மோகினியாட்டம் [சிறுகதை]


“பொம்பளைன்னா நாணிக் கோணனும். போத்திக்கிட்டு நிக்கனும். பொத்திக்கிட்டு இருக்கனும். அதானே? யூ மேல்ஷாவனிஸ்ட் பிக்!”

ஃபேஸ்புக் மெஸெஞ்சரில் அனற்பொறி பறக்காத குறையாகக் கோபப்பட்டாள் சுஜா.

“திட்டு எதுக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்கினா ஆறுதலா இருக்கும்!”

ரமணியின் வாக்கியத்தில் மிதந்த கேலி அவளை மேலும் ரௌத்திரமாக்கியது.

“உலகமயமாக்கலில் காணாமல் போனவர்கள் வெட்கப்படும் பெண்டிரும் வேதனைப்படும் ஆண்களும். - இது என்னடா ஸ்டேட்டஸ்?”

“உண்மைதானே!”

“கையில் பால்சொம்போட தலை குனிஞ்சுக்கிட்டே பெண்கள் ஃபேஸ்புக் வரனுமோ!”

“ஏய், அந்த ஸ்டேட்டஸில் ஆம்பிளைகளையும்தானே கேலி பண்ணி இருக்கேன்!”

“பொய். ஆம்பிளை எப்போ வேதனைப்படுவான்? பொம்பளை ஏமாத்தினா. ஆனா இப்ப இருக்கறவனுக அதைக் கடந்துடறாங்கன்னு பாஸிடிவ்வாச் சொல்றே.”

“பொம்பளைக இப்பலாம் அப்படி ஏமாத்தறதில்லன்னும் எடுத்துக்கலாம்ல?”

“ஒரு தறுதலை எப்படி யோசிப்பான்னு தெரியாதா!”

“:-)))”

“என்ன இளிப்பு?”

“நீ ஆம்பிளையாப் பொறந்திருக்கனும்னு நினைச்சேன்.”

“பொறந்திருக்கலாம்தான். நீ பொம்பளையாப் பொறந்திருந்தா!”

“என்ன மேடம் சட்டுனு ரொமான்டிக் ஆயிட்டீங்க!”

“ஆனா பால் சொம்பு கொண்டு வருவேன்னு மட்டும் நினைச்சுக்காதே!”

அதற்கு மேல் அவர்கள் சாட்டை எட்டிப் பார்க்க வேண்டாம். அவர்களின் பெர்சனல்.


சுஜா ஃபேஸ்புக் பிரபலம். அவள் புகைப்படம் பகிராமலேயே பத்தாயிரம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். ஃபீல்குட் ஃபேரி. காதல், மென்காமப் பதிவுகள் வழி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறாள். ப்ரப்போசல்கள் வரத்து சகஜம்.

ரமணி அத்தனை பிரபலமல்ல. அதற்கு அவன் ஆண் என்பது ஒரு காரணம்; ஆண் - பெண் உறவுப் பாசாங்குகள் குறித்த முகத்திலடிக்கும் பதிவுகள் மற்றொரு காரணம்.

சுஜாவும் ரமணியும் கடந்த ஆறேழு மாதங்களாகச் சாட்டில் பேசிக் கொள்கிறார்கள். சாதாரண விசாரிப்புகளாய்த் தொடங்கியது மெல்லப் பற்றிக் கொண்டது. இப்போது ரமணியின் மாதச் சம்பளம் அவளுக்குத் தெரியும். சுஜாவின் மாதாந்திரத் தேதிகள் அவனுக்குத் தெரியும். எழுதும் பதிவுகளில் பரஸ்பரம் ஒரு கமெண்ட் உத்திரவாதம்.

என்ன பேசுவார்கள்? எல்லாம். ஆம், ‘எல்லாம்’. முதலில் சுஜா தயங்கினாள். ரமணி வில்லங்கமாய் ஏதேனும் பேசினால் “ம்ம்ம்” என்பாள் அல்லது குறிப்பிட்ட சாட்டுக்கு பதில் சொல்லாமல் கடப்பாள். ஆனால் உரையாடலை வெட்டியதில்லை; பேச்சை மாற்றியதில்லை; விருப்பமின்மையை வெளிப்படுத்தியதில்லை. அவளது “ம்ம்ம்” என்பதை “எனக்குப் பேச முடியவில்லை, ஆனால் நீ பேசுவதை மௌனமாய்க் கேட்க விரும்புகிறேன், பேசு” என்பதாய்க் கச்சிதமாய் மொழிபெயர்த்துக் கொண்டான் ரமணி.

