ஒரே ரத்தம் [சிறுகதை]


“குழந்தையோட ப்ளட் க்ரூப் உங்க ரெண்டு பேரோடவும் பொருந்தலையே!”

டாக்டர் முதலில் சொன்ன போது புவனாவுக்குப் புரியவில்லை. அருகே அமர்ந்திருந்த சசியின் முகத்தைப் பார்த்தாள். அவனுக்கும் எதுவும் புரிந்த மாதிரி தெரியவில்லை.

“கேன் யூ எக்ஸ்ப்ளைன்?” - தயக்கமான குரலை சன்னமாய் ஒலிக்க விட்டான் சசி.

“உங்க ப்ளட் க்ரூப் ஓ. புவனாவோடவது ஏ. அப்படின்னா குழந்தையோட ப்ளட் க்ரூப் ஏ அல்லது ஓ ஆகத்தான் இருக்க முடியும். ஆனா ஜோதிகாவோட ப்ளட் க்ரூப் பி!”

கோர்க்கப்பட்ட, அச்சடித்த தாள்களிலிருந்து பார்வையை விலக்கி கண்ணாடிக்கும் புருவத்துக்குமான குறுஞ்சந்தின் வழி அவர்கள் இருவரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள் மெனோபாஸை மிக நெருங்கும் அந்த மத்திம வயது கைனகாலஜிஸ்ட்.

“எனக்கு சரியாப் புரியல, டாக்டர். அதில் ஏதும் பிரச்சனையா?” - புவனா கேட்டாள்.

“அதாவது மெடிக்கலி இது சாத்தியமே இல்ல. இது உங்க குழந்தை தானா?”

“வாட்? ஜோ எங்க குழந்தை தான். எங்களுக்குப் பொறந்த சொந்தக் குழந்தை.”

தடுமாறியபடி சொன்னான் சசி. புவனா பேச்சற்றுப் போயிருந்தாள்.

“ம்ம்ம். பெகூலியர்.” - டாக்டர் யோசனையாய் முணுமுணுத்தாள்.

சசி சட்டெனக் கேட்டான். – “ப்ளட் டெஸ்ட்ல ஏதும் தப்பு நடந்திருக்குமா டாக்டர்?”

டாக்டர் புன்னகைத்தாள். கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்தபடி பேசினாள்.

“க்ளவுட்நைனுக்கு அப்புறம் ப்ரக்னன்ஸிக்கு சென்னையிலயே நம்பர் டூ நாங்க தான். அதனால தான் நீங்க எங்கள நம்பி வந்திருக்கீங்க. போஸ்ட்பேர்டம் செக்கப் வர்ற எல்லார் கிட்டயும் பேரண்ட் - பேபி மூணு பேரோட ப்ளட் சாம்பிள் எடுத்து சில டெஸ்ட்கள் செய்யறது எங்க ருட்டீன். அப்படித் தான் ஜோதிகாவுக்கும் செஞ்சோம்.”

“எஸ்.” - என்றான் அவளைச் சமாதானம் செய்ய ஆமோதிப்பாய் தலையசைத்தபடி.

“டாப் டயகனாஸ்டிக் லேபாரட்டரி ஃபெசிலிட்டீஸ் எங்ககிட்ட இருக்கு. ப்ளட் டெஸ்ட் எல்லாம் ஆட்டோமேட்டட். இந்த மாதிரி ரிசல்ட்னு தெரிஞ்சதால தான் மறுபடி புதுசா சாம்பிள் எடுத்தோம். அதுவும் உங்களுக்குத் தெரியும். டபுள் செக் பண்ணிக்கத் தான் இம்முறை மேனுவலாவும் எக்ஸ்பீரியன்ஸ்ட் டெக்னீஷியன் வெச்சுப் பார்த்தோம். தவிர இது எந்த அட்வான்ஸ்ட் டெஸ்டும் இல்ல. ரொம்ப பேசிக் ப்ளட் க்ரூப்பிங். இதில் எங்க சைடில் டெக்னிக்கல் எரரோ, மனுஷத் தவறோ நடக்க வாய்ப்பே இல்ல.”

சசியும் புவனாவும் என்ன பேசுவதெனத் தெரியாமல் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.

“டெலிவரி எங்க நடந்தது?” - கண்ணாடி அணிந்து கொண்டு டாக்டர் கேட்டாள்.

“எங்க ஊர்ல டாக்டர். சின்ன ஹாஸ்பிடல் தான். ஆனா ரொம்ப கைராசியான டாக்டர். புவனா அம்மாவுக்கே அவுங்க தான் டெலிவரி பார்த்தாங்க. அவுங்க கிட்ட வந்தாலே பெரும்பாலும் சுகப்பிரசவம் தான்னு ரொம்ப ஃபேமஸ். தலைப் பிரசவம்ங்கறதால புவனா வீட்ல எல்லாம் பார்த்துக்கிட்டாங்க. அதனால தான் அங்க பண்ணினோம்.”

“அங்க ஏதும் குழந்தை மாறி இருக்க வாய்ப்பு இருக்கா?”

“தெரியல டாக்டர். ஆனா ரொம்ப நம்பகமான ஹாஸ்பிடல்.”

“புவனாவும் சுகப்பிரசவம் தான். பிறந்த போது சுயநினைவு இருந்துச்சு தானே?”

“எஸ்” - என்றாள் பலவீனமாய்.

“கேன் யூ நெரேட்?”

“எஸ். குழந்தையை எடுத்துக் காமிச்சாங்க. உடம்பெல்லாம் ரத்தம். கொடி வயித்துல தொங்குச்சு. அழல. அப்புறம் அதோட குண்டில டாக்டரம்மா தட்டினாங்க. அப்புறமும் அழல. இன்னொரு தட்டு. ம்ஹூம். இன்னும் பலமா ஒரு அடி போட்டாங்க. ஐயோ, வலிக்குமேன்னு நினைச்சுக்கிட்டேன். வீல்னு கத்துச்சு. பொம்பளக் குழந்தைன்னு டாக்டரம்மா சொன்னாங்க. ஐ ஸ்மைல்ட் வித் டியர்ஸ். அப்புறம் குழந்தையைக் குளிப்பாட்ட எடுத்துட்டுப் போயிட்டாங்க. டயர்டா இருந்ததால் கண் அசந்தேன்.”

“தென்?”

“அப்புறம் எடுத்து வந்து பால் கொடுக்கச் சொன்னாங்க. அப்போ தான் முதன் முதலா குழந்தையை வாங்கினேன். அந்த வாசனை இப்பவும் நினைவிருக்கு. மூணேமுக்கால் கிலோ எடைன்னு சொன்னாங்க. அப்போ முதல் இவ தான். அதில் மாற்றமே இல்ல.”

“சசி. அதே டேட்ல அந்த ஹாஸ்பிடலில் வேற ஏதும் பெண் குழந்தை பிறந்துதான்னு ஒரு முறை விசாரிச்சிடுங்க. தேவைப்பட்டா அந்தக் குழந்தையோட பேரண்ட்ஸை நீங்க கான்டாக்ட் செய்ய வேண்டி இருக்கும். லெட் அஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட்.”

