதையாவது வாயைத் திறந்து சொல்லித் தொலை.”

“…”

“இந்த உலகத்துல இருக்கறது நீயும் நானும் தான். இல்லன்னா போயும் போயும் உன் கிட்டலாம் மானங்கெட்டுப் போய் கெஞ்சிட்டு நிப்பேனா? எல்லாம் என் தலை விதி.”

“…”

“நீ மருந்து குடிச்சு கண்ணை அவிச்சுக்கிட்டதுக்கு பதிலா எனக்கு விசம் கொடுத்து கொன்னுருக்கலாம்லடி நாயே. அப்ப ரெண்டு பேருக்குமே நிம்மதி ஆயிருக்கும்ல?”

“…”

“தேவடியா நாயே…”

அதுவரை அவன் பேசுவதைக் கேட்காதது போல் கண்டுகொள்ளாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்த நூதனா சட்டெனத் தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள். அவளால் தன்னைப் பார்க்க முடியாது என்பதை அறிவான். ஆனால் அவள் கண்கள் தன்னைத் துளைப்பதைப் போல் உணர்ந்தான். ஏறி ஆட்டிய அத்தனை போதையும் இறங்கியது.

அதற்குத் தலைகீழ் விகிதத்தில் அவன் குடலிலிருந்து மேலேற, வாந்தி எடுத்தான்.

என்ன நடந்தது என்று புரிவதற்குள் அவனுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தானெடுத்துப் பரவியிருந்த வாந்திக்கு மிகமிக அருகில் குப்புற விழுந்து மயங்கினான்.

*

நூதனா அன்று சானிடரி நேப்கின்களோடு சில மருந்துகள் எடுத்து வரச் சொன்னாள்.

அவை என்ன மருந்துகள், அவளுக்கு என்ன பிரச்சனை எனக் கேட்க எண்ணினான் நவீன். ஆனால் கேட்கவில்லை. அவள் மீண்டும் வீடு திரும்பியதிலிருந்து அவளிடம் எதையும் கேட்கவே அஞ்சினான். மறுபடி எங்கேனும் சொல்லாது போய் விடுவாளோ என நினைத்தான். திரும்பவும் அவளற்ற தனிமையை எதிர்கொள்ளத் தயாரில்லை.

மாறாக அவளைத் தொந்தரவு செய்யாமல் இருந்து விடலாம். அதனால் அவளது விஷயத்தில் ஓர் ஊமைச் சேவகன் போலவே நடந்து கொள்ளத் தொடங்கினான்.

அதுவும் இந்த மாதிரி மருந்து விஷயங்களில் படிப்பை முடிக்காவிடிலும் அவளே ஒரு மருத்துவர் தான் என்பதால் அவன் தலையிடுவதோ தயங்குவதோ இல்லை.

அன்று நவீன் ஏழு கடைகளில் தேடியும் கிடைக்காமல் கடைசியில் ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்த ஒரு கடையிலிருந்து அவள் சொன்னவற்றைத் தேடிஎடுத்து வந்தான்.

“ஆனா நூதனா…”

“என்ன?”

“இது எல்லாமே எக்ஸ்பயரி முடிஞ்சது.”

“ரொம்ப நல்லதாப் போச்சு.”

தொன்னூறு நாட்கள் அந்த மாத்திரைகளைக் கவனமாக முறை வைத்து சாப்பிட்டாள். இரு வாரங்களுக்கொரு முறை கணக்கு எழுதி வைத்து ஊசிகள் குத்திக் கொண்டாள்.

அது முடிந்த பதினைந்தாவது நாள் நூதனாவின் கண் பார்வை மங்கத் தொடங்கியது.

*

மொத்த பூமியியிலும் தனித்திருந்த அந்த இரு மனித உயிர்களின் பொருட்டு இரவு சிருங்கார இசையைச் சூட்சம ரூபத்தில் அந்தப் பிரதேசத்தில் உலவ விட்டிருந்தது.

நவீன் வீட்டிலிருந்த அனாவசியங்களை ஒழித்துக் கொண்டிருப்பதை நூதனா பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது புஜங்களின் திரட்சியில் வியர்வை அரும்பி மினுங்கியது.

மனதுள் ஓர் ஒத்திகை நிகழ்த்திப் பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள் நூதனா -

“நவீன், நான் இங்கே திரும்பி வந்தது வெறும் உணவின் பொருட்டு மட்டுமில்லை.”

வேலையை அப்படியே நிறுத்தி விட்டு அவளைத் திரும்பிப் பார்த்துச் சொன்னான் -

“அன்புள்ள ரோஷக்காரியே, நீ அத்தனை பலகீனமானவள் இல்லை என்றறிவேன்.”

“வீட்டை விட்டு வெளியேறி நகரத்தில் திரிந்த நாட்களில் நானொரு பெண் என்பதை என்னுடல் உணர்த்திக் கொண்டே இருந்தது. உடல் என்றால் முழு உடல் கூட அல்ல. வெறும் பாதி. மற்ற பாதியைத் தேடிப் போ என உத்தரவிட்டுக் கொண்டே இருந்தது.”

“…”

“நான் ஆரம்பத்தில் அதை உதாசீனம் செய்தேன். பிறகும் அதிகரிக்கவே போராடிப் பார்த்தேன். பின் தோற்றேன். அதனிடம் சரணடைந்தேன். குறிப்பாய் விலக்காகும் நாட்களில் தாங்கவே முடியவில்லை. இறுதியில் வீடு திரும்ப முடிவெடுத்தேன்.”

