உணர்வைச் சுரண்டும் கலை


அருண் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குநரின் திரைப்படம் அருவி. மிகச் சிக்கலான, அதே சமயம் மிக மலினமான வெற்றிச்சூத்திர மாயைகள் நிரம்பிய தமிழ் திரைப்பட உலகில் இப்படி ஒரு உள்ளடக்கம் வெல்லும் என்று நம்பிக்கையுடன் களம் புகுந்திருக்கும் அவரை முதலில் எந்த ifs and buts-ம் இன்றி அணைத்துக் கொள்ளலாம்.


Asmaa என்ற எகிப்தில் எடுக்கப்பட்ட, அரேபிய மொழித் திரைப்படத்தைத் தழுவியே அருவி எடுக்கப்பட்டது என்ற வாதப் பிரதிவாதங்களுக்குள் போக விரும்பவில்லை. அதைத் தாண்டி இரண்டு விஷயங்களை எடுத்துக் கொண்டு பேச நினைக்கிறேன். ஒன்று திரைப்படம் பற்றியது; மற்றது நம் திரைப்படப் பார்வையாளர்கள் பற்றியது.

முன்பொரு காலத்தில் - சுமார் இருபதாண்டுகள் முன் - இந்தியாவில் எய்ட்ஸ் பற்றி படைப்பில் பேசுவது என்பது முற்போக்காக, சமூக அவசியமாக இருந்தது. நிறைய எழுத்துக்களும், படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அது பற்றி வந்தன. (ஒரு நகைச்சுவைத் துணுக்கு நன்றாய் நினைவில் உள்ளது: சவரக்கத்தி மூலம் எய்ட்ஸ் பரவும் என்பதால் அதற்கு ஆணுறை போட்டுச் சிரைப்பார் ஒரு நாவிதர்.) அருவியும் அப்போது வந்திருக்க வேண்டிய விழிப்புணர்வுப் படம். இன்று எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோயாளிகளை ஒதுக்கி வைக்கும் மனப்பான்மை அந்த அளவு மோசமானதாக இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் காலம் முன் எய்ட்ஸ் பற்றி வந்த மிருகம் படம் கூட வரலாற்றுப் பதிவுதான். அதனால் இன்றைய தேதியில் இப்படத்தின் பொருத்தப்பாடு மற்றும் அவசியம் பற்றியே கேள்வி எழுகிறது.

அருவி திரைப்படம் எதைப் பேசுகிறது? இக்கேள்விக்கு ஒற்றைப் பதிலைச் சொல்வது சற்று சிரமமான விஷயம் என நினைக்கிறேன். என் பார்வையில் அருவி மூன்று விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது: 1) குடும்பம் முதல் சமூகம் வரை எல்லோராலும் எயிட்ஸ் நோயாளிகள் தர்க்கமே இன்றி ஒதுக்கப்படுகிறார்கள். 2) சொல்வதெல்லாம் உண்மை போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டிஆர்பிக்காக மனசாட்சியே இன்றி சாதாரண மனிதர்களின் உணர்வுகளில், உறவுகளில், வாழ்க்கையில் மிக மோசமாக விளையாடுபவை. 3) பெண்களின் பலவீனங்களை, இக்கட்டான சூழல்களைப் பயன் படுத்தி ஆண்கள் அவர்களைப் பாலியல்ரீதியாய்ச் சுரண்டுகிறார்கள். முதலாவதைச் சொல்வதற்காகத் தான் மற்ற இரண்டையும் நுழைத்திருக்கிறார்கள் எனப் புரிந்தாலும் அவை அந்த கிளைத் தேவை என்பதைத் தாண்டி பிரதான விஷயமாகவே படத்துள் உள்ளே நுழைந்து விட்டன. இதன் காரணமாக படத்தின் திரைக்கதை எங்கெங்கோ அலைபாய்கிறது. ரசிப்புக்குத் தடையாகிறது. படத்தின் முக்கியப் பலவீனம் அதுவே.

அடுத்து அருவி என்ன மாதிரியான படம்? பெரும்பாலும் அருவியை ஒரு சீரியஸ் படமாகவே கட்டமைக்க முயல்கிறார்கள் - படத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி. அனால் அதை அப்படியே ஏற்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. உதாரணமாய் சொல்வதெல்லாம் சத்தியம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் சற்றே நகைச்சுவையானவை. அருவி அந்நிகழ்ச்சியின் மொத்த அங்கத்தினரையும் - சுமார் இருபது பேர் இருப்பர் - ஒற்றை ஆளாய்த் துப்பாக்கி முனையில் வைப்பதும் போலீஸ் உடனே எந்தத் தர்க்கமும் இன்றி அல்க்வைதாவோ மாவோயிஸ்டோ என எண்ணி பட்டாலியனை இறக்கும் காட்சிகள் அபத்தமானவை. க்ளைமேக்ஸில் நம் இரக்கதைச் சுரண்டி எடுக்கும் முயற்சியிலான காட்சிகள் மறுபடி படத்தைச் சீரியஸ் ஆக்குகின்றன. ஆனால் இப்படி மாற்றி மாற்றி, என்ன மாதிரி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றே பார்வையாளனை உணர விடாமல் குழப்புகிறார்கள்.