சசியும் புவனாவும் தலையாட்டியபடி எழுந்து கொண்டு “தேங்க்யூ டாக்டர்” என்று சொல்லி விட்டு நடந்தனர். அவர்களின் மனக்குழப்பத்தை நடை மொழிபெயர்த்தது.

இவை எதையும் அறியாமல் புவனாவின் தோளில் துயில் கொண்டிருந்தாள் ஜோதிகா.

*


ஏனோ அருண் நினைவுக்கு வந்தான். தலையை சிலுப்பிக் கொண்டாள் புவனா.

அப்போது எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்தாள். ஊரின் பிரபல தனியார் காலேஜ். கல்லூரி போகும் எல்லாப்பெண்களும் காதலிப்பது போல்தான் அவளும் ஆரம்பத்தாள். உடம்பு திமிரான ஆண்பிள்ளையின் அருகாமையைக் கேட்டது. சிரிக்கச் சிரிக்கப்பேசும் அவனைக் கண்டு மனசு ஏங்கியது. அவளது நைட்டி கனவுகளில் கிடந்து இனித்தான்.

பேருந்துகளில் ஓடிய சினிமாப் பாடல்களின் வரிகள் அவர்கள் காதலை வளர்த்தன.

ஆனால் அதற்கு முன் அருணின் சாதிச் சான்றிதழ் பார்க்கவில்லை. அவன் கையில் கட்டியிருந்த கயிற்றின் நிறத்தைக் கவனிக்கவில்லை. அவன் ஃபேஸ்புக் பதிவுகளை வாசித்திருக்கவில்லை. பார்த்திருந்தால், கவனித்திருந்தால், வாசித்திருந்தால் நிச்சயம் அவனைக் காதலித்திருக்க மாட்டாள். அவளுக்கே அவள் சாதியைப் பிடித்திருந்தது.

அவள் தகப்பன் பெயரில் சாதி இருந்தது. அக்கல்லூரியின் பெயரில் சாதி இருந்தது. ஊரிலிருந்த திருமண மண்டபங்கள், உணவகங்கள், கடைகள், க்ளப்கள், பள்ளிகள், தனியார் பேருந்துகள், பொது நல அமைப்புகள் எல்லாவற்றிலும் அது வீற்றிருந்தது.

சாதி அம்மண்டலத்தில் சூட்சம ரூபமாய் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்தது!

ஆனால் காதலித்த பின் அதெல்லாம் பெரிதாய்த் தெரியவில்லை. சாதியைக் கடக்கத் தீர்மானித்தாள். இறுதி ஆண்டில் கல்லூரியில் விஷயம் பரவத் தொடங்கி அவள் வீட்டை வந்தடைந்தது. அவள் அப்பா அவளை அழைத்து நிதானமாய் விசாரித்தார்.

ஒப்புக் கொண்டாள். மெல்ல “அவுங்க என்ன ஆளுக தெரியுமா?” எனக் கேட்டார்.

அவள் தலையைக் குனிந்து கொண்டாள். “இப்பன்னு இல்ல, காலம் பூரா எப்பவும் பொறப்பைப் பத்திக் கேள்வி கேட்டா இப்படித் தலை குனிஞ்சு தான் நிக்கனும்.”

“இல்லப்பா, அது வந்து…”

“அதெல்லாம் நமக்கு வேண்டாம்டா கண்ணு. விட்ரு.”

“அருண் ஏற்கனவே கேம்பஸ்ல ப்ளேஸ் ஆயிட்டான். வருஷம் நாலு லட்சம் சம்பளம். இப்ப இஸ்ரோ ஜாயின் பண்ணனும்னு டெஸ்டுக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்கான். எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. அவனால நமக்கு எந்த அவமானமும் இல்லப்பா.”

“அவன் ஒருவேளை கலெக்டரே ஆனாலும் இல்ல கோடி கோடியா சம்பாதிச்சாலும் சாதி மாறாதில்லடா புவனா! சொந்தகாரங்க கிட்ட நான் என்னன்னு சொல்வேன்?”

“அப்பா, அவுங்கல்ல யாரையும் விட அருண் நல்லவன்பா. ஒழுங்காப் பாத்துக்குவான்.”

“நல்லவன் கெட்டவன்ங்கறது பத்தி இல்ல. நமக்கு ஒத்து வராது. ஊர் காறித் துப்பும்.”

அவர் அவளைக் கரைக்கப் பார்த்தார். அவள் அவரை உருக்கப் பார்த்தாள். இரண்டுமே நடக்கவில்லை. நீண்ட உரையாடல்களும் அதைத் தொடர்ந்த நீண்ட மௌனங்களும் நிகழ்ந்தேறின. அவள் அம்மா, அத்தை, பாட்டி, தோழிகள் எல்லோரும் வந்து பேசினர்.

*

ஊர் ஹாஸ்பிடலில் தேதி சொல்லி விசாரித்த போது "ஆறு மாசம் முந்தியா?" என்று சலித்தபடி அரை மணி நேரம் கழித்துத் தொலைபேசச் சொன்னாள் ஒரு செவிலி.

அது இன்னும் கணிப்பொறி மயமாகவில்லை. பழைய பர்த் ரெஜிஸ்டரைத் தேடி எடுத்துப் புரட்டிப் பார்த்துச் சொல்வாளாய் இருக்கும். இடையிடையே ஹாஸ்பிடலுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளையும் அவள் தான் எடுத்துப் பேச வேண்டும். அங்கே இருந்த போது சசி கவனித்திருக்கிறான். சரியாய் முப்பது நிமிடம் கழித்து பேசிய போது, அன்றைய தேதியில் அங்கே வேறு பிரசவங்களே நடக்க வில்லை எனத் தெரிந்தது. புவனாவுக்குமே ஞாபகத்தில் அப்படித் தான் இருந்தது.

டாக்டருக்குத் தொலைபேசினான். அவள் கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னாள்.

“ப்ளட் டெஸ்டைக் கன்ஃபர்ம் செய்ய பெட்டர்னிட்டி டெஸ்ட், மெட்டர்னிட்டி டெஸ்ட் செஞ்சிடலாம். அது எங்க ஹாஸ்பிடல்லயே எடுக்க முடியும். இது பேசிக்கலி டிஎன்ஏ டெஸ்ட். குழந்தையோட டிஎன்ஏ ஃபிங்கர்ப்ரிண்ட்டை உங்க ரெண்டு பேரோட டிஎன்ஏ கூட மேட்ச் பண்ணிப் பார்க்கற சோதனைகள். இட் வில் க்ளாரிஃபை எவ்ரிதிங், சசி.”

“காட் இட்.”

“ப்ளட் டெஸ்ட் பொய் சொல்ல சான்ஸ் இல்ல. ஆனால் அரிதா சில கேஸ் இருக்கும். விதிவிலக்குகள். In fact, exceptions that prove the rule. அதனால தான் எதுக்கும் ஒரு செக் பண்ணிப் பார்த்திடலாம்னு சொல்றேன். அப்புறம் நிம்மதியாகிடும். பட் யூ டிசைட்.”

