எரிச்சல் தொடர்கிறது

பெங்களூரில் என் வீட்டு வேலைக்காரப்பெண் செய்யும் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து நான் எழுதியிருந்த‌ பதிவுக்கு எழுத்தாளர் தோட்டா அவர்கள் இட்ட கேள்விகள் கொண்ட‌ ஒரு நீண்ட பின்னூட்டத்துக்கு பதிலான‌ எதிர்வினை இது:

*******

அன்புள்ள சி.எஸ்.கே ( @writercsk )
டியர் ஜெகன் (@thoatta)

முதல நீங்கள் அவங்கள எந்த எந்த வீட்டு வேலைக்காக சேர்த்தி இருக்கீங்கனே தெரியல. பொதுவா வீட்டு வேலைன்னா என்னன்னு புரிஞ்சுக்கிறது? அத சொல்லுங்க. சமையல் வேலையுமா? சமையல் எப்படியும் நாம தான் செஞ்சாகனும்.
குழந்தைகளைக் கவனித்துக் கொள்தல் (சோறு ஊட்டுதல், குளிக்கச் செய்தல், குண்டி கழுவுதல், தூங்க வைத்தல், துணி துவைத்தல் - இதில் குழந்தைகள் துணி மட்டும் அடங்கும். இவற்றில் துவைத்தல் தவிர மற்ற எல்லாவற்றிலும் என் மனைவியும் அம்மாவும் உடன் பங்கெடுப்பார்கள். இரு குழந்தைகளில் ஒருவன் அவரது வேலை நேரத்தில் 5 மணி நேரம் இருக்கமாட்டான் ப்ளேஸ்கூல் போய் விடுவான். அதனால் முக்கால்வாசி நேரம் கவனிக்க வேண்டியது ஒரு குழந்தையை மட்டும் தான்) மற்றும் காலையும், மதியமும் உண்ணும் பாத்திரங்கள் கழுவுதல் மட்டுமே அந்தப் பெண்ணுக்குத் தந்திருக்கும் வேலை. மற்ற துணிகளைத் துவைக்க, வீடு சுத்தம் செய்ய வேறு வேலைக்காரப் பெண். அவருடன் (அவ்வளவாய்) சிக்கல் இல்லை. நாங்கள் வேலைக்கு வரச் சொல்லும் நேரம் காலை 8 முதல் மாலை 5. இடையில் 1 மணி நேரம் ப்ரேக்ஃபாஸ்ட் மற்றும் லஞ்சுக்கு ப்ரேக் எடுத்து வீடு போவார் (அவர் வீடு எங்கள் வீட்டுக்கு வெகு அருகில் தான். 100 மீ தொலைவு இருந்தால் அதிகம்). பிரதி ஞாயிறு விடுமுறை. இதற்கு மாதம் 4,000 ரூபாய் சம்பளம். இது போக பொங்கல், தீபாவளிக்கெல்லாம் புதுத்துணி எடுத்துத் தருவதோ, காசு தருவதோ நாங்களாகக் கொடுப்பது என்பதால் இதில் சேர்க்கவில்லை. இங்கே பெங்களூரில் எங்களுக்குத் தெரிந்தவர்கள் சிலர் வீடுகளிலும் இதே வேலைக்கு கிட்டதட்ட இதே பணம் தான். சந்தேகமிருந்தால் விசாரித்துக் கொள்ளலாம். இது தவிர முன் பணமாய் மாத சம்பளத்துக்கும் அதிகமான தொகை பெற்றதெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. மாதா மாதம் ஆயிரம் ஆயிரமாய் அதைக் கழித்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கிலும் இதனால் அவர்களுக்கு இணக்கம் வரும் என்ற எதிர்பார்ப்பிலும் செய்ததே இது.

மறைக்காம சொல்லுங்க, அவங்க வேலை பளுவ குறைக்க நீங்க என்ன உதவிகள் செஞ்சு இருக்கீங்கன்னு?
முந்தைய‌ பதிலிலேயே சொல்லி இருக்கிறேன்.

