செ.பு.கா. : 2010 - ஒரு பகிரல்

நடந்து முடிந்து இந்த‌ 33வது சென்னை புத்தகக்காட்சி எனக்கு கொஞ்சம் பிரத்யேகமானது; சற்றே வித்யாசமானதும் கூட!

இதற்கு முந்தைய புத்தகக்காட்சிகளில் ஒரு தீவிர வாசகன் என்கிற வகையில் நான் ஒரு புத்தக நுகர்வோன் மட்டுமே. ஆனால் இம்முறை ஓர் ஆரம்ப எழுத்தாளன் என்கிற முறையில் நானும் ஒரு புத்தகம் எழுதி அது விற்பனைக்கும் வந்திருந்த படியால், வாசகன் + எழுத்தாளன் என்ற இரட்டை வேடத்தை ஏற்க வேண்டியிருந்தது. It's a thrill!

இதையும் ஏற்று ஒரு சுகவாசியாகவே புத்தகக்காட்சியில் வலம் வந்தேன்.

ஏற்கனவே திட்டமிட்டது போல், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் - அதாவது புத்தகக்காட்சியின் இறுதி இரு தினங்கள் - தான் எனது திக்விஜயத்தை நிகழ்த்தினேன். மானாவாரியாக கூட்டம். ஆச்சரியம் தந்தது முக்கால் ஜீன்ஸ், முழுக்கை டிஷர்ட் என்று ஆங்காங்கே தென்பட்ட அழகான (அல்லது அது போன்ற) இளம் (அல்லது இது போன்ற) யுவதிகள்.

வந்திருந்த அத்தனை பேரும் நல்ல புத்தகங்களை மட்டுமே (அப்படியென்றால் என்ன என்று தயவு செய்து கேட்காதீர்கள். அது குறித்து இது வரை பதினேழு லட்சத்து சொச்சம் முறை கதைத்தாயிற்று) வாங்கினார்களென்றால், சிந்தனைத்தளத்தில் நம் (தமிழ்) நாடு ஒரு மாபெரும் அறிவுப்புரட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஆனால் நான் பயந்த‌து போல் ஏதும் நடக்கவில்லை என்பது ஆறுதல்.

வழக்கம் போல் சமையல், ஜோதிடம், வாஸ்து, ரைம்ஸ், அமெச்சூர் சுயமுன்னேற்றம், ஆண்மைக்குறைவு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அப்புறம் கொஞ்சம் வேடிக்கை பார்த்தல் மட்டுமே என்று சொல்லி ஆசுவாசப் படுத்தினார்கள். எல்லாப் பதிப்பகங்களிலும் அதிகம் வேகமாய்த் தீர்ந்தது புத்த‌க விலைப்பட்டியலாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

கிழக்கு மட்டும் விதிவிலக்கு என்கிறார்கள். காரணம் ரகோத்தமன்.

என்னுடைய ச‌ந்திரயான் புத்த‌கம் அழகான அட்டைப்படத்துடன் நல்ல தரமான உருவாக்கத்தில் வந்திருக்கிற‌து. கிழக்கு அரங்கில் வைத்து பத்ரியை பார்க்கையில் - அது தான் எங்கள் முதல் சந்திப்பு - அவர் கையில் சந்திரயான் புத்தகம் தான் இருந்தது (அவர் தான் புத்தகத்தின் எடிட்டரும் கூட). இப்போது நானும் சாருவின் பாணியில் எனது பதிப்பாளர் என நீட்டி முழக்கலாம்!

மற்றொரு முக்கிய விஷயம், உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் சாரு நிவேதிதாவின் பத்து நூல்களில் ஒன்றான தாந்தேயின் சிறுத்தை.

"'தாந்தேயின் சிறுத்தை' இருக்கு பாருங்க... அத்தனையும் அருமையான அரசியல் கட்டுரைகள். ஜெயமோகன் தொடர்ந்து இந்துத்துவ சார்பு நிலை எழுத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இதில் முரண்படுகிற என் எழுத்து மதச்சார்பின்மையின் பக்கம் இருந்து அந்த நூலில் வெளிப்படுகிறது. இந்த வருடம் ஹிட் இது தான்!". சாரு சொல்லியிருந்தது இது (நன்றி: குங்குமம்).

இப்புத்த‌கத்தின் தலைப்புக் கட்டுரையான 'தாந்தேயின் சிறுத்தை' என்பது நான் எழுதியிருந்த கடிதத்துக்கு (உமா ஷக்தியின் குப்பையான இரு சிறுகதைகளை அவற்றின் தகுதிக்கு அதிகமாய் சாரு புகழ்ந்திருந்ததை விமர்சித்து எழுதப்பட்டது அக்கடிதம்) அவர் எழுதிய பதிலே - என் கேள்வியுடன் முழுமையாய் இப்புத்த‌கத்தில் வெளியாகியிருக்கிறது.

