நீங்க ஷட்டப் பண்ணுங்க!

1. நீ நீயாக இரு

(பிக்பாஸ் ஓவியாவிடமிருந்து சர்வைவல் டிப்ஸ்)

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. ஓவியாவுக்கு அறிமுகம் கொடுத்தால் நம் வீட்டில் மாலடோவ் காக்டெய்ல் வீசுவார்கள். அதனால் சம்பிரதாய இன்ட்ரோக்கள் தவிர்த்து நேராய் விஷயத்துக்குப் போய் விடலாம்.


தமிழகத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன் ‘பிக்பாஸ்’ ஓவியா! அந்நிகழ்வில் பங்குபெறும் மற்ற பதினான்கு பேரை விடவும் அதிக மக்கள் செல்வாக்கு மிக்கவர். மக்கள் செல்வி என்று கூட பட்டம் கொடுத்திருந்தார்கள். #SaveOviya Movement, ஓவியா புரட்சிப் படை, ஓவியா தற்கொலைப் படை, ஓவியா ஆர்மி என்று வர்ச்சுவல் ரசிகர் மன்றங்கள் தூள் பறக்கின்றன. தினம் ஓவியாவை வைத்து நூற்றுக்கணக்கான மீம்கள் உருவாக்கப் படுகின்றன. ஃபேஸ்புக்கில் யாரோ விளையாட்டாய் எழுதி இருந்தார்கள் - “இன்று தமிழகத்தில் ரஜினிக்கு அதிக ரசிகர்களா, ஓவியாவுக்கு அதிக ரசிகர்களா?”. அராஜகம்!

அகம் டிவி வழியாக பிக்பாஸ் இன்மேட்ஸுடன் கமல் ஹாசன் உரையாடும் போது ஓவியா பற்றிய ஒரு விஷயம் பகிரப்பட்டால் கமலே திடுக்கிட்டுப் பார்க்குமளவு அரங்கில் விசில்களும் க்ளாப்ஸ்களும் அள்ளுகின்றன. எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகும் ஒவ்வொரு முறையும் கோடி ஓட்டுகளுடன் ஓவியா காப்பாற்றப்படுகிறார். கமல் வீட்டுக்கு போலீஸ் செக்யூரிட்டி போடப்பட்டால் ஓவியா எவிக்ஷன் என்பதால் எனப் புரளி கிளப்பப்படுகிறது, நம்பப்படுகிறது; சோஷியல் மீடியா கொந்தளிக்கிறது.

நடிகை ஓவியா எல்லோரும் விரும்பும் ஓர் ஐடலாக, உதாரணமாகக் காட்டப்படும் ஓர் ஐகானாகத் தமிழகத்தில் உருவாகி வருகிறார் என்பதையே இது காட்டுகிறது.

குஷ்புவுக்குக் கோவில் கட்டிய உணர்ச்சிவசப்பட்ட கலாசாரம் தான் நம்முடையது என்றாலும் இம்முறை ஒரு பிம்பத்துக்காக அல்லாமல் ஒரு நிஜத்துக்காக, ஒரு நடிகையின் தோற்றத்துக்காக அல்லாமல் அவரது செய்கைகளுக்காக மக்கள் ஒருவரைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். வெளியே வந்து இத்தனை அன்பையும் மரியாதையையும் பார்த்தால் ஓவியாவே மிரண்டு போவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் செயல்கள், அணுகுமுறைகள், எதிர்வினைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைக்கான சர்வைவல் டிப்ஸ்களைப் பெற்றுக் கொள்வதே இத்தொடரின் நோக்கம். இது நமக்குப் புதிதில்லை. ரஜினியின் பஞ்ச் டயலாக்களை வைத்தும், வடிவேலுவின் காமெடி டயலாக்களை வைத்தும் மேலாண்மைக் கொள்கைகளைப் பேசி இருக்கிறார்கள். கம்ப ராமாயணத்திலிருந்து மேனேஜ்மெண்ட் டிப்ஸ் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அம்மாதிரி ஒன்று தான்.

தவிர, நாம் அறிவுரை சொன்னால் எவன் அதை எல்லாம் காது கொடுத்துக் கேட்கப் போகிறான். ஓவியா சொன்னால் கேட்பார்கள். கடைபிடிக்கவும் கூடச் செய்வார்கள்.