ரமணி எல்லை மீறுகையில் சுஜாவின் அம்மா அவளை அழைப்பாள் அல்லது அவள் வீட்டில் காலிங்பெல் அடிக்கும் அல்லது மழை பெய்யத் தொடங்க, உலர்த்திய துணி எடுக்க மாடிக்கு ஓடி விடுவாள். இதெல்லாம் ஆரம்பத்தில். இப்போதெல்லாம் அம்மா, காலிங்பெல், மழை என எதுவும் அவர்களின் சாட்டைத் தொந்தரவு செய்வதில்லை.

ரமணிக்கு அவளைப் பிடித்திருந்தது. இம்மாதிரி வேறிரண்டு பெண்களுடனும் பேசி இருக்கிறான் என்றாலும் இவள் வேறு மாதிரி. வெறும் லிப்ஸ்டிக் அழகியல்ல; அந்த உதடுகளைக் கொண்டு அழகாய் உரையாடவும் அதில் விளையாடவும் தெரிந்தவள்.

இவளோடு சலியாது பேசிக் கொண்டே இருக்கலாம். அத்தனை சுகம்! விரல்கட்கும் கண்களுக்கும் மனதுக்கும் இடையே பெரும் போதையென அவ்வரட்டைகள் திரண்டு எழுந்து ஆட்கொண்டதை மிக அனுபவித்தான். அவள் மீது காதல் பெருக்கெடுத்தது.

அவளது பிறந்த நாளின் போது தீர்மானித்துத் தன் மனதை வெளிப்படுத்தினான்.

“எப்பவும் சொல்லிக்கறது தானே!”

“இல்லடி, இது நிஜ 'ஐ லவ் யூ'.”

“என்னைப் பத்தி என்ன தெரியும் ரமணி உனக்கு?”

“என்ன தெரியனும்?”

“நான் கருப்பா சிவப்பா, உயரமா குட்டையா, அழகா குரூரமா ஏதாவது தெரியுமா?”

“இதெல்லாம் அவசியமா?”

“சரி, நான் ஒழுக்கமான்னு தெரியுமா? எனக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியுமா? குழந்தை பொறக்குமான்னு தெரியுமா? எய்ட்ஸ் இல்லைனு தெரியுமா? சென்னைனு போட்டிருந்தா உண்மையா? ரியல் எஸ்டேட்ல ஸ்டெனோகிராஃபர்னா நம்பிடுவியா?”

“ஏய்…”

“என் நிஜ வயசு தெரியுமா? மெனோபாஸ் முடிஞ்ச கிழவின்னா என்ன செய்வே?”

“இந்த மாதிரி ஏமாறதெல்லாம் நிஜ வாழ்க்கைல வர்ற காதல்ல கூட நடக்கும்!”

“ஆனா இங்கே ரிஸ்க் ஜாஸ்தி இல்லையா? இங்க வடிகட்டப்பட்ட முகத்தைத்தான் காட்டறோம். எல்லாத்துக்கும் மேல இங்க ஒருத்தரைப் பத்தி விசாரிக்க முடியுமா?”

“நான் எடுக்கறது ரிஸ்க்னு தெரியும். ஆனா வேற வழி இல்ல. இப்ப இதைச் செய்யலைன்னா பின்னாடி நினைச்சு வருந்துவேன்.”

“தவிர, இதே கேள்விகள் எனக்கும் இருக்கும்ல? உன்னைப் பத்தி எதுவுமே தெரியாது - ஓர் இதமான ஸ்பரிசம் மாதிரி ரொம்பச் சுகமா இருக்கு உன் பேச்சுங்கறதத்தாண்டி.”

“ம்.”

“சரி, எனக்கு அவகாசம் கொடு. ஆனா இதை நம்பிக்கை கொடுக்கறதா எடுத்துக்காதே.”

“எடுத்துக்கோ, எவ்ளோ வேணும்னாலும் எடுத்துக்கோ. வேண்டாம்னு சொல்லவும் உனக்கு உரிமை இருக்குதான். ஆனா அது ஏன்னு சொல்ற கடமையும் இருக்கு.”

ஆர்வமும் ஆசையும் நம்பிக்கையும் பயமுமாய் விடியல்கள் விரைந்தன. ஒன்றரை மாதம் கழித்து அவன் பிறந்த நாளில் ஃபேஸ்புக் டைம்லைனில் பட்டாசு வெடித்து வாழ்த்தி விட்டு சாட் வந்தவள், அவனுக்கான பரிசைத் தரப்போவதாகச் சொன்னாள்.

நகங்கடித்துக் காத்திருக்க, சாட் விண்டோவில் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வந்து விழுந்தது. அவர்களிடையே சில மாதங்கள் முன் நிகழ்ந்த ஓர் அந்தரங்கச் சம்பாஷணைத்துண்டு.

“இதுக்கென்ன? நாம எப்பவும் பேசறது தானே!”

“இதுதான் என் பரிசு.”

“புரியல.”