“…”

“வாடா!”

நவீன் சற்று யோசித்தான். பிறகு கையிலிருந்த பொருட்களை அப்படியே போட்டு விட்டு வந்து தயக்கம் தோய்ந்ததொரு உடல் மொழியுடன் அவள் மீது பரவினான்.

நூதனா கண்களை மூடிக் கொண்டாள். மீண்டும் மீண்டும் அவள் பெயர் சொல்லி அழைக்கவே மெல்லக் கண்களைத் திறந்து அவனது முகத்தை உற்றுப் பார்த்தாள்.

சட்டென நினைவு வந்தது போல் நெஞ்சில் கைவைத்து அவனைத் தள்ளி விட்டாள்.

நவீனுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்றவன் பின் அமைதியாய் எழுந்து, சட்டையணிந்து வீட்டை விட்டு வெளியேறி நடந்தான்.

நூதனா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு ரொம்ப நேரம் அழுது கொண்டே இருந்தாள்.

*

அன்று நவீன் வீடு வந்த போது நூதனா இருந்தாள். அதாவது வீட்டிற்குத் திரும்பி வந்திருந்தாள். அவள் முன்பை விட மிக இளைத்திருந்தது தெளிவாய்த் தெரிந்தது.

கொஞ்சம் நேரம் நின்றவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவள் பதிலுக்குப் லேசாய்ச் சிரித்தாள். அவன் பேசட்டும் என்பது போல் அமைதியாய்க் காத்திருந்தாள்.

“எங்கே போனாய் நூதனா?”

“இங்கேயே தான்டா. சிட்டிக்குள்ளயே தான் சுத்தினேன்.”

“ம். ஏன் போனாய்?”

“இங்கே இருந்தால் உன்னைச் சுரண்டி விடுவேனோ என்ற பயம் தான்.”

“அப்புறம் ஏன் வந்தாய்?”

“பசி.”

அந்தப் பதிலில் அதிர்ந்தவன் அவசரமாய் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டு அன்று அவனுக்குக் கிட்டியதை எல்லாம் அவள் முன் எடுத்து வைத்தான். பவ்யமாய் பயபக்தியுடன் கைகட்டிக் கடவுளுக்குப் படைப்பது போலிருந்து அவனது உடல்மொழி.

நூதனா டார்க் சாக்லேட்டை எடுத்துப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டு சிரித்தாள்.

*

நவீன் துயிலெழுந்து பார்த்த போது நூதனா வீட்டில் இல்லை. ஒருவேளை பக்கத்தில் எங்கும் போயிருப்பாளோ எனத் தெரு முழுக்கத்தேடினான். எங்கும் தென்படவில்லை.

நகர் முழுதும் அலைந்து திரிந்தான். அவள் பெயரைச் சப்தமாய்க் கத்தி அழைத்தான். ஓரிடத்தில் பெயரற்ற பறவை ஒன்று பதிலுக்குக் கூவியதைத் தவிர உருப்படியான விஷயம் வேறேதும் நிகழவில்லை. ஆனாலும் சளைக்காமல் ஒரு மாதம் தேடினான்.

அதிகாலையில் எழுவான். நடக்க ஆரம்பிப்பான். வெயில் உச்சிக்குப் போகும் வரை சுற்றுவான். பிறகு வெயில் தாழும் வரை ஓய்வெடுப்பான். பிறகு மீண்டும் சூரியன் விழும் வரை தேடுவான். வீடு திரும்புவான். தினமொன்றென எட்டுத் திசைகளிலும் திரும்பத் திரும்ப நகரத்தை அளந்தான். ஒரு கட்டத்தில் அது ஒரு பழக்கம் போலவே ஆகிப் போனது. பிறகு ஒரு நாள் அது போதும் எனத் தோன்றியது. நிறுத்தி விட்டான்.

அதன் பிறகு தொடர்ச்சியாய்ப் பல நாட்கள் எங்கும் போகாது வீட்டிலேயே இருந்தான். தின்பது, தூங்குவது, விட்டம் பார்ப்பது - திரும்பத் திரும்ப அவ்வளவு தான் வேலை.

திரும்ப அவன் வழமையான வாழ்க்கைக்குத் திரும்ப சில மாதங்கள் பிடித்தன. அந்த இயல்பு வாழ்க்கையில் நிதம் மூன்றுமுறை நூதனாவை நினைக்க வேண்டியிருந்தது.

காலை எழுந்தவுடன் வந்து விட்டாளா என ஒரு முறை, இரவு வீடு திரும்பியதும் வந்து விட்டாளா என ஒரு முறை. ஆனால் அவ்விரண்டில் ஏமாற்றமே மிஞ்சியது.

*

நவீன் நூதனாவை இழுத்துப் போட்டு அவளது உதடுகளைக் கவ்விக் கொண்டான். அவள் மெல்ல மெல்ல எதிர்ப்பு மங்கி கண்கள் சொருகி வெட்கத்துள் நழுவினாள்.

பதறிக் கண் விழித்தாள். கனவு. அச்சு அசலாய் நிஜம் போலவே வந்த கனவு. கனவு எனப் புரியவே சமயமெடுத்த கனவு. உடம்பெங்கும் ஈரமாகி இருந்தது. உடம்பெங்கும்.

அவள் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது. கடவுளாலும் சாத்தானாலும் ஒருசேரக் கைவிடப்பட்ட ஆன்மா போல் தன்னை உணர்ந்தாள். அச்சம் அவளை ஆக்ரமித்தது.

