தமிழ் மின்னிதழ் - ஒரு கடிதம்

தமிழ் மின்னிதழ் குறித்த ஓர் அனுபவ / அறிமுகப் பதிவை என் தளத்தில் எழுத வேண்டும். நேரம் கிட்டியபாடில்லை. இடையே இதழ் குறித்து வந்த ஒரு கடிதத்தை இங்கே பகிர்கிறேன். அஷோக்  கமல் ரசிகர். ட்விட்டரில் எழுதி வருபவர் (@ashoker_UHKH). அசோகர் என்ற  பெயரில் தமிழ் மின்னிதழிலும் எழுதி இருக்கிறார். இதழ் குறித்த அவர் எழுதியிருந்த ஒரு நீண்ட விமர்சனக் கடிதம் அவர் அனுமதியுடன் சற்று எடிட் செய்யப்பட்டு இங்கே. அவரது கருத்துக்களுக்கு நன்றி.

*

டியர் சிஎஸ்கே,

வணக்கமும், வாழ்த்துக்களும்! ஒரு இதழ் துவங்க வேண்டும் என்ற எண்ணம் அல்ல, அதை செயல்படுத்துவதுதான் பெரிய சவால் என்பது ஏற்கனவே அரைகுறையாய் முயன்று தோற்றவன் என்ற முறையில் நன்கறிவேன். நீங்கள் சாத்தியம் ஆக்கியதற்கு பாராட்டுக்கள். :-) முழுவதும் படித்துவிட்டு எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்பதால் இவ்வளவு தாமதமாக இக்கடிதம். இதை விமர்சனக் கடிதம் எனக் கொள்ளாமல் முழுத் தொகுப்புக்கான நீ...ண்ட பின்னூட்டம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமென்றே விரும்புகிறேன்.

எனது வழமையை மீறி மிகப் பெரிதாக இதை எழுதுகிறேன். நீளமான கட்டுரைகள் எழுத நீங்கள் சளைத்தவரில்லை என்பதால், படிக்கவும் சளைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ;)

1.    இதழின் வடிவமைப்பில் பத்திகள், பக்கத்தின் நெடுக்கு வெட்டாக இரு நிரலாக பிரித்து பெரிய பத்திரிகைகளில் வருவது போல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நேரமோ அல்லது அதற்கான மென்பொருள் உதவியோ உங்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், A4 பக்கத்தின் முழு அகலத்தையும் அடைத்துக் கொள்ளும் இந்த முறையில் Justify (Ctrl+J) விசையையாவது  பயன்படுத்தியிருக்கலாமே? அனைத்து வாக்கியமும் இடப்புறம் ஒதுங்கி என்னவோ போல் இருக்கிறது. (கவிதைகள் தவிர்த்து)

2.    சிறு எழுத்துப் பிழைகளும், சில வாக்கிய அமைப்பும் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. சிற்றிதழ் சொல்லாடல்களை கவனமாக நீங்கள் தவிர்த்திருப்பது நன்றாகவேத் தெரிகிறது. போலவே, மிகவும் ஜனரஞ்சகமாக இருந்துவிடல் ஆகாது என்ற கவனமும்.

3.    பாலா மாரியப்பனின் புகைப்படம் நன்றாக இருந்தது. ஆனால் அது அந்த இடத்தில் எதற்கு, நல்ல சினிமாவின் நடுவே செருகப்பட்ட பாடல் காட்சியை போல? பதிலாக, ஏதேனும் ஒரு கட்டுரைக்கு பொருத்தமான படம் ஒன்றை கேட்டுப் பெற்றிருக்கலாமே!