“அதுக்கு எவ்ளோ செலவாகும் டாக்டர்?” என நாசூக்காய் ஆங்கிலத்தில் வினவினான்.

சொன்னாள். புருவம் உயர்த்தியபடி “யோசித்துச் சொல்றேன்” எனத் துண்டித்தான்.

அதுவரை அமைதியாய் அவனைக் கவனித்துக் கொண்டிருந்த புவனா “என்னவாம்?” என்ற கேள்வியை இயல்பாய்க் கண்களில் தேக்கிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

எல்லாம் சொன்னான். விலை மட்டும் பேசவில்லை. சொன்னால் உடனே மறுப்பாள்.

ஜோதிகா அவளிடம் முலையருந்திக் கொண்டிருந்தாள். குடிக்கும் போது பச்சக் பச்சக் என்று சத்தம். வலது பக்கமிருந்து இடது பக்கத்துக்கு மாற்றிக் கொண்டு சொன்னாள்.

“சசி இதெல்லாம் செய்யனும்னு இல்ல. ஜோ பிறந்த நிமிஷத்துல இருந்து நம்மளோட குழந்தைதான். அதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்ல. உனக்குத் தெரிஞ்சுக்கனுமா?”

“அப்படின்னு இல்லடா. ஆனா...” - என்று இழுத்தான்.

“ஒரு பேச்சுக்கு ஜோ நம்ம குழந்தை இல்லைன்னு தெரிஞ்சாலும் என்ன செய்வோம்?”

“…”

“அப்படியே அவளை விட்டுடுவோமா, சசி?”

“நிச்சயம் இல்ல, புவி.”

“அப்புறம் எதுக்கு?”

“ஆனா சந்தேகம்னா அதை நிவர்த்தி பண்ணிக்கறது தானே நல்லது!”

“…”

“சரி, இப்படி வெச்சுக்கலாம். நாம தெரிஞ்சுக்கலாம். ஆனா அது எந்த வகையிலயும் ஜோ தான் நம்ம குழந்தைங்கறதயோ அவ மேல நாம வெச்சிருக்கிற அன்பையோ மாத்தாது. நாம செய்யப் போறது உண்மையை மீட் பண்றது மட்டும் தான். ஓக்கே?”

“அதை விட முக்கியமா ஒண்ணு.”

“முடிவு எப்படி இருந்தாலும் அது பத்தி ஜோவுக்குத் தெரிய வேண்டாம். நாம இப்படி சோதனை பண்ணிப் பார்த்ததே கூட அவளுக்குக் கடைசி வரை தெரிய வேண்டாம்.”

“டன்” என அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான் சசி.   

முளைக்கத் துவங்கிய பற்களில் மெல்லிசாய்க் கடித்தாள் ஜோதிகா. அவள் அப்படித் தான். சரியான முரட்டுக் குழந்தை. பச்சக் பச்சக் சத்தம் அப்போது நின்றிருந்தது.

*

ஒரு கட்டத்தில் அவனை மறக்கவில்லை எனில் பூச்சி மருந்தை வாங்கிக் குடிப்பேன் என மிரட்டத் தொடங்கினாள் அம்மா. புவனா கலையத் தொடங்கியது அங்கே தான்.

அம்மா நோயாளி. இரவு இருமும் சப்தம் பின்னிரவு வரை கேட்கும். சட்சட்டெனக் கோபம் வரும். அவளை மேலும் வதைப்பது புவனாவுக்குக் குற்றவுணர்வூட்டியது.

ஒருமுறை நிஜமாகவே எதையோ வாயில் ஊற்றிக் கொண்டு வெண்நுரை தள்ளியபடி அவள் அம்மா சமையலறையில் விழுந்து கிடக்க மொத்தமாய்க் குலைந்து போனாள்.

“போயும் போயும் ...யனுதை எடுத்து வாயில வெச்சுக்கனும்னு தான் உம் புள்ள திரியறாளா?” என யாரோ ஒரு சொந்தக்காரக் கிழகி கேட்டது தான் காரணம்.

புவனா தவித்தாள். எல்லா விரல்களும் ஒரு சேர அவளை நோக்கியே உயர்ந்தன.

அருணுக்குத் தொலைபேசி “நான் என்னடா செய்வேன்” என்று அழுதாள். அது ஒரு முடிவின் ஆரம்பம் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். விலகத் தீர்மானித்து விட்டாள். ஆனால் குறுக்கே அவள் மனசாட்சி நிற்கிறது. அதைச் சரி செய்யக் கோரி வந்து நிற்கிறாள். அவனாகப் போகச் சொல்லி விட்டால் அவள் மனம் நிம்மதியுறும்.

நேர்முகத் தேர்வு நிமித்தம் பெங்களூர் போயிருந்த அவன் அவளை விருப்பம் போல் முடிவெடுக்கச் சொன்னான். எதற்கும் குறுக்கே நிற்க மாட்டேன் என்று சொன்னான்.

அவள் அப்பாவிடம் காதலைத் துறப்பதாக அறிவித்து விட்டுத் தான் சென்னையில் வேலைக்குச் சேர இரவு ரயிலேறினாள். உடனடியாக மாப்பிள்ளை பார்த்தார் அப்பா.

அப்படித்தான் சசி வந்தான். சென்னையில் ஒரு ஐடி சர்வீஸ் கம்பெனியில் டெக் லீட். நல்ல சம்பளம். நல்ல உயரம். செந்தேகம். கம்பீரன். எல்லாவற்றுக்கும் மேல் அதே சாதி. ஜாதகப் பொருத்தம் பற்றிக் கூட அவ்வளவாய்க் கவலைப்படவில்லை அப்பா.

பிரமாதம் என ஜோதிடர் குறிப்பிட்ட ஒரு முகூர்த்த நந்நாளில் கண் மையைப் பாழ் செய்த மெல்லிய கசிவைத் துடைத்தபடி சசியிடம் தாலி கட்டிக் கொண்டாள் புவனா.

*

அடுத்த ஞாயிறன்று அப்பாயின்ட்மெண்ட் வாங்கிப் பரிசோதனைக்குச் சென்றனர்.

க்ரெடிட் கார்ட் தேய்த்து பில் வாங்கி வந்து காட்டிய பின்னர் உள்ளே அழைத்தனர். அடிப்படையில் மிக எளிமையான ஒத்துழைப்பு தான் பெட்டர்னிட்டி / மெட்டர்னிட்டி டெஸ்டுக்குத் தர வேண்டி இருந்தது. ரத்தப் பரிசோதனையை விடவும் சாதாரணம்.

முனையில் கரண்டி போலிருந்த ஒரு ப்ளாஸ்டிக் குச்சி. அதை வாயில் நுழைத்து கடைவாய்ச் சுவரில் சில பல முறைகள் நிரடினர். கன்னத்தின் உட்பகுதிலிருந்து சில செல்களை அதன் மூலம் சேகரிப்பது தான் நோக்கம் என்றார்கள். அதன் பெயர் பக்கல் ஸ்வாப் என்று சொன்னார்கள். அரை மணியில் வேலை முடிந்தது. சசியிடமிருந்தும், புவனாவிடமிருந்தும் சேகரித்தபின் ஜோதிகாவின் வாயிலிருந்தும் சாம்பிள் எடுத்தனர்.