அப்புறம், ஜால்ராக்கள் பற்றி நான் அவருக்கு எழுதிய இரண்டு கடிதங்களில் முதலாவது கடிதமும், 'மோடி மஸ்தானின் மை' என்ற தலைப்பில் அதற்கு அவர் எழுதிய பதிலும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன‌ (இரண்டாவது கடிதம் ஏன் இடம் பெறவில்லை என்பதும் புரிகிறது!).

புகழ் பெற்ற (?!) மம்மி ரிட்டர்ன்ஸ் பாகங்களும் இதில் தான் இருக்கின்றன.

இதைப் பற்றி இத்தனை விரிவாக விவரிக்கக் காரணம் மேற்குறிப்பிட்ட எனது கடிதங்கள் யாவும், இப்புத்தகத்தைப் பொறுத்த வரை எழுத்தாளருக்கான வாசகர் கடிதமாகவோ, எளிமையான கேள்வி பதிலாகவோ அல்லாமல் ஓர் இலக்கிய விவாதத்தின் ஒரு பகுதியாகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதே.

இதைத்தவிர, சாருவின் வாசகர் கேள்வி பதில்களின் தொகுப்பான‌ அருகில் வராதே என்ற புத்தகத்தில் என்னுடைய 49-ஓ தொடர்பான ஒரு கேள்வியும் இடம் பெற்றிருப்பதையெல்லாம் சொல்லி சிலாகித்தால் சுஜாதாவிடம் குங்குமத்திலும், அம்பலத்திலும் கேள்வி கேட்டவர்களெல்லாம் என்னை அடிக்கக் கிளம்பி விடுவார்கள். அதனால் வேண்டாம்.

*******

பொங்கல் பண்டிகையை மூன்றாம் காரணமாகவும், சென்னை புத்தக்காட்சியை இரண்டாம் காரணமாகவும், சந்திரயான் புத்தகத்தை முதல் காரணமாகவும் கொண்டு நாக்பூரிலிருந்து வேலைக்கு விடுமுறையெடுத்து வந்திருந்த என் சினேகிதனுடன் தான் இரண்டு நாட்களும் புத்தகக்காட்சியை வலம் வந்தேன்.

புத்த‌கக்காட்சி அரங்கினுள் அபாரமான‌ வெக்கை; உடம்பெல்லாம் வியர்த்தூற்றி கைக்குட்டையுடன் போராடிக்கொண்டிருந்த என்னை பாராவிடம் பத்ரி அறிமுகப்படுத்த "வாங்க CSK" என்று கைகுலுக்கிய‌ அவரது உற்சாகம் துரதிர்ஷ்டவசமாக எனக்குக் கடத்தப்படவில்லை.

இருவருடனும் கொஞ்சம் அமர்ந்து பேச முடிந்தது.

அடுத்த புத்த‌கம் பற்றிய சில மேலோட்டமான ஆலோசனைகளை பத்ரி சொன்னதில் நிறைய சிந்தனை வயப்பட்டிருந்தேன். புத்தகக்காட்சியில் கீழே போடப்பட்டிருந்த கார்ப்பெட்டை குடுகுடுப்பைக்காரனின் சொக்காய் என்ற அருமையான உவமையாக பாராவிடமிருந்து கேட்க நேர்ந்தது.

சுருக்கமாய் அறிமுகப்படுத்திக் கொண்டு தாந்தேயின் சிறுத்தையில் சாரு நிவேதிதாவிடம் கையெழுத்து பெற்று நகர்ந்தேன். த‌விர மனுஷ்யபுத்திரன், சல்மா, காலச்சுவடு கண்ணன், வா.மணிகண்டன், ஹரன் ப்ரசன்னா, நிலாரசிகன் போன்றவர்களை பார்க்க (மட்டும்) முடிந்தது. வேறு ஒன்றும் சுவாரசியமில்லை.

சனிக்கிழமை மாலை கிழக்கு அரங்குக்கு அருகில் பதிவர் சந்திப்பு என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து ஏற்கனவே எச்சரிக்கைச் செய்தி வந்திருந்ததால், அந்தப்பக்கம் தலையோ காலோ வைத்துப் படுக்கவில்லை. பின்னர், வேறு ஒரு பிரபல ஆசாமியும் இதே கருத்தை பகிர்ந்து கொண்ட போது புன்னகைத்துக் கொண்டேன். The Power of bloggers!