4.    இதழ் அறுபது பக்கத்தில் என் உருவத்தைப் போல் இருக்குமென எதிர்பார்த்திருந்தேன். உங்களைப் போல கனமாகவே இருக்கிறது. ;) காலாண்டிதழ் என்பதால் அப்படி என்று நீங்கள் சமாதானம் சொல்லலாம். முழு விருந்தும் கழுத்துவரை உண்டு முடித்து கைகழுவும் இடத்திலும் விருந்து அளித்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு தோற்றம். இதைக் கூட இரையுண்டு நகரமுடியா மலைப்பாம்பைப் போல் கிடந்துதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். செரிமானம் ஆக வேண்டாமா சார்? மூன்று மாதம் வைத்து படிக்க வேண்டியதை சில நாட்களில் படித்தால் அப்படித்தான் என்று சொல்லாதீர்கள். :-) இன்றைய வாசகனின் ‘Light Reading Habbit’-ஐ கணக்கில் கொள்ளாத பிடிவாதமோ என மெல்லிய கவலை கொள்கிறேன்.
அதற்காக கொறிப்பதற்கான தீனி தான் வேண்டும் எனக் கேட்கவில்லை, எங்கள் தேவை விருந்து தான். ஆனால் limited meals போதும். திக்குமுக்காட வைக்காதீர்கள்.

இனி ஒரு வாசகனாக, படைப்புகளைப் பற்றி உங்களிடமே கூறிவிடுகிறேன். ஒவ்வொன்றுக்கும் கருத்து சொல்ல வேண்டுமா என்றால், வேண்டும் தான். முதல் இதழ் ஆயிற்றே, எனவே அது அவசியமும் கடமையும்தான் என்றே கருதுகிறேன்.

•    ‘அரட்டை கேர்ள்’ சௌம்யாவின் கவிதைகள் தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றமே. குழந்தையின் குறும்பும், குமரியின் அப்பாவித்தனமுமாக அவரின் ட்விட்களே கவிதைத்தனமாக இருக்கும். ஆனால் கவிதையில் அது இல்லை! எங்களைவிட அந்த ட்விட்டர் கணக்கில் எழுதப்படும் எழுத்திற்கு சிறந்த ரசிகராகிய நீங்கள், வாங்கித் தந்திருப்பது இது என்பது தான் ஆச்சரியம்! இளையராஜாவிடம், கமல்ஹாசன் சாதரண‌ப் பாடல்களையா கேட்டுப் பெறுவார்?  முத்தக் கவிதைகளில் சில மட்டும் நன்றாக இருந்தன.

•    விருதுகள் பகுதியில், தேர்ந்தெடுக்கப்பட்டவை/ பட்டவர்கள் பெயருடன், அதை நியாயப் படுத்தும் விதமாக காரணத்தை இரு வரிகள் எழுதியிருக்கலாம் (விகடன் போல). பக்கங்கள் நீளும் என நீங்கள் காரணம் சொன்னால் ஏற்க மாட்டேன். :-)

•    ஸ்வப்னம் இசை விமர்சனத்தில், எனக்கு இசை நுட்பங்கள் எதுவும் தெரியாது (கேட்பதற்கு என்றால் தேவை இல்லை, செவி போதும். படிக்க வேண்டுமே..) என்பதால் அவரின் வரிகளை மட்டுமே கவனித்தேன்.            //வேறொரு இசையமைப்பாளராக இருந்திருந்தால் இதை ஒரு அருமையான பரிசோதனை முயற்சி என்றும் அவரின் ஆக சிறந்த ஆக்கம் என்றும் நாம் போற்றியிருப்போம். ராஜா இது போல்  பல விஷயங்கள் தினமும் செய்வதால் ராஜ ரசிகர்களாகிய நாம் ரசித்துவிட்டு இவற்றைக் கடந்துவிடுகிறோம்.// - இந்த வரிகளோடு நூறு விழுக்காடு ஒத்துப் போகிறேன். எஸ். சுரேஷ் ஒரு சிறந்த ராஜா ரசிகர்.!

•    சுரேஷ் கண்ணனின் எக்சைல் விமர்சனத்தில் அவரே சொன்னது போல் ‘அந்த’ கதைத் திணிப்புகள் ஏன் என்று தெரியவில்லை. ஆசிரியர் சிஎஸ்கே என்பதால் “அது” இல்லாமலா என்கிறார். நகைச்சுவைக்குத் தான் என்றாலும், ஆசிரியருக்கு பிடித்தமானவை மட்டுமே இருக்க வேண்டும் எனில் அது அவரது தனிப்பட்ட டைரிக் குறிப்பில் தானே இருக்க வேண்டும். எல்லோரும் படிக்கும் இதழில் எதற்கு? இதை ‘பரத்தைக் கூற்றுடன்’ எல்லாம் ஒப்பிட முடியாது. ஆடை விலக்கிப் பார்ப்பதற்கும், தோல் விரித்துப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது தானே? அந்தப் பத்திகளில் எனக்கு உடன்பாடு இல்லை. மற்றபடி, சாருவின் எழுத்தை அவர் கையாண்ட விதம் ரசிக்கும்படி இருந்தது. முழுக் கட்டுரையிலும் இழையோடிய மெல்லிய நகையுணர்வுப் பிடித்திருந்தது.