முதலில் அருவியின் கதாபாத்திரத்தைப் பார்ப்போம். அவர் மிகச் சராசரியான ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணாகவே காட்டப்படுகிறார். ஒரு தேவதையாக அல்ல. அந்த மிகையற்ற யதார்த்தம் வசீகரமானதாக இருக்கிறது. தந்தையால் பேரன்பு போர்த்தி வளர்க்கப்படும், குடும்பத்தின் மீது ஒட்டுதலுடன் இருக்கும், அவரது பணிநிமித்தம் இடம் மாறும், பக்கத்து வீட்டில் பாரம்பரிய நடனம் கற்றுக் கொள்ளும், பள்ளியில் சுமார் மாணவியாய் இருக்கும், நடுத்தர வயது ஆண் ஆசிரியரால் ஆங்காங்கே கை வைக்கப்படும், சானிடரி நேப்கின் கடன் கேட்கும் தோழியிடம் மறுக்கும், பார்ட்டியில் குறுகுறுப்புடன் கலந்து கொள்ளும், அங்கே மெல்லிய தயக்கத்துடன் மது ருசிக்கும், தன்னைக் காதலிப்பவனை நிராகரிக்கும், தான் காதலிப்பவனால் நிராகரிக்கப்படும், எந்தக் கவித்துவமும் இன்றி மிகச் சாதாரணமாக - அதை மிக எளிமையாக என்ற சொல்லாலும் அலங்கரிக்கலாம் - ஒரு ப்ரப்போசலை எதிர்பார்க்கும் சாதாரணள்!

படத்தில் முதல் இருபது நிமிடங்களில் வரும் இக்காட்சிகளின் ஆக்கம், அதாவது காட்சியமைப்பு, நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு ஐந்தும் மிகச் சிறப்பாக வந்துள்ளன. (குறிப்பாக பின்னணி இசை Birdman-ஐ நினைவூட்டியது.) இந்தப் படம் பற்றிய மிகையான ஓர் எதிர்பார்ப்பை இது தோற்றுவித்து விடுகிறது.

பின் ஒழுக்கத்தைக் குற்றஞ்சொல்லி வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள் அருவி. இதிலிருந்து தான் படம் தாறுமாறாய்த் தடம் புரள்கிறது. (இடையில் ஒரே சுவாரஸ்ய விஷயம் முதலில் அருவி கர்ப்பவதி என்பது போல் காட்டி, அதனால் தான் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள் என்பது போல் சொல்லப்பட்டுப் பின் உண்மையில் அது எய்ட்ஸ் நோய் என்ற விஷயத்தை விடுவித்தது தான்.) ஏகப்பட்ட கேள்விகளைத் தோற்றுவித்துக் கொண்டே போகிறது படம். ஆனால் எவற்றுக்கும் பதில் இல்லை.

*

1) மகளின் மீது மிகப் பாசம் கொண்ட ஒரு தந்தை அவளது எய்ட்ஸ் நோய்க்குக் காரணம் ஒழுக்கமின்மையே என்று பூரணமாக நம்புவது உறுத்தல் தான். அன்புமிக்க, ஆனால் பொது அறிவற்ற ஒரு போன தலைமுறைக்காரர் என்று அவரைப் புரிந்து கொள்கிறேன். அப்படி இருந்தாலும் பெண்ணின் தரப்பை முழுக்கக் கேட்க முனையும் முயற்சி கூட அந்தப் பாசத்தில் இல்லாமலா போகும்? அவள் தாயுமா விசாரணையே இன்றி ஓர் இளம் பெண்ணை வீட்டை விட்டு விரட்டத் துணை நிற்பார்? அருவியின் பெற்ரோர் பாத்திரங்களை இவ்விஷயத்தில் பதின்ம வயதுடைய அவளது தம்பியின் கதாபாத்திரத்தின் அறிவோடே படைத்து வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அதன் நோக்கம் அவர்களை அப்படிக் கெட்டவர்கள் ஆக்கினால் தான் நாயகி அருவியின் போராட்டம் உயர்வு பெறும் என்பதைத் தவிர வேறு இருப்பதாய்த் தெரியவில்லை.

2) வீட்டை விட்டு வெளியேறும் முன் தான் மிக ஒழுக்கம் மிக்கவள் என்பதை நம்புங்கள் எனத் திரும்பத் திரும்பத் தன் குடும்பத்தாரிடம் மன்றாடுகிறாள் அருவி. இது தான் அவளது பாத்திர வார்ப்பு என்பதாகப் பார்வையாளன் மனம் எடுத்துக் கொள்கிறது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய பின் மூன்று ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறாள் அருவி. அது கடும் முரணாகத் தோன்றுகிறது. ஒழுக்கமான ஒரு பெண்ணை ஒழுக்கமற்றவள் என்று நினைத்து வீட்டை விட்டுத் துரத்துவதால் உண்மையாகவே அவள் ஒழுக்கம் கெட்டுப் போகிறாள் என்பது தான் இயக்குநர் சொல்ல வருவதா? (இங்கே ஒழுக்கம் என்று குறிப்பிடுவது சமூகத்தின் பார்வையிலான ஒழுக்கம். என் அளவுகோல் அல்ல.) அப்படி எனில் அது மேலும் கேள்விகளை எழுப்புகிறது. வீட்டை விட்டு வெளியேறிய குறுகிய காலத்தில் அருவி மூன்று ஆண்களிடம் 'பலியாக' முடிகிறது என்றால் அதற்கு முன் அவள் 'ஒழுக்கமாக' இருந்தது வீட்டின் கட்டுப்பாடுகளினால் மட்டும் தானா? எனில் அவள் தான் தவறு செய்யவில்லை என்று வீட்டாரிடம் மன்றாடுவதன் வலு சரிந்து போய் விடுகிறதே!