ஒயிட் காலர் ஜாப்ல இருக்கோம், பெருசா துணி அழுக்காகாது, எங்க வீட்டுல பேன்ட் தவிர அனைத்தையும் வாஷிங் மெஷின்ல போட்டுடுவோம். அது வீட்டு வேலைக்கு உதவி செய்ய வரவங்களுக்கு மத்த வேலைகளை எளிதாக்குது. வீடு துடைக்கிற நாளன்று நாங்க வீட்ட கூட்டி, பொருட்களை ஒதுக்கி வைத்து துடைக்க ரெடியா வச்சிருப்போம். வாரத்துல ஒரு நாளோ / இரண்டு நாளோ தான் வீடு துடைப்போம், சோ இப்படி செஞ்சா அதுலையும் பிரச்னை வராது. நாம எதையும் ப்ளான் பண்ணி கொடுத்தா, வேலைக்கு வரவங்க வேலைய முடிச்சுட்டு மத்தியானம் ரிலாக்ஸா மெகா சீரியல் பார்த்துட்டே போவாங்க.
என் பிரச்சனைக்கு சம்மந்தமே இல்லாத வரிகள்.

ஆன் சைட்ல அமெரிக்கா அனுப்புவான், லட்ச ரூபா சம்பளம் தரான், குறைந்த வட்டில கடன் தரான், PF பணம் வரும்னு நாம நம்ம முதலாளிக்கு பயப்படலாம், ஆனா நம்ம வீட்டுக்கு ஒத்தாசைக்கு வரவங்களுக்கு சம்பளம் தவிர வாழ்க்கைக்கான ஒரு உத்திரவாதம் கூட தர முடியாத நாம, அவங்க நமக்கு அடக்கமா இருக்கணும்னு நினைக்கிறது என்ன வகை நியாயம்?
இங்கே ஆட்ட விதியே அது தான். அதற்கு சம்மதமில்லை எனில் அவர்கள் நின்று கொள்ளலாமே ஒழிய, பேசியபடி நடந்து கொள்ளாதிருப்பது அராஜகம். ஜாப் செக்யூரிட்டி, இன்ன பிற சொகுசுகள் இல்லை என்பதற்காக வேலையில் ஒழுங்கீனமாக இருப்பது சரி என்பது உங்கள் வாதமென்றால், மன்னிக்கவும். அடக்கமாகக் கும்பிடு போட வேண்டும் என்றோ காலில் விழ வேண்டும் என்றோ நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆரம்பத்தில் என்ன பேசினோமோ அந்த வேலையை, அந்த நேரத்தை, அந்த விதிகளைப் பின்பற்றுவதை மட்டுமே எதிர்பார்க்கிறோம். சொல்லப் போனால் இதுநாள் வரை நான் அந்தப் பெண்ணிடம் ஏதும் பேசியதே இல்லை. என் மனைவியோ அம்மாவோ அதட்டிப் பேசியும் பார்த்ததில்லை. இதற்கு மேல் என்ன வேண்டும்? உண்மையில் நாங்கள் தான் அடக்கமாக இருக்கிறோம்.

அவங்க வேலைக்கு வரதே அவங்க குடும்பத்துக்காக தான், நம்மள போலத்தான், அத அவங்க கவனிச்சிட்டு வரது தப்பில்லையே.
இந்தப் பெண் அவர் வீட்டில் ஒரே earning member இல்லை. அவர் குடும்பத்தில் வேலைக்குச் செல்லும் ஆட்களுள் இவரும் ஒருவர். திருமணமாகாதவர். நேரத்தைப் பொறுத்தவரை கணவனைக் கவனித்தல், குழந்தைகளைக் கவனித்தல், வீட்டில் வேறு நோயாளிகளைக் கவனித்தல் என்று எந்த கமிட்மெண்ட்டும் இல்லாதவர். பணரீதியான கமிட்மெண்ட்ஸ் ஏதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இருக்கலாம். ஆனால் என் வீடு தவிர வேறெங்கும் வேலைக்குப் போவதில்லை. so என் வீட்டுக்கு வரும் நேரத்தை அபகரிப்பதன் மூலம் தன் குடும்பத்தைக் கவனிக்கிறார் என்பதே என் கேஸில் இல்லை.

