புத்தகக்காட்சி 2011 : A POST-MORTEM

புத்தகக்காட்சிக்கு செல்வது இப்போதெல்லாம் சடங்காகி விட்டது - மறுக்கவே இயலாத ஆனால் விருப்பத்துக்குக‌ந்ததொரு பழஞ்சடங்கு. ‌பத்தாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்களைப் பெருங்கட்டாய் வாங்கி திட்டுக்கள் வரவேற்க பெருமிதத்துடன் வீடேகிய காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. ராட்சசப்பை கொள்ளாப் புத்தகங்களை ‌மிகத்தனியனாய்த் தோளில் சுமந்தலைவது கடந்த போன‌ சமீபங்களில் மிகுந்த அலுப்பினையே தருகிறது.

பொதுவாகவே புத்தகக்காட்சி செல்வது ஓர் உணர்வு. வாசிக்கும் பழக்கமுடைய ஒரு சிந்த‌னையாளனுக்கு அதைக் காட்டிலும் கொண்டாட்டமான சங்கதி வேறு ஏதேனும் இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். புத்த‌கம் வாங்குவது என்பது இதில் இர‌ண்டாம் பட்சம் தான். அத்தனை புத்தகங்களையும் ஒரே இடத்தில் பார்க்கையில் வரும் அந்தப் பரவசம் ஒரு சம்போக உச்சத்துக்கு இணையானது. செல்வது அந்த உணர்வுக்காகவே.

இம்முறையின் அசூயைக்கு கலவையாய்க் கார‌ணங்கள் துருத்தி நிற்கின்றன. பிரதான காரணம் - எல்லோரும் சொல்வது தான் எனினும் உணர்ந்தால் மிக உண்மையானதும் கூட‌ - ஏற்கனவே வாங்கிய புத்தகங்களையே இன்னும் படித்த பாடில்லை (அதுவும் கடந்த ஆண்டு வாங்கியவற்றில் ஒரு பத்து சதவிகிதம் படித்திருந்தாலே அதிகம்). அடுத்தது புத்தகங்கள் கிடைக்கும் வழிகள் - இன்று புத்தகக்காட்சியில் மட்டும் தான் வாங்க முடியும் என்பதான புத்தகங்கள் மிகக்குறைவு. எனக்குத் தேவையான‌ புத்தகங்கள் பெரும்பாலும் உடுமலை.காம் போன்ற வலைதளங்களிலும், NEWBOOKLANDS போன்ற அங்காடிகளிலும் மிகச்சுலபமாய் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன. கடைசியாய் சென்னை டூ பெங்களூர் பயணம். தாகம் கூடப் பரவாயில்லை, ஆனால் தண்ணீர் போத்தல் சுமையென்று அதை விலக்கும் குணமுடையோன் நான் - அப்படியிருக்க கழுதைப்பொதியாய் நூல் தூக்கும் இந்த ஆட்டத்துக்கு உடல், மனம் இரண்டுமே ஒத்துழைக்க மறுப்பதில் ஆச்சரியமில்லை.

பொதுவாய் குறைந்தபட்சம் இரண்டு முறையேனும் புத்தகக்காட்சி செல்வது வழக்கம். இந்தத் தடவை அதை உடைத்து ஒரு முறை மட்டுமே செல்வது என முடிவெடுத்து செயல்படுத்தியும் விட்டேன். ஆனால் விதி வலியது போலும் - சிறந்த நூல் பரிசளிப்பு விழாவுக்கு மீண்டும் சென்னைக்கு இழுத்து வந்து விட்டது. அதன் வழி புத்தகக்காட்சிக்கு ரெண்டாம் ஆட்டம் போக வேண்டியதாகி விட்டது. இம்முறை புத்தகக்காட்சியில் சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், நாஞ்சில் நாடன், கி.ராஜ‌நாராயணன், பா.ராகவன், லீனா மணிமேகலை, காலச்சுவடு கண்ணன், ஹரன் பிரசன்னா போன்ற சிலரைப் பார்க்க முடிந்தது. பா.ரா.விடம் மட்டும் சிறிது நேரம் கதைத்து நகர்ந்தேன்.

