பொச்சு


“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது.


ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல்.

இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து வந்தது அது என்று சொல்வோருண்டு (உதா: “புச்சம் ப்ரதிஷ்டா…” - தைத்திரீய உபநிடதம்).

பொதுவாய் புட்டம் என்ற அர்த்ததில்தான் இது மக்களிடையே வழக்கிலிருக்கிறது. குழந்தைகள் மலங்கழித்து விட்டு வருகையில் “பொச்சு கழுவி விடவா?” என்றுதான் கேட்பார்கள் (“குண்டி கழுவுதல்” என்ற பொருளில்). காலையில் துயிலெழத் தாமதமானால் “பொச்சுல வெயிலடிக்கத் தூங்கறான்” என்பார்கள். எள்ளலுக்குரிய அபத்தமான சூழலைப் பற்றிய பேச்சில் “பொச்சுலதான் சிரிக்கனும்” என்பார்கள். திட்டும் போது “பொச்சுலயே போடு”, “பொச்சுல பீ வர மிதி” என்பார்கள். (கவுண்டமணி சில படங்களில் இம்மாதிரி சொற்றொடர்களைப் பயன்படுத்தி இருப்பார். உதா: தாய் மாமன் படத்தில் நிச்சயம் செய்யப் போகும் காட்சியில் “பொச்சைப்புடிச்சு கடிச்சு வெச்சிரும்” என்பார்.) “பொச்சுக்கொழுப்பா?” எனக்கேட்கும் வழக்கமுண்டு, “சூத்துக் கொழுப்பா?” என்ற பொருளில் (உதா: பாண்டியக்கண்ணனின் சலவான் நாவல், பக்கம் 219). “பொச்சு தேச்சுக்குளிக்கனும்”, “பொச்சு மணலைத்தட்டி விடு”, “பொச்சு வணங்காம உக்காந்து திங்கறான்”, “பொச்சு வத்துனா தானாவருவான்” எனப்பலவாறு புழங்குகிறது.

பொறாமை மற்றும் வயிற்றெரிச்சலைக் குறிக்கின்ற பொச்சரிப்பு / பொச்செரிப்பு கூட இதிலிருந்து வந்திருக்கும் எனத்தோன்றுவதுண்டு. (“மொச்சைக்கொட்டை தின்றாலும் பொச்செரிப்பு; மோர் விட்டுச்சாப்பிட்டாலும் பொச்செரிப்பு” என்பது சொலவடை.) போன இடத்தில் கைமறதியாய் ஏதேனும் பொருளை வைத்து விட்டு வருவதைக் கிண்டல் செய்ய “பேண்ட இடத்துல பொச்சை வெச்சிட்டு வந்தானாம்” என்பார்கள். ‘பொச்சு’ என்பது மலங்கழித்தலுடன் தொடர்புடைய பிருஷ்டத்தையே குறிக்கிறது என்பதற்கான மற்றொரு உதாரணம் இது. அதே சமயம் “முட்டையிடும் கோழிக்குத் தான் பொச்சு வலிக்கும்” என்றொரு பழமொழியும் இருக்கிறது. அது முட்டை இடுகையில் பிறப்புறுப்பு வலிப்பதைக்குறிக்கிறதா அல்லது முட்டை மீதமர்ந்து அடைக்காக்கும் போது புட்டம் வலிப்பதைக்குறிக்கிறதா என்பது தெளிவில்லை.

சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதியில் (பக்கம் 2912) ‘பொச்சு’ என்பதற்கு சொல்லுக்கு பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம் ஆகிய பொருள்கள் உள்ளன. மைரன் வின்ஸ்லோ தமிழ்- ஆங்கில அகராதி (பக்கம் 816), ஜேபி ஃபேப்ரிஷியஸ் தமிழ்- ஆங்கில அகராதி (பக்கம் 281), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (6ம் மடலம், 3ம் பாகம், பக்கம் 143), தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்- தமிழ் அகரமுதலி, பழநியப்பா பிரதர்ஸ் பால்ஸ் தமிழ்- தமிழ்- ஆங்கில அகராதி (பக்கம் 623) ஆகிய ஐந்திலுமே கிட்டத்தட்ட இதே அர்த்தங்களே தரப்பட்டுள்ளன. ‘பொச்சு’ என்றால் ஐரோப்பிய அகராதி (EUdict) பெண்குறி என்ற பொருளையே அளிக்கிறது. யோனியில் அமைந்துள்ள பூப்பெலும்பை (Pubis) பொச்சு எலும்பு என்றும் குறிப்பார்கள். மக்களின் பயன்பாட்டில் ஒரு பொருள் இருக்க, பண்டிதர்கள் அகராதியில், அதற்கு நேரெதிர் (அல்லது சில மிமீ தூர) பொருள் வந்தது ஆச்சரியத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியதே!

