காமத் தாழி [சிறுகதை]


சாகஸ ராத்திரி!

அந்தப் பெயரே ஜிலீர் என்றிருந்தது சில்வியாவுக்கு. ADVENTURE NIGHT என்று காப்பர் ப்ளேட் கோத்திக் எழுத்துருவில் அச்சிடப் பெற்ற அந்த நுழைவுச் சீட்டை எடுத்தாள். முகமூடி, மதுக்கோப்பை, வாண வேடிக்கைக்கிடையே Happy New Year’s Eve – 2018. ₹ 1,00,000 என்றிருந்த பொன்ஜிகினாப் புடைப்பை விரல்களால் ஆதூரமாய்த் தடவினாள்.

பார்த்திபன் முதலில் அதைச் சொன்ன போது விளையாடுகிறான் என்றே நினைத்தாள்.

“ச்சீய்… போடா பொறுக்கி!”

அவன் எப்போதும் அப்படித்தான். ஆபாசமாய்ப் பேசிச்சிரிக்க வைப்பதில் அசகாயசூரன்.


சில்வியா திருமணமாகி இவ்வூருக்கு வந்து இரண்டரையாண்டுகள் ஆகின்றன. மொழி தெரியாத மிலேச்சர்கள் சூழ வாழும் அந்த அந்நியப் பிரதேசத்தில் ஒவ்வொரு பகலும் ஒவ்வொரு ராத்திரியும் அத்தனை அனுபவித்து, அத்தனை ரசித்து நகர்த்த முடிகிறது அவளுக்கு. சண்டைகள் ஏராளம். அதன் பின்பான கொஞ்சல்கள் அதினினும் தாராளம்.

பார்த்திபனுக்கு எல்லாமே த்ரில்தான். பெய்யும் மாமழையில் நனைந்தபடி சில்ட் பியர் அருந்துவதாகட்டும், கோடைக்கானல் ‘குணா’ பாறையினுள் அவள் கையை இறுகப் பற்றியபடி இறங்குவதாகட்டும், தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காரை விரட்டுவதாகட்டும், அதே காரை அதே தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாய் நிறுத்தி பின்னிருக்கையில் வைத்து அவளைப் புணர்வதாகட்டும், யாவுமே த்ரில்! முதலில் திக்கென்றிருந்தாலும் சில்வியாவும் சளைக்காமல் ஈடுகொடுத்தாள்.

“ஒரு நைட் மட்டும் உனக்கு வேற புருஷன், எனக்கு வேற பொண்டாட்டி! ஓக்கேவா?”

சில்வியா அது பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறாள். ஃபேஸ்புக்கில் யாரோ எழுதி இருந்தார்கள். ஆற்றுப்படுகையை ஒட்டிய உல்லாசவிடுதியில் ரகசியமாய் நடப்பதாய்.

குலுக்கல் முறையில் தம்பதிகள் ஜோடி மாற்றிக்கொள்கிறார்கள். ஒற்றை இரவுக்கு.

பார்த்திபனுக்கு வாழ்க்கை பற்றிய தத்துவம் எளிதானது. இளமை இருக்கும் போதே வாழ்ந்து பார்த்துவிட வேண்டும். நினைத்தாலே இனிக்கும் ‘சிவசம்போ’ பாடலில் வரும் ரஜினி மாதிரி. பிரசித்தி பெற்ற அயல் மதுவகையோ (ஸ்பிரிடஸ்), புதிதாகச் சந்தைக்கு வந்திருக்கும் மின்னணு உபகரணமோ (எக்கோ), அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலமோ (குண்டிமனே), இன்ன பிற விஷயங்களோ (தாய் மசாஜ்) சகலமும் அனுபவித்துவிட வேண்டும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம்.

மற்றபடி, காசை வங்கியில் போட்டு வைப்பதோ, சொத்து வாங்குவதோ, நகைகளாய் ஆக்குவதோ அவனுக்கு விருப்பமில்லை. யாவற்றிலும் - தங்கம் தவிர – சில்வியா ஒத்துப்போனாள். ஆர்வமாய் ஒரு நாய்க்குட்டிபோல் அவனைப் பற்றிக் கொண்டாள்.

பார்த்திபனுக்கு முப்பத்தியிரண்டு வயதாகிறது. சில்வியா மூன்று வயது இளையவள். அவனுக்கு ஒரு தசாப்த ஐடி அனுபவம். துரித வளர்ச்சியில் தற்போது சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்ட். மாத வருமான வரி ஆறு இலக்கத்தில் கட்டுகிறான். சில்வியா ஐடி கன்சல்டன்ஸி ஒன்றில் டெஸ்ட் லீட். மேனேஜர் ப்ரமோஷனுக்கு முயற்சிக்கிறாள்.

அவர்களைச் சுற்றி இருக்கும் தம்பதிகள் யாவரும் அடுக்ககம் வாங்கி விட்டனர். அவனுக்கு அதில் ஆர்வமில்லை. டெட் இன்வெஸ்ட்மென்ட் என்பான். ஸ்விம்மிங் பூல், ரெக்ரியேஷன் க்ளப், பார்ட்டி ஹால் உள்ளிட்ட சகல வசதியும் நிறைந்த பிரபல சொஸைட்டியில் 2பிஹெச்கே அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். இருவருக்கும் மூன்று கிமீ ஆரத்தில் அலுவலகம். சொந்தமாய் வாங்க ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். அனாவசியம். இப்போது உள்ளவரை அனுபவித்து நகரலாம்.

