மு.க.நூல் - 2


நெஞ்சுக்கு நீதி – 1

2. பிறந்த ஆண்டு

எல்லா மனிதர்களுக்கும் வரலாறு இருக்கிறது. ஆனால் சிலருக்கு மட்டுமே அதை எழுத வாய்க்கிறது. போலவே எல்லோர் வாழ்க்கையும் சமூக மாற்றங்களுக்குக் காரணமாக இருப்பதில்லை. ஆனால் எல்லோருக்கும் அதில் சிறுபங்கேனும் உண்டு. “பெரிய மனிதர்களுக்குத்தான் வாழ்க்கையும் வரலாறும் சொந்தமா? சின்னவர்கட்குக் கிடையாதா?” - இக்கேள்விதான் என் நெஞ்சுக்கு நீதி வழங்கும் தெம்பைத் தந்தது.

நாம் பிறந்த நாளில் என் குடும்பம் செல்வச் செழிப்பில் இல்லை; வறுமையிலும் வாடவில்லை. நாடும் அப்படித்தான். சுதந்திரம் பெறவில்லையெனினும் அழிவினை நோக்கி ஓடிக் கொண்டிருக்கவில்லை. ஆருடங்களில் எனக்கு நம்பிக்கையில்லை எனினும் நான் பிறந்த 1924ல் உலகம் பல நல்லது கெட்டதுகளை அனுபவித்தது.

ஈவெராவின் வைக்கம் திட்டம் உருவானது. அண்ணா உயர்நிலைப்பள்ளி மாணவன். ஈராண்டாண்டுச் சிறைக்குப் பின் உடல்நிலை காரணமாக காந்தி விடுவிக்கப்பட்டார். காங்கிரஸுக்கு காந்தி அதிகாரப்பூர்வமாகத் தலைமையேற்றார்; பொதுசெயலாளராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸின் இன்றைய கொள்கைகட்கு அடித்தளமிட்ட பெல்காம் மாநாடு நடந்தது. சௌரிசௌரா சம்பவம் நடந்தது. லெனின் மறைந்தார்; ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். பவேரியாச் சிறையில் ஹிட்லர் தன் சுயசரிதையை எழுதிக் கொண்டிருந்தார். மைசூர் சென்னை மாகாணங்களிடையே காவிரி ஒப்பந்தம் ஏற்பட்டது! பிற்பாடு ஒப்பந்தத்தைப் பாதிக்கும் ஹேமாவதி அணையை எதிர்க்கும் மாநில முதலமைச்சர் ஆவேன் என யாருக்குத் தெரியும்! என்னைப் பெற்றவர்கள் கூட அன்று என்னை ராஜா என்று தான் கொஞ்சியிருப்பார்கள்; மந்திரி என்றல்ல!

தஞ்சை மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 15 மைல் தொலைவிலிருக்கும் சிற்றூர் திருக்குவளை அல்லது திருக்கோளலி. அங்கு தான் பிறந்தேன். திருக்குளம், சோலை, சிவன், முனியன், ஐயனார் கோயில்கள் என இன்றை விடப் பேரழகாக இருந்த ஊர்.

#NenjukkuNeethi #P1C2

*

3. தந்தையின் துணிவு

அய்யாத்துரையின் மனைவி பெரியநாயகத்தம்மாள் கர்ப்பமானார். குழந்தை பிறந்த ஏழாம் நாள் தாயார் இறக்க, தில்லையம்மாள், மீனாட்சி என்ற இருவர் குழந்தையை நன்கு வளர்த்தனர். மகிழ்ச்சியிலோ சிப்பியின் அழிவுக்குக் காரணமான முத்து என்ற பொருளிலோ முத்துவேல் என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். அதுதான் என் தந்தை.

அவர் விவசாயி, வித்வான், கவிஞர். யாருக்கும் அஞ்சாமல் உண்மை நிகழ்ச்சிகளைக் கூடப் பாடலாக்கிடுவார். இன்றும் சிலர் அவற்றைப் பாடக் கேட்கலாம். குத்தகைக்கார அய்யர் என்ற பண்ணையாரை எதிர்த்து ஏழைகளின் குரலாய் ஒரு பாடல், ஒழுக்கம் தவறிய பெரிய குடும்பப் பெண்ணொருத்தி குறித்த நீண்ட பாடல் என நிறைய உண்டு. இத்தனைக்கும் அவர் எப்போதும் பட்டையடித்த பழுத்த பக்தர். மருந்தோ மந்திரமோ பூச்சிக்கடி, பெருரணமென அவரிடம் சிகிச்சைக்கு வருவர். காசேதும் வாங்க மாட்டார்.