அதிகாலை தான் செய்ய வேண்டியதென்ன என்பதைத் தெளிவாய்த் தீர்மானித்தாள்.

*

ஆளற்ற மெரீனாக் கடற்கரையைக் காணவே பரிதாபமாய் இருந்தது நூதனாவிற்கு.

நவீன் தான் அன்றைக்கு அவளை வற்புறுத்தி அங்கு அழைத்து வந்திருந்தான். அவள் பெரும்பாலும் எங்கும் போவதே இல்லை. வீட்டுக்குள்ளேயே தான். நவீன் நேரெதிர். வேலை இருந்தாலும் இல்லாவிடிலும் வீட்டினுள் அடைந்து கிடக்க முடிவதில்லை.

சக மனிதர்கள் இல்லையென்றால் பெண்களுக்கு வெளியே வரவே உந்துதல் இராதோ என நினைத்தான். அவர்கள் வெளியே வருவதே அடுத்தவர்களின் பொருட்டு தானோ எனத் தோன்றியது. பெண்களை ஒருபோதும் அவனால் புரிந்து கொள்ள முடிந்ததே இல்லை. அவர்கள் புதிர், விடுகதை, கடைசிப் பக்கம் கிழிந்த துப்பறியும் புதினம்.

இன்னொன்றையும் அவன் கவனித்தான். நூதனா தன்னை அலங்கரித்துக் கொள்வதே இல்லை. முன்பெல்லாம் அவள் அப்படி இல்லை. கல்லூரி போகையில் எல்லாம் மிக நேர்த்தியாகத் தன்னைத் தயார் செய்து கொள்வாள். மாலை சாதாரணமாய் மொட்டை மாடியில் உலவுவதாக இருந்தாலும் நன்கு முகங்கழுவி, பிசிறின்றி கூந்தல் முடிந்து, சீராய்ப் பொட்டிட்டுத் திருத்தமாய்த் தன்னை முன்வைப்பாள். ஆனால் இப்போதோ எல்லாம் தலைகீழ். பாதி நேரம் தலை விரிகோலம். எப்போதேனும் மட்டுமே பொட்டு. குளிப்பதில் கூட அத்தனை ஒழுக்கமில்லை. இன்று இந்த பூமியில் அவள் எவரையும் ஈர்க்க வேண்டும் என அவசியமில்லை. யார் பாராட்டும் அவளுக்குப் பொருட்டில்லை.

நூதனா அலையிலிறங்கி உற்சாகமாய் விளையாடிக் கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளி நின்றிருந்தாள். அவளது கண்களில் ஆர்வம் தளும்பிக் கொண்டிருந்தது. ஈரம் காக்க முட்டிக்கு மேல் தன் பேண்ட்டை உயர்த்தி விட்டிருந்தாள். நவீன் அவளை வியந்து பார்த்தான். வீட்டுக்குள் பெண்களின் அழகு புலப்படுவதே இல்லை என நினைத்தான்.

அப்போது எதிர்பாராமல் நூதனாவின் மீது ஒரு பெரிய அலை வந்தேறி சட்டையை நனைத்து அவளை வீழ்த்த எத்தனித்தது. அவள் தடுமாறி நவீனின் மீது சாய்ந்தாள். அவளை அணைத்தவாறு தாங்கிப் பிடித்தவன் முகத்தில் முத்தமிட முயன்றான்.

அதைச் சற்றும் எதிர்பாராத நூதனா அதிர்ந்து அவனை வலுவாய்த் தள்ளி விட்டாள்.

“ச்சீய்…”

நவீன் அப்படியே மல்லாந்து கடல் நீரில் விழுந்தான். மொத்த உடையும் நனைந்தான்.

நூதனா வேகமாய் நடந்து கடலிலிருந்து வெளியேறி கரைக்கு வந்தமர்ந்தாள். அவள் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. அதை மறைக்க முழங்காலைக் கட்டிக் கொண்டாள். மனம் விடாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. நெடுநேரம் அசைவின்றி அமர்ந்திருந்தாள்.

நவீன் எழுந்து தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு கரைக்கு நடந்து நீருறிஞ்சிய தனது ஆடைகளைப் பிழிந்து உலர்த்தி விட்டு அவளிடம் வந்தான். அவனுமே அதிர்ந்து தான் போயிருந்தான். தான் அப்படிச் செய்வேன் என அவன் ஒருபோதும் எண்ணியதில்லை.

அவள் மீது எப்போதும் எந்தவிதக் கவர்ச்சியும் அவனுக்குத் தோன்றியதே இல்லை. சொல்லப் போனால் அவள் பெண் என்பதே பெரும்பாலும் நினைவில் எழுந்ததில்லை.

அல்லது அப்படி இல்லையா? என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேனா? நிஜமாகவே நூதனா மீது எனக்கு எந்த ஈர்ப்பும் வந்ததே இல்லையா? நவீன் உள்ளே குழம்பினான்.

அவளருகே வந்து நின்றான். அவள் கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஸாரி…”

அவளேதும் பேசவில்லை. எழுந்து நடக்கத் தொடங்கினாள். அவன் பின்தொடர்ந்தான்.

*

அன்று இரவு உணவு முடித்து சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த வீட்டில் மிஞ்சிய ஒரே ஒரு பொழுதுபோக்கு அதுவாக இருந்தது. நூதனாவின் ராணியை வெட்டத் தன் குதிரையை ஏவி விட்டுக் கொண்டிருந்த நவீன் சொன்னான்.