காரையே மிகுந்த யோசனைக்குப் பின்தான் வாங்கினான். அதுவும் அவனது அனுபவ வேட்டைக்குத் தேவை என்பதால். அதுவும் அவள் வந்த பின். அதுவரை பைக் தான்.

இப்போதைக்குக் குழந்தை வேண்டாம் என்று பார்த்திபன் சொல்லி விட்டான். அது அந்த வாழ்க்கை முறைக்குத் தொந்தரவாயிருக்கும் என நம்பினான். சில்வியாவின் பெற்றோர் இரண்டு, மூன்று முறை சொல்லிப் பார்த்து ஓய்ந்து விட்டார்கள். அந்த ஒத்திப்போடல் அவளுக்கு உவப்பாகவே இருந்தது. குழந்தை வளர்க்கும் பொறுப்பு குறித்த தயக்கம் ஒருபக்கம்; பேறுகால விடுப்பு பதவி உயர்வுக்குத் தடையாவது பற்றிய பயம் மற்றொருபுறம் எனக் குழம்பினாள். அவ்வப்போது யாரேனும் அவள் முப்பதை நெருங்குவதை நினைவூட்டிக் கர்ப்பம் சிக்கலாகுமெனப் பயமுறுத்தினர்.

இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் பார்த்திபன் மும்முரமாய் ஆறு பகல், ஏழு இரவு ஐரோப்பியப் பயணமொன்றை பொங்கல் விடுமுறையில் திட்டமிடுகிறான்.

பார்த்திபனிடம் சில்வியாவுக்குப் பிடித்ததே அவன் அளித்திருக்கும் சுதந்திரம்தான்.

வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்திருக்கிறார்கள். அவளது செலவுகளில் அவன் தலையிடுவதில்லை. அலுவலகப் பார்ட்டி, சினேகிதிகளுடன் கெட்டுகதர் எதிலும் மாற்றமில்லை. இரவுகளில் தாமதமாகித் திரும்புவதைக் கேள்வி கேட்டதில்லை.

திருமணத்துக்கு முன் சொந்த ஊரில் வேலையிலிருந்த காலத்துக்கும் இன்றைக்கும் அவளுக்குப்பெரிய வேறுபாடு தெரியவில்லை. அதே சமயம் அவள் அச்சுதந்திரத்தை
ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ததில்லை. அவனும் அப்படி இருப்பதாக நம்பினாள்.

வார இறுதிகள் மட்டும் ஒன்றாகச் செலவழிப்பது – நேரத்தை, பணத்தை. பிரியத்தை - என்பது அவர்களுக்குள் எழுதப்படா ஒப்பந்தம். அவள் அவனை நிறையக்காதலித்தாள்.

*

விவேக் மல்ஹோத்ராவிடம் தான் பார்த்திபன் அந்த நுழைவுச்சீட்டை வாங்கினான். உண்மையில் விவேக் தனக்காக வாங்கியது அது. அவன் இவனது அலுவலகச் சகா.
இன்னும் நெருங்கிச் சொன்னால் போட்டியாளன். அனுபவத்தில் இவனுக்கும் மூப்பு.

அந்த ரெஸார்ட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இப்படித் திட்டமிடுகிறார்கள். டிக்கெட் விலை ஜோடிக்கு லட்ச ரூபாய். முன்கூட்டியே பணம் செலுத்தி வாங்கிக் கொள்ள வேண்டும். விற்பனை மிக ரகசியமாக ஓர் ஏஜெண்ட்டின் மூலம் நடந்தது. வாங்கியது வாங்கியது தான். ரத்து, பணம் வாபஸ் என்ற பேச்சிற்கு இடமில்லை.

நூறு வகை மாமிச, அமாமிச உணவுகள், அளவில்லாத வெளிநாட்டு மது வகைகள், ஐந்து நட்சத்திர தரத்திலான அறையில் இரவு தங்கல் எல்லாவற்றுக்கும் சேர்த்து அத்தொகை. மொத்தம் நூறு ஜோடிகள். குலுக்கல் முறையில் தங்கள் இணைகளை மாற்றிக் கொள்ளலாம். இதில் பங்கேற்பவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பது ரெஸார்ட் பொறுப்பு. கலந்து கொள்ள ஒரே நிபந்தனை கார் வைத்திருக்க வேண்டும்.

“சாக்ஷிக்கு உடம்பு முடியல, பார்த்தி. கடைசி நேரம். அதான் உன்னைக் கேட்கிறேன்.”

“ஆனா ஒரு லட்சம் அதிகம், விவேக்.”

“அந்த ரெஸார்ட்ல சாதாரணமா ஒருநாள் சூட் ரூமுக்கு இருபதாயிரம் ரூபா. ரெண்டு பேருக்கு டின்னர் சேர்த்தா கால் லட்சம். நியூ இயர்க்கு அதை டபுள் பண்ணுவாங்க. அரை லட்சம். எல்லாம் தாண்டி இது வேற விஷயம். ஸோ, லட்சம் நியாயம்தான்.”

“ஆனா இதுக்கெல்லாமா ஆள் வர்றாங்க!”

“ஸாலா, என்ன இப்படிக்கேட்டுட்டே! இதுக்கு அடிதடி. வெயிட்டிங் லிஸ்ட் இருக்கு.”

