பரத்தை கூற்று - ஒரு விளக்கம்

ஒரு புத்தகத்தை எழுதி விட்டு அதற்கு தன்னிலை விளக்கமும் தர நேர்வது அவலம் என்ற போதிலும் இது தமிழ் கூறும் நல்லுலகு என்ற பின்புலத்துடன் சேர்த்துப் பார்க்கையில் இதில் அதிர்ச்சியோ ஆச்சரியமோ ஏதுமில்லை. தவிர அடியாள் வைத்து விளக்கவுரை எழுத வசதியும் ரோஷமும் இடம் தராததால் என் புத்தகத்திற்கு நானே வக்கீலாக ஆஜாராகிறேன்.

முதலில் பரத்தை கூற்று தொடர்பாய் அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விக்களுக்கு என் பதில்களைப் பார்த்து விடலாம்.

1. பரத்தை கூற்று என்பது என்ன?
ஒரு கவிதைத்தொகுதி.

2. எவ்வகைக் கவிதைகள் அதில் இருக்கின்றன?
பாரதிதாசனும், கண்ணதாசனும், வைரமுத்துவும், வானம்பாடிகளும் எழுதிக் குவித்த புதுக்கவிதை வகைக் கவிதைகள்.

3. இன்னமும் கொஞ்சம் விளக்க முடியுமா?
ஓர் உடனடிப்புன்னகையோ, ஓர் அதிர்ச்சித்தீற்றலோ, ஒரு கண்ணீர்ச்சுவடோ உத்திரவாதம். வாசிக்கும் அந்தக் கணத்தில் தீப்பொறி போல் ஒரு சிந்தனைத்தெறிப்பை உண்டாக்க வல்லவை இவை. சுவாரஸ்யம் தான் இவற்றின் ஆதார குணம்.

4. இவ்வகைக் கவிதைகள் இலக்கியமா?
தெரியாது. ஆனால் இவற்றுக்கென்று ஓரிடம் தமிழ் மரபில் நிச்சயம் உண்டு. தவிர தமிழ் சினிமாவில் தரமான பாடல் வரிகள் என சுட்டிக் காட்டப்படும் எதை விடவும் மேலான ஸ்தானம் இவற்றுக்கு உண்டு. இவை உணர்ச்சிக்குவியல்கள்.

5. நவீனக்கவிதைகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா?
கிஞ்சித்தும் இல்லை. பிச்சமூர்த்தியும், பிர‌மிளும், தேவதேவனும், மனுஷ்யபுத்திரனும் எழுதிய / எழுதும் கவிதைகள் தாம் நவீனக் கவிதைகள். சொல்லப்போனால் என்னைப் பொறுத்தவரையிலும் கூட இவையே தாம் நல்ல கவிதைகள்.

6. அப்படியென்றால்?
பரத்தை கூற்று என்பது செறிவூட்டப்பட்ட‌ சுவாரஸ்யமான புதுக்கவிதைகளின் தொகுப்பு. வாசிப்பின்பம் தான் அதன் பிரதான நோக்கம். அதே சமயம் காலங்காலமாய் சுரண்டப்படும் பாலியல் தொழிலாளிகள் என்ற ஓர் இனம் குறித்த ஊடுபாவாய் இழையோடிய ஒரு சமூகக் கவலை அக்கவிதைகளில் வலுவாய்த் தொக்கி நிற்கிறது என நம்புகிறேன். அதாவது உருவம் பழகியது எனினும், உள்ளடக்கம் காரணமாக இத்தொகுப்பு தனித்துவம் பெறுகிறது என்கிறேன்.

அவ்வள‌வு தான்.

