இந்திய ஜனாதிபதி ரப்பர்ஸ்டாம்ப்பா?


மாதச் சம்பளம் ரூபாய் ஒன்றரை லகரம் (7வது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு கேபினெட் செக்கரட்டரியின் சம்பளம் இதை விட அதிகமாகிவிட்டது என்பதால் இதை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது). சம்பளம் போக செலவுக்காக ஆண்டுக்கு 22.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. வசிக்க தில்லியில் உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை. தவிர ஹைதராபாத்திலும் சிம்லாவிலும் ஓய்வெடுக்கும் மாளிகைகள். பயணம் செய்ய மெர்சிடெஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார். இத்தனையும் இந்திய ஜனாதிபதிக்கு மக்கள் வரிப்பணத்தில் அளிக்கப்படுகிறது. ஒரு ரப்பர் ஸ்டாம்ப்புக்கா இத்தனையும்?


எப்போதும் நாம் இந்திய ஜனாதிபதி என்பவரை ஒரு பொம்மையாக அல்லது ஒரு கோமாளியாகவே பார்த்துப் பழகி விட்டோம். கடந்த கால் நூற்றாண்டாக கேஆர் நாராயணன் போன்ற வலுவான ஆளுமை கொண்டோரும், அப்துல் கலாம் போன்ற துறைசார் பிரபலங்களும் வந்த போது மட்டும் அப்பதவியை லேசாய்க் கவனிப்போம். மற்றபடி அதை ஒரு ரப்பர்ஸ்டாம்ப் வேலை என்றே பாவிக்கிறோம். நம் மனதில் இருக்கும் பிம்பம் போல் அது நிஜமாகவே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி தானா?

உண்மையில் புதையல் காக்கும் பூதம் போல் நம் அரசியல் சாசனத்தின் பிரதானப் பாதுகாவலர் ஜனாதிபதி தான். சாசனத்தின் 60வது பிரிவு ஜனாதிபதி பதிவியேற்கும் போது சொல்ல வேண்டிய பிரமாணத்தைப் பேசுகிறது – “I will faithfully execute the office of President of India and will to the best of my ability preserve, protect and defend the Constitution…”.

அரசியல் சாசனப்படி நம் ஜனாதிபதி நவஅதிகாரங்கள் கொண்டவர். சட்டம், ஆட்சி, நீதி, நிதி, நியமனம், ராணுவம், வெளியுறவு, மன்னிப்பு மற்றும் அவசர நிலை.

ஜனாதிபதி தான் இந்தியாவின் முதல் குடிமகன். இந்திய யூனியனின் உச்ச ஆட்சி அதிகாரம் ஜனாதிபதியிடமே. அவர் தானாக அல்லது தன் பிரதிநிதிகள் மூலமாக அரசியல் சாசன வழிப்படி அதைச் செயல்படுத்த வேண்டும் [பிரிவு 53 (1)]. இந்திய யூனியனின் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி தான் [பிரிவு 53 (2)]. அந்நிய நாடு ஒன்றுடன் போரைத் துவக்கவும் முடிக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு. போர் தொடர்பான உடன்படிக்கைகள் ஜனாதிபதியின் பெயரிலேயே கையெழுத்தாகும்.

ஜனாதிபதி அனுமதியின்றி எந்த மாநிலப் பிரிவினை, சேர்க்கை அல்லது எல்லை மாற்றத்தைக் கொண்டு வர முடியாது [பிரிவு 3]. பிரதமரும், அவரது அமைச்சர்களும் ஜனாதிபதி சரியான முறையில் கடமையாற்ற உதவவும் அறிவுறுத்தவும் வேண்டும் [பிரிவு 74 (1)]. ஜனாதிபதி ரப்பர் ஸ்டாம்ப் என்று சொல்லப்படுவதன் காரணம் இதுவே.

ஆனால் இதில் கவனிக்க வேண்டியது ஜனாதிபதி தான் எடுக்கும் முடிவுக்குத் தானே முழுப் பொறுப்பு; அமைச்சர்களைக் கைகாட்ட முடியாது. நீதிமன்றங்களும் மத்திய அமைச்சர்களின் ஆலோசனைகளைக் கேள்வி கேட்க முடியாது [பிரிவு 74 (2)].