அப்பாவுக்கு இளமையில் திருமணம் ஆனது. குஞ்சம்மாள் என்ற எம் பெரிய தாயார் சில ஆண்டுகளிலேயே இறந்து போனார். மணமாலையை ஒரு பெட்டியில் நிரப்பி மனைவியைக் குலதெய்வமாக்கினார் தந்தை. இன்றும் அது எங்கள் வீட்டில் உண்டு. இரண்டாவதாய் மணம் செய்த வேதம்மாளையும் விரைவிலேயே இழந்தார். அடுத்து என் தாய் அஞ்சுகம் அவருக்கு மனைவியானார். வயல் வேலைகளில் அப்பாவுக்கு அம்மா உதவியாய் இருந்தார். மீன் பிடித்தல், தேங்காய் பறித்தலிலும் அப்பாவுக்கு ஈடுபாடுண்டு. நெடுநாள் அவர்களுக்குக் குழந்தைப்பேறில்லை. பின் பெரியநாயகம், சண்முகசுந்தரம் என்ற பெண்கள் பிறந்தனர். ஆனாலும் ஆண் மகவு இல்லையே என்ற மனகுறையைப் போக்க வேண்டி திருத்தலங்கள் சென்றனர், தீர்த்தமாடினர்.

1924ம் ஆண்டு சூன் 3 (ரக்தாட்சி ஆண்டு வைகாசி 21) செவ்வாயன்று பிறந்தேன். நான் குழந்தையாக இருந்த போது தந்தை சாகாமலே என் தாய் தாலியிழந்தார். விடியலில் திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாலி உட்பட எல்லாவற்றையும் திருடிச் சென்றனர். பொன்னுக்குப் பாவமில்லை என கருதியிருப்பான் திருடன் என்றாராம் அப்பா. அழுது புலம்பிய அம்மாவுக்கு புதுத்தாலி கட்டினார் அப்பா. மூன்று மனைவி; நான்கு தாலி!

#NenjukkuNeethi #P1C3

*

4. “சிவாய நம! ஓம் நமசிவாய”

குழந்தைக்கான சடங்கனைத்தும் எனக்கு நடந்தேறின. காதணி விழா, வித்யாரம்பம், அப்புறம் நிறைய முறை முடி காணிக்கை. கனியாகுரிச்சி மாரியம்மன் கோயிலுக்கு முடியிறக்க வேண்டிக்கொண்டு, குறித்த நாளில் போக முடியாததால், உள்ளூரிலேயே மொட்டையடியத்து, முடியை ஒரு கலயத்தில் போட்டு, போகும் போது செலுத்தலாம் எனத் தோட்டத்தில் வைத்திருந்தனர். இரண்டாம் முறை வீடு புகுந்த திருடன் எதுவும் கிடைக்காமல் உண்டியல் என நினைத்து அக்கலயத்தைத் தூக்கிச் சென்று விட்டான்.

நான் இசை கற்க தந்தை ஏற்பாடு செய்தார். சட்டை, செருப்பு போட முடியாது; மேல் துண்டை இடுப்பில் கட்ட வேண்டும். சாதி, மத, சாத்திர, சம்பிரதாயப் பெயரால் ஒரு சமூகக்கொடுமை. இசைப்பயிற்சியை வெறுத்தேன். மேல்சாதி, மேட்டுக்குடியிலிருந்து வரும் சமூகக்குரலைவிட ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து எழும் எதிர்ப்புக்குரல் வலிது.

இதையுணர்ந்த தந்தை என் படிப்பைத்தீவிரப்படுத்தினார். கிராமப்பள்ளியின் தலைமை ஆசிரியரைக் கொண்டு தனியாகப் பாடம் போதிக்கப்பட்டது. பத்து வயதில் நாடகங்கள் போட ஆரம்பித்தேன். எங்கள் மாட்டுத் தொழுவமே மேடை. அப்பா சொன்ன கதைகள் கேட்டு அர்ச்சுனன், கிருஷ்ணன் வேஷங்கட்டுவதிலெனக்கு மிகப் பிரியம். நீலப்பொடி பூசிக்கொண்டு நான் நடிப்பதைக் காண ஊர் கூடும். திருக்குவளை கோயில் திருவிழா போல் மாதிரித்திருவிழா ஒன்று என் வீட்டுத் தாழ்வாரத்தில் நடக்கும். வீட்டிலிருந்த வெண்கல ரிஷப வாகனப் பொம்மை மீது மண்ணால் சாமி செய்து வைத்து, வாயில் வாத்தியங்கள் முழங்க ஊர்வலம். நினைவுகளின் இன்பத்துக்கு அளவே கிடையாது.