குழந்தை புரியாமல் அழுதாள். புரிந்தாலும் அழுதிருப்பாள் என புவனா நினைத்தாள்.

மூன்று நாட்களில் ரிப்போர்ட் கிடைக்கும் என்றனர். யோசனையாய் வீடு திரும்பினர்.

*

முதலிரவன்று சுரத்தற்று இருந்தவளிடம் சசி சொன்னது இன்றும் நினைவிருக்கிறது.

“புவனா, எனக்குத் தெரியும் நீ இன்னும் இந்தக் கல்யாணத்துக்கு முழுசா ப்ரிப்பேர் ஆகலன்னு. உன் அப்பா லவ் பத்திச் சொன்னார். அதச் சொல்லித்தான் ஆரம்பிச்சார்.”

“…”

“அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எனக்கு அது புரியும். நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம். கல்யாணமானதாலயே நாம படுத்துக்கனும்னு ஒண்ணும் இல்ல. நீயா இயல்பாகி என்னிடம் வரும் வரை நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். பதிலுக்கு நான் எதிர்பார்க்கறது ஒண்ணே ஒண்ணு தான். இன்னைக்குத் தேதியிலிருந்து நீ அவனை முழுக்க விலகிடனும். நேத்தைய பத்தின கவலை இல்ல தான். ஆனா நாளை பத்தின அக்கறை இருக்கு. என் மனைவியாவும் நம் குழந்தைக்கு அம்மாவும் நீ இருக்கனும். அதுக்கு இந்தக் கல்யாணத்தை முழுக்க நீ மதிச்சாகனும்.”

புவனா அச்சொற்களில் ஒரு சேர அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தாள். இப்போது யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் ஆனந்தமும் அதில் இருந்தாற் போல் படுகிறது!

*

ரிப்போர்ட் வரும் நாளன்று பதற்றமாய்க்காத்திருந்தார்கள். அந்த டாக்டர் சாவகாசமாய் வந்து குட்டே பிஸ்கெட் கொறித்தபடி காகிதங்களை மேய்ந்து விட்டுச் சொன்னாள்.

“இட்ஸ் க்ளியர். புவனாதான் குழந்தைக்கு அம்மா. பட் உங்க டிஎன்ஏ மேட்ச் ஆகல.”

அதன் முழுப் பொருளும், நீட்சி வீரியமும் இருவரையும் தாக்க சில கணம் பிடித்தது.

“யூ மீன்…?” என்று தடுமாறினான் சசி.

“எஸ். இனி இது உங்க குடும்ப விஷயம். லெட் மீ நாட் கமெண்ட் ஆன் இட் ஃபர்தர்.”

மேற்கொண்டு பேச ஏதுமிருக்கவில்லை. சசியும் புவனாவும் எழுந்து கொண்டார்கள்.

காரை ஓட்டி வீடு வந்து, சமையல் செய்து, சாப்பிட்டு முடித்து, ஜோதிகாவுக்கும் பால் கொடுத்து, தூங்க வைத்து, படுக்கப் போகும் வரை புவனா ஒன்றுமே பேசவில்லை.

சசியும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. படுத்து விளக்கணைத்ததும் இருட்டில் ஒளிந்து கொண்டு பேச விரும்பிக் காத்திருந்தவள் போல் உடனே புவனா கேட்டாள்.

“என்னை சந்தேகப்படறியா சசி?”

“இல்ல, லூஸாடி நீ?” - மிக அவசரமாய்ச் சொன்னான்.

“அப்புறம் ஏன் பேசவே இல்ல?”

“ஏய், நீ பேசலைன்னு தான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டேன்.”

“ம்.”

“ஆனா யோசனையும் தான்.”

“என்னனு?”

“விஞ்ஞானம் பொய் சொல்லாது. வேற என்ன காரணமா இருக்கும்னு யோசிக்கறேன்.

“ம்.”

“சரி, அதெல்லாம் விடு.”

“ஜோ என் டிஎன்ஏவும் இல்லை என்று வந்திருக்கக்கூடாதா. ஹாஸ்பிடலில் குழந்தை மாறி இருக்கும்னு சமாதானம் சொல்லிக்கலாம். இப்பப் பாரு அசிங்கமா இருக்கு.”

“எதையாவது போட்டுக் குழப்பிக்காதே புவி.”

“ம்.”

“சரி, பார்க்கலாம். நீ தூங்கு.”

கைகால்கள் அசைபடுவது போல் தோன்ற தொட்டிலில் எட்டிப் பார்த்தாள் புவனா. தூக்கத்தினூடே திடீரென வசீகரமாய் ஒரு சிரிப்பை உதிர்த்து மீண்டாள் ஜோதிகா.

அது தடங்கலின்றி எப்போதும் நீடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள் புவனா.

*

சொன்ன மாதிரியே சசி கல்யாணமாகி புவனாவைத் தொடவே இல்லை. டூ பெட்ரூம் அபார்ட்மெண்ட்டான அவர்களின் வீட்டில் மற்றொரு படுக்கை அறையில் தூங்கிக் கொண்டான். ஆனால் அது மட்டும் தான் அவர்களுக்குள் இல்லை. மற்றபடி, சினிமா, ஹோட்டல், ஷாப்பிங், பீச், கோயில் என ஊர் சுற்றல் எல்லாம் நடந்தேறியது.

அன்றைய தினத்தின் அனுபவங்கள் பற்றி உற்சாகமாகப் பேசிய படி இரவு உணவு முடிந்ததும் குட்நைட் சொல்லி விட்டு தன் அறைக்குப் போய் படுத்துக் கொள்வான்.

ஒரு வாரம், ஒரு மாதம், காலாண்டும் கடந்தது. அறுபது ஆசை நாட்களும், முப்பது மோக நாட்களும் வெறுமையாய்த் தீர்ந்த பின் காமம் தாபமாய்த் துளிர் விட்டது.

புவனா தான் முதல் கொக்கியைப் போட்டாள் - “யூ கேன் ஸ்லீப் ஹியர் சசி.”

அவன் மறுக்கவில்லை. வந்து அவளருகே படுத்துக் கொண்டான். அன்றிரவு சேர்ந்தார்கள். அப்புறம் சேர்ந்தே தான் இருந்தார்கள். நூற்றாண்டுப் பசியில் இருப்பவனுக்கு உணவு கிடைத்தது போல் பரஸ்பரம் பிய்த்துத் தின்றார்கள்.

அதிலிருந்து மிகச் சரியாய் நான்காம் மாதம் புவனா பீரியட்ஸ் தவற விட்டாள்.

*

அன்று பரபரப்பாய் வீடு வந்தான் சசி. ஷூவைக் கூடக் கழற்றாமல் - "புவி! புவி!"

அவளும் அப்போதுதான் வீடு திரும்பி, முகம் கழுவி, திருத்தமாகி உட்கார்ந்திருந்தாள்.

“23சி அப்படினு ஒரு யூஎஸ் கம்பெனி இருக்கு. ஜெனிடிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம்.”