“ம்ம்ம்.”

“டிக்கெட் விக்கறது ஈஸி. ஆனா நான் இதை வாங்கின விஷயம் வெளிய போகும். அதான் க்ளோஸ் சர்க்கிள் உள்ளயே முடிச்சுக்கலாம்னு. நாளைக்குள்ள சொல்லு. இல்லன்னா வேற ஆள் பார்க்கனும். நீ சொன்ன பிறகுதான் ட்ரை பண்ணுவேன்.”

“சரி, சில்வியாகிட்ட பேசிட்டு சொல்றேன்.”

சில்வியாவிடம் வந்து எல்லாவற்றையும் ஒப்பித்தபோது கண்ணடித்துச் சொன்னாள்.

“இதுல கலந்துக்க முடியாத மாதிரின்னா சாக்ஷிக்கு ஒரே உடம்புப் பிரச்சனைதான்!”

“ஓ!”

“தப்பில்லையா, பார்த்தி?

“எது சந்தோஷமோ அதுவே தர்மம், சில்வி.”

புன்னகைத்தாள்.

“விட்டுட்டுப் போயிடுவேன்ங்கற பயம் இல்லதானே!”

“சேச்சே. ஸ்டுப்பிட் கொஸின், பார்த்தி.”

“எனக்கும் இல்ல. அவ்வளவுதான். பிறகென்ன?”

“ம்ம்ம்.”

“இது, ஒருநாள் ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடற மாதிரி. ஒருநாள் ஹோட்டலில் தங்கற மாதிரி. ஒருநாள் ஸூம்கார் வாடகைக்கு எடுக்கற மாதிரி. புது ருசி. புது அனுபவம்.”

“லவ் யூ, பார்த்தி!”

“மீ டூ, சில்வி!”

அவனைக் கட்டிக் கொண்டாள். அவளுக்கும் அந்தத் திட்டம் குறுகுறுப்பாய் இருந்தது.

அவளுக்கு விதிகளை உடைக்கச் சொல்லித்தந்ததும் கைபிடித்து அழைத்துப்போனதும் பார்த்திபன்தான். முதல்முறை அவன் ஊற்றிக் கொடுத்துத்தான் குடித்தாள். மது எப்படி இருக்கும் என்றறிவது அவளது நெடுநாள் ஆர்வம்தான். ஆனாலும் ஏதோ தயக்கத்தில் தவிர்த்து வந்தாள். அப்பாவுக்குத்தெரிந்தால் நையப்புடைத்து விடுவார் என்பது மட்டும் காரணமாய்த் தோன்றவில்லை. தெரியாமல் குடித்திருக்க முடியும். அவளது ஊரில் பணியிலிருக்கையில் அவள் சுதந்திரப்பறவைதான். ஆனாலும் பார்த்திபன் வரும்வரை மதுவின் எரிப்புச்சுவையைத் தீண்ட அவள் நா காத்திருக்க வேண்டியிருந்தது. பிறகு சில முறை இருமியபடி சிகரெட். இருமுறை ஹுக்கா. அப்புறம் ஒரு முறை டோப்!

அதை எல்லாம் விட உடைகள். சொந்த ஊரிலிருந்த வரை லெக்கிங்ஸும், ஜீன்ஸ் பேண்ட்டும் தான் சில்வியா எடுத்துக் கொண்ட அதிகபட்ச சுதந்திரம். ஸ்லீவ்லெஸ் கூட அணிந்ததில்லை. சில்வியா ப்ளாத் படித்த, நூறாண்டுப் புராதனம் மிக்க கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராய் இருக்கும் அம்மா “நாமளே வாடா வாடானு கூப்பிடக்கூடாதுடி” என்பாள். பார்த்திபன் திருமணத்துக்குப் பின் வந்த அவளது முதல் பிறந்தநாளுக்கு மினி ஸ்கர்ட் வாங்கித் தந்தான். “எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பாங்க” என்று அவள் தயங்க, “பார்க்கட்டும், வயிறெரியட்டும். அப்புறம் எதுக்கு இவ்ளோ அழகாப் பொண்டாட்டி கட்டினேனாம்! வீட்ல ஒளிச்சு வைக்கவா?” என்று சொல்லி உற்சாகமூட்டினான். இப்போது இன்னுமொரு பெரிய விதிமீறலுக்கு அழைக்கிறான்.

அதை உற்று நோக்க முயன்றாள். தன்னைத்தானே கேள்விகள் கேட்டுக்கொண்டாள்.

‘என் பாட்டி, அம்மா, அக்கா எல்லோரும் நம்பிய கற்பு என்ற சித்தாந்தத்திலிருந்து விலகுகிறேனா? அவர்கள் எல்லோரும் தாம் நம்பியது போலவே நடந்தார்களா?’

‘கல்யாணத்துக்கு முன் பழைய அலுவலகத்தில் ஒருவனுடன் டேட்டிங் செய்ததுண்டு. சுமார் ஒரு மாதம். முத்தமிட்டுக்கொண்டிருக்கிறோம். திரையரங்க இருட்டில் லேசாய் அத்துமீறி இருக்கிறோம். பிறகு ஒத்துவராது என்று புரிந்தபோது பரஸ்பரம் வாழ்த்துச் சொல்லிக்கொண்டு பிரிந்துவிட்டோம். அதைக் காதல் என்றுகூட குறிப்பிட முடியாது. அதனால் பொருட்படுத்தி பார்த்தியிடம் சொன்னதில்லை. அவனுக்கும் அப்படியானது இருந்திருக்கலாம். ஆனாலவை முக்கியமில்லை என்பதால் கேட்டுக்கொண்டதில்லை.’