“ராபியா ஆன்ட்டினு ஒரு பொண்ணு. பேருக்கேத்தாப்ல ஆன்ட்டி தான். நடிகர் ரஜத் கபூரின் மகள். கவிதை எழுதுவா, சொல்லுவா. கவிதை முன்ன பின்ன இருந்தாலும் அதை அவ சொல்றது அத்தனை அழகு. பிரமாத உச்சரிப்பு, குரல், உடல் மொழி. ‘I spend many nights imagining you imagining me…’ அப்படிங்கற கவிதையை அவ வாசிச்சது பயங்கர வைரல் ஆச்சு. இடுப்பில் முடிச்சிட்ட அந்த நீல டாப்ஸ் கண்லயே நிக்குது.”

“ஓஹோ!”

“சரி அவ கவிதை ஒண்ணு சொல்றேன், கேளு.”

“சொல்லித் தொலை.”

சொல்லி விட்டு ராணியை நகர்த்தினாள் நூதனா. நவீன் கவனமின்றி ஆடினான். பின் குரலைச் செருமியபடி மேடையில் பேசும் பாவனையில் சொல்லத் தொடங்கினான் -

“i think you are
so beautiful, i
think of you
so often, these days,
maybe i have nothing
better to think about
maybe I have learned
something about my-
self, but i wonder if
it’s all in my head, i
will not write
you a love
poem, i cannot,
you
might not look
at me the same way again,
i would die
of shame
i am dying
everyday, not sure
of who
i am, not
willing to tell
not willing to keep
a secret, no,
i’ll just keep
quiet instead.”

“…”

“நல்லாருக்குல்ல?”

நவீனின் கண்களை உற்றுப் பார்த்தாள் நூதனா. அவன் தலையைத் தாழ்த்தினான்.

“Shut up and go to sleep.”

நூதனாவின் ராணி நவீனின் குதிரையை வெட்டியிருந்தாள். அது ராஜாவுக்கும் செக்.

*

அன்று தானும் அவனுடன் வருவதாகச் சொல்லிக் கிளம்பினாள் நூதனா. வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் நவீன் அப்படிப் போய் வருவான். அதைத் திருட்டு என்றும் சொல்லலாம். வேட்டை என்றும் சொல்லலாம். உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களைச் சேகரித்து வருவது தான் அதன் நோக்கம். அன்று நகரில் பணமும், தங்கமும் கேட்பாரற்றுக் கிடந்தன. அவன் தொட்டதில்லை. அவற்றால் பயனில்லை.

அன்று புறநகரிலிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டை உடைத்து உள்ளே நுழைத்தார்கள்.

மூட்டைகளைச் சுமந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது நூதனா சொன்னாள்.

“ஏய் நவீன், ஒரு தாட்”

“சொல்லு.”

“இப்போ உலகத்தின் கடைசி மனிதர்களாக ஏன் நாம இருக்கக்கூடாது?”

“சொல்ல முடியாது. நம்மை மாதிரியே ஆங்காங்கே யாராவது இருக்கலாம்ல?”

“இத்தனை நாளாச்சு. இங்கே யாரையாவது பார்த்தோமா?”

“மெட்ராஸ்ல இல்ல. ஆனா எங்குமே இல்லன்னு எப்படிச் சொல்றது?”

“இருக்க முடியாதுன்னு தோனுது. எதைச் சாப்பிட்டிருப்பாங்க அவுங்க?”

“கிடைக்கறது கஷ்டம் தான். ஆனா கம்ப்ளீட்டா ஸீரோ ஆயிருக்குமா?”

“எங்கும் புதுசா உணவே விளைவிக்கப்படச் சாத்தியமே இல்லை.”

“மிஞ்சியிருக்கும் அரிசி, கோதுமை, பழம், காய், மாமிசம், எட்செட்ரா.”

“அது எவ்வளவு நாள் வரும்?”

“நம்மைப் போல் ப்ளான் பண்ணி இறங்கி இருந்தா?”

“அது எல்லோருக்கும் சாத்தியமில்ல. நம்மளோடது ஒரு சீம்லெஸ் எக்ஸிக்யூஷன்.”

“ம்.”

“சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட். டார்வின் சொல்றது என்ன?”

“பலம் மிக்கது வாழும்.”

“தப்பு.”

“அப்புறம்?”

“தக்கன பிழைக்கும்.”

“அதானே நானும் சொன்னேன்.”

“இல்ல. வித்தியாசம் இருக்கு. கேளு. பலம் அதிகமான உயிரோ, புத்தி அதிகமான உயிரோ பிழைக்கும் என்பது அல்ல அர்த்தம். அப்படிப் பார்த்தா டைனோஸர்கள் பிழைச்சிருக்கனும். இப்ப மனிதர்கள் பிழைச்சிருக்கனும். ஆனா விஷயம் அதில்ல.”

“ஓ!”

“ஆமா. எது adapt ஆகுதோ அதுவே பிழைக்கும். அதாவது சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்தல். உணவுப் பழக்கம், வாழுமிடம், தினசரி நடவடிக்கைகள்னு எல்லாத்தையும் சூழல் மாற்றத்துக்கேற்ப மாத்திக்கற உயிர் பிழைக்கும்னு சொல்றார்.”

“ம்ம்ம்.”

“எக்ஸாக்டா நாம செஞ்சிருக்கிறது அது தான்.”

“என்ன செஞ்சோம்?”