எதற்கெனத் தெளிவில்லை - வாங்கிய புத்தகங்களை இங்கு பட்டியலிட விழைகிறேன்:
  1. தேகம் - சாரு நிவேதிதா (உயிர்மை பதிப்பகம்)
  2. சரசம் சல்லாபம் சாமியார் - சாரு நிவேதிதா (உயிர்மை பதிப்பகம்)
  3. ஷேக்ஸ்பியரின் மின்ன‌ஞ்சல் முகவரி - சாரு நிவேதிதா (உயிர்மை பதிப்பகம்)
  4. மனம்கொத்திப்பறவை - சாரு நிவேதிதா (விகடன் பிரசுரம்)
  5. உலோகம் - ஜெயமோகன் (கிழக்கு பதிப்பகம்)
  6. இரவு - ஜெயமோகன் (தமிழினி)
  7. அனல் காற்று - ஜெயமோகன் (தமிழினி)
  8. இன்றைய காந்தி - ஜெயமோகன் (தமிழினி)
  9. துயில் - எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)
  10. சிறிது வெளிச்சம் - எஸ். ராமகிருஷ்ணன் (விகடன் பிரசுரம்)
  11. ஆதலினால் - எஸ். ராமகிருஷ்ணன் (விஜயா பதிப்பகம்)
  12. இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் - மனுஷ்ய புத்திரன்  (உயிர்மை பதிப்பகம்)
  13. மாதொருபாகன் - பெருமாள்முருகன் (காலச்சுவடு பதிப்பகம்)
  14. கொசு - பா.ராகவன் (கிழக்கு பதிப்பகம்)
  15. அலகிலா விளையாட்டு - பா.ராகவன் (கிழக்கு பதிப்பகம்)
  16. உணவின் வரலாறு - பா.ராகவன் (கிழக்கு பதிப்பகம்)
  17. தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன் (ஆழி பப்ளிஷர்ஸ்)
  18. திசைகாட்டிப்பறவை - பேயோன் (ஆழி பப்ளிஷர்ஸ்)
  19. கூப்பிடுவது எமனாக இருக்கலாம் - வா.மு.கோமு (உயிர் எழுத்து பதிப்பகம்)
  20. நீலவானம் இல்லாத ஊரே இல்லை - க.சீ.சிவக்குமார் (உயிர் எழுத்து பதிப்பகம்)
  21. உப்புக்கடலைக் குடிக்கும் பூனை - க.சீ.சிவக்குமார் (வம்சி புக்ஸ்)
  22. கனகதுர்கா - பாஸ்கர் சக்தி (வம்சி புக்ஸ்)
  23. நந்தை போன பாதையில் - மிஷ்கின் (வம்சி புக்ஸ்)
  24. விமலாதித்த மாமல்லன் கதைகள்  (உயிர்மை பதிப்பகம்)
  25. கலாப்ரியா கவிதைகள் (சந்தியா பதிப்பகம்)
  26. சுப்ரபாரதி மணியன் கதைகள் (ராஜராஜன் பதிப்பகம்)
  27. ஜெயகாந்தன் பேட்டிகள் (கபிலன் பதிப்பகம்)
  28. நகுலன் கதைகள் (காவ்யா)
  29. கடவு - திலீப் குமார் (க்ரியா)
  30. ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி (தமிழ்ப்புத்தகாலயம்)
  31. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி (தமிழ்ப்புத்தகாலயம்)
  32. நீ - நான் - நிலா (பாகம் 1 &2) - ஸ்ரீவேணுகோபாலன் (கலைஞன் பதிப்பகம்)
  33. மீண்டும் அந்த ஞாபகங்கள் - ஸ்டெல்லா புரூஸ் (கலைஞன் பதிப்பகம்)
  34. மானுடம் வெல்லும் - தொகுப்பு : அம்பை (சுதர்சன் புக்ஸ்)
  35. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் (தமிழினி)*
  36. வானம் வசப்படும் - பிரபஞ்சன் (கவிதா பப்ளிகேஷன்)*
  37. விசாரணைக்கமிஷன் - சா.கந்தசாமி (கவிதா பப்ளிகேஷன்)*
  38. கல்மரம் - திலகவதி (அம்ருதா பதிப்பகம்)*
  39. K அலைவரிசை - முகுந்த் நாகராஜன் (உயிர்மை பதிப்பகம்)
  40. முலைகள் - குட்டி ரேவதி (பனிக்குடம் பதிப்பகம்)
  41. மயிரு - யாத்ரா (அகநாழிகை பதிப்பகம்)
  42. பரத்தை கூற்று - சி.சரவணகார்த்திகேயன் (அகநாழிகை பதிப்பகம்)
  43. ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - செல்வராஜ் ஜெகதீசன் (அகநாழிகை)
  44. ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - பொன்.வாசுதேவன் (உயிர்மை பதிப்பகம்)
  45. சாப்பாட்டுப்புராணம் - சமஸ் (தான் பிரசுரம்)
  46. ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்) 
  47. மீசை முளைத்த வயதில் - கலைஞர் மு.கருணாநிதி (தமிழ்க்கனி பதிப்பகம்)
  48. இராமாயணக்குறிப்புகள் - பெரியார் (பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்)
  49. காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதா (பாரதி பதிப்பகம்)
  50. கொலையுதிர்காலம் - சுஜாதா (பாரதி பதிப்பகம்)
  51. பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் - பத்து (பாரதி பதிப்பகம்) 
  52. பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் - ஐந்து (பூம்புகார் பதிப்பகம்)
  53. வரலாற்றுச்சுவடுகள் (தினத்தந்தி)
  54. ஆனந்தவிகடன் காலப்பெட்டகம் (விகடன் பிரசுரம்)
  55. காலச்சுவடு, உயிர்மை, தீராநதி - ஜனவரி 2011 இதழ்கள்
* - சாகித்ய அகாதமி விருது பெற்றது என்ற ஒரே காரணத்துக்காக வாங்கியவை
    கிழக்கு அரங்கில் 'சந்திரயான்' புத்தகத்தினை தேடித் தேடித் தோற்றேன். நிவேதிதா புத்தகப் பூங்காவிலும் நான் போகும் போது 'பரத்தை கூற்று' இரண்டு பிரதிகள் தாம் இருந்தன (அவற்றிலும் ஒன்றை நான் கவர்ந்து வந்து விட்டேன்).‌ விற்றுத் தீர்ந்து விட்டன‌வோ!

