ஓராண்டின் முடிவில்...

#OKK (ஒரு கோடி காலடிகள்) #day365

சென்ற விநாயக சதுர்த்தியில் தீர்மானித்து ஆகஸ்ட் 24, 2020 அன்று தொடங்கியது. ஒரு நாளும் தவறாமல் தொடர்ந்து முழு ஓராண்டு தினம் 10,000 காலடிகள் நடந்திருக்கிறேன்.

சென்ற ஆண்டு இப்படி நான் ஒழுக்கம் பேணுவேன் என எவரும் சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன். ஏனெனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பல முறை ஜிம், யோகா, க்ளப் எனக் காசை வியர்வையாக்க முயன்று விரயமாக்கியிருக்கிறேன். சும்மா பூங்காவில் அல்லது நெரிசலற்ற சாலைகளில் கூடப் போகலாம். பெங்களூர் என்பதால் இரண்டுக்குமே பஞ்சமில்லை. ஆனால் காசு கட்டியதற்காகவேனும் விடாது போவேன் என்ற நப்பாசை. ஆனால் நடந்தது என்னவென்றால் அதிகபட்சம் ஒரு மாதம் போவேன், அப்புறம் சோம்பல் புகுந்து விடும், அல்லது ஏதேனும் காரணம் சிக்கி விடும். அதை முடித்த பின் என ஒரு நாள் குறிப்பேன். அந்நாள் வரவே வராது. அந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் போது எனக்கே இதில் பெருமிதம்தான். 🙂

இந்த ஓராண்டுத் தொடர்ச்சியைக் குலைக்க ஏராளம் சந்தர்ப்பங்கள் வந்தன. பயணம் அதில் முதலாவது, தொற்றுச்சூழல் இரண்டாவது, உடல் நலம் மூன்றாவது. சென்னை, கோவை, ஈரோடு, மைசூர், கொல்லிமலை என வெளியூர் செல்ல நேர்ந்த போதும் நடைக்கென ஒன்றரை மணி நேரம் பிடிவாதமாய் ஒதுக்கினேன். இரு கோவிட் அலைகளுக்கு மத்தியில்தான் இந்த ஓராண்டு கடந்தது. பிடிஎம், கோரமங்களா பகுதிகளின் பல பூங்காங்கள், அகரா ஏரி, ஆட்கள் அதிகமற்ற சாலைகள் தொடங்கி அபார்ட்மெண்ட் பார்க்கிங், மொட்டை மாடி, ஒரு கட்டத்தில் வீட்டுக்குள்ளேயே கூட நடந்தேன். சிறிய உடல் நலப் பிரச்சனைகள் வந்த போதும் நடையை நிறுத்தவில்லை (calculated risk).

முதல் ஓரிரு மாதம் காலை, மாலை என 5000 அடி பிரித்து நடந்தேன், பின் ஒன்றாக்கினேன். 100 நாள் கடந்ததும் பத்து லட்சம் காலடிகள் என்ற இலக்கை ஒரு கோடி காலடிகள் என மாற்றினேன். முதல் 300 நாட்கள் வேகம் பற்றிக் கவலைப்படவில்லை, 10,000 அடிகள்  மிக இயல்பாகத் தொடர்ந்து நடக்க உடலைப் பழக்கப்படுத்துவதே நோக்கமாக இருந்தது, அப்போதெல்லாம் சராசரியாக 90 நிமிடங்கள் பிடிக்கும். பிறகு வேக நடை, ஜாகிங் என மாற்றினேன். இன்று 62 நிமிடங்களில் கூட 10,000 அடிகளைத் தொட முடிகிறது. 60 நிமிடங்களில் முடிக்க முயற்சிப்பது அடுத்த படி.

இந்த சேலஞ்சில் தொடர்ச்சியாய் என்னுடன் பங்கேற்ற நண்பர்கள் Ulaganathan Narayanan மற்றும் Sowmya Ragavan-க்கு அன்பும் பாராட்டும். ஆரம்பத்தில் ஜெயமோகன் உரைகளும், பின் இளையராஜா பாடல்களும் கேட்டு நடந்தேன். இப்போது பெரும்பாலும் ஏதும் கேட்பதில்லை.

இன்று ஒரு மணி நேர தினசரி நடை என்பது என் வாழ்முறையின் (lifestyle) ஒரு பகுதியாகி விட்டது என்றே நம்புகிறேன். இதனால் எடை குறைந்ததா, எனில் எவ்வளவு, நான் எப்படி உணர்கிறேன் என்பதற்குள் எல்லாம் நான் போகவில்லை. (உணவுக் கட்டுப்பாட்டிலும் இருப்பதால் நடையின் விளைவுகள் எவை எனத் துல்லியமாகச் சொல்ல முடியாது.) ஆனால் தினசரி நடை மிக நல்லது எனத் தெரியும். சென்ற தலைமுறையின் 40கள்தாம் இன்றைய தலைமுறையின் 30கள் என்பது என் கருதுகோள். ஆக, இப்போது முப்பதுகளில் நுழைந்து விட்டவர்கள் - எடை அதிகமோ இல்லையோ, நோய்கள் உண்டோ இல்லையோ - இதைச் செய்ய ஆரம்பிக்கலாம். ஏனெனில் இது எதிர்கால நோய்களைக் கையாளவோ, ஒத்திப் போடவோ, தவிர்க்கவோ உடலைத் தயார் செய்வதுதான். க்ளீஷேதான் என்றாலும் திருமூலர் வாக்கை விட இவ்விடத்தில் பொருத்தம் வேறில்லை எனத் தோன்றுகிறது:

"உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே"

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்