“மின்சாரம் இல்ல. உணவுப் பொருட்கள் இல்ல. இது எத்தனை வருஷம் தொடரும்னு தெரியாது. அதனால இருப்பதிலேயே அதிக நாள் நீடிக்கும் உணவுப் பொருட்களை நாம பதுக்கறோம். அதை வெச்சு நாம் உயிர் வாழக்கூடிய நாட்களை நீடிக்கிறோம்.”

“ஆனா இது பலருக்கும் தெரிஞ்சது தானே?”

“கரெக்ட். ஆனா சரியாப் பின்பற்றனும். முக்கியமா போட்டி, பொறாமை கூடாது.”

“அது தான் எல்லோருக்குள்ளும் இருக்குமே!”

“பெரிய கூட்டம்னா சீக்கிரம் உணவு தீரும். ஆக, சின்னதா இருக்கனும். அதுக்குனு தனி மனிதனாவும் இருக்கக்கூடாது. நாம ரெண்டு பேர். ரெண்டே பேர். அது பலம்.”

“சரி தான்.”

“அப்புறம் உணவு தேடி அலையற உடல் வலு வேணும். அது உன் கிட்ட இருக்கு.”

“அடடா!”

“எல்லாம் மேல, எனக்கு மருத்துவம் தெரியும். அதனால் தவறா எதையும் நாம் எடுத்துக்கவே மாட்டோம். அப்படியே ஏதாவது ஆனாலும் சரி பண்ணத் தெரியும்.”

“ஆமாம்டி.”

“ஸோ, நம்மோடது ரேர் கேஸ். கில்லர் காம்போ. அது எல்லோருக்கும் வாய்க்காது.”

“பெர்ஃபெக்ட்.”

“அதனால் தான் சொல்றேன். இப்படி மற்றவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பு குறைவு.”

“ஸோ?”

“உலகின் கடைசி ஆண் நீ, கடைசிப் பெண் நான்.”

நூதனாவின் கண்கள் அக்கணத்தில் வைரம் வைத்துத் தைத்தது போல் ஜ்வலித்தன.

*

வெறும் ஓராண்டு. அதுவும் லீப் அல்லாத சாதாரணஆண்டு. முந்நூற்று அறுபத்தைந்து நாட்கள். உலகம் தனது போராட்ட வரலாறு அனைத்தையும் மறந்து இறந்து போனது.

உலகின் பெரும்பான்மை மக்கட்தொகை கழுவி விட்ட கரும்பலகை போல் சுவடின்றி அழிந்திருந்தது. நவீன் இப்போதெல்லாம் உணவு பொருட்கள் தேடி வெளியே சுற்றும் போது ஒருவர் கூட கண்ணில் படுவதில்லை. சென்னை மாநகரில் எவரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பதே சந்தேகமாய் இருந்தது. காலம் துரிதம் குறைந்தது.

அம்மா உயிரைக் காப்பாற்ற முடியாததை மருத்துவம் கற்றவளாய் ஒரு தனிப்பட்ட தோல்வியாகவே பார்த்தாள். ஒருகட்டத்தில், மூச்சுத் திணறல் மிகவும் மோசமாகி அவளுக்கு வென்டிலேட்டர் தேவைப்பட்டது. கண் முன்னாலேயே அவளைச் சாக விட்டாள் நூதனா. அழுவதைத் தவிர அவளால் ஏதுமே செய்ய முடியவில்லை.

இறந்த பின்பாக தனியறையில் பூட்டப்பட்டு அழுகிக் கிடந்த அம்மாவை இருவரும் தூக்கிச் சென்று மவுண்ட் ரோட்டில் குழி தோண்டிப் புதைத்தனர். விசும்பி விசும்பி வீங்கி கிடந்த நூதனாவின் முகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் நவீன்.

நுழைவுச் சீட்டில் இருக்கை எண் அச்சிடப்பட்டிருந்தாலும் காலியான திரையரங்கில் எங்கே வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம் என்பது போல் அவர்கள் தங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நகரமே, ஏன் மொத்த உலகமுமே அவர்களுடையது தான். நவீன் இதை நூதனாவிடம் சொன்னான். ஏதேனும் ஒரு சொகுசு பங்களாவில் போய்த் தங்க வேண்டும் என அவனுக்கு உந்துதல் இருந்தது.

ஓரிரு தினங்கள் அதைத் தீவிரமாய் யோசித்து விட்டு நூதனா இப்படிச் சொன்னாள் -

“நாம் இந்த வீட்டில் இருப்பதே நல்லதெனப் படுகிறது. இதுவே நமக்கு நன்கு பழகிய ஸ்தலம். தவிர இங்கே நமக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் இருக்கின்றன.”

*

வீட்டில் உணவுப் பொருட்கள் எல்லாம் கிட்டத்தட்ட காலியாகி விட்டன. கடைகள் ஏதும் கிடையாது. நூதனா ஒரு வாரம் யோசித்து நிதானமாய் ஒரு பட்டியலிட்டாள்.

அதன் படி நவீன் போய் பொருட்களைப் பூட்டியிருக்கும் கடைகளில், கைவிடப்பட்ட வீடுகளில் எடுத்து வர வேண்டும். மெல்ல மெல்ல அப்படி உணவுப் பொருட்களைப் பதுக்கத் தொடங்கினார்கள். அவை யாவும் நீண்ட காலம் நீடிக்கும் உணவு வகைகள்.

அவற்றோடு சேர்த்து ஒருபோதும் மக்காத, சிறிதும் பெரிதுமான ப்ளாஸ்டிக் பைகள்.

