தலைப்பிரசவம்

*******

ஜன‌வரி 06.

மற்ற எந்தவொரு நாளையும் போலவே இந்தத் தேதியிலும் சரித்திரத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. மோர்ஸ் தன் டெலிகிராஃப் இயந்திரத்தை முதன் முறையாக சோதித்துப் பார்த்திருக்கிறார்; அன்னை தெரசா ஏழை எளியவர்க்கு சேவை செய்யும் நோக்கத்தோடு அப்போதைய கல்கத்தாவிற்கு வந்திறங்கியிருக்கிறார்; எடிசன் தன் கடைசி பேடண்ட்டைப் பதிவு செய்திருக்கிறார்; ரூஸ்வெல்ட் தன் புகழ்பெற்ற Four Freedom உரையை நிகழ்த்தியிருக்கிறார்; ஜோன் ஆஃப் ஆர்க், கலீல் கிப்ரான், கபில் தேவ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பிறந்திருக்கிறார்கள்; சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவரான தியாகராஜர் மறைந்திருக்கிறார்.

இவற்றோடு அடியேனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. என் முதல் புத்தகமான சந்திரயான் நேற்றைய ஜனவரி ஆறில் வெளியாகி, மாலை முதல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. ஆன்லைனில் இன்று முதலும், வெளியூர்களில் அடுத்த வாரம் முதலும் கிடைக்கத் தொடங்கும் என நினைக்கிறேன்.

*******

முதலில் நான் பத்ரி சேஷாத்ரியை அணுகியது இளையராஜாவின் வாழ்க்கையை புத்த‌கமாக எழுதும் நோக்கத்தில் தான்.

அவரது கிழக்கு பதிப்பகத்தில், வாசிப்பவரின் அறிவை விருத்தி செய்யும் நோக்குடன், பல்வேறு தளங்களில், தரமான ஆக்கத்தில் புத்தகங்களை வெளியிடுகிறார்கள் என்பதும், நன்றாக எழுதும் பட்சத்தில், தைரியமாக நிறைய புதியவர்களுக்கு வாய்ப்புத் தருகிறார்கள் (உதாரணம்: யுவகிருஷ்ணா) என்பதும், தமிழகத்தின் கலாசார அடையாளமான நடிகை சில்க் ஸ்மிதாவுக்குக் கூட வாழ்க்கை வரலாறு வெளியிட்டு விட்டார்கள்; ஆனால் சமகால இந்தியாவின் மிகச்சிறந்த இசைக்கலைஞனான இளையராஜாவுக்கு அவர்கள் தரப்பிலிருந்து எந்த புத்தகமும் வரவில்லை என்ற ஆதங்கமும் இதற்கு முக்கியக் காரணங்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியது உடனடி அவசரக் காரணம்!

ஆனால் நான் நினைத்தது போல் அல்லாமல் கிழக்குக்காக ஏற்கனவே வேறொருவர் அதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை பாரா வாயிலாக அறிந்தேன். பின்னர், பல தலைப்புகள் தாவி இறுதி செய்யப்பட்ட விஷயம் தான் சந்திரயான். அப்போது தான் சந்திரயான் திட்டம் அகாலமாய்க் கைவிடப்பட்டு அது பற்றிய சர்ச்சைகள் ஊடகங்களில் முற்றியிருந்த சமயம். சந்திரயான் எந்த நோக்கத்திற்காக ஏவப்பட்டது? எந்தத் தவறினால் பாதியில் தொடர்பு அறுந்தது? உண்மையில் திட்டம் வெற்றியா தோல்வியா? போன்று பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருந்தது.

சந்திரயானைப் பற்றிப் படிக்கலாம் எனத் தேடியபோது அப்போது single-point contact ஆக எந்தப் புத்தகமும் ஆங்கிலத்தில் கூட இல்லை என்பது ஆச்சரியமளித்த‌து. நரேந்திர பண்டாரி என்கிற இஸ்ரோ விஞ்ஞானி எழுதிய ஒரு நூலில் கடைசி அத்தியாயத்தில் மட்டும் சந்திரயான் பற்றிய அடிப்படைத் தகவல்கள் காணக் கிடைத்தன. ஆனால் அதுவும் முழுமையானதல்ல.

இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதைக் கூட சந்திரயான் உறுதிபடுத்தியிருக்கவில்லை. இந்நிலையில் தான் சந்திரயானை எழுத பத்ரியிடமிருந்து "Go ahead" என்று பச்சை சமிக்ஞை வந்தது.

சந்திரயான் பற்றிய தரவுகளை சேகரிக்கத் தொடங்கினேன். அப்போது நேரடி நூல்கள் ஏதுமில்லை என்ற போதிலும், இஸ்ரோ வெளியிட்டிருந்த செய்திய‌றிக்கைகளும், சில மென்புத்த‌கங்களும் மிகுந்த உதவிகரமாக இருந்தன. செய்திகளை சேகரிக்க மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டேன். அதற்குள் தான் நிலவில் நீர் இருக்கும் விஷயம் சந்திரயானின் உதவியுடன் உறுதிபடுத்தப்பட்டு மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டது. அதையொட்டி குறுகிய காலத்தில் ஆங்கிலத்தில் சில புத்தகங்களும் எழுதப்பட்டன.

புத்தகத்தை ஆரம்பிக்க தேவையான தகவல்கள் கிடைத்தாகி விட்டது என்ற நம்பிக்கை ஓரளவிற்கு வந்த பிறகு தான் புத்தக‌த்தின் முதல் பத்தியையே எழுத உட்கார்ந்தேன். இதில் இன்னொரு சுவாரசியம் என்னவெனில், நான் எழுத ஆரம்பித்த அன்று சந்திரயான் ஏவப்பட்டு சரியாய் ஓராண்டு நிறைவடைந்திருந்தது (22 அக்டோபர் 2009).

மொத்தம் ஒன்றரை மாதங்கள் தொடர்ச்சியாய் எழுதினேன். அலுவலக வேலை நேரம் போக தினம் ஆறு மணி நேரம் எழுத வேண்டியிருந்ததால் மீதமிருக்கும் ஐந்து மணி நேரத்துக்கு உறக்கத்தை சுருக்கிக் கொள்ள நேர்ந்தது (வார இறுதி விடுமுறை நாட்களில் கூட இதே கதை தான்). ஒருவழியாய் நவம்பர் இறுதியில் ஃபைனல் வெர்ஷனை பத்ரியிடம் கையளித்தேன். பல வேலைகளுக்கு மத்தியில் பத்ரியே புத்தகத்தை எடிட் செய்தார். பின்னர் எடிட்டிங், கவர் டிசைன், ப்ரிண்ட் இத்யாதிகளுக்குப் பின் கடைசியாய் இப்போது வெளியாகி விட்டது.

இது ஓர் எழுத்தாளனின் தலைப்பிரசவம்.

*******

தமிழில் எழுத்து வடிவில் விஞ்ஞான சங்கதிகளை எனக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய என் ஏகலைவ ஆசான் எழுத்தாள‌ர் சுஜாதாவிற்கு - மானசீக மரியாதையையும் சில சமயம் பகிரங்கமாய் வெளியே சொல்லி ஆனந்தப் படுகையில் வழியும் விழியோர நீரை விரல் நுனியில் துடைத்தவாறே - இப்புத்தகத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.

*******

நான் எழுதிய ஆரம்பப் பிரதிகளைப் பொறுமையாய்ப் படித்துப் பார்த்து அவற்றிலிருந்த சில தவறுகளை / திருத்தங்களை சொல்லிய நண்பர்கள் இரா.இராஜராஜன், கார்த்திக் சுப்ரமணியன், நவீன் குமார் நடராஜன் ஆகியோரை இங்கே குறிப்பிடத்தவறினால் நான் நன்றி மறந்தவனாவேன்.

இதை எழுதிய தனிமைப்பொழுதுகளில் (பெரும்பாலும் நள்ளிரவு அல்லது அதிகாலை) கூடவே ஒரு காதலியைப் போல் துணையிருந்தவை இளையராஜாவின் பாடல்கள் (அப்போது தான் Paa படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்தன). தவிர, ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போலவே இளையராஜாவின் வாழ்க்கையை எழுத எத்தனித்து தான் இங்கே வந்து சேர்ந்திருக்கிறேன் என்பதாலும் அவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

*******

அதே போல் என்னை எப்போதும் சகித்து உடன் வாழும் தேவதையான என் மனைவி யமுனாவுக்கும் என் ப்ரியங்களை இத்தருணத்தில் பதிகிறேன்.

