சேர நன்னாட்டிளம் பெண்கள்


முதலில் சில Disclaimer-களைச் சொல்லி விடுகிறேன். 1) இதில் நான் பேசப் போவது முழுக்க முழுக்கப் புறத்தோற்றத்தை அடிப்படையாக வைத்தே. பெண்களின் தனி ஆளுமை, குணநலன்கள் போன்றவற்றை எல்லாம் இதில் கணக்கில் கொள்ள வில்லை. 2) நான் முன்வைப்பது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையை (Fact) அல்ல; ஒரு தமிழ் ஆணாக என் பார்வையை (Perception) மட்டுமே. அதனால் இதில் சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். அதில் வியப்பில்லை.


"மலையாளப் பெண்கள் பிரபஞ்சம் காணாத பேரழகிகள்" என்பது நம் தமிழ் மண்ணில் நிலவும் ஒரு பிரபலக் கருத்தாக்கம்.

கவனித்துப் பார்த்தால் தமிழ் ஆண்களுக்கு கேரளப் பெண்களின் மீது ஓர் Obsession இருக்கிறது. அதாவது பித்து. நம்முடைய உயிரியல் விழைவு - Biological urge - அது என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தில் காலங்காலமாய்க் கோலோச்சி வரும் மலையாள நடிகைகளே இதற்குப் பெரும்சாட்சி. தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் எந்த‌ ரயிலை மறித்தாலும் நமக்கு நூறு கதாநாயகிகள் உத்திரவாதமாய்க் கிடைப்பார்கள். இது ஏதோ இன்று நேற்று நமக்கு வந்த திடீர் உணர்வல்ல; நூற்றாண்டுக்கும் மேலாய் நம்மிடையே நிலவி வரும் பாரம்பரியம் தான்! பாரதியார் பாரத தேசம் என்று ஒரு கவிதை எழுதுகிறார். வங்கத்தின் நீர் வளம், கங்கையின் செழிப்பு, தென்கடலின் முத்துக்கள், தெலுங்கு மொழிவளம், கன்னடத் தங்கம், மராட்டியர் கவிதை, ராஜபுத்திரர் வீரம், காசிப் புலவர்கள் என இந்தியாவின் ஒவ்வொரு பிரதேசத்தையும் அதில் வர்ணிக்கும் பாரதி இடையே 'சேர நன்னாட்டிளம் பெண்கள்' என்கிறார். ஒட்டுமொத்தக் கவிதையிலும் அவர் பெண்கள் பற்றிப் பேசுமிடம் அது ஒன்று தான். ஆக, பாரதி காலத்திலிருந்தே மலையாளப் பெண்கள் மீது ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு. இந்திப் பெண்கள் Fair; கன்னடப் பெண்கள் Cute; தெலுங்குப் பெண்கள் Attractive; தமிழ்ப் பெண்கள் Beautiful; இவை அனைத்தையும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் மலையாளப் பெண்கள்!

அப்படி என்ன அவர்களிடம் நமக்கு ஈர்ப்பு? யோசித்துப் பார்த்தால் ஏழெட்டு விஷயங்களைப் பட்டியலிடத் தோன்றுகிறது!

1) நிறம்: மலையாளப் பெண்கள் பொன்னிறம் கொண்டவர்கள். அவர்களிடம் இயற்கையிலேயே தோலில் ஒரு மினுமினுப்பு இருக்கிறது. எண்ணெய் தவிர்த்த, காரம் குறைத்த, தேங்காய் நிறைந்த‌ அவர்களின் உணவுப் பழக்கமும் கேரளத்தின் தட்ப வெப்பமும் நிலவியலும், ஒருவகையில் அவர்களின் கலாசாரமும் கூட‌ அதற்குக் காரணமாக இருக்கலாம். வட இந்தியப் பெண்களுக்குப் பொதுவாய் வெள்ளைத் தோல். நம்மவர்களுக்கு அவ்வளவு வெள்ளை பிடித்தமில்லை. அதனால் தான் இடைப்பட்ட பொன்னிறத்தைக் கொண்டாடுகிறார்கள். "உன் தங்க நிறத்துக்குத் தான் தமிழ் நாட்டை எழுதித் தரட்டுமா?" என்ற ரீதியிலேயே மலையாள நடிகைகளைத் தொடர்ச்சியாய் நாம் வெற்றி பெற வைத்துக் கொண்டிருக்கிறோம்.

2) தோற்றம்: மலையாளப் பெண்களின் தோற்றத்திற்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. குறிப்பாய் அவர்களின் கண்கள் மற்றும் கூந்தல். அப்படியே ஆளைத் தின்று விடும் கண்களும், அடர்த்தியும் நீளமும் ஒருசேரப் பெற்ற கூந்தலும்.