பாஸ்தா, ஓட்ஸ், அரிசி, சோள மாவு, சீமைத் திணை, பருப்பு, பயறுகள், தேன், உப்பு, சர்க்கரை, டீ பேக், இன்ஸ்டன்ட் காஃபி, பவுடர் பால், மிளகு முதலிய ருசி / மணப் பொருட்கள், கடுகு, சியா விதைகள், சணல் விதைகள், ஆலிவ், வெள்ளை வினிகர், மிட்டாய், டார்க் சாக்லேட், பாப் கார்ன், பீந்ட் பட்டர், மேப்பிள் சிரப், சோயா சாஸ், மரினரா சாஸ், வனிலா எக்ஸ்ட்ராக்ட், தூய தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஊறுகாய்கள், உலர்பீன்ஸ், உலர்கனிகள், உலர்மாமிசங்கள், சிவப்பு வைன், கேனில் அடைபட்ட தக்காளி உள்ளிட்ட காய்கனிகள், துனா மீன், தேங்காய்ப்பால், இன்ன பிற.

சிவப்பு வைன் தவிர்த்து எல்லாவற்றையும் மெல்ல மெல்லக் கொண்டு சேர்த்தான்.

வந்த உணவுப் பொருட்களை அததற்கேற்ப மிகக் கவனமாய்ப் பாதுகாத்து வைத்தாள். சில பொருட்களை நீரில் மூழ்கடித்து வைத்தாள். சிலவற்றை மண்ணில் புதைத்தாள்.

*

நூதனா அந்த வீட்டில் மூன்று விதிகள் இட்டாள். முதலாவது நவீன் தவிர யாரும் எதற்கும் வெளியே போகக்கூடாது. அடுத்தது அரை வயிற்றுடன் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இறுதியாய் ஒற்றுமையும் வெளிப்படைத்தன்மையும் முக்கியம்.

ஆலைகள் மூடப்பட்டன. பெட்ரோல் முதலிய எரிபொருள்களின் இருப்பு கரைந்தது. வாகனங்கள் ஓடாமல் நின்றன. உணவுப் பொருட்களின் போக்குவரத்து தடைபட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை பத்து மடங்குக்கு மேல் அதிகரித்தது. பதுக்கல் செய்தனர். உணவும் பணக்காரர்களுக்கு மட்டுமானது. பட்டினிச் சாவுகள் தொடங்கின.

மருத்துவமனைகளில் பரிசோதனைகள் நின்றன. சிகிச்சைக்குதவும் கருவிகள் செயல் இழந்தன. மருந்துத் தயாரிப்பு செத்தது. நோயாளிகள் மருத்துவமனைகளில் மரித்துப் போனார்கள். மெல்ல மெல்ல மருத்துவமனைகள் அத்தனையும் அடைக்கப்பட்டன.

குழாய்களில் நீர் வருவது நின்றது. கழிவறைகள் பயன்படுத்த முடியாமல் ஆகின. எல்லோரும் இருளில் எங்கேனும் பொதுவிடத்தில் மலம் கழிப்பது வழக்கமானது. பகலில் சாலையில் பெண்கள் சிறுநீர் கழிப்பது இயல்பான காட்சியானது. வீதிகள் இந்திய ரயில்வே இருப்புப் பாதைகளாகின. மூத்திர நெடி காற்றெங்கும் வீசியது.

அரசுப் பணியிலிருந்தோர் தவிர எல்லோரும் வேலை இழந்தனர். அரசுமே சம்பளம் தருவதை நிறுத்தியது. பணக் கையிருப்பு கரைந்தது, பின் பணச் சுழற்சி குறைந்தது.

தொற்று நோய்கள் பரவின. கொத்துக் கொத்தாய்ச் செத்துப் போனார்கள். இடுகாடுகள் போதாமல்போய் பிணங்களைக் குவியலாய்க் குழிதோண்டிப் புதைத்தார்கள். அதற்கும் காத்திருப்புப் பட்டியல். எம்பி சிபாரிசு இருந்தால் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் யாரையாவது தெரிந்தால் அந்தப்பட்டியலில் விரைந்து இடம் கிடைக்கும் என்றார்கள்.

நூதனா அம்மாவின் பிணத்தை பல மாதம் வீட்டில் போட்டு வைத்திருந்தாள். நவீன் வெளியே போய் எவ்வளவு முயன்றும் எதையும் செய்ய முடியவில்லை. அப்போது அவர்கள் இருவருமே கல்லூரி மாணவர்கள். அவர்களுக்கென எந்தவிதத் தனிப்பட்ட செல்வாக்கும் கிடையாது. அவர்கள் குடும்பத்தின் நிதி நிலையும் அவ்வளவு தான்.

ஒரு கட்டத்தில் புகழ் பயனற்றுப் போனது. அடுத்து பணம் தன் மதிப்பை இழக்கத் தொடங்கியது. கடைசியாய் அதிகாரத்துக்கும் கூட மதிப்பின்றிப் போனது. சினிமாப் பிரபலங்களும், மிகப்பெரும் செல்வந்தர்களும், அமைச்சர்களும் சாதாரண மக்களைப் போல் எல்லாவற்றுக்கும் தெருவில் இறங்கி அலைந்து திரியத் தொடங்கினர். ஆள எவருமற்ற அரசியல் குழப்பத்திற்கு மக்கள் ஆட்பட்டனர். பாதுகாக்கவும் சுரண்டவும் எவருமற்ற சூழல் என்பதை முற்றிலும் கைவிடப்பட்ட நிலையாகவே எண்ணினர்.