பேருந்து விட்டிறங்கி கச்சணத்துக் காபி ஓட்டலில் ஓரணாவுக்கு காராபூந்தி வாங்கித் தின்று கொண்டே நாலைந்து மைல் ஊருக்கு நடப்பேன். ஊரிலிருந்து ஒரு மைல் தொலைவிலிருக்கும் காருகுடிக்குத் தயிர் வாங்கி வர காலையில் நண்பர்களுடன் நடப்பேன். வழிநடைக்கு என் தந்தையும் அவர் நண்பர் சரவண சாமியாரும் “சிவாய நம! ஓம் நமசிவாய” என்ற மந்திரம் சொல்லித் தந்தனர். இரவில் தனியே நடக்கும் போது அதுவே துணை. மரங்களடர்ந்த பகுதியில் பட்டாணி என்ற துஷ்டதேவதைக் கோயில் உண்டு. அது ராத்திரியில் வயல்களில் தீவட்டி ஊர்வலம் போகும் என்றனர். வயல் வெடிப்புகளிலிருந்து கிளம்பும் கந்தக வாயுவின் தீச்சுடர் அது என்று அறியாத வயதில் அதைக் கடக்கும் போதெல்லாம் சிவாய மந்திரமே துணை. ஊரில் அம்மை, காலரா பரவினால் முனீஸ்வரன் வீரப்ப வேளாளர் மீது ஆவேசமாக ஆடி ஆறுதல் சொல்லுவார். அப்பாவுக்கு கோழிக்கறி சாப்பிடும் ஆசை வந்தால் அங்காளம்மை கோயில் பூஜைக்கு ஏற்பாடாகும். “அரிநமோத்து சிந்தம்” என விரல் தேய மணலில் எழுதிக் கல்வி கற்ற அறிவுக்கோயில். அதற்கடுத்து வரிசையாய் உறவினர் வீடுகள், சீட்டாடும் அக்ரஹாரத் திண்ணை, தபால் ஆபீசு, நான் தவழ்ந்து விளையாடிய வீடு.

கருடச் சகுனம் பார்க்க நிற்கும் வைத்தியலிங்க மாமா, மண்வெட்டியுடன் உழைக்கும் வைத்தித் தாத்தா, குளத்தங்கரை மரத்தடியில் தூண்டிலோடு மீன் பிடிக்கும் அப்பா, மடியில் கோயில் கொத்துசாவியுடன் இருக்கும் மெய்க்காவல் குப்புசாமித் தாத்தா, திருக்குவளை ஔவையார்கள் தில்லையம்மா, வைரியாத்தா, குளத்தின் அக்கரையில் இருந்தபடி தபால் வந்தால் குரல் கொடுக்கும் போஸ்ட் மாஸ்டர் அய்யர், மருத்துவ நிலையத்தையே மடியில் கட்டி வரும் காருகுடி வைத்தியர், எங்கள் குடும்பத்துக்கு ஆறுதலாய் இருந்த ரத்தினப் படையாச்சி என எல்லோரும் நினைவிலாடுகிறார்கள்.

பன்னிரண்டு வயதில் உயர்நிலைப்பள்ளியில் சேர ஊர் விட்டு திருவாரூர் போனேன். ஆனால் என்னை ஐந்தாம் வகுப்பில் கூடச் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

#NenjukkuNeethi #P1C4

*

Comments

அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள். வாசிக்க அருமையாக இருக்கிறது. தொடருக்கு சிறப்பான தலைப்பொன்றை இடுங்கள். தொடருங்கள்.

பயணங்கள் பலவிதம் - 06
https://newsigaram.blogspot.com/2018/06/PAYANANGAL-PALAVIDHAM-06.html
#பூண்டுலோயா #மலையகம் #டன்சினன் #நீர்வீழ்ச்சி #Pundaluoya #Malaiyagam #UpCountry #Dunsinane #WaterFalls #DunsinaneWaterFalls #SriLanka #LK #Travelling #Travel #TravelLanka #SigaramBharathi ##சிகரம்பாரதி

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்