*

ஓவியா அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம், “நீ நீயாக இரு, அடுத்தவர்களுக்காக உன்னை மாற்றிக் கொள்ளாதே” என்பதே. இது வரை வந்த பிக்பாஸ் எபிஸோட்கள் எதிலும் ஓவியா போலித்தனம் காட்டவில்லை என்று சொல்லலாம். அவரது அந்தக் குணத்தைப் பார்க்கும் முன் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் புரிந்து கொள்ள முயலலாம்.

ஒரு வீடு. அங்கு நம்மைத் தவிர நாம் முன் பின் அறியாத 14 பேர். வெளியுலகுடன் தொடர்பு கிடையாது. ஸ்மார்ட்ஃபோன் கிடையாது. சுற்றி 30 கேமெராக்கள். கழிவறை, குளியலறையில் செலவழிக்கும் நேரம் தவிர ஒவ்வொரு கணமும் கேமெராவின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். உலகமே நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு எவ்வளவு நாளானாலும் முற்றிலும் அகலாது. அதனால் பொதுவாய் அங்கே உள்ள ஒருவர் தன் பற்றிய பிம்பத்தை நல்ல விதமாய்க் கட்டமைக்க முயல்வார். அப்படி 24 மணி நேரமும் நடிப்பதும் சிரமம். ஒருவரது நிஜத்துக்கும் பிம்ப முயற்சிக்கும் இடையேயான யுத்தம் தான் பிக்பாஸின் அத்தனை நிகழ்வுகளும்.

இந்தப் பின்புலத்தில் தான் ஓவியா தனித்துவம் கொண்டிருக்கிறார். அவர் இத்தனை கேமெராக்கள் மத்தியிலும் நடிக்காமல் உண்மையாக இருக்கிறார். வெளியுலகில் எப்படி இருப்பாரோ, அதாவது அந்த வீட்டில் கேமெராக்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். மழை பெய்தால் அதில் நனைந்தாடுகிறார்; கோபத்தில் ஆங்கிலக் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்; சோகமோ கோபமோ கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் நாடகமாக்காமல் நாசூக்காய் அழுகிறார்.

நாம் நாமாக இருக்க ஒரே வழி அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றிய கவலையை அறுத்தல். அது மிகச் சிரமமான விஷயம். ஓவியா பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ஆரம்பத் தினங்களிலேயே உரையாடல் உவப்பில்லாத திசையில் செல்ல எல்லோரும் இருக்கும் மீட்டிங்கிலிருந்து பாதியில் எழுந்து செல்கிறார் (“நீங்க ஷட்டப் பண்ணுங்க” என்ற பிரபல வசனம் உதிர்க்கப்பட்டது அப்போது தான்). அதற்குப் பிந்தைய உரையாடலில் ஆரவ் ஓவியாவிடம் “இப்படி நீ செய்தால் உன்னை எல்லோரும் தவறாக நினைப்பார்கள்” என்று சொல்கிறான். அதற்கு ஓவியா, “நினைச்சா நினைக்கட்டும், ஐ டோன்ட் கேர். நான் நானாத்தான் இருப்பேன்” என்கிறார். அதிலிருந்து இப்போது வரை அப்படித்தான் இருக்கிறார்.

அவருக்கு நேர்எதிர் குணம் என்று ஜூலியைச் சொல்லலாம். அவர் எல்லோருக்கும் எது பிடிக்குமோ அப்படியாகத் தன்னை முன்வைக்க முயல்கிறார். ஆனால் அப்படி எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமே இல்லை. அதனால் போலி என்ற பெயர் கிட்டியது தான் மிச்சம். ஆடியன்ஸிடமும் மோசமான இமேஜ். இறுதியில் மிஞ்சக் கூடிய சுயதிருப்தி, நிம்மதி கூட இயல்பை ஒழித்து நடிப்பதால் இழப்போம்.