இப்போ இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலா சொல்லுங்க. . .
1) உங்க வீட்டுக்கு வேலைக்கு வர பெண்ணோட கணவர் எங்க வேலை பார்கிறார், குழந்தைங்க எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க?

முந்தைய‌ பதிலிலேயே சொல்லி இருக்கிறேன். அவர் அம்மா பற்றி மட்டும் தெரியும்.

2) உங்க வீட்டுக்கு வேலைக்கு ஒத்தாசைக்கு வரவங்க வீட்டு விசேஷம் எத்தனை அட்டண்ட் பண்ணி இருக்கீங்க?
நான் போனதில்லை. என் மனைவி போய் வருகிறாள். அந்தப் பிரிவினையே கிடையாதய்யா.

3) எத்தன தடவ கேட்கிறப்ப எல்லாம் லீவு கொடுத்து இருக்கீங்க?

எல்லா முறையும். ஏனென்றால் கேட்டால் தானே கொடுப்பதற்கு? எல்லா முறையும் சொல்லாமல் கொள்ளாமல் அவரே எடுத்துக் கொள்வார். என் பதிவைப் படியுங்கள். அவர் லீவ் எடுக்கும் முறை தான் அந்தப் பதிவுக்கே பிரதானத் தூண்டுதல்.

4) ரெண்டு மூணு நாள் உடல் நலம் சரியில்லைன்னு லீவு போட்டிருந்தா, நீங்களோ உங்க மனைவியோ சென்று பார்த்து இருக்கீங்களா?
இல்லை. அது போல் நடந்ததில்லை. ஒரு நாள் கழித்து மறுநாள் வரும் போது தான் ஏதோ சுகக்கேடு என்பதே தெரியவரும். அப்படியே தெரிந்திருந்தாலும் பெரிய எதிர்மறை விஷயம் ஏதுமில்லை எனும் பட்சத்தில் சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் போய்ப் பார்த்திருக்க மாட்டோம் என்று ஒப்புக் கொள்கிறேன். இது வேலைக்காரப் பெண்ணுக்கு மட்டுமல்ல, நெருங்கிய சினேகிதன், அலுவலக கலீக், பக்கத்து வீட்டுக்காரர் என்றாலும் மூன்று நாள் உடல் நலமற்று இருப்பதற்கு எல்லாம் சென்று பார்ப்ப‌தில்லை. இந்தக் கேள்வி எல்லாம் சற்றே மிகைப்படுத்தலாகப் படுகிறது.

5) சின்க் தொட்டில வெறும் ரெண்டு தட்டு கிடந்தா, நீங்களே கழுவி வச்சு இருக்கீங்களா? இல்ல வேலை செய்யறவங்க வரும் வரை வெயிட் பண்ணுவீங்களா?
இரண்டும் நடந்திருக்கிறது. அது என் வீட்டுப் பெண்களின் அப்போதைய வேலைப்பளு மற்றும் மனநிலை பொறுத்தது. ஆனால் அவர் வந்து கழுவ வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

6) இது ரொம்ப முக்கியமான கேள்வி, அவங்க வேலைக்கு சேர வந்தப்ப கேட்ட சம்பளத்த கொடுத்தீங்களா?