3) அருவி மூன்று பேரால் ஏமாற்றப்பட்டதாகவும் அதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சொல்கிறாள். அது என்ன ஏமாற்று? வீட்டை விட்டு வெளியேறியதால் தோழியின் வீட்டில் தங்க நேரும் போது தோழியின் தந்தை அவளோடு உறவு கொள்கிறார். இதில் அருவி மறுக்கவும், எதிர்க்கவும் எல்லாச் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனாலும் அவள் செய்யவில்லை என்பதைக் கலவியின் மீதான விருப்பம், மதுப் போதை, தோழியின் தந்தை என்ற பயம், சங்கடம், குழப்பம் அல்லது நன்றி என எப்படி வேண்டுமாலும் எடுத்துக் கொள்ளலாம். அதை வல்லுறவு என்று ஏன் சொல்ல முடியவில்லை என்றால் அவருக்கு எய்ட்ஸ் தொற்றி விடலாகா என்று ‘பாதுகாப்பாகவும்’ இருந்திருக்கிறாள். ஆக, ஓரெல்லை வரை அக்கலவி அவள் ப்ரக்ஞையுடன், சம்மதத்துடன் நிகழ்ந்த ஒன்று தான். அதன் பின் அவள் அவரிடம் என்ன எதிர்பார்த்திருக்க முடியும்? திருமணமா? நஷ்ட ஈடா? இவை ஏதும் இல்லை என அவள் பார்த்திர வார்ப்பு சார்ந்து புரிந்து கொள்கிறேன். எனில் அது எப்படி அவர் ஏமாற்றியது என்றானது? அடுத்து கோயில் உபன்யாசம் செய்பவர் கதையும் அதே போன்றது தான். அவரும் அவளை வன்கலவி செய்யவில்லை. அது ஒரு சிகிழ்ச்சை என்பதை நம்பி ஏமாறுமளவு அருவி முட்டாள் என்பதையும் ஏற்க முடியவில்லை. ஆக, அங்கும் இணக்கமான ஓர் உறவே நிகழ்ந்திருக்கிறது. அங்கும் அதன் பிறகு எதிர்பார்க்க ஏதுமில்லை. எனில் எப்படி ஏமாற்று? மூன்றாவது நிறுவன முதலாளி. அருவியின் தந்தையின் மருத்துவச் செலவுக்கு லட்ச ரூபாய் உதவி செய்வதற்குப் பிரதிபலனாய் அருவியுடன் உறவு கொள்கிறார். அதுவும் அவரது ப்ரப்போசல் தான். அவளை வல்லுறவு செய்து விட்டு லட்ச ரூபாயைத் தூக்கி எறியவில்லை. பணம் வேண்டுமானால் உளவு கொள் என்று கார்னர் செய்கிறார். அருவி முன் இரண்டு வாய்ப்புகள் அங்கும் இருந்தன: ஏற்பது, மறுப்பது. அருவி ஏற்கிறாள். பணத்தையும் வாங்குகிறாள். எனில் அதிலும் ஏமாற்று எங்கே வந்தது? அது ஒரு வியாபாரம் தானே? புதுமைப்பித்தனின் பொன்னகரம் நாயகி அம்மாளு செய்வதைப் போன்றது தானே? முதலாளி அருவியின் இக்கட்டைப் பயன்படுத்திக் கொண்டு அவளைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்தினான் என வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய அவளை ஏமாற்றி விட்டான் என்பது என்ன தர்க்கம் என்றே புரியவில்லை.

4) ஆக, ஏமாற்றவே படாத ஒருத்தி தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லி மூவரையும் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கிறாள். அதுவும் எதற்கு? அவர்களை அம்பலப்படுத்தி எதிர்காலத்தில் அவள் மாதிரி எவரும் பலியாகி விடக் கூடாது என்ற விழிப்புணர்வுக்கு அல்ல. (ஏனெனில் கோயில் உபன்யாசர் விஷயம் தவிர மற்ற கேஸ்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுக்கும் ஏதுமில்லை.) அவர்களை அழைப்பது மன்னிப்பு கேட்கச் செய்ய. இவ்விடத்தில் சுஜாதாவின் இருள் வரும் நேரம் மற்றும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட வானம் வசப்படும் படங்கள் நினைவில் வருகின்றன. அதில் பாலியல் வல்லுறவாக்கப்பட்ட பெண் பிடிபட்ட குற்றவாளிகளைச் சிறையில் சந்திக்கும் போது மன்னிப்புக் கேட்கச் சொல்வாள். Poetic Justice! ஆனால் அங்கே ஒரு குற்றம் தெளிவாய் இருக்கிறது. இங்கே அது அந்தரத்தில் தொங்குகிறது. அதனால் அருவியின் சிந்தனைத் தடம் என்ன என்பதே குழப்பமாய் இருக்கிறது.