“என்ன, பெஸண்ட் நகர் - அயனாவரம் நடுவுல பஸ் விடப் போறாங்களா?”

“ஏய் விளையாடாதே. கேளு. 23சி அப்படின்னா 23 க்ரோமோஸோம்ஸ்னு அர்த்தம்.”

“சரி.”

“அவுங்க ஒரு டீட்டெய்ல்ட் டிஎன்ஏ டெஸ்ட் பண்ணிறாங்க. சாதரணமா நாம எடுத்த பெட்டர்னிட்டி டெஸ்ட்ல 15 டிஎன்ஏ அடையாளங்களை வெச்சுத் தான் சொல்றாங்க. இவுங்க சில ஆயிரம் ஜெனிடிக் மார்க்கர்ஸை அனலைஸ் பண்ணி முடிவு தர்றாங்க.”

“ஓ!” - அசுவாரஸ்யமாய்க் கேட்கத் தொடங்கிய புவனா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“ஆமா. என்னன்னா இந்தக் கம்பெனியின் அப்பாயிண்ட்மெண்ட் புக்கிங் ஏபிஐஸ் எழுதற வேலை எங்க கம்பெனிக்கு அவுட்சோர்ஸ் ஆயிருக்கு. ஆறு மாச ப்ராஜெக்ட். நம்ம ஜவஹர் தான் அங்க டீம் லீட். அவன் சொல்லித் தான் எனக்கு இது பத்தித் தெரிஞ்சிது. அப்புறம் நெட்ல தேடி, கால் சென்டருக்குப் பேசி விவரம் கேட்டேன். வேளச்சேரில ஒரு லேபோட டையப் வெச்சிருக்காங்க. சாம்பிள் கலெக்ஷனுக்காக.”

“ஸோ?”

“எனக்கும் ஜோவுக்கும் இவுங்க கிட்ட ஒரு டெஸ்ட் எடுக்கலாமன்னு யோசனை.”

“உனக்கா?”

“ஆமா, எனக்கு என்னமோ உள்ள ஜோ என் குழந்தை தான்னு சொல்லிட்டே இருக்கு.”

“ம். இதுக்கு எவ்ளோ செலவாகும்?”

“அது பத்தி என்ன? தேவைனா செஞ்சிட வேண்டியது தானே!”

“எவ்ளோனு கேட்டேன்.”

“ம். ஒன் லாக்.”

“ஏய். ஒரு லட்சமா?”

“ஆமா. பிட் காஸ்ட்லி ஒன்லி. ஏன்னா அவுங்க இங்க இல்ல. சாம்பிள் இங்க இருக்கற டைஅப் லேப் மூலமா கலெக்ட் பண்ணி யூஎஸ் அனுப்பிடுவாங்க. அப்புறம் 15 நாளில் அங்கே இருந்து ரிசல்ட் சொல்வாங்க. எல்லாத்துக்கும் சேர்த்து தான் பேக்கேஜ் ரேட்.”

“எடுக்கனுமா?” - குழைவாய்க் கேட்டாள் புவனா.

“பணம் செலவாகுறது பிரச்சனை இல்லை. ஆனா இது ஒரு தொந்தரவு. அனாவசிய அவஸ்தை. உன் பிரியத்துக்கு விடறேன். நீ டிசைட் செய். தேவையா இல்லையானு.”

புவனா சற்று நேரம் யோசித்தாள். பிறகு அவனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள்.

“இல்ல சசி. எடுத்துடலாம். குழப்பம்னு வந்தாலே என்னனு பார்த்திடறதுதான் பெட்டர். இல்லனா ஏதாவது மூலையில் உறுத்திட்டே இருக்கும். அது இதை விட அவஸ்தை.”

அவள் சொன்னது சசிக்கே ஆச்சரியம் தான். பொதுவாய் காசு விஷயத்தில் புவனா கெட்டி. அனாவசியமாய் ஒரு ரூபாயும் செலவழிக்க மாட்டாள். முன்பு பெட்டர்னிட்டி டெஸ்டுக்கு அவளைச் சம்மதிக்க வைக்கவே ரொம்ப மெனக்கெட வேண்டி இருந்தது.

ஜோதிகா குப்புற விழுந்து எதையோ வாயில் போட்டு கடித்துக் கொண்டிருந்தாள்.

*

அசந்தர்ப்பமான அந்த ஃபேஸ்புக் அசம்பாவிதம் நினைவுக்கு வந்தது புவனாவுக்கு. எப்போதும் அவள் நினைத்து நாக்கைக் கடித்துக் கொள்வது அச்சம்பவத்தைத் தான்.

அருணை விலகிய பின்பும் அவன் ஃபேஸ்புக்கில் இன்னும் நட்புப் பட்டியலில் தான் இருந்தான். புவனா அத்தனை தீவிரமாய் ஃபேஸ்புக் பயன்படுத்துபவள் அல்ல. அவள் கவிதை எழுதுபவள் அல்ல என்பதாலும், ஒரு மணி நேரத்துக்கொரு முறை செல்ஃபி எடுப்பவள் இல்லை என்பதாலும் ஃபேஸ்புக் தளம் அவளுக்கு அவசியப்படவில்லை. கல்லூரி கால நட்புக்களிடம் தனியரட்டையில் எப்போதேனும் பேசுவது மட்டும் தான். அதனால் ப்ரக்ஞைப்பூர்வமாய் அருணைப் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கவில்லை.

கர்ப்பமான ஏழாம் மாதம் அம்மா வீடு அழைத்துப் போய் வளைகாப்பு வைத்தார்கள். அங்கே சமைத்துக் கொடுத்த தேங்காய், எலுமிச்சை, புளி, புதினா என விதவிதமான சாதங்களுக்காகவே மீண்டும் கருவுற வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

அப்படிப் பூரிப்பில் இருந்த ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டாள். நீண்ட நாள் கழித்து அவள் போட்ட படம். துரதிர்ஷ்டவசமாய் அருண் அதற்கு லைக் போட்டான். அப்போது தான் இஸ்ரோ சேட்டிலைட் சென்டரில் சயின்டிஸ்டாகச் சேர்ந்திருந்தான்.

அவன் போட்ட லைக்கைப் பார்த்த அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு கல்லூரி நண்பன், இருவரையும் டேக் செய்து, "நீங்க ரெண்டு பேரும் ஸ்டில் *டச்ல* தான் இருக்கீங்களா? ஓக்கே ஓக்கே." எனக் கண்ணடிக்கும் ஸ்மைலி ஒன்றை இணைத்து கமெண்ட் போட, அதை புவனா கவனிக்காதிருந்து விட, சசி தவற விடவில்லை.

வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டில் புவனாவை விட்டுச் சென்னைக்குத் திரும்ப இருந்தவன் அவளிடம் அதைக் காட்டினான். அவன் விளக்கம் ஏதும் கேட்கவில்லை.