*******

புத்தகம் தொடர்பாய், நான் குறிப்பிட விரும்பும் மற்றொரு முக்கிய விட‌யம் எடிட்டிங். எடிட் செய்யப்படாத சந்திரயான் புத்தகம் காந்தியில் தொடங்கி புத்தரில் முடிகிறது. ஆனால் தற்போது அதன் வடிவமே (முற்றிலும்) வேறு. ஆனால் இதுவும் அழகாகவே இருப்பதாய்த் தோன்றுகிறது. In fact, எல்லாத் தரப்பினரையும், குறிப்பாய் பள்ளி மாணவர்களை எளிதில் அடையும் நோக்கில் ஒரிஜினலிருந்த சில வஸ்துக்களை நீக்கியிருக்கிறார்கள்.

அது எனக்கும் உவப்பானதாகவே தெரிகிறது.

எழுத்தாளனுக்கும் எடிட்டருக்குமான உறவு குழந்தையை ஒரு கணவன் மனைவி உறவு போலவே தோன்றுகிறது. சுக்கிலத்தைத் தருவதோடு கணவனின் வேலை முடிவடைவதைப் போல், எழுதி இறுதிப்பிரதியை பதிப்பகத்துக்குத் தருவதோடு எழுத்தாளனின் கடமை முடிந்து விடுகிறது. பின் மனைவி சூல் கொண்டு, வலி தாங்கி பிரசவிப்பதைப் போல் புத்தக ஆக்கத்தில் பதிப்பகத்தின் பணியே பிரதானமானது. அந்த வகையில் ஓர் எல்லை வரை இப்புத்தகத்தின் உப படைப்பாளியாக‌வே (co-author) பத்ரியை சொல்லலாம். அவருக்கும் என் நன்றிகள். அதே போல், அழகாக அட்டையை வடிவமைத்து புத்தகத்துக்கு வசீகரமான முகம் தந்திருப்பவர்களுக்கும் என் நன்றிகள்.

அவ்வாறு எடிட்டிங்கில் நீக்கப்பட்ட சில பகுதிகளை வரும் நாட்களில் நம் தளத்தில் பதிவேற்ற இருக்கிறேன்.

*******

சந்திரயான் புத்தகம் கீழ்கண்ட கேள்விகளை முன்வைத்து விரிவாய்ப் பேசுகிறது:
  • நிலா நம் கலாசாரத்தில் என்ன இடம் வகிக்கிறது?
  • அமாவாசை, பௌர்ணமி, கிரகணங்கள் என்றால் என்ன?
  • கிரகணங்கள் குறித்த மூட நம்பிக்கைகளில் நிஜம் என்ன?
  • நிலவில் உள்ளேயும் வெளியேயும் என்ன இருக்கிறது?
  • நிலவு எப்போது எப்படித் தோன்றியது?
  • நிலவில் இதுவரை என்ன ஆராய்ச்சிகள் நடந்திருக்கிறது?
  • நிலவின் முதலில் மனிதன் எப்படி கால் பதித்தான்?
  • அமெரிக்க ரஷ்ய பனிப்போரில் நிலவாராய்ச்சியின் இடம் என்ன?
  • சந்திரயான் எப்போது எப்படி யாரால் தொடங்கப்பட்டது?
  • சந்திரயானில் பணியாற்றிய முக்கியஸ்தர்கள் யார்?
  • சந்திரயானின் திட்ட வரைவு என்ன?
  • சந்திரயானின் விஞ்ஞான நோக்கங்கள் என்ன?
  • சந்திரயான் வானில் எப்படி ஏவப்பட்டது?
  • சந்திரயானை நிலவைச் சுற்ற வைத்தது எப்படி?
  • தரைக்கட்டுப்பாட்டு மையங்கள் எப்படி செயல்பட்டன?
  • சந்திரயான் செயற்கைக்கோள் எப்படி செயல்படட‌து?
  • சந்திரயானை வைத்து ஏவிய ராக்கெட் என்ன வகை?
  • சந்திரயானின் வைத்து அனுப்பப்பட்ட பேலோடுகள் என்ன?
  • சந்திரயான் என்னென்ன வேலைகளை செய்தது?
  • சந்திரயான் நிலவின் தண்ணீரை எப்படிக் கண்டுபிடித்தது?
  • சந்திரயான் எப்படி முடிவுக்கு வந்தது?
  • சந்திரயானுக்கு அடுத்து இந்தியாவின் முயற்சிகள் என்ன?
*******

சந்திரயான் புத்தக கண்காட்சியின் NEW HORIZON MEDIA அரங்கில் (ஸ்டால் நம்பர் : P-1) கிடைக்கிறது. கீழே வரைபட விளக்கமும் தந்திருக்கிறேன்.