5) அடுத்தது சொல்வதெல்லாம் சத்தியம் காட்சிகள். நிச்சயம் நல்ல பகடி. ரசிக்க முடிகிறது. ஆனால் அதற்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்மந்தம்? இது எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கப்படுவது பற்றிய படமல்லவா? எந்தவொரு பிரதியும் போகிற போக்கில் தன் மைய நோக்கிற்குச் சம்மந்தமில்லாத ஒரு விஷயத்தைக் கேலி செய்து நகரலாம், தவறில்லை. ஆனால் அதைப் படைப்பின் பிரதானப் பகுதிகளுள் ஒன்றாக ஆக்கும் போது பார்வையாளனுக்கு / வாசகனுக்குக் குழப்பம் வந்து விடும். அது தான் அருவியிலும் நடக்கிறது. அந்தக் காட்சிகள் வந்ததும் பார்வையாளன் அதுவரை தான் தயாராகியிருந்த mood-லிருந்து பிடிவாதமாகப் பிடுங்கி வெளியே எடுக்கப்படுகிறான். அதனால் அதை ஏற்க முடியவில்லை. சமீபத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வந்த ரொமான்ஸ் காட்சிகள் போலத் தான் இதுவும். அதனளவில் சுவாரஸ்யம் கொண்டவை என்றாலும் படத்திற்கு அது எந்த அளவில் தேவை என்ற பிரச்சனை தான் இது. அல்லது ஒரு பின்நவீனப் பிரதியில் அப்படியான கட்டுக்கோப்பு அவசியமில்லை என்று ஜல்லியடிப்பதாக இருந்தால் மேலே பேச ஒன்றுமில்லை.

6) அதே போல் தான் டிவி நிகழ்ச்சியில் அருவி பேசும் நீளமான வசனமும். அதில் நாயகியின் நடிப்பும் வசன உச்சரிப்பும் அபாரம் தான். ஆனால் அதற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு? அதை வியந்து பாராட்டுபவர்களை, வாட்ஸாப்பில் உணர்ச்சிகரமாய்ப் பகிர்பவர்களைக் காண்கையில் பாட்ஷா படக் கடைசி ரீலை குரங்கு தூக்கி ஓடியதும் அருணாச்சலம் க்ளைமேக்ஸை மாற்றி வைத்து வடிவேலு ஓட்டுவதற்குக் கைதட்டிப் போகிறவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். எய்ட்ஸ் வந்ததால் ஒருவருக்கு இந்த
மாதிரி ஞானோதயம் எல்லாம் வந்துவிடும் என்கிறாரா இயக்குநர்? சம்மந்தமே இன்றி நுகர்வுக் கலாசாரத்தை ஏன் திட்ட வேண்டும் இதில்? அஃது இல்லை என்றால் அருவி போன்ற ஹெச்ஐவிகாரர்கள் சரியாக எதிர்கொள்ளப்பட்டிருப்பார்களா? அவர் சொல்வது மாதிரியான 'சராசரி' வாழ்வை மேற்கொள்வது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? அவர்கள் தம் வேலைகளில் என்ன சாதிக்கிறார்கள் என்பது தானே முக்கியமானது! எல்லாக் காலங்களிலும் Peer Pressure ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது நமக்கு மட்டுமல்ல; அமெரிக்கா முதலான முன்னேறிய நாடுகளிலும் அதே தான் நிலை. அது அபத்தம் என்று தோன்றுகிறவன் அதிலிருந்து வெளியேறலாம். ஆனால் கேவலமான வாழ்வு என்று அதைக் கேலி செய்வது கலைஞர்களின் ஒரு விதமான எலைட் கிறுக்குத்தனம் தான் அல்லவா! அறை என் 305ல் கடவுள் படம் அபத்தமாய்ச் செய்ததைத் தானே இப்படம் இன்னும் கவித்துடத்துடன் செய்கிறது? அருவி பட்டியலிட்ட விஷயங்களைச் செய்து அபத்த வாழ்க்கை வாழும் மக்களே கைதட்டி அருவியைப் பாராட்டுகிறார்கள். அந்தப் பட்டியலில் அருவி மாதிரியான படங்களைக் கண்டு கண்ணீர் மல்க நின்று கைதட்டுவதையும் சேர்க்க வேண்டும்!

7) அடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மொத்தப் பேரையும் ஒற்றைத் துப்பாக்கி கொண்டு சில மணி நேரங்கள் ஒரு பெண் ஆட்டுவிப்பது. (அந்தத் துப்பாக்கியில் மொத்தம் எத்தனை குண்டுகள் தான் இருக்கும்? அருவியின் தாத்தா அதை முழுக்க லோட் பண்ணி வைத்து விட்டுச் செத்துப் போனாரா?) படத்தின் மிக மோசமான இடம் அது தான். அதில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. மனிதர்களுடன் பேச, பழக அவள் ஏங்கிக் கிடக்கிறாள் என்றா? தொலைக்காட்சிப் படப்பிடிப்புக்கு அன்று அருவி வந்ததன் நோக்கம் என்ன? மூன்று பேரை மன்னிப்புக் கேட்கச் செய்வதா? எனில் எதற்குத் துப்பாக்கி எடுத்து வந்தாள்? அருவி பாதுகாப்பின் நிமித்தம் நகரில் எப்போதும் துப்பாக்கியுடனே அலைபவளா? அப்படியே வைத்துக் கொண்டாலும் கோபத்தின் கணத்தில் நிகழ்ச்சி இயக்குநரைச் சுடுவது வரை புரிகிறது. பின் அவ்விடத்தை விட்டு ஓடுவதே இயல்பு. மாறாகப் பொறுமையாய் ஏன் எல்லோர் செல்பேசிகளையும் சேகரித்துக் கொண்டிருக்கிறாள்? அதை விடக்கொடூரம் அலுவலக முதலாளியைத் தன்னை அழ வைக்கும் ஒரு கதை சொல் எனக் கேட்பது. அருவி ஒரு பைத்தியமா பார்த்துக் கொண்டிருக்கும் நாமா என்று சந்தேகம் வந்து விடுகிறது.

8) ஸ்டுடியோவிற்குள் அருவி படப்பிடிப்புக் குழுவினரைக் கூட்டி வைத்து பீர் பாட்டில் சுற்றி விட்டு விளையாடிக் கொண்டிருப்பது ஒரு மாதிரியான மண்டைப் பிளவு எனில் அதற்கு வெளியே காவல் துறையும் ஊடகங்களும் செய்யும் கோமாளித்தனம் வேறு மாதிரியானவை. நாலைந்து துப்பாக்கிச் சத்தத்துக்கு நக்ஸல்பாரிகளை ரிமாண்ட் செய்து விசாரிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு பேசுகிறார் என்எஸ்ஜியில் பயிற்சி பெற்ற அந்தப் போலீஸ் உயரதிகாரி. போலீஸிடம் ஏன் அருவி “கை வைடா பார்ப்போம்” என்றெல்லாம் பஞ்ச் பேசுகிறார்? இவை எல்லாமே எரிச்சலூட்டுபவை.

9) கடைசி இருபது நிமிடங்கள் நம் நெஞ்சைச் சுரண்டி எடுக்கிறார்கள். அக்காட்சிகளில் நாயகியின் நடிப்பு நன்றாக இருக்கிறது என்றாலும் கொஞ்சம் ஓவர்டோஸ் தான். அழ வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது போல் இருக்கிறது. விஷயத்தை ஆழமாய்ச் இதயத்தைக் கனக்கச் செய்வது என்பது வேறு. சேது, பரதேசி போன்ற படங்களின் இறுதிக் காட்சிகள் கச்சிதமாய் அதைச் செய்தவை. அதில் யதார்த்தம் மட்டுமின்றி கலையும் இருந்தது. இதில் யதார்த்தம் மட்டுமே மிஞ்சி ஆவணத்தன்மை புகுந்து விடுகிறது. பிடிவாதமாய்ப் பார்வையாளன் குற்றவுணர்வு கொண்டே ஆக வேண்டும் என்று முடிவு செய்து இறங்கியது போல் படுகிறது. அருவியைச் சந்திக்க அந்த உதவி இயக்குநன் அவளது குடும்பத்தை அழைத்துச் செல்வது வரை நியாயம். ஆனால் சொல்வதெல்லாம் சத்தியம் குழுவும் அவளை 'ஏமாற்றிய' மூன்று பேரும் எதற்கு?

10) அருவி தான் அந்த மூன்று நபர்களுடனான உறவின் போதும் பாதுகாப்பாகத்தான் இருந்ததாகச் சொல்கிறாள். அது என்ன எனச் சரியாகப் புரியவில்லை. அவர்களை ஆணுறை அணியச் செய்தாளா? எனில் அவ்வுறவில் அவளது சம்மதம் இருந்தது என்பது உறுதிப்படுகிறது. ஏமாற்றி விட்டதாகக் குற்றச்சாட்டு வந்ததும் அந்த ஆண்கள் அதைத் தான் முதலில் சொல்லி இருப்பார்கள். அல்லது அருவி தானே பெண்ணுறை அணிந்தாளா? கதைப்படி அலுவலக முதலாளி தவிர மற்ற இருவருடனும் நிகழ்ந்தது எதிர்பாராக் கலவி. அதற்கு எப்படி அவள் தயாராய் இருந்திருக்க முடியும்? எனில் தாத்தாவின் துப்பாக்கி போல் ஆணுறை அல்லது பெண்ணுறையையும் கைப்பையில் சுமந்து கொண்டே சுற்றுகிறாளா அருவி? இந்த இரண்டுமே இல்லை, அவர்களின் விந்தணுவை தனக்குள் பெற்றுக் கொள்ளாமல் தடுத்து விடுவதன் வழி - அதைப் பெண் கண்டறிந்து தீர்மானிக்க முடியாது என்பது வேறு கதை - அவர்கட்கு எய்ட்ஸ் தொற்றாமல் காக்கிறாள் என்று அவள் (இயக்குநரும்) சொல்கிறாள் எனில் அது விஞ்ஞானரீதியாகத் தவறான புரிதல். அப்படிச் செய்தாலும் எய்ட்ஸ் தொற்றும்.