புவனா நிதானமாய் அவனது மடிக்கணிணியை வாங்கி அவன் முன்பாகவே அவளது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டைத் திறந்து காண்பித்தாள். மொத்த சாட் ஹிஸ்ட்ரியையும் பார்த்துக் கொள்ளச் சொன்னாள். திருமணத்திற்கு நான்கு மாதம் முன் கல்லூரி இறுதி மாதங்களில் தான் கடைசியாய் அவளும் அருணும் அதில் பேசி இருந்தனர். அதற்கு பிறகு ஏதும் இல்லை. சசி அவை எதையும் திறந்து வாசிக்க எத்தனிக்கவில்லை.

புவனா ஒரு துண்டுச்சீட்டை எடுத்து எதையோ எழுதி விட்டு அவனிடம் நீட்டினாள்.

“பாஸ்வேர்ட். இனி இதுவும் நமக்குள் ரகசியம் இல்ல, சசி.”

சீட்டைத் திரும்பக் கொடுத்து விட்டுச் சசி சொன்னான் –

“ரெண்டு விஷயம். அவனை அன்ஃப்ரண்ட் பண்ணிடு. பாஸ்வேர்டை மாத்திடு.”

ஆனால் அதற்குப் பிறகு ஒருமுறை கூட அது பற்றி அவளிடம் கேட்டதில்லை சசி.

*

இம்முறை நான்கு குழாய்களில் ரத்தம், ஏழு ஸ்வாப் சாம்பிள்கள் சேகரித்தார்கள்.

அது போக தனியறை அனுப்பி சுயஇன்பம் செய்யச் சொல்லி விந்தணு சாம்பிள். சுத்தமான அறையில் ஒரு கட்டில், ஒரு சாய்வு நாற்காலி போடப்பட்டிருந்தது. சின்ன டீபாயின் மீது சென்னை டைம்ஸ் இணைப்பிதழ். ரொம்ப சாஃப்ட் மோட்டிவேஷன்!

பதினைந்து நாட்கள் மிக மெதுவாய் நகர்ந்தன. லேப் டாக்டரிடம் கேட்டதற்கு மேலும் ஒரு வாரம் போல் ஆகும் என்றார். சசி ஒரு ப்ராஜெக்டில் மூழ்கிப் போய் விட்டான்.

அந்த வாரத்தில் ஒருநாள் அலுவகத்தில் இருக்கும் போது ஃபோன் வந்தது. ரிப்போர்ட் வந்து விட்டதாகவும் எப்போது வேண்டுமானாலும் வந்து வாங்கிக் கொள்ளும்படியும்.

கணிணித் திரையில் மணி பார்த்தான். 3 மணி தான் ஆகி இருந்தது. கண்ணாடிக்கு வெளியே பார்த்தான். மாநகரம் இன்னும் வீடு திரும்ப அவசரம் கொள்ளவில்லை. மந்தமாய் அசைந்திருந்தது. பொதுவாய் அவன் வீட்டுக்குக் கிளம்ப 8 மணி ஆகும். தவிர, இன்று வேலையும் தலைக்கு மேல் விட்டம் தொடுமளவு குவிந்து கிடந்தது.

ஆனாலும் சசிக்கு இருப்புக் கொள்ளவில்லை. உடனே புவனாவுக்கு அழைத்தான்.

அவள் துண்டித்து விட்டு ஒரு மீட்டிங்கில் இருப்பதாகவும் அடுத்த பத்து நிமிடத்தில் அழைப்பதாகவும் அறிவித்து விட்டு வேறு ஏதும் அவசரமா எனக் கேட்ட டெம்ப்ளேட் எஸ்எம்எஸை அனுப்பினாள். “ரிப்போர்ட் ரெடி” என்று இரட்டை வார்த்தைகளை பதிலாய் அனுப்பினான். அடுத்த முப்பது நொடிகளில் அவள் அழைத்து விட்டாள்.

“ஏய், மீட்டிங்னு சொன்னே?”

“அத விடு. பெர்சனல் எமர்ஜென்ஸின்னு சொல்லிட்டு வெளியே வந்துட்டேன்.”

“அடிப்பாவி!”

“என்ன சொன்னார் டாக்டர்?”

“ஒண்ணும் சொல்லல. வந்து வாங்கிக்கச் சொன்னார்.”

“சரி, வா போகலாம்.”

“இப்பவேவா?”

“ஆமா, ஏன்?”

“வேலை இருக்கு புவி.”

“அப்புறம் பார்த்துக்கலாம். முதலில் இது. வீட்டுக்குப் போய் பார்த்துக்கோ"

சசி டாக்டரை அழைத்து அவர் தற்போது இருக்கிறாரா வந்து வாங்கிக் கொள்ளலாமா எனக் கேட்டான். அந்தப் புறம் டாக்டர் ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்ததாய்ப் பட்டது.

வரச் சொன்னார்.

*

பிரசவத் தேதி வந்ததும் காரை எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விட்டான் சசி. அவன் வந்து சேர்வதற்குள் புவனாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருந்தார்கள்.

கையைப் பிடித்துக் கொண்டு அவளுடனே இரவு முழுக்க இருந்தான். இனிமா கொடுத்து அவள் வயிற்றைச் சுத்தம் செய்தார்கள். அதிகாலை வலி எடுத்தது.

ஆனால் குழந்தை வெளிவரும் அறிகுறி ஏதும் தென்படவில்லை. நன்கு முக்கச் சொன்னார்கள். அவள் வலிக்கிறது என அழுதாள். சசியும் கண்ணீர் கொண்டு டாக்டரிடம் சண்டைப் போட்டதாகப் பிற்பாடு புவனா அம்மாவிடமிருந்து அறிந்தாள்.

அந்த டாக்டர் இறுதி வரையிலும் பிடிவாதமாய் சுகப் பிரசவத்துக்கு முயன்றார்.

குழந்தையை முதன் முதலில் கையில் ஏந்தி நின்ற சசியின் முகம் நினைவில் இருக்கிறது. தந்தைமையின் முலைப்பால் அவன் முகத்திலிருந்து பொழிந்தது.

தனக்குப் பிடித்த நடிகையின் பெயரை அவன் தான் குழந்தைக்குச் சூட்டினான்.

*

வழுக்கையில் அனுபவம் சொல்லிய லேப் டாக்டர் உச்சரிக்கப் போகும் சொல்லுக்காக மானசீகமாக மட்டுமின்றி நிஜமாகவும் கையைப் பிசைந்தபடி தவங்கொண்டிருந்தனர். சசியும் புவனாவும். பீடிகைகள் விரும்பாதது போல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

“சசி, உங்க அண்ணன் தான் ஜோதிகாவோட அப்பா.”

துல்லியமாய் அதிர்ந்த இருவரும் பரஸ்பரம் குழப்பமாய்ப் பார்த்துக் கொண்டனர்.

சசி மெல்லக் கேட்டான் - “அண்ணனா?”

“ஆமா.”

“டாக்டர், என் பெரியப்பாவுக்கு ரெண்டும் பொண்ணு. அம்மா சைட்ல பெரியப்பாங்கற ரிலேஷனே இல்ல. ரொம்ப தூரத்தில் அண்ணன் முறை வரும் ஒருத்தர் இருக்கார். ஆனா பங்காளிச் சண்டை. அவர் எங்க கல்யாணத்துக்குக் கூட வந்த நினைவில்ல.”