•    நர்சிம் தன் சிறுகதையில், பாத்திரங்களின் பெயரற்ற ‘அவள், அவன்’ என்ற உத்தியிலேயே நம்மை கட்டிப் போட்டுவிடுகிறார். அவள், அவன், பைத்தியக்காரன் ஆகியோரைத் தவிர, மறைபொருளாகவே காலம் என்ற பாத்திரம், துவக்கத்தில் நமக்கு ஏற்படும் ஆர்வத்தைப் போலவே கடைசிவரை உடன் வருகிறது. Worthy!

•    டீசரில் குறிப்பிட்ட ‘பறந்தலையும் நினைவுகளை..’ வரிகளில் நிற்கிறார் பொன். வாசுதேவன். வேப்பம்பிசின் வாசனையாக என்னை வசீகரித்தது அந்தக் கடைசிக் கவிதை மட்டும்.

•    மதுரையைத் தாண்டினால் நெல்லை தான் எல்லோருக்குமான பாடுபொருளாகவே இருந்து வந்திருக்கிறது. நடுவில் விருதுநகர், சிறுநகரமான சாத்தூர் போன்றவை கண்டுகொள்ளப் பட்டதாகவே தெரியவில்லை. வசந்தபாலனின் வெயில் விதிவிலக்கு, திருச்சியைப் போலவே தனக்கென பெரிதாக மொழிவழக்கு இல்லாத விருதுநகரைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய உண்டு. தனக்கென ஒரு வட்டமிட்டு அதனுள் வாழும் அம்மாநகர் மானிடர் வாழ்வெனும் பேசாப்பொருளைப் பேசியதற்காக முரளி கண்ணன் அவர்களுக்கு Special Kudos!

•    என்.சொக்கன் அவர்களின் எழுத்துக்களை நிறைய படித்திருக்கிறோம். இக்கதையில் அவர் தொட்டிருப்பது, அடுத்த வீட்டு ஆட்களின் அடையாளம் கூட தெரியாமல் வளர்க்கப்பட்ட ஒருவன், அந்நியரின் அதீத அக்கறையை எதிர்கொள்ளும்போது ஏற்படும் சங்கடம், சந்தேகம், நத்தையைப் போல் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் பாதுகாப்பு உணர்ச்சி என்ற வேறொரு கோணம். பழக்கம் இல்லாத ஒருவர் காட்டும் பேரன்பைக் கூட ஒருவித அதிர்ச்சியாக எதிர்கொள்ளும் ஒரு வாழ்வியலை தன் எழுத்து நடையிலேயே சுட்டிக்காட்ட, அவரின் எழுத்து அனுபவம் துணை நிற்கிறது. அருமை.!

•    கிரிக்கெட் இல்லாத பால்யத்தை நம் தலைமுறைக் கடந்ததில்லை. எந்த சர்வதேச கிரிக்கெட் விதிகளுக்கும் உட்படாத நம் சுய விதிகளுடனான தெருக் கிரிக்கெட்டை கண்முன் நிறுத்தியிருக்கிறார் இந்திரன், தன் பந்து புராணத்தில். முடிவு கிளிஷேவாக இருந்தாலும் இதை வேறு எப்படி முடிக்க முடியும்? :-)

•    முத்தலிப்பின் பலமே, வட்டார வழக்கை ஒரு சமூகத்தின் பேசுமொழியை அப்படியே சிதையாமல் எழுத்தில் கொண்டுவருவதுதான் என்பது என் கருத்து. கூடவே, அவர் கொண்டுவரும் எளிய உவமைகளும். கதை நடக்கும் காலகட்டத்தை அவர் குறிப்பிடாதது தவறுதலாக நடந்ததோ, இல்லை நம்மையே கணிக்க வைக்கும் உத்தியோ.. கமர்நிசாவுடனான ரைலுப் பயணம் மறக்க முடியாதது. Welldone!