3) உடல்வாகு: தமிழர்களுக்கு ஒல்லியான பெண்களும் ஆகாது, குண்டான பெண்களும் பிடிக்காது. அவர்கள் விரும்புவது இரண்டுக்கும் மத்தியில் ஒன்று. பூசினாற்போல் இருக்க வேண்டும். தமிழகத்தில் வெற்றி பெற்ற நடிகைகளான குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா எல்லோரும் அப்படியான உடல்வாகு கொண்டவர்கள் தாம். சமீபத்தில் பரபரப்பான ஜிமிக்கி கம்மல் ஷெரில் கூட அப்படிப்பட்டவர் தான். மலையாளப் பெண்கள் பொதுவாய் இப்படியான உடல்வாகு கொண்டவர்களே.

4) மொழி: தமிழில் வலுவான சமஸ்கிருதக் கலப்பு நேர்ந்ததில் உருவானது மலையாளம். அம்மொழிக்கு இயற்கையிலேயே ஒரு லயம் (ஓசை நயம்) இருக்கிறது. அதை எழுதினால் Poetic; பேசினால் Musical. நம் தமிழில் எழுத்தின் ஒலி அளவை மாத்திரைகளால் அளவிடுவது போல் மலையாளத்தை மிட்டாய்களால் அளவிடுவார்கள் போலிருக்கிறது. அதனால் தான் மலையாளத்தை யார் பேசினாலும் அழகாக இருக்கிறது; மலையாளப் பெண்கள் என்ன‌ பேசினாலும் அழகாக இருக்கிறது.

5) உடல் மொழி: மலையாளப் பெண்டுகளுக்கு ஒரு பிரத்யேக‌ உடல் மொழி வாய்த்திருக்கிறது. மலையாளப் பெண்கள் சிறப்பாக நடனமாடக் கூடியவர்கள் அல்லர். சமீபத்தில் வைரலான ஜிமிக்கி கம்மல் பாடலில் கூட நடனம் அத்தனை சிறப்பானதோ சிரமமானதோ அல்ல. அதில் ஒரு குழந்தைத்தனம் தான் இருக்கிறது. இடுப்பில் செட்டு ஸாரியைச் இறுகச் செருகிய இளம் பெண்களிடம் அந்தக் குழந்தைத்தனம் வெளிப்படும் போது ஆட்டமே வசீகரமானதாய் மாறி விடுகிறது. It's a magic! 'அழகிய சூடான பூவே' பாடலில் வரும் கீர்த்தி சுரேஷின் நடன அசைவுகளையும் இதோடு ஒப்பு நோக்கலாம்.

6) முகபாவனை: மலையாளப் பெண்களின் முகபாவனைகள் - அதாவது Facial Expressions - பேரழகானவை. உதாரணமாய் அவர்கள் ஆச்சரியப்படுகையில் "அய்யடா!" எனப் பாவனை காட்டுவார்கள். அது அத்தனை அழகாய் இருக்கும். அதற்கு வீழாத தமிழனே இருக்க முடியாது. மலையாள மாந்த்ரீகம் என்று சொல்லப்படுவது கூட அது தானோ எனத் தோன்றும்.

7) அலங்காரம்: கண்களும் கூந்தலும் ஒட்டுமொத்த‌ மலையாளப் பெண்களின் அழகியல் தனித்துவம் எனச் சொன்னேன். அந்த இரண்டுக்கும் அவர்கள் பார்க்கும் பாங்கு அலாதியானது. கண்ணுக்கு மையிடாத, கூந்தலில் மலர் சூடாமல் வெளியே வரும் மலையாளப் பெண்களைக் காண்பதரிது. எப்போதும் தம்மை அழகாக வெளிப்படுத்தும் தன்முனைப்பு ஒன்று அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். சிறுவயது முதலே அவர்கள் கேட்கும் யட்சி கதைகள் அதற்குக் காரணமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மலையாளப் பெண்கள் உள்ளூரத் தங்களை ஒரு யட்சியாகக் கருதிக் கொள்கிறார்கள். தாம் அழகாக வெளிப்பட விரும்புகிறார்கள். அதற்கு உறுத்தாத அலங்காரத்தைக் கைகொள்கிறார்கள். தமக்குச் சரியாய்ப் பொருந்துவது எது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆடைத் தேர்வுகளிலும் இது புலனாகிறது.