அனைத்துக்கும் மேலாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு கடவுள் பதவியிழந்தார். தாமத ஞானோதயமாகச் சாதியும் மதமும் இனமும் மொழியும் முழுக்க ஒழிந்தன.

தொலைத்தொடர்பு முடங்கியதால் எல்லாச் செயல்களும் வேகமிழந்தன. ஊடகங்கள் யாவும் மூடப்பட்டன. செய்தி என்பது செத்துப் போனது. அவரவர் தெருவில் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாமல் ஆனது. தினப்படி உணவுக்கே திருட வேண்டியதானது. மக்களிடம் பரஸ்பரம் வெறுப்பும் வன்மமும் வேர்விட்டது.

குற்றங்கள் பெருகின. கொள்ளை முதன்மையானது. பாலியல் வல்லுறவு அடுத்தபடி.

துரோகம் உலகப் பொதுமொழியானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் அச்சத்தோடு சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கினர். அனைவரும் பயந்து வீட்டுக்குள் முடங்கினர். அதுகாறும் எந்தக் குற்றப் பின்னணியும் கொண்டிராதவர்கள் கூட வன்முறையில் இறங்கினர். கொலைகள் செய்யத் தொடங்கினர். நகரமெங்கும் ரத்த வீச்சமெடுத்தது.

அடுத்த கட்டமாய் ஒரு வீட்டிற்குள்ளேயே வாழ்வதற்கான போட்டி தொடங்கியது. சண்டை நடந்து, கொலை நிகழ்ந்து, பிணத்தைச் சமைத்துண்ட சம்பவம் நிகழ்ந்தது.

கசப்பு ருசி அடர்ந்து வீசியது. அத்தனை காலமும் அங்கிங்கெனாதபடி தூணிலும் துரும்பிலும் நிரம்பியிருந்தது மின்சாரம் தான் என்பதை உலகம் கண்டுகொண்டது.

*

எரிவாயு தீர்ந்து, மண்ணெண்ணெய் தீர்ந்து, சமைக்க எரிபொருளின்றிப் போன சமயம் பழைய செய்தித் தாள்கள் கொளுத்தி அடுப்பு மூட்டினார்கள். ஒருகட்டத்தில் அதுவும் தீர்ந்த போது நூதனா அப்பாவின் புத்தகங்களைக் கையிலெடுத்தாள். அவர்களுக்கவர் வைத்து விட்டுப் போனதில் பெருஞ்சொத்து அந்தச் சிறுநூலகமே எனத் தோன்றியது.

நெருப்பிலிடும் முன்பாக ஒவ்வொரு புத்தகத்தையும் மேலோட்டமாகப் புரட்டுவாள். எதிர்காலத்தில் தேவைப்படும் எதையும் அழித்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை.

“ரிக் வேதத்துல ஒண்ணு சொல்லி இருக்குடா.”

“என்ன மாட்டுக் கறி தின்னதா?”

“ச்சே இல்ல. இது வேற மேட்டர்.”

“மேட்டரா? சொல்லு சொல்லு.”

“யமன் கிட்ட சொல்றா யமி.”

“என்னன்னு?”

“துவஷ்டாவும் ஸவிதாவும் விசுவரூபனுமான தந்தை நம்மைக்கருப்பையினுள்ளேயே புருடனும் மனைவியுமாகச் செய்தான். எவனும் அவனுடைய ஆக்ஞைகளைப் பங்கம் செய்யான். நம்முடைய இந்த ஸம்பந்தத்தை சோதியும் புவியும் அறிந்திருக்கிறார்கள்.”

“சான்ஸ்க்ரிட் வேண்டாம். தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணேன்.”

“செத்து ஒழி.”

அம்மா இருமினாள். இருமல் என்றால் நிற்காமல் பல நிமிடங்கள் நீடிப்பது. அவள் ஒவ்வொரு முறை அப்படி இருமும் போதும் அதன் உபவிளைவாய் இதயம் நின்று விடுமோ எனப் பதறும். கொரோனா கண்டு மீண்ட உடம்பு தான். ஆனாலும் பயமாய் இருந்தது. நூதனா புத்தகத்தை நெருப்பில் போட்டு விட்டு அம்மாவிடம் ஓடினாள்.

*

அதன் பெயர் ஃப்யூச்சர் சர்க்குலர் கொலைடர். சுருக்கமாய் எஃப்சிசி. ஸ்விச்சர்லாந்தின் ஜெனீவா நகருக்குக் கீழே அமைந்த நூறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட வட்டம்.

வட்டம் என்றால் வெறும் கோடல்ல; பல அடுக்குப் பாதுகாப்புடைய, சுரங்கப் பாதை போன்ற பிரம்மாண்டக் குழாய். குழாய்க்குள் ப்ரோட்டான், எலக்ட்ரான், பாஸிட்ரான் என நுண்துகள்களின் கற்றையை ஒளியின் அதிவேகத்துக்கு மிக அருகில் எதிரெதிரே செலுத்தி மோத விட்டு ஆராய்ச்சி. பிரபஞ்சத்தின் ஐந்து சதவிகிதத் துகள்களையும், சக்தியையுமே நாம் இது வரை நேரடியாய்க் கண்டுணர்ந்து ஆராய்ந்திருக்கிறோம். மீதமிருக்கும் தொன்னூற்று ஐந்து சதவிகிதத்தை ஆராய்வதற்கான முதல் படி தான் எஃப்சிசி. டார்க் மேட்டர், ஆன்ட்டிமேட்டர் என நிறையத் தேடல் பாக்கி இருக்கிறது.