*******

கடந்த முப்ப‌தாண்டுகளில் உருவான மாபெரும் வெகுஜனக்கவியான வைரமுத்து, எக்ஸைல் என்ற உங்களின் சமீப நாவலை வெளியிட்ட கவிஞர் வாலி, இன்றைய சினிமா பாடல்களில் ஆட்சி செலுத்தி வரும் நா.முத்துக்குமார் என்று இவர்கள் எவரும் சினிமாவுக்கு வெளியே எழுதியிருக்கும் கவிதைகள் எதற்கும் என் தொகுப்பு குறைந்ததில்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால் தான் "சுஜாதா இருந்திருந்தால் இக்கவிதைகளைக் கொண்டாடி இருப்பார்" என்று புத்தக வெளியீட்டு விழாவிலேயே சொன்னீர்கள். அப்போது அதன் எல்லையை நன்கு புரிந்து கொண்டு இப்போது மாற்றிப் பேசினால் எப்படி? நீங்கள் சொன்னது போல் "இவை ரசிகர்கள் விசிலடித்துப் படிக்கும் வகையிலான கவிதைகள்" என்று தான் நானே ஒப்புக் கொள்கிறேனே. அப்புறம் அதில் நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்து நிரூபிக்க என்ன இருக்கிறது?

நான் ஆடிக் கொண்டிருக்கும் களமே வேறு, அதுவே புரியாமல் கவிதையே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? இந்தக் களத்தில் நான் போட்டியிடும் ஆகச்சிறந்த தமிழிலக்கிய ஆளுமை மகுடேசுவரன் தான். அப்புறம் முகுந்த் நாகராஜன், ராஜா சந்திரசேகர், விநாயகமுருகன், செல்வராஜ் ஜெகதீசன், செல்வேந்திரன், லதாமகன் போன்ற புதுக்கவிதைக்கும் நவீனக்கவிதைக்கும் இடைப்பட்ட வகைக் கவிதைகளை முயற்சித்து வரும் சிலர். ஓர் அடையாளப் புரிதலுக்காக ஆனந்த விகடன் சொல்வனம் தரம் என் இவற்றைப் பிரிக்கலாம். இவர்களின் கவிதைகளோடு ஒப்பிட்டு என்னுடையதை எடை போடுங்கள், குப்பையென்று திட்டுங்கள், கிழித்துத் தோரணம் கட்டுங்கள். நான் ஏற்கிறேன். அதை விடுத்து மறுபடி மறுபடி மனுஷ்யபுத்திரனோடு ஒப்பிட நீங்கள் ஓடுவதைப் பார்க்கையில் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

க்ரிக்கெட் விளையாடுப‌வனைப் பார்த்து எத்தனை கோல் அடித்தாய் என்று கேட்பது போன்றதான‌ அறிவீனம் தான் இது.

அல்லது கவிதை என்று என் புத்தகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் லேபிள் தான் உங்களுக்கு உறுத்துகிறது என்றால் பிரச்சனையில்லை, நிச்சயமாக அதை எடுத்து விடலாம். ஆனால் அதற்கு முன் வைரமுத்து முதலான அத்தனை புதுக்கவிஞர்களின் புத்தகங்களிலிருந்தும் அந்த லேபிளைக் கிழித்தெறிந்து விட்டு கடைசியாய் என்னிடம் வாருங்கள்.

எது எப்படியோ புத்தகக் காட்சி சமயம் பார்த்து பரத்தை கூற்று குறித்து ஒரு Buzz உருவாக்கிக் கொடுத்ததற்கு மிக்க‌ நன்றி!

Comments

Unknown said…
ஒரு முடிவில்தான் இருக்கீங்க போல.
Unknown said…
அதென்னங்க சொல்வனம் தரம்?
Unknown said…
எனக்கென்னவோ நல்ல கவிதை கெட்ட கவிதை போலெல்லாம் அன்றி
பிடித்த கவிதை பிடிக்காத கவிதை என்றே இங்கிருப்பது போன்றே தோன்றுகிறது.
மேலும், பிடித்தது என்பதும் நம் ரசனை சார்ந்ததுதானே.

மாலன் ஓரிடத்தில் சொன்னது.
"எந்த புத்தகத்தை வேண்டுமானால் படிக்கலாம்.
எல்லாவற்றிலும் நாம் படிப்பது நம்மைப் பற்றியே."
Anonymous said…
super....வேகமாக ஓடிவந்து பந்து வீசும் ஒருவரை நிறுத்தி நீங்கள் எததானை சிக்சர் அடித்திருக்கிறீர் என்பது போல இன்னும் பொருந்துமோ...- mekalapugazh

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்