*

சுமாரான படத்தை எடுக்க அருண் பிரபு புருஷோத்தமனுக்கு அத்தனை உரிமையும் சுதந்திரமும் உண்டு. அதை நான் குறையே சொல்ல மாட்டேன். ஆனால் இம்மாதிரி குறைகளும் தெளிவின்மையும் நிறைந்த ஒரு படத்தைப் பெருங்காவியம் என எப்படி மக்கள் கொண்டாடுகிறார்கள்? சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் என்று அழைக்கப் படுவர்கள் கூட விதிவிலக்கில்லை. எல்லோரும் வராது வந்த மாமணி என்றே இந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். யோசித்தால் மூன்று காரணங்கள் தோன்றுகின்றன:

1) பொதுவாகவே திரைப்படம் என்ற கலை குறித்த எதிர்பார்ப்பு நம் மக்களிடையே – அதுவும் இளம் தலைமுறையிடையே - குறைந்து விட்டது. எம்ஜிஆரும் சிவாஜியும், ரஜினியும் கமலும் கொடுத்து வந்த படங்களின் பத்தில் ஒரு பங்கு தரம் கூட இன்று விஜய், அஜீத் படங்களில் இல்லை. ஆனால் அவற்றைக் கேள்வியே இன்றி மக்கள் வெற்றிப்படங்கள் ஆக்குகிறார்கள். இன்று ஒரு படம் மோசமாய் இல்லாதிருந்தாலே போதும், ஓடி விடும். அத்தனை தூரம் மக்களைக் காய்ந்து போக வைத்து இப்போது காமாசோமாவெனப் படம் எடுத்தாலே காணாததைக் கண்டதைப் போல் புழகாங்கிதப் படுகிறார்கள் மக்கள். காக்கா முட்டை, விசாரணை, அறம் போன்ற ஓரளவு நல்ல படங்களை க்ளாஸிக் என்று தூக்கி வைத்துத் கொண்டாடப்படக் காரணம் இது தான்.

2) ஒரு படம் நல்ல விஷயம் ஒன்றைப் பேசி விட்டால் அதை உயர்த்திப் பிடித்து விடுவது. நல்ல சினிமாவாய் அது வந்திருக்கிறதா என்பது பற்றிய கவலை இல்லை. எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கப்படுவது பற்றி எடுத்திருக்கிறார்கள், பெண்கள் ஏமாற்றப் படுவது பற்றி எடுத்திருக்கிறார்கள், சராசரி மனிதர்கள் வாழ்வின் அற்பத்தனம் பற்றி எடுத்திருக்கிறார்கள், இவற்றை எல்லாம் நன்றாக இல்லை என்று சொல்லி விட முடியுமா என்ன! அதனால் நன்றாக இருக்கிறது என்றே சொல்லி வைக்கிறார்கள். இது ப்ரக்ஞைப்பூர்வமாக நிகழாமல் ஆழ்மனதிலேயே இப்படி ஓர் அசட்டுத்தனம் ஊறி விடுகிறது நம் மக்கள் மனதில். இது சமீப பத்து, பதினைந்து ஆண்டுகளில் வந்த விஷயம் தான். சொல்கிற விஷயம் மட்டும் தான் முக்கியம் என்றால் ஆவணப்படம் எடுத்து விட்டுப் போய் விடலாமே! எதற்கு முழுநீளத் திரைப்படம்? அல்லது ஒரு புத்தகமாக எழுதி விடலாமே! எதற்கு சக்தி வாய்ந்த காட்சி ஊடகம்? அன்பே சிவம் வந்த போது இம்மாதிரி இருந்திருந்தால் அதையும் ஹிட் செய்திருப்பார்கள் போல!

3) ஓர் உளவியல் விஷயம். இந்தத் தலைமுறை மிக இறுக்கமாக வாழ்கிறது. எந்த ஒரு சாதாரண விஷயத்துக்கும் நெகிழ்ந்தழத் தயாராய் இருக்கிறது. காரணம் நிஜ வாழ்வில் அத்தகைய சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. அப்படியான இடங்கள் படத்தில் வருகையில் அவை எவ்வளவு அபத்தமாக, அர்த்தமற்றதாக, தர்க்கமற்றதாக இருந்தாலும் அதைக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் உச்சபட்ச வெளிப்பாடு என்பதே படங்கள் கண்டு கண்ணீர் சிந்துவது மட்டும் தான் என்றாகி விட்டது. வாசிப்பே இல்லாத நிலை. உரையாடலே இல்லாத நிலை. சமூக வலை தளங்களில் மூழ்கிப் போன நிலை. இன்னும் சொல்லப் போனால் அந்த இறுக்கமான வாழ்வை ஒரு குற்றவுணர்வுடன் தான் வாழ்கிறார்கள். இந்தப் படங்களைக் கண்டு பாராட்டுவதன் மூலம் தம் கடமையை ஆற்றி விட்டதாய்த் தற்காலிகமாய் நிம்மதி கொள்கிறார்கள். ஆக, கலை என்பது கலைக்காக அல்லாமல், அது மனதை எத்தனை தூரம் பாதிக்கிறது என்பதற்காக அல்லாமல், போலியான நிம்மதியை அளிப்பதனால் கொண்டாடப்படுகிறது. உதாரணமாய் அருவி படத்தைப் பார்த்துப் பாராட்டுவதன் மூலமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமை முடிந்து விட்டதாக நிம்மதி கொள்கிறார்கள். யோசித்தால் இவர்களுக்கும் சீரியல் பார்த்து பதற்றப்படுகிற சராசரிக் குடும்பப் பெண்களுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை.

