நூல் வனம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI), 31வது சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 2009ல் நடத்துகிறார்கள். 08 ஜனவரி 2009 (வெள்ளிக்கிழமை) முதல் 18 ஜனவரி 2009 (ஞாயிற்றுக்கிழமை) வரையான தேதிகளில் பிற்பகல் 2:30 மணி முதல் (விடுமுறைகளில் ‍முற்பகல் 11:00 மணி முதல்) இரவு 8:30 மணி வரை நடக்கும்.

சென்ற இரு ஆண்டுகளைப்போல் இம்முறையும் பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மைதானத்தில் தான் நடக்க இருக்கிறது. பச்சையப்பன் கல்லூரியே எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்களுக்கு இந்தக்குறிப்புகள் பயன் தரலாம் : பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-600030.

புத்தகக்கண்காட்சிக்கும் எனக்குமான உறவு மிகவும் ஆத்மார்த்தமானது - ஒரு குழந்தைக்கு திருவிழா போல். ஒவ்வொரு முறையும் சுஜாதா பொங்கல் தினத்தன்று கண்காட்சிக்கு வருவார். ஆனால் நான், எல்லா பொங்கலுக்கும் ஊருக்கு சென்று விடுவதால் இது வரை ஒரு முறை கூட அவரை அங்கு வைத்துப் பார்த்ததில்லை. இனி மேலும் பார்க்கவியலாது.

கண்காட்சியில் வைத்துத்தான் சுந்தர ராமசாமி, கலைஞர், மனுஷ்யபுத்திரன், பி.ஏ.கிருஷ்ணன், லீனா ம‌ணிமேகலை என்று பலரை முதன் முதாலாய் நேரில் பார்த்தேன். மனுஷ்யபுத்திரன் இவ்வளவு அமைதியானவர் என்பதோ, பி.ஏ.கிருஷ்ணன் இவ்வளவு கடினமானவர் என்பதோ, லீனா ம‌ணிமேகலை இவ்வளவு அழகானவர் என்பதோ எனக்கு முன்பு தெரியாது.

சுந்தர ராமசாமிக்கும் எனக்கும் இடையே 2005 கண்காட்சியில் நிகழ்ந்த உரையாடல் அப்படியே ஒரு வார்த்தை கூட மாறாமல் இங்கே:

"சரவணகார்த்திகேயன்" ‍
"ம். பேரு ரொம்ப‌ கம்பீரமா இருக்கே!"
"ஆளும் அப்படி தாங்க, ஐயா."
"அப்படியா?"

ஒரு புன்னகை - அவ்வளவு தான். காலச்சுவடு அரங்கில் நான் வாங்கியிருந்த "ஆளுமைகள், மதிப்பீடுகள்" என்ற அவரது புத்தகத்தில் "மிக்க அன்புடன்" என்றேழுதி கையெழுத்திட்டுக்கொடுத்தார். அது தான் அவரை முதலும் கடைசியுமாக நான் பார்த்தது.

2007ல் கண்காட்சியின் கடைசி நாள், கலைஞர் வருவதால் கண்காட்சியைத் திறக்காமல் வைத்திருக்க காத்திருந்தவர்கள் எல்லாம் தி.மு.க ஆட்சியை எதிர்த்து கோஷம் போட ஆரம்பித்து விட்டார்கள். பின்னர் சாவகாசமாய் வந்த கலைஞர் அன்று நுழைவுச்சீட்டு இல்லை - இலவசம் என்று அறிவித்து கூட்டத்தைக் கலைத்தார்.

விடுமுறை தினங்களில் வரும் கூட்டத்தைப்பார்த்தால், சென்னையில் இத்தனை புத்தக ஆர்வலர்களா என எண்ணத்தோன்றும். எல்லாம் மாயை. நிறையப்பேர் மிளகாய் பஜ்ஜியும், பெரிய அப்பளமும் வாங்கித் தின்று விட்டு வெறுங்கை வீசிச் சென்று விடுகிறார்கள்; அல்லது சமையல், ஜோதிடம், ஆன்மீகம், கலவி என்று புத்தகங்கள் வாங்குகிறார்கள்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்நிகழ்வின் தொடர் பார்வையாளன் மற்றும் வாடிக்கையாளன் நான். ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் மூன்று முறையாவது போய் வந்தால் தான் திருப்தியே (அப்போதெல்லாம் காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியில் நடக்கும்!). பணி இடமாற்றத்தில் பெங்களூர் வந்த பிறகும் இன்னமும் இப்பழக்கம் தொடர்கிறது.

கல்லூரி நாட்களில் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என்று கண்காட்சியில் புத்தகம் வாங்கவென தீபாவளியிலிருந்தே தனியாய் சுய‌நிதி ஒதுக்கீடு செய்து கொள்வேன். வேலை கிடைத்த பின் அதற்கெல்லாம் அவசியமில்லாமல் போய்விட்டது. கண்ணில் காணும் பிடித்த புத்தகங்களையெல்லாம் வந்தேன்; வென்றேன்; சென்றேன் தான்.

என் புத்தக அலமாரியை அடைத்திருக்கும் புத்தகங்களில் பெரும்பான்மை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கப்பட்டவையே. (வழக்கம் போல்) இம்முறையும் ஒரு மிகப்பெரிய பட்டியலுடன் தான் வருகிறேன் - உயிர்மை, காலச்சுவடு, தமிழினி, கிழக்கு, காவ்யா, கவிதா, எனி இந்தியன், விகடன் போன்றவை பிராதான குறிக்கோள்.

முக்கிய எச்சரிக்கை! வருகிற ஜனவரி 09 மற்றும் 10 தேதிகளில் (சனி, ஞாயிறு) புத்தகக் கண்காட்சிக்கு அடியேன் விஜயம் செய்ய இருக்கிறேன்.

Comments

// நிறையப்பேர் மிளகாய் பஜ்ஜியும், பெரிய அப்பளமும் வாங்கித் தின்று விட்டு வெறுங்கை வீசிச் சென்று விடுகிறார்கள்; அல்லது சமையல், ஜோதிடம், ஆன்மீகம், கலவி என்று புத்தகங்கள் வாங்குகிறார்கள்.//

சிரித்தேன்.
அவர்களுக்குப் பிடித்ததைத்; தேவையானதை அவர்கள் வாங்கக் கூடாதா???
இதை வாங்கு எனச் சொல்ல நாம் யார்??? அவை வாங்கக் கூடாதவையாயின் ஏன் அங்கு விற்கிறார்கள்.
Vasanth said…
//...லீனா ம‌ணிமேகலை இவ்வளவு அழகானவர் என்பதோ...//
nice!!!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்