இல்லை. ரூ.4500 கேட்டார். நாங்கள் ரூ.4000 கொடுத்துக் கொண்டிருக்கிறோம். காரணம் கஞ்சத்தனம் அல்ல. அது தான் இங்கே மார்க்கெட் ரேட். அதைத் தருவது தானே முறை. அவர்கள் ரூ.10,000 கூடத் தான் கேட்பார்கள். அவ்வளவு தேவை இருக்கலாம். அதற்காக அதைத் தர முடியுமா? சம்பளம் வேலைக்கு ஏற்ப‌த் தான். தேவைக்கு ஏற்ப அல்ல.  ஒருவேளை ரூ.10,000 தான் மார்க்கெட் ரேட் என்றால் நான் வேலைக்காரப் பெண் வைத்துக் கொள்ள மாட்டேன். வேறுவழியின்றி நாங்களே கஷ்டப்பட்டு சமாளிப்போம், என் பொருளாதார நிலை அதைத் தரும் வல்லமைக்கு உயரும் வரை. தவிர, சம்பளம் பேரம் பேசியதற்காக (அதுவும் பேரம் பேசி அடிமாட்டு விலைக்கு அழைக்கவில்லை. எல்லோரும் என்ன தருகிறார்களோ அதே தொகை தருகிறோம்) சரியாக வேலை செய்ய மாட்டேன் என்பது எப்படி நியாயம் ஆகும்? பேசிப் பிடிவாதமாக விரும்பிய சம்பளத்தை வாங்குவது அல்லது விரும்பிய சம்பளம் கிடைக்கும் இடத்துக்கு வேலைக்குப் போவது தானே சரியான மார்க்கம்? ஒழுங்காக வேலைக்கு வராததால் அவர்களுக்கு சம்பளம் கூடக் கிடைக்கிற‌தா? (அவர் வேறெங்கும் வேலைக்குப் போகவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்) என்ன அர்த்தமற்ற வாதம்? நான் சொல்கிறேன். அவர் வேலைக்கு வராததற்கு நீங்கள் நினைக்கும் எந்த "ஐயோ, பாவம்!" காரணமும் இல்லை. காரணம் அலட்சியம். கிடைத்தவரை பணம் போதும் என்ற எண்ணம். நம்மை நம்பி இருப்பவர் குறித்த பிரக்ஞையற்ற தடித்தனம்.

நான் பெரிய அப்பாடக்கர் இல்ல, ஆனா உங்க கிட்ட கேள்வி கேட்கிற உரிமை இருக்கு, இருக்கா? ;-)))
கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது, சந்தேகமே இல்லை. ஆனால் "மறைக்காம சொல்லுங்க", "உண்மையான பதிலா சொல்லுங்க" போன்ற சொல்லாடல்கள் நான் வாதத்திற்காகப் பொய் பேசக்கூடிய‌வன் என்ற பிம்பத்தையும், ஒட்டுமொத்த இந்தப் பதிவில் தென்படும் தொனி நாங்கள் அந்த வேலைக்காரப் பெண்ணைச் சுரண்டி வாழ்வது போலவும், அதை எப்படியேனும் நிரூபித்து விட வேண்டும் என்ற நீங்கள் துடிப்பது போன்ற தோற்றத்தையும் அளிக்கிறது. அது தான் வருத்தமளிக்கிற‌து. இப்படி உங்களுக்குத் தோன்றுமளவுக்கு நான் என்ன‌ நடந்து கொண்டேன்!

அன்புடன் தோட்டா
- சிஎஸ்கே

*******

நான் சுலபமாக மனதிலிருக்கும் இந்த ஆதங்கங்களை எல்லாம் மறைத்து வைத்திருக்க முடியும். பண்ணையார்த்தனம் போன்ற வசவுகளிலிருந்து தப்பித்திருக்கலாம். கொஞ்சம் அவர்களுக்கே ஆதரவாய்ப் பேசினால் போராளி பட்டம் கூடக் கிடைக்கலாம். ஆனால் நான் என் உணர்வுகளை முடிந்த அளவு ஆன்மசுத்தியுடன் வெளிப்படுத்தி விட‌ விரும்புகிறேன். அதனால் என்ன பேர் வந்தாலும் சரி. எந்த உறவுகள் / நட்புகள் முறிந்தாலும் சரி. யாராலும் வாசிக்கப்படாத நிராகரிப்பு நிகழ்ந்தாலும் சரி. எவரும் சீந்தாத தனிமையில் தள்ளப்பட்டாலும் சரி. இறுதிநாளில் எனக்கு நான் நேர்மையானவனாக வாழ்ந்து விட்ட திருப்தி கிடைத்தால் போதும். கோணலாக இருந்தாலும் அது என் மனசாட்சிக்கு நேர்மையான உணர்வு. 

That's it.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்