•    சிலான் – க்யூப்ரிக் என்ற இரு உலகப்பட இயக்குநர்களைப் பற்றிய லேகா மற்றும் நவீனின் அலசல்களை தராசின் இருதட்டுகளில் வைக்கலாம். பில்கே சிலானின்  பல படங்களை அலசி அவரின் நெறியாள்கையைப் பற்றி லேகா அகல உழ, க்யூப்ரிக்கின் ஒரே படத்தை எடுத்துக் கொண்டு அவரின் திறனைப் பற்றி நவீன் ஆழ உழுதிருக்கிறார்.

க்யூப்ரிக் பற்றிய கட்டுரையை நீங்கள் எடிட் (பின்னர் நவீன் ட்விட்டரில் அப்படித்தான்  சொன்னார்) செய்த விதம் அழகு. கச்சிதமான கத்தரிப்பு. நாயகியின் ரகசிய ஆசை, நாயகன் கண்ட அதிசய உலகம் என சொல்லாமல் விட்ட இடங்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. இதுதானே ஒரு திரைவிமர்சனத்திற்கு வேண்டும்! :-)

•    ஈழத் தமிழில் ‘அன்றில் பறவை’! தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமும் ஆர்வமும் உள்ள மொழிநடையில் உணர்ச்சிப் பூர்வமான கதையில் நேர்த்தி இருந்தது. கனமான களம். அன்பின் சங்கீதா, விதவை என்பதன் ஆண்பால் தபுதாரனா? ஆம் எனில், புதிய சொல் தெரிந்து கொண்டேன், நன்றி! :-)

•    நேர்காணல்.. 49 பக்கங்கள். 54 கேள்விகள்! வியப்பாகவும் (பாராட்டு தான்), மலைப்பாகவும் (பாராட்டு இல்லை) இருக்கிறது. ஜெமோவின் நேர்த்தியான பதில்களுக்கு கேள்விகள்தான் காரணம் என்பேன், ஒவ்வொரு கேள்வியும் திறமையாக கட்டமைத்து இருந்தீர்கள். உதாரணமாக. மது அருந்துவதைப் பற்றிய கேள்வி ஒரு சாமர்த்தியத் தூண்டில். அது தொடர்பான எனது நிலைப்பாட்டிற்கு ஜெமோவின் பதில் ஆதரவாக இருந்ததில் மகிழ்ச்சி. உங்கள் உழைப்பிற்கு Hats Off!

நேர்காணலை மட்டுமே தனி இதழாக வெளியிடலாம் போல. குறைந்தது இரு இதழ்களில் வெளியிட்டால் என்ன? காலாண்டு இதழ் என்பதாலேயே இத்தனை பக்கங்களை செலவிட்டிருக்க வேண்டுமா? சமயங்களில் கமல்ஹாசன் தனது அனைத்து திறமைகளையும் ஒரே படத்தில் திணிப்பாரே, அது போல் உள்ளது. படித்து முடிப்பதற்குள் களைப்பாக இருக்கிறது. நவீனின் கட்டுரையில் உங்களின் கத்தரிப்பைப் பற்றி சொல்லியிருந்தேன், இங்கே நிகழ மறுத்த அற்புதம் அது. :-/

•    ரகு.சி-யின் கட்டுரை இணையம் பற்றியதாக இருந்தாலும், அதற்குப் பின்னுள்ள அரசியலை, உளவியலை பேசியிருப்பது அட்டகாசம். இது போன்ற கட்டுரைகள் நிறைய இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

•    சொரூபா கவிதையின் கடைசிவரியில் வேதனைமுள்! நன்றாக இருந்தது. மிருதுளாவின் கவிதை இன்னொரு ஏமாற்றம். ஒரே வரியை திரும்பத் திரும்ப சொல்லும் குடும்ப மலர் பாணியில் அமைந்தது தான் குறை. ஏனெனில் அவரிடம் எதிர்பார்த்தது அதிகம்.