‘பார்த்தி மேல் எனக்கு பொசஸிவ்னஸ் இல்லையா என்ன? இல்லையே, இப்போதும் அலுவலகத்தில் புதிதாக எவளேனும் சேர்ந்து, அவள் பெயர் என் வீட்டு ஹால்வரை வந்துவிட்டால் நான் கொஞ்சம் தவிப்பாய் இறங்கி உளவறியத் தவறுவதில்லையே!’

‘பார்த்திக்கும் என் மேல் அப்படியான உடமையுணர்வு இல்லாமலா இருக்கிறது! தேனிலவுக்கு குமரகம் படகு வீட்டில் தங்கியபோது பக்கத்துப் படகில் இருந்த இளைஞர்கள் கைநிறைய வளையல்கள் அணிந்து நின்ற என்னைப் பார்த்து ஆபாசச் சைகை காட்டியதற்காய் சட்டென உப்பங்கழியில் குதித்து நீந்திப் படகேறி அவர்கள் சட்டையைக் கொத்தாய்ப் பிடித்தவன் அல்லவா! அது எனக்கு எத்தனை இன்பமாய் இருந்தது! அவன் தந்த உச்சங்களைவிட இனித்ததே! அன்று இரவு பார்த்தி மீது வாஞ்சை கூடியிருந்ததை அணைப்பில் கூடுதல் இறுக்கமேற்றிக் காட்டினேனே!’

‘அவனும் அதே விசுவாசத்தை எனக்குக் காட்டினானே! பட்டாயா போனபோது அவன் சோரம்போக அத்தனை வாய்ப்புகளும் இருந்தன. தவிர்த்து என்னை அணைத்தானே!’

‘ஒருவேளை எனக்கு பார்த்தியின் உடம்பு மீது அப்படி பொசஸிவ்னஸ் இல்லையோ! அவன் மனசில் மட்டும் பூரணமாய் நான் இருந்தால்போதும் என்று நினைக்கிறேனா? அப்படியும் இல்லை எனத் தோன்றியது. மனசில் ஆசை வராமல் உடம்பு மட்டும் ஒருத்தியைத்தேடுமா என்ன? அப்புறம் எப்படி இதை ஒப்புக்கொள்ள மனம் வந்தது?’

குழம்பினாள். தூக்கம் பிடிக்காமல் புரண்டாள். பக்கத்தில் படுத்திருந்த பார்த்தியின் தோளை இறுகப் பிடித்துக்கொண்டாள். எப்போதோ எப்படியோ தூங்கிப் போனாள்.

மறுநாள் காலை மனம் தெளிந்தது போல் தோன்றியது. தூக்கமே சர்வசஞ்சீவினி!

‘நிச்சயம் எனக்கு பார்த்தியின் உடம்பின் மீதும் பொசஸிவ்னஸ் உண்டு. ஆனால் இது ஒரு விளையாட்டு மட்டுமே. இதில் பிரதானம் அந்தக் கணங்களின் த்ரில் அனுபவம் தானே ஒழிய, உடல்கள் கலப்பதல்ல. பெண் மருத்துவரிடம் அல்லது செவிலியிடம் பார்த்தி தன் உடம்பைக்காட்ட வேண்டியிருத்தல் போன்றதுதான் இது. இரண்டிலுமே நோக்கம் உடம்பு அல்ல. ஆனால் நாளையே பார்த்தி ஒரு பாலியல் தொழிலாளியிடம் போகிறேன் என்றால் செருப்பால் அடிப்பேன். அது என் காதல். பார்த்திக்கும் என் மீது இதே பொசஸிவ்னஸ் உண்டு. இப்புரிதலுடன்தான் இவ்விஷயத்தில் இறங்குகிறோம்.’

புன்னகைத்தபடி பார்த்திபன் பேரம் பேசியதில் ரூ.85,000க்கு ஒப்புக்கொண்டான் விவேக்.

“நீ எப்படியும் இந்த விலைக்கு இறங்கி வருவேன்னு தெரியும், விவேக்.”

“அது பெரிய விஷயமில்ல. நீ எப்படியும் டிக்கெட்டை வாங்கிக்குவேன்னு தெரியும்.”

திடுக்கிட்டான். அது தன் பற்றிய மதிப்பீடா சில்வியா பற்றியதா என யோசித்தான்.

அந்த இரவுக்கு நேர்த்தியாய்த் தயாரானாள் சில்வியா. உடம்பெல்லாம் சுயநாவிதம் செய்து பளபளத்தாள். போதாக்குறைக்குப் பத்தாயிரம் ரூபாய் செலவழித்து சிலபல நடிகைகள் வரும் பார்லர் போய் வந்தாள். முதலிரவுக்கே இப்படித் தயாரானோமா என யோசித்து வெட்கப்பட்டாள். பார்த்திபன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

*

முன்னிரவு ஏதோ ஓர் அந்தரங்க ரகசியத்தை தன்னிருளில் ஒளித்து வைத்திருந்த நமுட்டுச் சிரிப்புடன் நட்சத்திரக் கண்ணடித்துக் கொண்டிருக்க, பார்த்திபன் காரைச் சீராக ஐந்தாம் கியரில் செலுத்திக் கொண்டிருந்தான். இடப்புற முன்னிருக்கையில் வாசனையாய் நிறைந்திருந்த சில்வியா ஏதும் பேசாமல் யோசனையிலிருந்தாள்.