சர்வதேச அளவில் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செர்ன் என்ற ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனம் ஏழாண்டுகளாய் அதைக் கட்டிக் கொண்டிருந்தது. 2021-ல் அதற்கான வெள்ளோட்டம் துவங்கிய போது உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. அதிலிருந்து பெரும் சக்திப் பிழம்பு வெளிப்படும். அது முந்தைய எல்ஹெச்சியை விட முப்பது மடங்கு.

கற்பனைக்கு அப்பால் திரண்டெழுகின்ற பெருவெடிப்பின் சக்தி. அது பற்றி உயிர்மை இதழில் சி.சரவணகார்த்திகேயன் என்கிற இளம் எழுத்தாளர் எழுதியிருந்த ‘உலகை அழிக்குமா எஃப்சிசி?’ என்ற அட்டைப் படக் கட்டுரையை வாசித்திருந்தான் நவீன்.

அங்கு பணிபுரியும் ஒரு குமாஸ்தாவின் சின்னக் கணக்குப் பிசகில் தான் அவ்விபத்து நடந்தது. பாதாளக் குழாய் வெடித்து ஏதோ நுண்துகள்கள் கட்டற்றுப் பரவி, பூமிக்குள் பாய்ந்து மொத்த காந்தப் புலத்தையும் புரட்டிப் போட்டது. எலக்ட்ரான்களின் நகர்ச்சி ஸ்தம்பித்தது. உலகம் முழுக்க மின்சாரம் அறுந்தது. அதன் நீட்சியாய் இணையம் அணைந்தது. உலகின் சரி பாதி முழு இருளுக்குள் விழுந்தது. சர்வதேசம் பூராவும் இதெல்லாம் நடந்து முடிய அதிகபட்சம் ஏழெட்டு நிமிடங்கள் கூடப் பிடிக்கவில்லை.

மொத்தமாய் மின்சாரம் அணைந்தது. ட்ரிபிள்ஏ பேட்டரி முதல் அணுமின் நிலையம் வரை எல்லாமே செத்துப் போயின. தொடர்புடைய இயற்பியல் விதிகள் பொய்த்தன.

உலகமெங்கும் புத்திசாலி விஞ்ஞானிகள் எவ்வளவு முயன்றும் மின்சாரத்தை மீட்க முடியவில்லை. நாஸா ஒரு செயற்கைக் காந்தப் புலத்தை நிறுவ ஆய்வு செய்து தோற்றது. விளக்கு, விசிறி, தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, செல்ஃபோன், கணிணி எல்லாம் இயக்கத்தை நிறுத்தின. கைக்கடிகாரங்கள் கூட நின்று போயின.

*

பிக்பாஸ் சீசன் நான்கில் அனு சிதாராவிடம் தன் கொரோனோ அனுபவங்கள் பற்றிக் கண் பார்த்துக் கதைத்துக் கொண்டிருந்த மனுஷ்ய புத்திரனை ரசித்துக் கொண்டிருந்த நூதனாவை அலட்சியம் செய்து விட்டு நவீன் தொலைக்காட்சி ரிமோட்டைத் தாவி எடுத்து சிஸ்கே வெர்சஸ் மும்பை இண்டியன்ஸ் ஃபைனலுக்குச் சேனல் மாற்றினான்.

“ரிமோட்டைக் கொடுடா நாயே.”

“முடியாது. போடி பன்னி.”

“நீ அப்புறமா மேட்ச் ஹைலைட்ஸ் பாரேன்.”

“பிக்பாஸ் முடிஞ்சதும் உடனே திரும்பப் போடப் போறான். நீ அப்போ பார்த்துக்கோ.”

“அம்மா… பாரும்மா இவனை.”

“சனியனுகளா, கொஞ்சம் நிம்மதியா சீரியல் பார்க்க விடுங்களேன். வயித்துக்குள்ள ரெண்டு பேரும் எப்படித்தான் அடிச்சுக்காம ஒன்பது மாசம் ஒண்ணா இருந்தீங்களோ!”

அப்போது பெருத்த சப்தம் ஒன்று காதைப் பிளந்தது. தொலைக்காட்சி அணைந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு வீடு இருண்டது. இல்லை, மொத்த பூமியும் இருண்டது.

***

Comments

Kavitha Kannan said…
அவள் ஏன் கண்ணை வேண்டுமென்றே இருட்டாக்கினாள் எனக் குழம்பிப்போயிருந்தேன்। இறுதியில் காரணம் புலப்பட்டது ।
Anonymous said…
Guilty feelum, avanga ammava pathi pesumbothume guess panniten avanga sis and bro va than irupanga nu..Indha ulagathoda mudivu thaan romba koduramana karpanaiya irukku 😑
Arun RP said…
Incest பிரச்சினை வரும்போதே நினைத்தேன்.. இதற்காக ஒரு சிறுகதை வரும் என்று.. தொடக்கத்திலேயே கணிக்க முடிந்தது.. கதைகளம் அருமை..
Motley Fool said…
ஒரு இன்செஸ்டை நியாயப் படுத்த கண்களையும் மொத்த உலகத்தையும் அழிக்க வேண்டியதாகி விட்டதே!
kavignar ara said…
most time we expect this type of incest in the end but this time korana special and when eyes are destroyed by her / her feelings wont go that is natural in case of that the destruction of eyes not necessary nice it cannot be said as science fiction also

kavignar Ara

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்