*

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மீதும் லக்ஷ்மியின் மீதும் இயக்குநருக்குத் தனிப்பட்ட பகை ஏதும் இருக்குமோ என்று எண்ணுமளவு மிக உள்ளே இறங்கி (கீழே அல்ல; உள்ளே தான்) அடித்திருக்கிறார். அம்மாதிரி விமர்சனங்களுக்குத் தானும் நிகழ்ச்சியும் தகுதியானவர்களே என்பதை லக்ஷ்மி ராமகிருஷ்ணனே தன் பாலக்காடு ப்ராமின் - ஹெச்ஐவி நோயாளி ஒப்பீட்டின் வழி ஒத்துக் கொண்டிருக்கிறார். கவண் மாதிரியான படத்தில் இக்காட்சிகள் இடம் பெற்றிருந்தால் அழகாக உட்கார்ந்திருக்கும். ஆனால் இங்கே தவறான படத்தில் எழுதப்பட்டு விழலுக்கு இறைத்த நீராகிறது.

மேலோட்டமான ஒரு சினிமா வசனம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ஆபத்தான தகவல் பரவலாக பலரது வாழ்க்கையைப் பாதித்து விடலாம். படத்தில் வெட்டுக் காயம் இருந்து, அதில் ரத்தம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவினால் மட்டுமே எய்ட்ஸ் பரவும், சும்மா உடலுறவு கொண்டால் அல்ல என்பது மாதிரியான ஒரு வசனம் இடம் பெறுகிறது. (உடன் “இயற்கை அத்தனை இரக்கமற்றது அல்ல” என்று கவித்துவக் கருத்து வேறு.) ஆனால் உண்மையில் எய்ட்ஸ் பரவ உடலுறவில் ரத்தமோ வெட்டுக்காயமோ இருந்தாக வேண்டும் என்று அவசியமில்லை. கலவியின் போதான உடற்திரவங்களான விந்து, உச்சத்துக்கு முன் ஆண் குறி வெளியேற்றும் திரவம், யோனித் திரவம், ஆசன வாய்த் திரவம், முலைப் பால் என எதுவாக இருந்தாலும் எதிராளியின் உடலுறவு உறப்புகளான ஆண் குறி, யோனி, ஆசன வாய், வாய், மார்புகள் போன்றவற்றில் லேசான கீறல் அல்லது புண் இருந்தாலும் (அது ஏற்கனவே இருக்க வேண்டும் என்றில்லை, உடலுறவின் போது கூட உண்டாகலாம். தவிர, சில உள்ளுறுப்புக் காயங்களை சம்மந்தப்பட்டவர் உணராமலே இருக்கலாம்.) ஹெச்ஐவி பரவும். ஆனால் படம் பார்ப்பவர்கள் இயற்கையின் இரக்கத்தை நம்பிப் பாதுகாப்பின்றி உடலுறவில் இறங்கி விடக்கூடாது என்பது தான் என் கவலை!

எழுத்தாளர்கள், ஊடகக்காரர்கள், சமூகவலைதளங்களில் தீவிரமாய் இயங்குபவர்களை படத்தின் ப்ரிவ்யூவுக்கு மிக அதிக அளவில் அழைத்த படம் இதுவாகவே இருக்கும் என நினைக்கிறேன். மேற்சொன்ன வகைமைகளில் ஏதோ ஒன்றாகக் கருதி படத்தின் இணை இயக்குநர் பாக்கியராஜ் கோதை என்னையும் ப்ரிவ்யூவுக்கு அழைத்திருந்தார். அது சென்னையில் நடந்ததால் பிற்பாடு பெங்களூரில் ப்ரிவ்யூ வைத்தாலோ, அல்லது படம் இங்கு வெளியான பின்போ பார்த்து விட்டு என் கருத்தை எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன். இப்படியான ப்ரிவ்யூக்களிலேயே கணிசமானோர் படத்தைப் பார்த்து விட்டனர். இதில் ஒரு நன்மையும் உண்டு, எதிர்மறை விளைவும் உண்டு. ஒருபுறம் படம் பற்றி சமூக மற்றும் பிரதான ஊடகங்களில் நல்ல பேச்சு உருவாகும். அது நல்லதே. ஆனால் மறுபுறம் தன்னை மதித்து ப்ரிவ்யூவுக்கு அழைத்ததாலேயே படம் பற்றி எப்படி மோசம் சொல்வது எனச் சங்கடப்பட்டு மேம்போக்காக ஓரிரு குறைகளைச் சுட்டிக் காட்டி விட்டு படத்தைப் புகழ்ந்து தள்ளி விடுவார்கள். படம் பற்றி நல்ல பேச்சு உருவாக உதவினாலும் இயக்குநருக்கு மோசமான துரோகமே. படைப்பு பற்றிய அசல் கருத்தை அவர் அறிய முடியாமலே போகும். அருவி படத்துக்கு ஓரெல்லை வரை அந்தச் சிக்கல் நடந்திருப்பதாகவே தோன்றுகிறது. (சச்சின் விஜய் படத்தில் “காலேஜ் ப்யூட்டி அது இதுன்னு ஓவராவே சொல்லிட்டே அய்யாச்சாமி” என்று வடிவேலுவிடம் சொல்வது தான் நினைவுக்கு வருகிறது.)