(படத்தில் 'கிழக்கு பதிப்பகம் P-1' என்றிருக்கிறது)

*******

அனேகமாய் ஆன்லைனில் புத்தகம் வாங்க இன்று ஏற்பாடு செய்து விடுவார்கள் என நினைக்கிறேன். சுட்டி வந்ததும் தெரியப்படுத்துகிறேன்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க : http://nhm.in/shop/978-81-8493-382-6.html

*******

மற்றபடி, ஏற்கனவே சொன்ன படி, வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நான் புத்தகக்காட்சிக்கு வருகிறேன். பத்ரி, பாரா மற்றும் கிழக்கு குழுவினரை சந்தித்து உரையாட ஆர்வமாயிருக்கிறேன்.

தவிர‌, என் குழந்தையை நான் நேரில் பார்க்க வேண்டாமா?

Comments

Anonymous said…
வாழ்த்துகள் தல :)

ட்ரீட் எப்போ? :>>>>

- என். சொக்கன்,
பெங்களூரு.
@nchokkan
நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போது. அட, நிஜமாய்த் தான் சொல்கிறேன். ;)
arun said…
ilayaraja - the best music composer in india! i guess you tend to follow the very old indian proverb. if we tell a lie 100 times it will become true. you seem to state this too many times in too many non relevant issues.
everybody knows who he is and what he did in film music. and nobody refuses to accept for what he is. only the statements like "he is the best", "god of music", & "king of RR-rerecording" will make others to laugh at him.
but the fact is that he is a past now. his music was the best till 1992 or 1993. after 1993, you can just count his good songs. there was a golden period for raja and we have to accept that it came to an end like every good thing has to have an end. this happend to many best personalities like MSV, sivaji ganesan, etc.
for your information - i was expecting your review on the songs and BGM(!) on the veluprabakaran movie (kadal kadai?)& alagarmalai. in your view, the best indian music?
Mohan said…
வாழ்த்துகள் சரவண கார்த்திகேயன்!
23-C said…
great work saravankarthikeyan...keep it up!!!
viki said…
அந்த அண்ணா பல்கலையில் நீ படித்து மிக உயர்ந்த இடத்திற்கு சென்று விட்டாய் என்பதில் எனக்கு மிக்க பெருமை(அந்த பல்கலையில் படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஓடியவர்களையும் வாரணம் ஆயிரம் சூர்யா போல் போதையில் வீணாய் போன இளம் மேதைகள் பலரை எனக்கு தெரியும் என்பதால் இதை சொல்கிறேன்...நானும்அண்ணா பல்கலையில் படித்து பழி வாங்கும் படலம் மிக நீண்டதாக (சுந்தர காண்டத்தை விட !!!)சென்று ஒரு வழியாக படிப்பை முடித்தேன்..(ஆனால் நான் மேதை அல்ல
)
சுஜாதாவிற்கும் உனக்குமான உறவு எனக்கு நன்றாக தெரியும்..உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் விட்டு சென்ற வெற்று இடத்தை நீ மெதுவாக நிரப்பி கொண்டிருக்கிறாய்.என்பதில் எனக்கு மகிழ்ச்சி...மேலும் பல புத்தகங்கள் எழுதி மேலும் முன்னேற வாழ்த்துக்கள் (நான் இன்னும் அந்த புத்தகத்தை வாங்கவில்லை கூடிய விரைவில் நடக்கும்..)
BalHanuman said…
Dear CSK,

இதே 'சந்திரயான்' என்ற பெயரில் கே.பார்த்திபன் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார், தெரியுமா ?

Srinivasan
USA
@Srinivasan
Yes. from Aazhi Pulishers..
A week back, I noticed it..
didn't read yet..
karnasakthi said…
Super thala but waiting for ilaiyaraaja pls Kai vitraathinga :-))
karnasakthi said…
Super writtare vaangiren. But ilaiyaraaja va Kai vitraathinga antha book kaakavum waiting :-))

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்