“முதலில் நீ ஒரு அதிர்ச்சிக்குத் தயாராகனும் ரமணி. குதிக்காம நான் சொல்றதக் கேட்கனும். எல்லாத்துக்கும் மேல உனக்கு வேற வழியும் இல்லை.”

“ம்.”

“நான் பெண் இல்ல. ஆண்.”

“என்ன சொல்ற?”

“புரியற மாதிரி சொன்னா நான் ஒரு ஃபேக் ஐடி.”

“ஏய்…”

“உன் பலூனில் ஊசி குத்தியாச்சு. எல்லாம் முடிஞ்சுது.”

பதில் இல்லை. அதிர்ச்சி. பேரதிர்ச்சி. ரமணி பதற்றமாகி யோசிக்கத் தவித்தான்.

“இப்ப ஸ்க்ரீன்ஷாட்டை மறுபடி பாரு. பரிசு புரியும்.”

பரபரப்புடன் அவசரமாய் மெசஞ்சரில் மேலே ஸ்க்ரோல் செய்து அதைப் பார்த்தான்.

மனதில் பகீர் என்றது ரமணிக்கு. அத்தனை திறமையாய் கட்டமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியை மட்டும் படிப்பவர்களுக்கு ரமணி சுஜாவிடம் வலிந்து ஆபாசமாய்ப் பேசியது போலவும் அவள் சங்கடத்தில் தவித்தபடி நெளிவது போலவும் தோன்றும்.

“நம்பிக்கை துரோகம். யூ ஆர் சீப்.”

“அஃப்கோர்ஸ். ஐயாம்!”

“யார் நீ?”

“அது உனக்குத் தேவையில்லை, ரமணி. உன் மேல மதிப்பு இருக்கு. கருத்துக்களின் மீதும் தனிப்பட்டும். இதுவரைக்கும் என்கிட்ட நீ ஃபோன் நம்பரோ, ஃபோட்டோவோ கேட்கல. வந்து பேசறவனெல்லாம் எண்ணி நாலாம் நாள் அதைத்தான் கேட்கிறான்.”

“இப்ப மட்டும் என்ன? ஏமாத்த வேண்டாம்னு ஞானோதயமா?”

“ஆமா, நீ இதை இதுக்கு மேல சீரியஸா எடுத்துக்கறது நல்லதில்லனு தோனுச்சு.”

“ஓ!”

“தவிர, இதுவரை ஏழு பேர் கிட்ட பேசி இருக்கேன், எதுவும் இவ்ளோ நாள் நீடிக்கல. ஒரு கட்டத்தில் எனக்கே இந்த உறவு நல்லதில்லன்னு தோன ஆரம்பிச்சிடுச்சு.”

“இதெல்லாம் ஏன்?”

“இதை ஒரு ஃபன்னாத்தான் தொடங்கினேன். இங்கே அத்தனை வறட்சி. பெண் லேசா கண்காட்டினா மெசஞ்சர்ல தவங்கிடக்கறாங்க. விடியவிடிய, வடியவடியப் பேசறாங்க. பெண்ணை வீழ்த்த என்ன வேணும்னாலும் பொய் சொல்றாங்க. இறங்கிப் போறாங்க. அவுங்க சொல்ற பொய்ல நான் சொல்றதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு ஆயிடுது.”

“…”

“அந்த விஷயத்துல நீ அவ்வளவு கெட்டவன் இல்லை ரமணி.”

“ம்.”

“அவுங்களுக்கு நான் ஃபேக்னு தெரிஞ்சதும் குறுக்கால கைகட்டி ஜட்டியோட போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார்ந்திருக்கும் கைதி மாதிரி ஒரு பாவனை வந்திடும் பாரு, ப்ளிஸ்!”

“நீ ஒரு சாடிஸ்ட். சைக்கோ.”

“எல்லோரும்தான்.”

“வாட் நௌ?”

“இது வெளியே போனா உன் இமேஜ் என்னாகும்னு நான் சொல்ல வேண்டியதில்லை. இதை வெச்சு நான் உன் கிட்ட என்ன வேணும்னாலும் கேட்கலாம். நிறைய அப்படி நடக்குது. லட்சங்களில் பணம் கறந்திருக்காங்க. பலவீனத்துக்கு விலை. ஆனா ஏதும் கேட்கப் போறதில்ல. எனக்கு எதுவும் வேண்டாம். ஏன்னா அதுக்கு இதைச் செய்யல.”

“அப்புறம்?”

“நான் ஃபேக் ஐடினு காட்டிக் கொடுக்கக்கூடாது.”

“என்னைப் போலவே இன்னும் நூறு பேரை, ஆயிரம் பேரை ஏமாத்துவே…”

“ஆமான்னு சொன்னாலும் எதிர்க்க, மறுக்க, கோபப்பட முடியுமா உன்னால?”