Dying
Is an art, like everything else.
I do it exceptionally well.

பாவாடை சட்டையில் பிரம்மாண்ட நீலத்தாமரை காருள் பூத்தது போலிருந்தாள். ஓரக்கண்ணால் பார்க்கையில் பார்த்திபனுக்கே புத்தம் புதியதாய்த் தோன்றினாள்!

புறநகர்ச் சாலையில் அமைந்திருந்தது கோல்ட் சிட்டி ரெஸார்ட். கோட்டைக்குள் நுழையும் பிரமையை அளிக்கும் பிரம்மாண்ட நுழைவாயில். புத்தாண்டுப்பிறப்பை வரவேற்கும் ஒளியும் ஒலியும் சன்னமாய் வாசல்வரை வழிந்து கொண்டிருந்தது.

அவர்களுக்கு முன் பைக்கில் வந்திருந்த இரு இளைஞர்கள் உள்ளே விடச்சொல்லி சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். நுழைவுச்சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று விளக்கிக் கொண்டிருந்த காவலாளி சாம, தான அணுகுமுறை பயனளிக்கா விட்டால் பேத, தண்ட முறைகளைப் பிரயோகிக்க ஆயத்தமானான்.

வாசலிலேயே வைத்து பார்த்திபனிடம் நுழைவுச்சீட்டைக் கேட்டுச் சரி பார்த்தனர். டிக்கியைத் திறக்கச்சொல்லித் தடவிப் பரிசோதித்த பின் உள்ளே அனுப்பினார்கள்.

கார் மெல்ல ஊர்ந்து முன்னேற, வலப்புறம் பெருங்குடையினடியில் இரு சிப்பந்திகள் அமர்ந்திருந்தது புலப்பட்டது. டிக்கெட்டின் பார்கோட் ஒளிவருடப்பட்டு அவர்களின் வருகை உறுதிபடுத்தப்பட்டது. பார்த்திபன், சில்வியாவின் ஆதார் அட்டைகளைப் பரிசோதித்தனர். அவர்களின் திருமணச் சான்றிதழோ, கல்யாணப் புகைப்படமோ கேட்டனர். விவேக் எல்லாம் விளக்கியிருந்ததால் தயாராய்க் கொணர்ந்திருந்தான்.

“புல்ஷிட்! விட்டா ஹெச்ஐவி டெஸ்ட்லாம் எடுத்துட்டு வரச் சொல்வாங்க போல!”

“இல்ல. ஆனா காண்டம் யூஸ் பண்றது பெஸ்ட் ப்ராக்டீசஸ்ல சொல்லி இருக்காங்க.”

விவேக்கின் அசரீரி ஒலிக்க, பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான். சில்வியா தனது பழுப்பு நிறக் கைப்பையை எடுத்திருக்கிறாளா என்றும் பார்த்துக் கொண்டான்.

35 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே அனுமதி. மணமானோர் மட்டுமே ஆட்டத்தில் சேர்த்தி. போன முறை காதலி எனச்சொல்லி பாலியல் தொழிலாளிகளைச் சிலர் அழைத்து வந்துவிட்டதால் இந்தக் கட்டுப்பாடுகள். அடுத்து என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று நல்ல ஆங்கிலத்தில் பொறுமையாய் விளக்கினார்கள்.

பின் இருவரின் புறங்கையிலும் ரெசார்ட் முத்திரையின் ரப்பர்ஸ்டாம்ப் குத்தப்பட்டது. முகமூடிகள் வழங்கப்பட்டன. அணிந்து கொண்டார்கள். Eyes Wide Shut படம் நினைவு வந்தது சில்வியாவுக்கு. காரின் நம்பர் ப்ளேட்டில் கறுப்பு டேப் ஒட்டி மறைத்தனர்.

அந்தக் கணத்தில் அந்த ஸ்தலத்தில் அவர்கள் அடையாளமிலி ஆகிப் போனார்கள்.

அறைக்குள் இருக்கும் நேரம் தவிர ரெஸார்ட்டில் இருக்கும் வரை முடிந்த அளவு முகமூடியோடு இருப்பது அவர்கள் ப்ரைவஸிக்கு நல்லது என அறிவுறுத்தப்பட்டது. சொல்லப்பட்ட விதிகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கச் சொன்னார்கள்.

“வெல்கம் போத் ஆஃப் யூ. ஹோப் யூ வில் எஞ்சாய் திஸ் ப்யூட்டிஃபுல் நைட்.”

பார்த்திபன் காரை பார்க்கிங் பகுதியில் கொண்டு நிறுத்தினான். ஏற்கனவே அங்கே நாற்பது, ஐம்பது கார்கள் நின்று கொண்டிருந்தன. எல்லாக் காரிலும் முகமூடியுடன் ஒருத்தி அமர்ந்திருந்தாள். பார்த்திபன் சில்வியாவைப் பார்த்தான். புன்னகைத்தாள்.

“ஆர் யூ நெர்வஸ், சில்வி?”

“அஃப்கோர்ஸ், பார்த்தி!”