எனக்கு இது தொடர்பாய் ஓர் ஊகம் இருக்கிறது. தன் 'கெட்ட வார்த்தை பேசுவோம்' நூலில் பெருமாள்முருகன் ஒரு முக்கிய விஷயத்தைச் சுட்டுகிறார். தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் “அல்குல் தைவரல்” என்று ஓர் இடத்தில் வருகிறது. காதலனைச் சந்திக்கையில் அவனுடன் கூட விரும்பும் பெண் நாண மிகுதியால் வெளிப்படையாக அதைச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துகிறாள். அல்குல் என்பது யோனி; தைவரல் என்பது தடவுதல். ஆனால் இதற்கு உரையெழுதிய நாவலர் சோமசுந்தர பாரதி (1942) ‘அல்குல்’ என்றால் பிருஷ்டம் என்று புதுப்பொருள் சொல்கிறார். அங்கே பெண்குறி என்று போட்டால் தமிழ்ப் பெண் பற்றிய பிம்பம் உடைந்து கலாசாரம் கெட்டு விடும் என்று அதைக் காக்கும் நோக்கில் பொருளைத் திரிக்கிறார். பிறப்புறுப்பை இருப்புறுப்பு ஆக்கி விட்டார். கம்பராமாயணம், தனிப்பாடல்கள் எனத் தமிழ் இலக்கியம் நெடுகவும் இந்தக் கத்தரி ஒப்பனை வேலை நடந்திருக்கிறது. இந்த உதாரணத்தை நீட்டித்துப் பார்த்தால், ஓரிடத்தில் எப்படி அல்குல் பிருஷ்டம் ஆனதோ அதேபோல் மற்றோர் இடத்தில் பொச்சு பெண்குறி ஆகி இருக்கலாம் என்பதென் துணிபு. அச்சொல் புரியாத குழப்பத்தில் அல்லது வசையாகப் பயன்படுத்துகையில் அதன் வீரியத்தைப் பெருக்கிக் காட்டும் முனைப்பில் நிகழ்ந்திருக்கலாம். (அல்லது வெளிச்சம் குறைந்த இடத்தில் பெண்ணிடம் பாடம் கேட்ட ஓர் இளங்கவிஞனின் மயக்கமாகவும் இருக்கலாம்!)

ஓர் உளவியல் விஷயம். பெண்கள் பொதுவாய் பெண்குறி தொடர்பான வசைகளைப் பேசுவதைத் தவிர்ப்பதைக்கவனித்திருக்கிறேன். அது சுயஅவமதிப்பு ஆகிவிடும் என்ற ப்ரஞையாக இருக்கலாம். ஆனால் ‘பொச்சு’ என்ற சொல்லைப்பெண்கள் சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள். அதனாலும் இது ஆசனப்பகுதியையே குறிக்கிறது எனலாம்.