ஆனால் ஓவியா ஒரிஜினாலிட்டியுடன் இருந்து மட்டும் என்ன பயன்? பிக்பாஸ் வீட்டில் அவரைப் பலருக்கும் பிடிக்காமல் போவது தான் நடக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகிறார். ஆம். நாம் நாமாக இருப்பது கொஞ்சம் ரிஸ்கான விஷயம் தான். அதனால் நாம் சில பல மனிதர்களை இழக்க வாய்ப்புண்டு. ஆனால் யாரை இழக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். எவர் நற்குணங்கள் இன்றி இருக்கிறாரோ, எவர் சுயசிந்தனை இல்லாமல் இருக்கிறாரோ, எவர் போலியாய் நடித்துக் கொண்டிருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் ஆகாதவர்கள் ஆவோம். அப்படியானவர்களின் உறவைப் பேணிப் பாதுகாத்து மட்டும் என்ன பயன்?

நாம் நாமாக இருப்பதால் பொருட்படுத்தத் தகுந்தவர் எவரையும் இழக்க மாட்டோம். அதே சமயம் உண்மையாய் இருப்பதன் பொருள் எவரோடும் எதன் பொருட்டும் எதையும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக்கூடாது என்பதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதர்களாகிய நாம் எல்லோரும் குறைகளும் பலவீனங்களும் கொண்டவர்களே. அதனால் தேவைப்படுகையில் முன்பின் சமரசங்கள் கொள்வதில் தவறில்லை. அது நம் இயல்பைத் தொலைக்குமளவு போகக்கூடாது. அவ்வளவு தான்.

ஆனால் இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. எல்லோருமே உண்மையாய் இருப்பது சாத்தியம் அல்ல; நல்லதும் இல்லை. நம்மிடம் நற்குணம், தீயகுணம் இரண்டும் இருக்கும். நாம் நாமாகவே இருப்பதில் ஒரு பெரும் சிக்கல் தீய குணங்களும் நம்மிடமிருந்து வெளிப்பட்டு விடும் என்பது தான். அதைக் கையாள ஒரே வழி அத்தீய குணங்களை நம்மிடமிருந்து தூர விரட்டுவது தான். மாறாக உண்மையாய் இருக்கிறேன் பேர்வழி என்று அதைக் காட்டத்தொடங்கினால் ரணகொடூரமாகி விடும்.

பிக்பாஸில் ஓவியாவும் போலித்தனமின்றி அவராகவே இருக்கிறார்; காயத்ரியும் அப்படியே இருக்கிறார். ஆனால் காயத்ரியின் எதிர்மறைத் தன்மைகள் காரணமாக அவருக்கு ஒரு மெகாவில்லி இமேஜ் வந்து விடுகிறது. அதை ரசிக்க முடிவதில்லை. அவரை ஏற்றுக் கொள்வது அவரோடு இருப்பவர்கள் மட்டுமே. காரணம், அவர்களிடம் அவர் உவப்பற்ற முகத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இன்னமும் வரவில்லை. மாறாக பரணி, ஓவியா ஆகியோரிடமும் வெளியிலிருந்து பார்க்கும் நம்மிடமும் அவர் வெறுப்பையே சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆர்த்தியும் அப்படியே. அவரும் கூட நான் நானாக இருக்கிறேன் என்று அடிக்கடி சொன்னவர் தான். மாறாக ஓவியா இயல்பிலேயே good-hearted என்பதால் அவரது உண்மைத்தன்மையை ரசிக்க முடிகிறது.

ஆக, ஓவியா சொல்லும் வாழ்க்கைப் பாடமான “நீ நீயாக இரு!” என்பதற்கு நாம் பின்னொட்டாகச் சேர்த்துக் கொள்ள வேண்டியது “அதற்கு முன் நல்லவனாக இரு!”.

***

(சில தினங்கள் முன் 10 - 12 அத்தியாயங்கள் வருவது போல் ஒரு கட்டுரைத் தொடர் எழுதும் உத்தேசத்தில் உற்சாகத்துடன் இதை எழுதிப் பார்த்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா சொல்லும் செய்யும் ஒன்று அல்லது இரண்டு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து லைஃப் லெசன்ஸ் / சர்வைவல் டிப்ஸ் எழுதுவது தான் திட்டம். இடைப்பட்ட தினங்களில் சட்டென அந்த வேகம் வடிந்தது போல் இருக்கிறது. இனி இதைத் தொடர்ந்து எழுத முடியும் எனத் தோன்றவில்லை.)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்