படத்தின் ட்ரெய்லர் தவறானது என்று ட்ரெய்லருக்கு முன் ப்ரிவ்யூ பார்த்த ஹரன் பிரசன்னா எழுதி இருந்தார். அது மிகச் சரி. நான் ட்ரெய்லர் பார்த்து விட்டு ஏதோ மாவோயிஸ்ட் படம் என்று தான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் படம் முற்றிலும் வேறு விஷயம். அது ஒரு விதமான ஏமாற்று வேலை என்று கூடச் சொல்வேன்.

நாயகி அதிதி பாலன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்றாலும் ஆச்சரியமில்லை. திருநங்கை அஞ்சலி வரதனும் இணையாக நடித்திருக்கிறார். லக்ஷ்மி கோபால்ஸ்வாமி, கவிதா பாரதி உள்ளிட்ட சொல்வதெல்லாம் சத்தியம் நிகழ்ச்சிக் குழுவினர், அருவியின் குடும்பத்தார், அருவியை ஏமாற்றிய மூவர் என எல்லோரும் நல்ல பங்களிப்பு. படத்தின் நேர்த்திக்கு இது ஒரு முக்கியக் காரணம்.

இப்படத்தின் ஒளிப்பதிவு (ஷெல்லி) மிகத் தரமாய் அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் பாடல்களும் (பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ்) ரசிக்கத்தக்க வித்தியாசமான முயற்சி. திரைக்கதை ஆசிரியராகப் பல இடங்களில் தவறினாலும் இயக்குநராக வலுவான ஆளுமையாக முன் நிற்கிறார் அருண் பிரபு புருஷோத்தமன்.

“எமிலி எப்போதும் எனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டுக் கேட்டுச் செய்வாள், நான் எமிலியிடம் கேட்டதே இல்லை” என்பது போன்ற படத்துடன் நம்மை நெருக்கமாக இணைத்துப் பார்க்கும் நெகிழ்ச்சித் தருணங்கள் எல்லாம் அருவி படத்தில் உண்டு தான். படத்தின் கணிசமான காட்சிகள் ரசிக்க முடிவதாக இருக்கிறது என்பதும் உண்மை தான். ஆனால் அவை துண்டு துண்டாக படத்தின் மைய இழைக்குத் தொடர்பற்று ஆங்காங்கே அந்தரத்தில் நிற்கின்றன. ஒட்டுமொத்தமாக ஒரு படம் அளிக்க வேண்டிய கலாப்பூர்வ அனுபவத்தைப் படம் அளிக்கத் தவறி விடுகிறது. அதனால் அருவி சுமாரான படம் என்று சொல்ல வேண்டிய துர்பார்க்கிய நிலை.

படத்தில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும் “ரோல்லிங் ஸா...ர்!” என்று வித்தியாசமான முறையில் கேமெராமேன் சொல்வார். அது கேட்க ரசிக்கும்படியும் சிரிக்கும்படியும் இருக்கிறது தான். ஆனால் அதற்காகவே அதைச் சிறப்பானது என்று சொல்லி விட முடியாதல்லவா! படமும் அப்படித்தான்.

***

Comments

anujanya said…
செம்மையா எழுதி இருக்கீங்க சரவணகுமார். எனக்கும் தோன்றிய விசயங்கள் மற்றும் நீங்க குறிப்பிட்ட பிறகு விளங்கிய பல விசயங்கள் உங்க விமர்சனத்தில் இருக்கிறது.

aishwaryan said…
இந்த விமர்சனமும் அப்படித்தான்... பரபரப்பை எதிர்பார்க்கிறதே தவிர சிறப்பான விமர்சனம் அல்ல.
Anonymous said…
Wow review - நான் இந்த மாதிரி எல்லாம் யோசிக்கவில்லை :) :)
Jegan said…
விமர்சனம் அருமை. படம் பார்த்த எல்லோரும் ஒரே அடியாக தலையில் தொகைக்கு வைத்து ஆடுகிறார்கள். எனக்கும் அவ்வளவாக பிடிக்கவில்லை. நான் நினைத்த பல விஷயங்கள் நீங்கள் விவரித்து உள்ளீர்கள். நன்றி.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்