*******

புத்தக‌க்காட்சியில் வாங்கிய புத்தகங்களைப் பட்டியலிடுவது பதிவுலகில் தற்போது ஒரு நவீன மோஸ்தர் ஆகிவிட்டபடியாலும், (நண்பர்) யுவகிருஷ்ணா வேறு கலகக்காரராக புத்தகங்களின் ஒரு மாற்றுப்பட்டியலை வெளியிட்டிருந்த கார‌ணத்தாலும், வாங்காத நூல்களை பட்டியலிடுதல் எத்தகைய‌ பெரும் பாவமோ வாங்கிய நூல்களை மறைத்தலும் அத்தகையதே என் அடியேனின் சிற்றறிவுக்குத் தோன்றுவதாலும் இம்முறை நிகழ்த்திய புத்தக வியாபாரத்தை (புதியவர்களுக்கு உதவக்கூடும் என்ற நம்பிக்கையில்) இங்கே பகிர்கிறேன்.
  1. சந்திரயான் - சி.சரவணகார்த்திகேயன் [கிழக்கு பதிப்பகம்]
  2. ராஜிவ் கொலை வழக்கு - கே.ரகோத்தமன் [கிழக்கு பதிப்பகம்]
  3. இலங்கை இறுதி யுத்தம் - நிதின் கோகலே [கிழக்கு பதிப்பகம்]
  4. சென்னை மறுகண்டுபிடிப்பு - எஸ்.முத்தையா [கிழக்கு பதிப்பகம்]
  5. இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன் [கிழக்கு பதிப்பகம்]
  6. நாவல் கோட்பாடு - ஜெயமோகன் [கிழக்கு பதிப்பகம்]
  7. நெம்பர் 40, ரெட்டைத் தெரு - இரா.முருகன் [கிழக்கு பதிப்பகம்]
  8. அரசூர் வம்சம் - இரா.முருகன் [கிழக்கு பதிப்பகம்]
  9. ஜனகணமன - மாலன் [கிழக்கு பதிப்பகம்]
  10. ஓ பக்கங்கள் 2007 - ஞாநி [கிழக்கு பதிப்பகம்]
  11. அகம், புறம், அந்தப்புரம் - முகில் [கிழக்கு பதிப்பகம்]
  12. முகலாயர்கள் - முகில் [கிழக்கு பதிப்பகம்]
  13. கர்நாடக சங்கீதம் - மகாதேவன் ரமேஷ் [கிழக்கு பதிப்பகம்]
  14. மகாகவி பாரதி - இலந்தை சு. இராமசாமி [கிழக்கு பதிப்பகம்]
  15. கமல் - பா.தீனதயாளன் [கிழக்கு பதிப்பகம்]
  16. சுஜாதா பதில்கள் : மூன்றாம் பாகம் [உயிர்மை பதிப்பகம்]
  17. தாந்தேயில் சிறுத்தை - சாரு நிவேதிதா [உயிர்மை பதிப்பகம்]
  18. அருகில் வராதே - சாரு நிவேதிதா [உயிர்மை பதிப்பகம்]
  19. வெளியேற்றம் - யுவன் சந்திர‌சேகர் [உயிர்மை பதிப்பகம்]
  20. நீர்ப்பறவைகளின் தியானம் - யுவன் சந்திர‌சேகர் [உயிர்மை பதிப்பகம்]
  21. நகுலன் வீட்டில் யாருமில்லை - எஸ்.ராமகிருஷ்ணன் [உயிர்மை பதிப்பகம்]
  22. அதீதத்தின் ருசி - மனுஷ்ய புத்திரன் [உயிர்மை பதிப்பகம்]
  23. சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் - வா.மு.கோமு [உயிர்மை பதிப்பகம்]
  24. வெட்டுப்புலி - தமிழ்மகன் [உயிர்மை பதிப்பகம்]
  25. கொற்கை - ஜோ டி குருஸ் [காலச்சுவடு பதிப்பகம்]
  26. ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன் [காலச்சுவடு பதிப்பகம்]
  27. ராஜன் மகள் - பா.வெங்கடேசன் [காலச்சுவடு பதிப்பகம்]
  28. காவல் கோட்டம் - சு.வெங்கடேசன் [தமிழினி]
  29. உலக சினிமா பாகம் 1, 2 - செழியன் [விகடன் பிரசுரம்]
  30. தவிப்பு - ஞாநி [விகடன் பிரசுரம்]
  31. உச்சி முதல் உள்ளங்கால் வரை : பாகம் 1, 2 [விகடன் பிரசுரம்]
  32. கி.வா.ஜ. பதில்கள் : பாகம் 1, 2, 3 [அல்லயன்ஸ்]
  33. கதிரேசன் செட்டியாரின் காதல் - மா.கிருஷ்ணன் [மதுரை பிரஸ்]
  34. நிழல் வீரர்கள் - பி.ராமன் [மதுரை பிரஸ்]
  35. அந்தமான் நாயக்கர் - கி.ராஜநாராயணன் [அன்னம்]