“டோன்ட் பேனிக். நல்லது கெட்டது யோசிச்சு தானே வந்திருக்கோம்!”

“என்னவோ பயமா இருக்கு.”

“ஒண்ணுமில்ல. கீப் யுவர் ஸ்பிரிட்ஸ் அப்.”

“ம்.”

“நாளை காலை பார்ப்போம். லவ் யூ. டேக் கேர். ஏதும்னா உடனே கால் பண்ணு.”

சில்வியா முகமூடியோடே ஒத்தியெடுத்தாற்போல் முத்தமிட்டு விடைகொடுத்தாள்.

The nose, the eye pits, the full set of teeth?
The sour breath
Will vanish in a day.

அவள் பக்கத்துக்கண்ணாடியை மட்டும் விடுத்து மற்ற கண்ணாடிகளை ஏற்றிவிட்டு சாவியை எடுத்துக் கொண்டு காரை விட்டிறங்கித் தொலைபூட்டினான் பார்த்திபன்.

நூறு மீட்டர் தொலைவிலிருந்த ரெஸார்ட்டின் பார்ட்டி ஹால் நோக்கி நடந்தான்.

ஐம்பது ஏக்கர் பரப்பு, ஐந்நூறு தென்னை மரங்கள் சுத்தம் செய்தனுப்பும் ஆக்ஸிஜன், நூறு காட்டேஜ்கள். ஒவ்வொன்றின் பின்பும் ஜக்கூஸியுடன் கூடிய ஸ்விம்மிங் பூல்.

புறங்கை ஊதா முத்திரை சரிபார்த்து ஹாலினுள் அனுமதித்தனர். கூட்டம் இருந்தது. எல்லோரும் ஆண்கள். எல்லோருக்கும் முகமூடி. பார்த்திபனுக்கு மயிர் கூச்செறிந்தது.

தர்பூசணிச்சாற்றில் வோட்கா கலந்து நீட்டினர். சில்வியாவுக்கு வோட்கா பிடிக்கும். அவளுக்கும் கொடுப்பார்களா! அதை உறிஞ்சியபடி நடப்பனவற்றைக் கவனித்தான்.

விஸ்தாரமான ஹாலின் நடுவில் பெரிய கண்ணாடிக் குடுவை வைத்திருந்தார்கள். ‘பெரிய’ என்றால் ஓர் ஆளை உள்ளே போட்டு வைக்குமளவு பெரியது! பார்த்திபனுக்கு ஈமத் தாழி நினைவுக்கு வந்தது. புராதனத் தமிழகத்தில் நீத்தார் பூதவுடலைப் பொத்தி வைத்து மண்ணில் புதைக்கப்பயன்படுத்தப்பட்ட கலன்கள். சென்ற ஆண்டு ஆரோவில் போயிருந்த போது தமிழ் ஹெரிடேஜ் செண்டரில் பார்த்தது! இறந்த கணவனுடன் தன்னையும் சேர்த்துப் புதைக்குமளவு பெரிய தாழி செய்யக் குயவனைக் கேட்பவள் சங்கப்பாடலில் உண்டு. நான் இறந்து போனால் சில்வியா அப்படிக் கேட்பாளா? அவளுக்கும் எனக்கும் அந்தக் கண்ணாடித் தாழி போதுமா? சிரித்துக் கொண்டான்.

நினைவை உதறினான். தாழியினுள் ஏற்கனவே பாதி உயரத்துக்குக் கார் சாவிகள் குவிந்திருந்தன. விதவிதமான சாவிகள். பெரும்பாலும் கார் ப்ராண்டை வலிய அறிவிப்பவை. ஹோண்டா, ஃபோர்ட், ஃபியட், டொயோட்டா, வோல்க்ஸ்வேகன், ஜாகுவார், ஆடி, பிஎம்டபிள்யூ, இன்னும் இன்னும். பார்த்திபன் தயக்கமாய்த் தன் ரெனால்ட் க்விட் சாவியை அங்கே சீருடையிலிருந்த சிப்பந்தியிடம் கொடுத்தான்.

அவன் வாங்கி கார் சாவியுடன் அறைச்சாவியைக் கோர்த்துத் தாழியுள் போட்டான். பார்த்திபன் விலகிவந்து கூட்டத்தோடு நின்றுகொண்டான். அடுத்த அரை மணியில் சுமார் நூறு பேர் வந்து சேர்ந்திருக்க, தாழிக்குள் சாவி போடும் சடங்கு நிறைந்தது.

வந்ததிலிருந்து அங்கே யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை என உறைத்தது. பார்த்திபன் மணி பார்த்தான். ஒன்பதுக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்தன.

இப்போது சாவி போட்ட அதே வரிசையில் வந்து தாழிக்குள் கைவிட்டு ஆளுக்கொரு சாவியைப் பொறுக்கிக் கொள்ளச் சொன்னார்கள். கூட்டம் பரபரப்பானது. முதலில் ஒருவர் போய் சாவியை எடுத்துக் கொண்டு, பார்க்கிங் போய், கீலெஸ் என்ட்ரியில் காரைத் திறக்க வேண்டும். சாவிக்குரிய கார் பீப் ஒலி துப்பித் திறக்க, அதை வைத்து காரை அடையாளங்கண்டு, அதிலிருக்கும் பெண்ணை அழைத்துக் கொண்டு, கார் சாவியில் இணைக்கப்பட்டிருக்கும் அறைச் சாவிக்குரிய காட்டேஜ் தேடிப்போகலாம். அவ்வளவுதான் சம்பிரதாயம். அதன் பின் அடுத்த ஆள் சாவி எடுக்க வேண்டும்.