•    ஒரு கலகத்தின் – திட்டமிட்ட வன்முறையின் பாதிக்கப்பட்ட தரப்பே கதை கவிதைகளில் பதிவிடப்படும். கர்ணா சக்தி, அதை பாசாங்கின்றி ஒரு அப்பாவி சிசுவின் வாய்மொழியாக சொல்லியிருப்பது வலிக்கு வலு சேர்க்கிறது. நளீரா போல் இவர் தொடர்ந்து எழுத வேண்டும்.

•    முதல் நான்கு வரிகள் அசத்தினாலும், பயணம் பற்றிய கடைசிக் கவிதையில் தான் அதிகம் ஈர்க்கிறார் நா.ராஜு. ஒருவேளை மற்றவை எனக்குப் புரியாமல் இருக்கலாம். அவரே சொன்னது போல் எல்லாவற்றிற்கும் நம்மை மீறிய ஒரு பொருளுண்டு தான். Nice!

•    புனைவின் கீழ் நீங்கள் பட்டியலிட்டிருந்தாலும், சொந்த அனுபவத்தை அப்படியே எழுதியது போலொரு பிரமிப்பை ஏற்படுத்துகிறார் மத்யமன். (ஒருவேளை அதானா?) முதல் பக்கத்தின் சிவசத்தியநாராயணா கோவிலைப் பற்றிய பத்தியில் அப்படியே ‘வாத்தியார் சுஜாதா’ வாசனை. மெல்லத் துவங்கி, நடுவில் நண்பர் வந்து காப்பாரா என்ற பதைபதைப்பை உருவாக்கி, இறுதியில் பாசாங்கு இல்லாத நெகிழ்ச்சியாய் முடித்திருப்பது அசத்தல் ரசனை. பொறாமையாய் இருக்கிறது இவர் மீது. :-)

•    செந்தில்நாதன் ட்விட்களை, ட்விட்டரிலேயே நிறைய வியந்திருப்பதால், பிரசுரத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தவைக்காக உங்களுக்கு பாராட்டுக்கள்.

•    ஒரு இதழ் தனது கால இருப்பைக் காட்டிக்கொள்ள சமகால சர்ச்சைகளை, சம்பவங்களை விவாதிப்பதுதான் முக்கியம் என்பதென் நம்பிக்கை. அவ்வகையில் இதில் இடம் பெறுவது பெருமாள் முருகன் பற்றிய கட்டுரையும், கேபி தொடர்பான இரு பதிவுகளும் தான்.

பெருமாள் முருகன் பற்றிய பதிவு ஒரு அவசியத் தேவை. இவ்விவகாரத்தில் இதழ் தனது உறுதியான ஆதரவை படைப்பாளியின் பக்கம் வைப்பது அத்தியாவசியம். அதைச் செய்துள்ளீர்கள். கட்டுரையில் பெருமாளின் கருத்துக்களுக்கு ஆதரவு ஆதாரமாக புராணம் முதலிய தரவுகளை எடுத்து வைக்கிறார் கிருஷ்ண பிரபு. கூடவே, இதற்குப் பின்னிருக்கும் சுயநல அரசியலையும், குழுச் செயல்பாடுகளையும் இன்னும் விரிவாக சாடியிருக்கலாம். வரும் காலத்தில் தலையங்கம் போன்ற பகுதியை நீங்கள் துவங்கினால் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

•    கயவர்களிடம் தன் மகளை இழந்த ஒருவர், வேறொரு முகம் தெரியாத பெண்ணைக் காப்பாற்றும் எளிய கதையை, இருவேறு களங்களை மாறி மாறிக் காட்டும் தன் எழுத்து நடையால் பரபரப்பாக்கி சுவாரஸ்யமூட்டுகிறார் மீனம்மா கயல். இதுவே அவரின் எதிர்கால எழுத்தின்மேல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.

•    My most favourite portion of the magazine is KRS-ன் சங்கத்தமிழ் for dummies. ஆர்வம் இருப்பவர்களுக்கே பள்ளியில் படிக்கும்போது கடினமாக இருந்த ஒரு பகுதியை, இவ்வளவு எளிதாக குழைவாக ஒருவரால் கொடுக்க முடியுமா என்று அசந்து போனேன். நிறைவடையும் இடத்தில் நிச்சயம் ‘தொடரும்’ என்ற சொல் வரும் என்று நம்பி ஏமாந்து போனேன். ஆம், நான் உங்களுக்கு வைக்கும் ஒரே கோரிக்கை இவரை தொடராக எழுத வைத்து இன்னும் சங்கத் தமிழை எளிய முறையில் பரவலாக்க வேண்டும் என்பதுதான். Hats Off KRS Sir!