மஹாமோசமான கெட்ட வார்த்தை ஒன்றை வேகமாய் டைப் செய்து, ஒரு கணம் யோசித்து, பின் தடதடதடவென பேக்ஸ்பேஸை அமுக்கி அதையழித்தான் ரமணி.

“நாம அன்ஃப்ரண்ட் பண்ணிக்கலாம்.”

“குட் ரமணி. அதே. நாம இதுக்கு மேல பேச ஏதுமில்ல.”

“பை.”

“கடைசியா ரெண்டு விஷயங்களை மறுபடி அண்டர்லைன் பண்ண நினைக்கறேன். ஒண்ணு தெரியாத பெண்ணோடு இனிமேல் தேவை இல்லாமல் பேசாதே. ரெண்டு ஸ்க்ரீன்ஷாட் நினைவிருக்கட்டும். அது வெறும் சாம்பிள். இன்னும் நூறு இருக்கு.”

“நிஜமாகவே நீ பொண்ணு இல்லையா சுஜா?”

“நான் சுஜாவே இல்ல.”

ரமணி உடனே அந்த ஃபேக் ஐடியை அன்ஃப்ரண்ட் செய்தான். அப்போதும் திருப்தி இல்லாமல் ப்ளாக் செய்தான். பின் கொஞ்சம் நேரம் யோசித்தபடி அமர்ந்திருந்தான்.

எல்லாமே பொய்யா! சுஜா ஓர் ஆணா! நம்பவே முடியவில்லை. அந்த மென்மையும், குழைவும், சுகந்தமும் ஓர் ஆணுக்குப் பொருந்துமா என்ன! எவ்வளவு திறமையான நடிகனாய் இருந்திருக்கிறான்! அல்லது எத்தனை பலவீனமாய் இருந்திருக்கிறேன்!

பழி தீர்த்தாக வேண்டும் என்ற வன்மம் நெஞ்சில் கனன்றெழுந்த அடுத்த வினாடியே “எல்லாமே சும்மா விளையாட்டுடா” என ஓடி வந்து சுஜா சொல்லி விட மாட்டாளா என்ற நப்பாசை ஒரு கணம் தோன்றி மறைந்தது. கசப்பாய்ச் சிரித்துக் கொண்டான்.

சுஜா பெண் இல்லை என ரமணி கடைசி வரை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை.

போலவே, தான் பெண் என்பதையும் ரமணி எவரிடமும் சொல்லவில்லை. பிறப்பால் பெண்ணாக இருந்தாலும் ஏதோவொரு புள்ளியில் மனரீதியாகத் தன்னை ஓர் ஆணாக உணரத் தொடங்கியதால்தான் ஆண் பெயரில் ஃபேஸ்புக் ஐடி திறந்திருந்தாள் ரமணி.

சுஜாவை ரமணியால் மறக்கவே முடியவில்லை. வெளிவரும் யுக்தியறியாத ஒரு பத்மவியூகத்துள் மனம் சிக்கிக் கொண்டது. தான் ஆணாக உணர ஆரம்பித்தது சரிதானா என யோசித்தாள். அது இயற்கையின் தீர்மானமா அல்லது தன் பிரமை தானா எனக் குழம்பினாள். போய்ப் போய் சுஜாவின் ஃபேஸ்புக் சுவர் பார்த்தாள்.

சிரமங்களுக்குப் பின் சுஜாவின் ஒரிஜினல் ஐடியைக் கண்டுபிடித்து விட்டாள் ரமணி. சுஜா ஆணாக இருந்தால்தான் என்ன என்று தோன்றியது. புதிதாய் வெட்கப்பட்டாள்!

***

(காமதேனு 18-மார்ச்-2018 இதழில் வெளியானது)

Comments

சிறப்பு. உங்கள் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். கமல் மாதிரி லேசில் புரிந்துவிட முடியாதபடி எழுதுகிறீர்கள். அதுவும் ஓர் அழகுதான். காமத்தாழிக்குப் பின் நான் வாசித்த இரண்டாவது உங்கள் சிறுகதை இது. தொடருங்கள். வலைத்தளத்தில் ஆட்சென்ஸ் இணையுங்கள்.

#2018/17/SigarambharathiLK
Nokia 5 திறன்பேசிக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 மேம்படுத்தல்!
https://newsigaram.blogspot.com/2018/03/nokia-5-8-1-surprise-update.html
#techsigaram#sigaram #sigaramco
#சிகரம் #தொழிநுட்பம் #நோக்கியா
#nokia #Oreo8Point0 #SigarambharathiLK
இன்றைய முகநூல் வாட்சப் சாட் காதலை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது சிறுகதை! இயல்பான உரையாடல்கள்! முடிவு அருமை! வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்