  36. பிஞ்சுகள் - கி.ராஜநாராயணன் [அன்னம்]
  37. வாழ்நிலம் - சுகுமாரன் [அன்னம்]
  38. ஆதி - விக்ரமாதித்யன் [அகரம்]
  39. நீர்வெளி - அய்யப்ப மாதவன் [அகரம்]
  40. தண்ணீர் சிற்பம் - சி.மோகன் [அகரம்]
  41. வீரலெட்சுமி - ல‌க்ஷ்மி மணிவண்ணன் [அகரம்]
  42. மீன்காரத் தெரு - கீரனூர் ஜாகிர் ராஜா [மருதா]
  43. சீதமண்டலம் - கண்டராதித்தன் [மருதா]
  44. வேலைக்காரிகளின் புத்தகம் - ஷோபா சக்தி [கருப்பு பிரதிகள்]
  45. எம்.ஜி.ஆர். கொலை வழக்கு - ஷோபா சக்தி [கருப்பு பிரதிகள்]
  46. மீள்கோணம் - அழகிய பெரியவன் [கருப்பு பிரதிகள்]
  47. நீட்சே : மிகச்சுருக்கமான அறிமுகம் - மைக்கேல் டேனர் [அடையாளம்]
  48. தமிழகப்பழங்குடிகள் - பக்தவத்சல பாரதி [அடையாளம்]
  49. அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள் - எம்.ஜி.சுரேஷ் [அடையாளம்]
  50. அய்யா - ஞாநி [ஞானபானு]
  51. சண்டைக்காரிகள் - ஞாநி [ஞானபானு]
  52. ஓ பக்கங்கள் 2008-09 - ஞாநி [ஞானபானு]
  53. வாவ் 2000 - வேல்ஸ் [விகடன் பிரசுரம்]
  54. மரணத்தின் வாசனை - த.அகிலன் [வடலி]
  55. கொலைநிலம் - தியாகு, ஷோபாசக்தி [வடலி]
  56. சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் - அ.மார்க்ஸ் [புலம்]
  57. காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே - அ.மார்க்ஸ் [புலம்]
  58. சோளகர் தொட்டி - ச.பாலமுருகன் [விடியல் பதிப்பகம்]
  59. பீஷ்மர் ராஜாஜி - எஸ்.எஸ்.மாரிசாமி [லட்சுமி பதிப்பகம்]
  60. முள் - முத்துமீனாள் [ஆழி]
  61. சங்கருக்கு கதவற்ற வீடு - ல‌க்ஷ்மி மணிவண்ணன் [ஜூப்பிடர் வெளியீடு]
  62. வெள்ளைத்தீ - அறிவுமதி [சாரல்]
  63. முதுகுளத்தூர் பயங்கரம் - டி.எஸ்.சொக்கலிங்கம் [கவின் நண்பர்கள்]
  64. இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் - நா.வானமாமலை [அலைகள் வெளியீட்டகம்]
  65. அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் - சங்கர ராமசுப்ரமணியன் [குருத்து]
  66. கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் - ஆதவன் தீட்சண்யா [பயணி வெளியீடு]
பொதுவாய் வருட வருமானத்தில் ஒரு சதவிகிதத்தை புத்த‌கக்காட்சிக்கு ஒதுக்குவது எனது வழக்கம் (புத்தகக்காட்சி தவிர இடையிடையே வாங்கும் புத்த‌கங்கள் தனி). இம்முறை அது ஒன்றே கால் சதவிகிதமாக உயர்ந்து விட்டது. மொத்தம் எத்தனை ரூபாய்க்கு புத்த‌கம் வாங்கினேன் என்பதையோ அல்லது அடியேனின் ஆண்டு சம்பளம் எவ்வளவு என்பதையோ அறிய விளைபவர்கள் கொஞ்சம் நேரம் செலவழித்து, தகுந்த சூத்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மீண்டும் அடுத்த புத்தகக்காட்சியில் ஸாரி.. அடுத்த பதிவில் சந்திப்போம்.

Comments

Vaa.Manikandan said…
நான் உங்களை பார்க்கவில்லையே. என்னை அறிந்து கொண்டபட்சத்தில் பேசியிருக்கலாம்.
@வா.மணிகண்டன்
ட்விட்டரைத் தவிர உங்களை நிறையப் படித்ததில்லை என்பதனாலேயே பேசவில்லை..
அடுத்த முறை நிச்சயம் "பேசலாம்"..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்