•    தனது நக்கல் நையாண்டி பதிவுகளால் பட்டயக் கிளப்பும் அல்டாப்பு வினோத் சீரியசாக முயன்றிருக்கிறார் (சிறகில்லாப் பறவைகள்). இன்றைய ஐ.டி இளைஞனின் பொருளாதார நெருக்கடிகளை விவரித்துக் கொண்டே வந்து, இறுதியில் காவல்துறை வீடுதேடி வருவது அவன் எடுத்த தற்கொலை முடிவா, கொலையா என்று வாசகரிடமே முடிவைக் கொடுப்பது ரசிக்கும்படி இருந்தது. அவரின் நையாண்டிக் கட்டுரை ஒன்று தமிழ் இதழில் வரவேண்டும். அதுதான் அவரின் Own Ground!

•    ஒரு ஆளுமையின் மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றிய கட்டுரைகளில் மிகைத்தன்மை தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல. அது கார்த்திக் அருள் அவர்களுக்கு எளிதாகவும், அதேநேரம் சொல்லவந்ததை அழுத்தமாக முன்வைக்கவும் முடிந்திருக்கிறது. கேபியின் படைப்புகளுடனான, கேபியுடனான தனது அனுபவங்களை மிக அழகாக விவரிக்கிறார். உண்மையில் இதைப் படித்த பிறகு எனக்கு கேபி மீதான பிம்பம் மேலும் உயர்ந்திருக்கிறது. அது தானே எழுதியவருக்கு வெற்றி!

•    அதே பேசுபொருள்தான், ஆனால் தன் நிலையிலிருந்து முன்வைக்காமல் கேபியின் பாத்திரங்களே பேசிக்கொள்வதாக மாற்றியது ஜிரா-வின் புத்திசாலித்தனம். படைப்பாளியை ரசிகனைவிட அவனின் படைப்புகள் தானே இறப்புக்குப் பிறகும் பேசும்! மூன்று மட்டும் என்றில்லாமல் முக்கியமான வேறு சில பாத்திரங்களும் இணைந்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும் ஜிரா சார்! :-)

•    பிரசன்ன குமாரின் ஜெமோ முன்னட்டையும், பரணியின் கடைசிப் பக்க கேபியும் வாட்டர் கலரில் தத்ரூபம். வாழ்த்துக்கள்!

இவையெல்லாம் மிகைப்படுத்தி சொல்லப்பட்டதோ, குறைமதிப்பீடோ இல்லை. ஒவ்வொன்றையும் படித்து முடித்ததும் மனதில் தோன்றியதை அப்படியே எழுதியிருக்கிறேன். உள்நோக்கம் ஒன்றுமில.

இறுதியாக...

ஒரு புதிய முயற்சி துவங்கும்போது பலவித எதிர்வினைகள் வந்தே தீரும். ‘இலவச’ அறிவுரைகள் வழங்கப்படும். சபிக்கப்படும். குறைகளுக்கு முன் மட்டுமே பூதக் கண்ணாடி வைக்கப்படும். இதையெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தே இருந்திருப்பீர்கள். இவையெல்லாம் உங்களை பின்னடையச் செய்யவோ, தொய்வடையச் செய்யவோ விடாதீர்கள். அப்படிப்பட்டவர் இல்லை நீங்கள் என்பதென் துணிபு.

இதைவிட ஆபத்து மிகையாகக் கொண்டாடுவது. ஈடில்லா, இணையில்லா, ஒப்பற்ற என்றெல்லாம் தலையில் தூக்கிவைத்து ஆடுவது. அதில்தான் விழுவதன் சாத்தியம் அதிகம். அப்படியெதுவும் நடக்கவில்லை என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். :-) :-)

Take a bow, CSK..!

தமிழ் வளரட்டும்!!

நன்றி.

அன்பன்,
அசோக்.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்