Posts

Showing posts from June, 2011

பாலாவின் COME-BACK

Image
ஆரண்ய காண்டம் படத்திற்குத் தான் விமர்சனப்பதிவு எழுதுவதாய் ஆரம்பத்தில் திட்டம். ஆனால் அவன் இவன் படம் பற்றிய என் ஒற்றை ட்விட் டிற்கு வந்த பரவலான எதிர்வினைகள் திட்டத்தை திசை திருப்பி விட்டது. ஆனால் குறையொன்றுமில்லை. ஆரண்ய காண்டம் பற்றி நான் சொல்ல‌ நினைத்திருந்த கிட்டதட்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் பதிவுலகமே ஒன்று கூடிக் கொண்டாடித் தீர்த்து விட்டது. போதாதற்கு சாரு வேறு ஜூலை மாத உயிர்மையில் பாராட்டவிருப்பதாய்த் தெரிகிறது. அதன் வியாபார வெற்றி பற்றித் தெளிவில்லை. ஆனால் அதை விட ஆக முக்கிய சங்கதியொன்று உண்டு - அது தமிழகத்தில் அறிவுஜீவிகளென அறியப்படுபவர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய மதிப்பீடு. இவ்விஷயத்தில் ஆரண்ய காண்டம் எகோகபித்த ஆதரவைப் பெற்று‌ நல்ல போஷாக்கான குழந்தையாக‌த் தான் வலம் வருகிறது. பாவம், அவன் இவன் தான் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சவலைப்பிள்ளை. இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். அவன் இவன் பட‌த்தை நான் எதிர்மறை எதிர்பார்ப்பினோடு தான் அணுகினேன். பத்து வருடங்கள் முன்பு அவர் எடுத்த இரண்டு நல்ல படங்களை மனதில் கொண்டு பாலா படம் பார்ப்பது ஒரு கடமை போல் என்ற அளவிலான மதிப்

தற்கொலை முன்குறிப்பு

ஒரு தற்கொலையைப் போல் எளிதான சங்கதி ஏதுமில்லை ஒரு முத்தத்தைக் காட்டிலும் ஒரு முகச்சுழிப்பை விடவும் பைத்தியத்தின் மனம் போல் தர்க்கமற்ற‌ தர்க்கத்திலிருந்து கிளைக்கிறது அத‌ன் மீதூறும் நம் கருணையும் பிரேமையும் அடுத்தவரை எதிர்கொள்ளும் பேர‌வஸ்தையது மறைவதில் ரகசியமென ஒளிந்திருக்கிறது மரணித்தலின் சூட்சமச்சுவை மெல்லிய ஆன்மவலியோடு சாஸ்வத விடுதலை பெறும் அக்கண ஆனந்தத்தின் நிகர் புணர்ச்சியிலும் சாத்யமன்று சுய‌கொலையின் சுகந்தத்தை சில்க் ஸ்மிதாவிடம் அல்லது நாம் மிக‌ விரும்பும் பிறிதொரு நடிகையிடம் கேட்டறியலாம் உறுத்தலின்றிய‌தை நிகழ்த்த‌ கொஞ்சம் முட்டாள்தனமும் பிரபஞ்சம் துறந்த மறதியும் உடனடி தைரியமும் போதும் நாளை மறுநாள் நிச்சயமாய் உலகம‌ழியும் என்பது போல‌ அர்த்தம் களைந்த அவசரம் இருப்பின் இன்னமும் நன்று அதை விட மிக முக்கியமாய் நம் ப்ரிய‌த்திற்குரியவர்களை ஒருபோதும் அக்கணங்களில் மனதினுள் அனுமதிக்கலாகா *  என் வேண்டுகோள் எல்லாம் தற்கொலை செய்யும் முன்பு இக்குறிப்பினை ஒரு முறை துலங்கப் படித்து விடுங்கள்.

கவுச்சி வாடை

* மீண்டும் மீண்டும் வேண்டும் உப்புப் பொரிந்தபடி மிதக்கும் சதைத்திரட்சியின் ஈர‌ வாசம். * சொற்களில் இல்லை கலவி காட்சியில் இல்லை கலவி கலவியிலும் இல்லை கலவி. * கொழுத்த மீன் பிடிக்கத் தலை குனியும் கொக்கு கணக்காய்த் துடிக்கிறது வெட்கங்கெட்ட வேட்கை. * எள்ளி நகைத்திடலாம் அள்ளித் தூற்றிடலாம் கொள்ளியும் வீசிடலாம் - காறியுமிழ் காமம் தானே! * எல்லாம் முடிந்து களைத்த‌ ஒற்றைப் பெருமுச்சுடன் மல்லாக்கப் படுக்கையில் துளையிட்ட பலூன் போல் சிறுத்துப் போய்க்கிடக்கிறது உடம்புரசுமிந்த ஆதிய‌ரிப்பு. *

பெயர‌ற்ற வரிகள்

* சற்று முன்பு எழுதப்பட்ட இந்த‌ வரி என்னுடையதா? * பதில்களால் வெட்ட வெட்ட‌ கேள்விகளில் கிளைக்கிறது வாழ்க்கை. * அதிஅற்புத‌ங்கள் பல்கிப்பெருகிட அருகிக்குறுகின‌ சாதாரணங்கள். * எப்போதும் எங்கும் எவ்விஷயத்திலும் தேவைப்படுகிற‌து - துளி தூய விஷம். * நேற்றே வந்திருப்பேன் நாளை கிளம்பி விடின்; இப்போது இன்றாகிறது. *

கண்ணீரும் புன்னகையும்

* நிறைய சிரிக்கிறார்கள் - நானோ புன்னகையை யாசித்துக் கிடக்கிறேன். * எத்தனை சிரிப்பும் மறைந்து விடும்; சிறுகண்ணீரதை மறக்கவியலுமா? * மற்றவரின் உதட்டுக்கு நினைவூட்டும் பொருட்டு செயற்கையாகவேனும் புன்னகை செய்யுங்கள். * கண்ணீருக்கென்றுண்டு வலிகள் போக்குமொரு விநோதக்கவுச்சி வாசம். * புன்னகையிலிருக்கிறது ஒரு முத்தத்தின் ஈர‌ ருசி; சிறுகண்ணீரிலிருக்கிறது புணர்ச்சியின் உலர் பசி. *