8) சகஜத்தன்மை: இது நேரடியாய் அழகு தொடர்புடையதல்ல என்றாலும் மலையாளப் பெண்டிரின் மீதான ஈர்ப்புக்கு ஒரு முக்கியக் காரணியாக இருப்பதாகக் கருதுவதால் இதையும் பட்டியலில் சேர்க்கிறேன். மலையாளப் பெண்கள் அணுக எளிதானவர்கள். நேரம் கேட்டால் முறைத்துப் போகிறவர்கள் அல்ல. மேலோட்டமாகவேனும் வெளிப்படையானவர்கள். தவிர, உற்சாகமானவர்கள். அவர்களிடம் ஒரு தமிழ் ஆண் எளிதில் பேச, பழக, ஒன்ற முடிகிறது. அந்த நட்பார்ந்த உணர்வு அவர்களைப் பார்க்கையில் இயல்பாகவே வந்து விடுகிறது. ஓவியாவைப் பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம்.

ஏன் அப்படித் தமிழ் ஆண்கள் கேரளப் பெண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள்? முதல் காரணம் Geographical Vicinity. தமிழகத்துக்கு அருகில் இருக்கும் மாநிலம் கேரளம் தான். அதனால் அவர்களைப் பார்த்து 'அக்கரைப் பச்சை' என்ற எண்ணம் நமக்கு வர வாய்ப்பதிகம். நம் முறைப்பெண்ணை விட பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுப் பெண்கள் எப்போதும் வசீகரமானவர்களே!

அடுத்து கேரளாவின் பால் விகிதம் (Sex Ratio). அங்கே 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள். பரவலாக ஒருவனுக்கு ஒருத்தி என்பது நடைமுறையில் இருக்கிறது என்றும், கல்யாணம் செய்யாதவர்கள், பலதார மணம் செய்தவர்கள் இரண்டும் ஒன்றை ஒன்று சமன் செய்து விட்டது என்றும் வைத்துக் கொண்டால் ஆயிரத்துக்கு சுமார் 10% கேரளப் பெண்கள் வேளி மாநில ஆண்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும். ஆக, தமிழகத்தில் இருக்கும் கேரளப் பெண்கள் ஒருவகையில் Potential Brides என நம்மவர்கள் பார்க்கும் சாத்தியமுண்டு. அது உள்ளூர ஒரு கிளுகிளுப்பை ஊட்டி ஈர்ப்பையளிக்கும்.

மூன்றாவது காரணம் வரலாற்றுப்பூர்வமானது; உளவியல்ரீதியானது. மலையாளப் பெண்கள் சுமார் இருநூறு ஆண்டுகளாக தமிழகம் முழுக்கப் பரவலாக செவிலிகளாகப் (Nurses) பணிபுரிகிறார்கள். அவர்கள் மீது தாய்மைத்தன்மை பொருந்திய பிம்பத்தை அது தமிழர்கள் மத்தியில் ஊட்டி இருக்கும். ஆழ்மனதில் இருக்கும் அப்பிம்பத்தின் காரணமாக அவர்கள் மீது இயல்பாகவே ஒரு பிரேமை நமக்கு வந்து விடும். விநாயகர் தன் தாய்  பார்வதி போலவே தான் மனைவி எதிர்பார்த்தார் என்பதால் தான் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார் என்றொரு கதை நம்மூரில் உண்டு என்பதை இணைத்துப் பார்க்கலாம்.

இன்னொரு விஷயம் தமிழர்கள் மட்டுமே கேரளப் பெண்களே பேரழகு என நம்புவதாய்த் தோன்றுகிறது. இந்திய அளவில் அல்லது மற்ற மாநிலங்களில் அப்படி ஒரு நம்பிக்கை இருப்பதாய்த் தெரியவில்லை. விதிவிலக்குகள் தவிர்த்து பாலிவுட் சினிமாவில் மலையாள நடிகைகள் ஆதிக்கம் செலுத்தாததை ஆதாரமாகச் சொல்லலாம். ஆக, இது தமிழ் ரசனை மட்டுமே.

இறுதியாக, கேரளத்தை God's Own Country என்கிறார்கள். கடவுளின் தேசத்தில் தேவதைகள் திரிவது என்பது இயல்பு தானே!

***

Comments

Jegan said…
"உதாரணமாய் அவர்கள் ஆச்சரியப்படுகையில் "அய்யடா!" எனப் பாவனை காட்டுவார்கள். அது அத்தனை அழகாய் இருக்கும்."
உண்மை.. எனக்கு ஷெரிலை விட பக்கத்தில் இருக்கும் Annaவை ரொம்ப பிடிக்கிறது. நேர்காணல் காண்பவரின் க்ளிஷே கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லும் அந்த innocent smile, பல் தெரிய தலையாட்டும் விதம் அருமை.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்