பார்த்திபன் போய் சிறுநீர் கழித்து வந்தான். சில்வியாவுக்குப் போக வேண்டுமெனில் என்ன செய்வாள் என யோசித்தான். நல்ல கழிவறையற்ற இடங்களில் முழுநாள் கூட அடக்கி வைத்துக் கொள்வாள். பார்க்கிங் பின்புறம் டாய்லெட் போர்ட் கண்ட ஞாபகம் என்று சமாதானம் கொண்டான். அவன் முறை வரும்போது மணி பத்தை நெருங்கியிருந்தது. அவன் கையில் அகப்பட்டது ஒரு வோல்க்ஸ்வேகன் சாவி!

*

பார்த்திபன் கிளம்பிப் போனதும் சில்வியா One Part Woman-ஐப் படிக்க எடுத்தவள் கடைசிக்கு முந்தைய அத்தியாயத்தில் இருக்கையில் அவர்களின் கார் பீப் ஒலி வெளியிட்டுத் திறந்து கொண்டது. சில நொடிகளில் அவன் நடந்து காரை நோக்கி வந்தான். கண்கள் விரிய அவனைப்பார்த்தாள். உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டாள்.

கார்க் கதவைத் திறந்து அவளை நோக்கிக் கை நீட்டினான். அதிலொரு நாடகீயம் இருந்தது. அவனைக்கவனித்தாள். பார்த்திபனைவிட உயரம். பார்த்திபனைவிட ஃபிட். முகமூடி மீறிக் கொண்டு மின்னிய புன்னகையில் பார்த்திபனை விடச்சீரான பற்கள்!

அதே மாதிரி அவன் தன்னில் எதை எல்லாம் பார்ப்பான், அவன் மனைவியுடன் தன்னை ஒப்பிடுவானா என யோசனை ஓடியதும் உடலும் மனமும் நெளிந்தாள்.

கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு காரிலிருந்து இறங்கி அவனிடம் தயக்கமாய்க் கைகொடுத்தாள். மிக மென்மையாய்ப் பற்றிக் கொண்டான். பின் அவள் அமர்ந்திருந்த புறத்துக் கதவின் கண்ணாடியை ஏற்றி, காரைப் பூட்டி, கார் சாவியுடன் இணைந்திருந்த அறைச்சாவியை நிதானமாய் ஆராய்ந்து, அவளை வழிநடத்தினான்.

I am your opus,
I am your valuable,
The pure gold baby

ஒரு ராஜகுமாரி மாதிரி உணர்ந்தாள் சில்வியா. குளிர்வளி தழுவியதில் சிலிர்த்தாள்.

“பேரழகு தேவதையே! உன் பெயர் என்ன?”

“சொல்ல மாட்டேன்! ரதின்னு வெச்சுக்கோ.”

“ஓ! பரவால்ல, அப்ப என் பெயர் மதன்.”

“பெரிய மன்மதக் குஞ்சுனு நினைப்பு!”

“பார்க்கத்தானே போற!”

அதன் இரண்டாம் பொருளறிந்து சுரந்த வெட்கம் சிவப்பாகவும் சிரிப்பாகவும் அவள் முகத்தில் வழிந்தது. பார்த்திபனே வந்து விட்டானோ என ஒரு கணம் தோன்றியது.

ம்ஹூம். இது அவன் குரல் அல்ல. இன்னும் அவள் கையை அவன் விடவில்லை. இது அவன் விரலும் அல்ல. யோசனை புகையாய் அலைந்திருக்க, அறை வந்தது.

என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று திடீரென மனதில் எழுந்த கேள்வியை ஹீல்ஸுடன் சேர்த்துக் கழற்றி எறிந்தாள். இந்த மனசாட்சி ஒரு மஹாதொந்தரவு!

அறைக்குள் நுழைந்ததும் முகமூடி களைந்தார்கள். முத்தமிட்டார்கள். பேசினார்கள். சிரித்தார்கள். நீந்தினார்கள். குடித்தார்கள். சாப்பிட்டார்கள். வான்நிலா பார்த்தார்கள். புத்தாண்டு கொண்டாடினார்கள். உடல் கனிந்தர்கள். உடுக்கை இழந்தனர். அப்புறம்…

எல்லாச் சம்மதத்திற்கு முன்பும் சில்வியா தயங்கினாள். பின் மெல்ல இளகினாள்.

ஓர் ஆரஞ்சுப்பழத்தை உரித்து அதன் சுளைகளை ஒவ்வொன்றாய்ச் சுவைப்பது போல் நிதானமாய் அவளைக் கையாண்டான். அவன் கசக்கவில்லை; அதனால் இனித்தான்.

பின்னிரவு அவன் அவளை எழுப்பினான். வைகறை அவள் அவனை எழுப்பினாள்.

சில்வியா கண்விழித்து செல்ஃபோன் தேடியெடுத்து மணி பார்த்தாள். காலை எட்டு.