"இல்ல, இது உங்க சொந்த அண்ணன்.”

“நான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன் டாக்டர்.”

“அதுவும் கரெக்ட் தான்.”

“ஒண்ணும் புரியல டாக்டர்”

டாக்டர் புன்னகைத்தார்.

“ஏன்னா அந்த அண்ணன் தான் பிறக்கவே இல்லையே!”

“…”

“ஓக்கே. லெட் மீ ட்ரை டூ எக்ஸ்ப்ளென் திஸ் இன் சிம்பிள் டெர்ம்ஸ்”

“சொல்லுங்க.”

“உண்மையில் நீங்க உங்க அம்மாவின் வயிற்றில் உருவாகும் முன்பே இன்னொரு கரு உருவாகி இருக்கு. ஆனா பிறக்கல. அதைத் தான் அண்ணன்னு சொல்றேன்.”

“யூ மீன் மிஸ்கேரேஜ்? அம்மா இதப் பத்தி சொன்னதே இல்லையே!”

“இல்ல. உங்க அம்மாவுக்கே அது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.”

“சுத்தம்!”

“சொல்றேன். உங்க அம்மா வயிற்றில் அந்தக் கரு உருவான சில நாளில் நீங்களும் கருவா உருவானீங்க. பொதுவா இந்தக் கேஸில் நீங்க ரெண்டு பேரும் இரட்டைக் குழந்தையாப் பிறந்திருக்கனும். ஆனா அப்படி நடக்கல. பதிலா அந்தக் கரு அப்போ கருவா உருவாகிட்டிருந்த உங்களோட சேர்ந்திடுச்சு. ரொம்ப ரேரா இப்படி நடக்கும்.”

“ஓ!”

“அதாவது சசி அப்படிங்கற நீங்க உருவானது ரெண்டு கருவிலிருந்து. உங்களுக்குள்ள ரெண்டு ஜீன்கள் உண்டு. ரெண்டு வித டிஎன்ஏ மேப்பிங். மரபணுரீதியா நீங்க ரெண்டு மனுஷன். ஒண்ணு சசிங்கற நீங்க. இன்னொண்ணு பிறக்கவே செய்யாத, பேரில்லாத உங்க அண்ணன். இப்ப நம்ம பேசற வசதிக்காக அவர் பேரு ரவின்னு வெச்சுக்கலாம்.”

சசி விழித்தான்.

“உங்க உடம்பின் வெவ்வேறு உறுப்புகளில் இந்த ரெண்டு வித ஜீன்ஸும் மாறி மாறி இருக்கு. பெரும்பாலும் சசியான உங்களோட ஜீன். சில இடங்களில் அரிதா ரவியான அவரோட ஜீன். உதாரணமா கடவாயில் ஸ்வாப் எடுத்தோமே அதில் பூரா உங்க ஜீன். அதனால தான் பெட்டர்னிட்டி டெஸ்ட்ல உங்க ஜீன் குழந்தையோட மேட்ச் ஆகல.”

“ஏன் மேட்ச் ஆகல.”

“வர்றேன். உங்க விந்தணு - அதில் தான் எல்லா ரகசியமும் இருக்கு. அதில் வெறும் 10% தான் உங்க ஜீன். மீதி பூரா ரவியோடது. அதனால் மேத்தமேட்டிகலி ரவியோட விந்தணு கருமுட்டையைச் சேரும் சாத்தியம் தான் அதிகம். அது தான் நடந்துச்சு.”

“டாக்டர்…”

“ரவியோட ப்ளட் க்ரூப் பி. அப்படித் தான் ஜோதிகாவுக்கு பி க்ரூப் கிடைச்சிருக்கு.”

“புரியுது.”

“இதுக்கு சிமெரான்னு பேரு.”

“ஓ!”

“எஸ். ப்ளன்ட்டாச் சொன்னா ஜோதிகாவுக்கு அம்மா புவனா, அப்பா ரவி. அது நிகழ ஒரு கருவியா உங்க உறுப்பும், உடம்பும், காமமும் பயன்பட்டிருக்கு. தட்ஸால்!”

“ஸ்டாப் இட்.”

“ஐயாம் ஸாரி.”

“நான் தான் கொஞ்சம் ரசனையாப் பேசறதா நினைச்சு லிமிட் க்ராஸ் பண்ணிட்டேன்.”

புவனா வாயைத் திறந்தாள்.

“டாக்டர், இது எல்லாமே ஒரு சயின்டிஃபிக் பெர்ஸ்பெக்டிவ் தானே?”

“எது?”

“சசியை ஜெனிட்டிக்கலா கூறு போட்டு இது சசி, அது ரவி அப்படின்னு சொல்றது?”

“ஆமா, ஆனா...”

“இதெல்லாம் தெரியாமத்தானே இவ்ளோ வருஷமா மனுஷங்க வாழ்ந்தாங்க?”

“ஆமா. இன்ஃபேக்ட் இந்த மாதிரி ரெட்டை மனுஷங்க நிறைய இருப்பாங்க. ஆனா அவுங்களுக்குத் தெரியாது. ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவாகும் போது 8% இந்த மாதிரி பிறக்க வாய்ப்பிருக்குனு ஒரு சர்வே சொல்லுது. ஆனா உங்கள மாதிரி லட்சம் ரூபாய் செலவு பண்ணி எத்தனை பேரு இதெல்லாம் தெரிஞ்சிக்கறாங்க!”

“சில சமயம் நிறைய அறிவு கூடத் தொந்தரவு தான் டாக்டர்.”

“...”

“ஃபைன். நாங்க கிளம்பறோம்.”

*

அன்று இரவு சசி எதுவும் சாப்பிடவில்லை. புவனா எவ்வளவு சொல்லியும் கேட்க வில்லை. அசிடிட்டி என்று சொல்லி பால் மட்டும் வாங்கிக் குடித்து விட்டு படுத்துக் கொண்டான். ஆனால் உறங்கவில்லை. வெறுமனே கண்களை மூடிப் படுத்திருந்தான்.

அவன் தூங்காமல் கிடக்கிறான் என்பதை கண் பாப்பாவின் அசைவுகள் அறிவித்தன.

“எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு, சசி.”

“என்ன?” - கண்களைத் திறந்தான்.

“இந்த ரிப்போர்ட் வரலைன்னா கடைசி வரை கறைபட்டவளாவே இருந்திருப்பேன்.”

“ஏய்!”

“இரு. நீ நல்லவன். என்னை முழுக்க நம்பினே. இப்பன்னு இல்ல. எப்பவும். ஆனா என்னால அதை நிரூபிக்க முடியாமலே போயிருக்கும்? தீக்குளிக்காத சீதை மாதிரி!”

“நிரூபிக்கனுமா என்ன?”

“ஆமா. ஏன்னா உனக்கு சந்தேகம் வரலைனாலும் எப்பவாவது யாருக்காவது இது தெரிஞ்சா அவுங்க நிச்சயம் என்னைத் தான் தப்பா சொல்வாங்க. அப்போ உன் மனசில் சின்னதா ஒரு குறுகுறுப்பு வந்தாலும் என்னால் தாங்க முடியாது.”