இன்னொரு கருத்து ‘பொச்சு’ என்பது ஆண்குறி, பெண்குறி இரண்டையும் குறிக்கும், ஆனால் பொதுவெளியில் அவற்றுக்குரிய அசல் சொற்களைப் பயன்படுத்தத்தயங்கி இடக்கரடக்கலாக இதைப்பயன்படுத்துகிறார்கள் என்பது. அதனாலேயே பெரும்பாலான அகராதிகளில் பெண்குறியைக் குறிக்கும் சொற்கள் இதற்கு முதன்மைப்பொருளாகக் வருக்கிறது என்ற பார்வை. அடுப்புக்குட்டு என்ற சொல் அடுப்பில் பாத்திரம் பொருத்த இருக்கும் மூன்று குமிழ்களைக் குறிப்பதுபோல் பொச்சுக்குட்டு என்ற சொல் பின்புற மேடுகளைக் குறிக்கிறது என்கிறார் பெருமாள்முருகன் (கெட்ட வார்த்தை பேசுவோம், பக்கம் 82). அங்கே அடுப்பு என்றால் இங்கே யோனிதான் இருக்கிறது. ஆக, பொச்சு யோனியைக் குறிப்பதாகிறது. பொச்சுக்குட்டு என்பதே கூட பரவலான புழக்கத்தில் காலப்போக்கில் சுருங்கி, பொச்சு என்று மட்டும் நிலைத்திருக்கவும் சாத்தியமுண்டு.

வௌவாலுக்கு மலத்துளை கிடையாது என்றொரு கருத்துண்டு. விஞ்ஞானப்பூர்வமாக அப்படி இல்லை என்றாலும் அது நார்ச்சத்து உணவுகளைத்தின்று விட்டு செரிக்காமல் துப்புவதைக் கண்டு அதற்கு ஆசன வாயே கிடையாது என நம் முன்னோர்கள் முடிவு கட்டியிருக்கக்கூடும். ஏன் வௌவாலுக்குப் பொச்சில்லாமல் போனது என்றொரு கதை உண்டு. ஒருமுறை வெளவால் கடவுளிடம் உலக மரங்களின் பழங்களை எல்லாம் தானே தின்று வாழவேண்டுமென வரங்கேட்டதாம். அதற்கு ஏதுவாக செரித்த கழிவை வெளியேற்ற தொன்னூறு பொச்சு வேண்டும் என்றதாம். அதன் பேராசை கண்டு கடவுள் சினமுற்று “உனக்கு ஒரு பொச்சும் கிடையாது. வாயால் தின்று, வாயால் பேண்டு கொள்” எனச்சபித்து விட்டாராம். அதனால்தான் வௌவால் பொச்சு இன்றி வாயிலேயே கழிந்து திரிகிறது என்பதுதான் கதை. (இன்றும் பேச்சுவழக்கில் “ஒரு பொச்சும் கிடையாது” / “ஒரு பொச்சும் வேண்டாம்” போன்ற பிரயோகங்கள் உண்டு.)

‘பொச்சு’ என்ற சொல் பெருவாரியாய்ப் புட்டம் என்ற பொருளிலேயே பயன்படுகிறது என்று தெரிகிறது. இன்னும் சரியாய்ச் சொன்னால் பலரால் அவ்வாறுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஜனநாயகத்தை இந்த விஷயத்திலாவது நாம் மதிக்க வேண்டும்.

நாளை எங்களூர்ப்பக்கம் வருகையில் “பொச்சை மூடு” என்ற குரலைச்சந்திக்க நேர்ந்தால் எதை மூடச்சொல்கிறார்கள் என்ற குழப்பம் வந்திடக்கூடாதல்லவா!

*

(விகடன் தடம் - நவம்பர் 2018 இதழில் 'மெய்ப்பொருள் காண்' தொடரில் எழுதியது.)

Comments

Muthuvel said…
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.
சமக்கிருதக் கலப்பு மிகுத்து இருக்கிறது..
இராஜேஸ் இராமசாமி said…
நல்லதொரு பதிவு. அதற்கு நீங்கள் எடுத்தக்கொண்ட ஆராய்ச்சிகளும் அசாத்தியமே. அல்குல் எனும் பதத்திற்கு சரியான பொருள் என்ன எனும் தேடும் நோக்கத்தில் இணையத்தைச் சுட்டியபோது, தங்களது அகப்பக்கமும் அகப்பட்டது. இங்கே, மலையக மண்ணில் (மலேசியா), தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்கள், "பொச்சு" எனும் சொலவடத்தைப் பெண் உறுப்போடுதான் பொருந்தி பேசியிருக்கிரார்கள். "ஓன்னுகடிச்ச பொறகு, பொச்ச கழுவு" இது போன்ற வழக்கமான பிரயோகங்களைச் சிறுபெண்பிள்ளைகளின்பால் பாட்டிமார்கள் சொல்வதுண்டு.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்