உடம்பெல்லாம் வலித்தது. சிறுநீர் முட்டியது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தாள். அவன் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தான். சிரித்துக் கொண்டாள். முதல் வேலையாய் பார்த்திபனுக்கு “Happy New Year – 2018” என்று வாட்ஸாப் செய்தாள். அவனும் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருப்பான். செல்ஃபோனுடன் எழுந்து பாத்ரூமுக்கு நடந்தாள்.

சில்வியா உடம்பில் பொட்டுத்துணி இல்லை, உள்ளாடைகளை இனி தேட வேண்டும்.

சிறுநீர் பெய்து முடித்ததும் முகத்தில் நிம்மதி அரும்பியது. ஃப்ளஷ் செய்து விட்டு டாய்லெட் சீட்டில் அமர்ந்தபடி செல்பேசித்திரையில் தடவி, நின்று, தாவி, குதித்தாள்.

அப்போது அந்தச் செய்தியில் அவள் கண்கள் குத்தி நின்றன: City’s Night of Shame.

அந்நகரத்தில் புத்தாண்டு நள்ளிரவுக் கொண்டாட்டத்திற்குப் பெயர் போன சாலையில் முந்தைய இரவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்களுக்குச் சில ஆண்கள் கும்பலாகப் பாலியல் தொந்தரவு அளித்திருந்தார்கள். ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், பென்சில் ஸ்கர்ட்டில் ஒருத்தி விரிகூந்தல் சகிதம் பெண் போலீஸின் தோள் மீது சாய்ந்தழும் புகைப்படம் வெளியாகி இருந்தது. உடன் அப்பெண்ணின் விசும்பல் பேட்டியொன்றும்.

மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? வன்முறையில் காமத்தை உணர முடியுமா!

ஒரு பெண், நூறு ஆண் கைகள், மேலே, கீழே, முன்னே, பின்னே, உள்ளே, வெளியே தொட்டு, அமுக்கி, கிள்ளி விலகும் காட்சி மனதிலெழுந்தது. பார்த்தி அவ்விடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்? நான் அவ்விடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? சில்வியாவுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் முடியக் கூசியது.

இம்மாதிரி சூழல்களைப் பெரும்பாலான பெண்கள் மௌனமாய்க் கடப்பதே வழக்கம். காரணம் நீ ஏன் நள்ளிரவில் நடமாடினாய் என்பார்கள். உன் ஆடை தான் தூண்டுதல் என்பார்கள். குடித்திருந்தாயா எனக் கேட்பார்கள். எங்கே தொட்டான், என்ன செய்தான் எனக் குடைவார்கள். மீறிப் பேசியிருக்கும் அப்பெண்ணைப் பிடித்திருந்தது அவளுக்கு.

Out of the ash
I rise with my red hair
And I eat men like air.

முகமற்ற அப்பெண்ணுக்கு, இன்னும் இத்தேசத்தின் கோடிக்கணக்கான பெண்களுக்குத் தாம் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களை எதிர்த்துப் புகாரளிக்கும் உரிமை உண்டு.

திடுக்கிட்டாள். அவசியமின்றி மீண்டும் நீரை ஃப்ளஷ் செய்தாள். அழத்தொடங்கினாள்.

***

Comments

Anonymous said…
Usually I do not read article on blogs, however I wish to say that
this write-up very forced me to try and do it! Your writing taste has been amazed me.
Thanks, quite great article.
Unknown said…
இன்றயா சமுகத்தின் அடையாளத்தை கண்முன் கொண்டு கண்டதுபோல்
venki said…
நல்ல கதையோட்டம் , நல்ல கரு
மோனி said…
ஃபென்டாஸ்டிக்
vivek said…
கதையோட்டம் அருவியை போல ஆர்ப்பரித்து கொட்டுகிறது
veera said…
அழத்தொடங்கினாள்,அதன் பிறகு ?
Unknown said…
செம திர்லிங்!!!
Unknown said…
பின்னிரவு அவன் அவளை எழுப்பினான். வைகறை அவள் அவனை எழுப்பினாள்.
சிறப்பான படைப்பு. அருமை. படித்தேன். ரசித்தேன். தொடருங்கள். தொடர்வோம்.

#2018/17/SigarambharathiLK
Nokia 5 திறன்பேசிக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 மேம்படுத்தல்!
https://newsigaram.blogspot.com/2018/03/nokia-5-8-1-surprise-update.html
#techsigaram#sigaram #sigaramco
#சிகரம் #தொழிநுட்பம் #நோக்கியா
#nokia #Oreo8Point0 #SigarambharathiLK
சில ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ்குமார் நாவலில் ஊறுகாய் மாதிரி தொட்டு போயிருப்பார்...நன்றி..அருமையான நடை...
Unknown said…
I remember that the very same crux of the story had wrote by novelist Rajesh Kumar sometimes in early 2000...
Unknown said…
I remember that the very same crux of the story had wrote by novelist Rajesh Kumar sometimes in early 2000
செம... புணந்து எழுந்த பின் நிதானமாய் பேசி நிறைகிறது அறம்.
Anonymous said…
அந்த Article படிச்சுட்டு அழற மாதிரி ஏன் கதை முடியுது அவளுக்கும் சமபவத்துக்கும் சமபந்தமே இல்லையே ???
Manonmani said…
அந்த பெண்ணின் காரை திறக்கும் போதும் ,அப்புறம் முக மூடியை கழட்டும் போதும், அவள் முன்னால் காதலன் வந்து நிற்பானோ என நினைத்தேன். 96 ரைடர் ஆச்சே!!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்