“...”

“நான் ஏற்கனவே ஒருத்தனைக் காதலிச்சவள். அது பலருக்கும் தெரியும். அதனால எல்லோருக்கும் ரொம்ப இயல்பாவே அந்த எண்ணம் வந்திடும். அன்னிக்கு என் ஃபேஸ்புக் ஃபோட்டோவுக்கு அந்தக் கமெண்ட் போட்டவனுக்கு தோனின மாதிரி.”

“நான் உன்னைச் சந்தேகப்படல, புவி.”

“தெரியும், சசி. என் அம்மா கூட என்னைச் சந்தேகப்பட்டாங்க அப்போ. வேற ஏதும் இருக்காடின்னு கேட்டாங்க. என்னை முழுசா நம்பியவன் நீ ஒருத்தன் தான்.”

“ம்.”

“அதனால தான் இந்த டெஸ்ட் அவ்ளோ முக்கியம் எனக்கு. அதனால் தான் லட்ச ரூபாய்னு தெரிஞ்சும் கஞ்ச புத்தியான நான் பிடிவாதமாச் செய்யச் சொன்னேன்.”

“ஏய்!”

“இப்போ எல்லாம் படிகம் மாதிரி புரிஞ்சிடுச்சு.”

“ம்.”

“என்ன ம்?”

“ஆனா எனக்குத் தான் சுமை ஆகிடுச்சு.”

“சசி. இது என்ன?”

“ஆமாம் என் குழந்தைக்கு நான் அப்பா இல்லையே? யாரோ முகமற்ற, உயிரற்ற, பிறப்பற்ற ரவினு இன்னிக்கு பேப்டைஸ் பண்ணப்பட்ட ஒருத்தன். ஃபக் ஆஃப்.”

“நான் தான் சொன்னேனே அது விஞ்ஞான வசதிக்காக பிரிச்சு வெச்சிருக்காங்க.”

“ஆனா டிஎன்ஏ வேற தானே?”

“டிஎன்ஏங்கறது வெறும் அடையாளம் தானே சசி. நாம ஒட்டற லேபிள். நீ அப்படினா நீ தானே? இந்த தலைமுடி, இந்த நெத்தி, இந்த கண், இந்த மூக்கு, இந்த மீசை, இந்த உதடு, இந்த கழுத்து, இந்த நெஞ்சு, இந்த வயிறு, இந்த ... எல்லாமே நீ தான்.”

“ஆனா உள்ள இருக்கறது மட்டும் நான் இல்ல.”

“போடா. ஸ்டுப்பிட். எல்லாம் நீ தான்.”

“ம்.”

“சொன்னா சிரிப்பே. நான் கூட இப்படித் தான் ஸ்டுப்பிடா யோசிச்சேன்.”

“என்னனு?”

“புராண காலத்துல ஆத்துல குளிக்கப் போனாளாம் ஒரு பொண்ணு. எங்கயோ வேற பக்கம் அதே ஆத்துல குளிச்சிட்டிருந்த ஒரு ஆள் மாஸ்டர்பேட் பண்ணி விட்டது ஓடற தண்ணில கலந்து நகர்ந்து வந்து அவளுக்குள்ள பூந்து கர்ப்பமானாளாம். அது போல ரீசண்ட்டா ஏதும் ரெஸார்ட் போனப்ப ஸ்விம்மிங் பூலில் நடந்துடுச்சோன்னு.”

சசி புன்னகைத்தான்.

“உன் பயம் கூட இண்டலிஜெண்ஸ் தான், புவி”

சொல்லியபடி சசி புவனாவை நெற்றியில் முத்தமிட்டான்.

ஜோதிகா மெல்லச் சிணுங்கி திரும்பிப் படுத்தாள். தொட்டில் குலுங்கியது.

“சீக்கிரமா ஒண்ணு?”

இருவரும் கட்டிக் கொண்டார்கள். இறுக்கமாய்த் தழுவிக் கொண்டு ஆடைகளை நழுவ விட்டார்கள். அன்று சசி கொஞ்சம் மூர்க்கமாய் இருந்தான். வழக்கமான ஒன்றாய் இல்லாமல் யாருக்கோ எதையோ நிரூபிப்பது போல் செயல்பட்டான்.

முடிந்து லுங்கியை இறுக்கிக் கொண்டு மல்லாக்கச் சாய்கையில் சொன்னான்.

“இந்த முறை நான் உள்ளே போயிருப்பேன்ல?”

“வாட்?”

“பத்து பெர்சண்ட் நான்.”

அவன் நெஞ்சில் செல்லமாய்க் குத்தி விட்டுச் சொன்னாள்

“இதுக்கு முன்னயும் நீ தான் போனே. நூறு பெர்சண்ட் நீ!”

அவனை இறுகக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

*

அடிவயிற்றில் இயற்கை நிறைந்து உந்த விழிப்பு கண்டு எழுந்தாள் புவனா.

தலைமாட்டில் இருந்த செல்ஃபோன் எடுத்து மணி பார்த்தாள். பின்னிரவு இரண்டு.

ஜோதிகா தூங்கிக் கொண்டிருந்தாள். திரும்பிப் பார்த்தாள். சசியும் தூங்கிக் கொண்டிருந்தான். மெல்லிய குறட்டை. களைப்பு என நினைத்துக் கொண்டாள்.

நைட்டியை அள்ளி அணிந்து கொண்டு, மெல்ல செல்ஃபோனை எடுத்துக் கொண்டு மீண்டும் சசியைப் பார்த்தபடி படுக்கையை விட்டெழுந்து பாத்ரூமுக்குப் போனாள்.

நிதானமாய் சிறுநீர் கழித்து ஃப்ளஷ் செய்த பின் செல்ஃபோனை எடுத்து ப்ரவுஸரில் ஃபேஸ்புக் போய் தன் நிஜக் கணக்கு அல்லாமல் வேறொரு அக்கவுண்ட்டில் லாகின் செய்தாள். மாலை 3 மணியிலிருந்து அருண் அனுப்பிய மெசேஜ்கள் குவிந்திருந்தன.

ஜோதிகா சிணுங்கும் சப்தம் பாத்ரூமினுள் ஊடுருவி தேய்ந்து போய் ஒலித்தது.

சின்னதாய் இரு வாக்கியங்களை அவசரமாய் தட்டச்சி அனுப்பி லாகவுட் செய்தாள்.

“ஜோவுக்கு நீ அப்பா இல்லை, அருண். நாளை விரிவாகப் பேசுவோம். குட்நைட்.”

***

Comments

kathir said…
சூப்பர் ரைட்டரே!!!! 👍👍👍
antruse said…
ரொம்ப அழகாய் எழுதிருக்கீங்க... மெகாசீரியல் டைரக்டர்களுக்கு தெறிஞ்சா 500 எபிசோட் ஓட்டிடுவானுங்க...
Lakshman said…
Happen to see a horror movie that deals with Chimera. The Unborn. Thought you might be interested if you haven't come across this movie.
Anonymous said…
They had us in the beginning, not gonna lie

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்