    'சுஜாதா நேர்காணல்கள்' மட்டும் பொங்கல் அன்று மாலை வரை உயிர்மை அரங்கில் வரவில்லை. 'ஆத்மாநாம் படைப்புகள்' தொகுப்பும் காலச்சுவடு அரங்கில் ஸ்டாக் இல்லை என்றார்கள். லீனாவின் புதிய புத்தகமான‌ 'பரத்தையருள் ராணி' அவரது முந்தைய புத்தகங்களின் தொகுப்பு என்பதால் வாங்கவில்லை. நீண்ட காலமாய் தேடி வந்த 'தினமணி தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர்' புறச்சேதாரமுற்றிருந்ததால் நிராகரித்தேன். கிழக்கு, உயிர்மையில் வாங்க நினைத்த சிலவற்றை வாங்கவில்லை.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் இது தான் எனது ஆகக்குறைந்த புத்தகக்காட்சி வியாபாரம்.

    பின்குறிப்பு:
    'தேகம்', 'உலோகம்', 'கொலையுதிர்காலம்' ஆகியவற்றை உடனே படித்து விட்டேன். 'கூப்பிடுவது எமனாக இருக்கலாம்' படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஸ்லாட்டில் 'துயில்', 'மாதொருபாகன்', 'திசைகாட்டிப்பறவை' இருக்கின்றன. இம்முறை பார்க்‌கலாம்.

    Comments

    Unknown said…
    தேவதச்சன் மற்றும் சமயவேல் புதிய கவிதைத் தொகுதிகள் உங்கள் கண்களில் படவில்லையா CSK
    @செல்வராஜ் ஜெகதீசன்
    தேவதச்சன் மற்றும் சமயவேல் இருவரையுமே இதுகாறும் படித்ததில்லை.. முயற்சிக்கிறேன்..
    Anonymous said…
    மிக்க நன்றி.வாசிப்புலகில் நுழையும் என் போன்ற புதியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.இதேபோல தாங்கள் வாசிக்கும் புத்தகங்கள் குறித்து தொடர்ந்து எழுதவும்.

    Popular posts from this blog

    இறுதி இரவு [சிறுகதை]

    கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

    தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்