மத்திய அரசை அமைப்பதில் ஜனாதிபதியின் பங்கு முக்கியமானது. ஒருவரை மத்திய அமைச்சராய் ஆக்குவதை ஆராய்ந்து கேள்வி கேட்க அவருக்கு அதிகாரம் உண்டு. பிரதமரை ஜனாதிபதியே நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைப்படி ஜனாதிபதி அவரது அமைச்சரவையையும் நியமிப்பார் [பிரிவு 75 (1)]. ஜனாதிபதி விரும்பும் வரையிலும் தான் அமைச்சர்கள் தம் பதவியில் நீடிக்க முடியும் [பிரிவு 75 (2)]. ஜனாதிபதி முன் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் [பிரிவு 75 (4)].

மத்திய அரசு அரசியல் சாசனப்படி எல்லா விஷயங்களிலும் நடக்க, முடிவெடுக்க உருவாக்கப்பட்ட பதவியே அட்டர்னி ஜெனரல் என்பது. அவர் மத்திய அரசுக்கு சட்ட ஆலோசனைகள் நல்குவார். திறமையான மற்றும் நேர்மையான ஆசாமி ஒருவர் அப்பதவியில் இருந்தால் அவர் மத்திய அரசை சட்டரீதியாய் நெறிப்படுத்த இயலும். உதாரணமாய் சில மாதங்களுக்கு முன் அதிமுக பிளவு கண்டு தமிழக சட்டசபையில் ஆளும் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, அது எடப்பாடிக்கான Floor Test-ஆ அல்லது எடப்பாடியா ஓபிஎஸ்ஸா என்ற Composite Floor Test-ஆ என்ற குழப்பம் நிலவியது. கவர்னர் அதைத் தீர்க்க வேண்டும். இச்சூழலில் கவர்னர் என்ன செய்ய வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் அரசியல் சாசனம் மற்றும் பிற நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் வழிகாட்டியிருக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரை அட்டர்னி ஜெனரலாக ஜனாதிபதி நியமிப்பார் [பிரிவு 76 (1)]. அட்டர்னி ஜெனரலுக்கு சட்டப் பணிகளை ஜனாதிபதி கொடுக்கலாம் [பிரிவு 76 (2)]. ஜனாதிபதி விரும்பும் வரையிலும் தான் அட்டர்னி ஜெனரல் பதவியில் நீடிக்க முடியும். அவரது சம்பளத்தையும் அவரே தீர்மானிப்பார் [பிரிவு 76 (4)].

மத்திய அரசின் செயலாட்சியிலும் (Executive Functions) ஜனாதிபதி தலையிட முடியும். மத்திய அரசின் அத்தனை செயலாட்சி நடவடிக்கைகளும் ஜனாதிபதி பெயராலேயே எடுக்கப்படும் [பிரிவு 77 (1)]. அரசு எளிதாகச் செயல்படவும் அமைச்சர்களிடையே வேலைகளைப் பிரித்துக் கொள்ளவும் தேவையான விதிகளை ஜனாதிபதி உருவாக்க வேண்டும் [பிரிவு 77 (3)]. தாமாகவும், அவர் கேட்கும் போதும் ஆட்சி முடிவுகளையும், சட்ட முன்வரைவுகளையும் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டிய கடமை பிரதமருடையது [பிரிவு 78 (a) & 78 (b)]. அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் ஒரு அமைச்சரால் தனித்து எடுக்கப்பட்ட முடிவை ஜனாதிபதி கேட்டால், ஒட்டு மொத்த அமைச்சரவையின் பரிசீலனைக்கு பிரதமர் அனுப்பி வைக்க வேண்டும் [பிரிவு 78 (c)].


அவசியமெனக் கருதினால் பாராளுமன்றம் கூடுதலான செயலாட்சி அதிகாரங்களை ஜனாதிபதிக்கு அளிக்க முடியும் [பிரிவு 70]. இதன் நீட்சியாய் ஜனாதிபதி கூடுதலான செயலாட்சி அதிகாரங்களை மாநில ஆளுநருக்கு அளிக்க முடியும் [பிரிவு 160]

பாராளுமன்றத்திலும் கணிசமான அதிகாரம் (Legislative Powers) ஜனாதிபதிக்கு உண்டு. பிரிவு 79 பாராளுமன்றம் என்பதே ஜனாதிபதி, மக்களவை, மாநிலங்களவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது தான். மாநிலங்களவைக்கு ஜனாதிபதி இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை இவற்றில் சிறந்து விளங்கும் 12 உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் [பிரிவு 80 (1) (a) & 80 (3)]. மக்கட்தொகை கணக்கெடுப்பிற்குப் பின்னான மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு எப்போது அமலுக்கு வருகிறது என்ற தேதியை ஜனாதிபதி அறிவிப்பார் [பிரிவு 82]. பாராளுமன்ற அவைகளைத் தேவையெனக் கருதும் போது கூட்ட ஜனாதிபதிக்கு உரிமை உண்டு [பிரிவு 85 (1)].

பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடரை முடித்து வைக்கவும், அவற்றைக் கலைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு [பிரிவு 85 (2)]. ஜனாதிபதி பாராளுமன்ற இரு அவைகளையும் தனித்தனியாகவோ ஒன்று சேர்த்தோ அழைத்து உரையாற்ற உரிமை உண்டு [பிரிவு 86 (1)]. நிலுவையிலிருக்கும் ஒரு சட்ட வரைவு பற்றிக் கேட்டு பாராளுமன்ற அவைகளுக்கு ஜனாதிபதி தகவல் அனுப்ப முடியும் [பிரிவு 86 (2)]. ஆங்கிலோ இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் போதுமானதாய் இல்லை என ஜனாதிபதி கருதினால் அவர்கள் இரண்டு பேரை அவர் நியமிக்கலாம் [பிரிவு 331].

பொதுத்தேர்தலுக்குப் பிந்தைய முதல் கூட்டத்தின் போதும், ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் போதும் இரு அவைகளையும் கூட்டாக அழைத்து ஜனாதிபதி உரையாற்ற வேண்டும் [பிரிவு 87 (1)]. இது முக்கியமான அதிகாரம். இந்த உரைகள் பொதுவாய் மத்திய அரசின் கொள்கைகளை, பார்வைகளை விளக்குவதாக அமையும். அரசியல் சாசனப் பாதுகாவலரான ஜனாதிபதி வாயால் அது வெளிப்படுகையில் அவை யாவும் சாசனத்திற்கு உட்பட்டுத் தான் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (அதன் மூலம் வாக்களித்த பொது மக்களுக்கு) உத்திரவாதம் அளிக்கிறார். அதனால் அதில் தனக்கு மாற்றுக்கருத்து இருந்தால் ஜனாதிபதி மத்திய அரசுக்கு முன்கூட்டியே விரிவாகத் தெரிவித்து எச்சரிக்க முடியும். அதில் மாற்றங்கள் கொண்டு வர முடியும்.

மாநிலங்களவையில் துணை ஜனாதிபதி, துணை சபாநாயகர் இருவரும் இல்லாத போது அவைக்குத் தலைமை தாங்க வேண்டியவரை ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 91 (1)]. மக்களவையில் சபாநாயகர், துணைசபாநாயகர் இருவரும் இல்லாத போது அவைக்குத் தலைமை தாங்க வேண்டியவரை ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 95 (1)]. பாராளுமன்ற அவைகளுக்கு செயலக அலுவலர்களை நியமிக்க பாராளுமன்றம் விதிகளை உருவாக்கும் வரை அவ்விதிகளை மக்களவை சபாநாயகர், துணை ஜனாதிபதியுடன் ஆலோசனை செய்து ஜனாதிபதி உருவாக்கலாம் [பிரிவு 98 (3)]. மக்களவை சபாநாயகர், துணை ஜனாதிபதி ஆகியோருடன் ஆலோசித்து பாராளுமன்ற அவைகளைக் கூட்டாக நடத்துவது, அவைகளுக்கிடையேயான தொடர்புகொள்ளல் முறைகள் பற்றிய விதி முறைகளை ஜனாதிபதி உண்டாக்கலாம் [பிரிவு 118 (3)].

பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் ஜனாதிபதி முன்னிலையில் தான் பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும் [பிரிவு 99]. மக்களவை உறுப்பினராகவும் சட்ட சபை உறுப்பினராகவும் ஒருவர் ஒரே சமயத்தில் இருக்க முடியாது. சமஉ பதவியை அவர் முன்கூட்டியே ராஜினாமா செய்யவில்லை எனில் மக்களவை உறுப்பினர் பதவியை இழப்பார். இது தொடர்பான விதிகளை ஜனாதிபதியே உருவாக்குவார் [பிரிவு 101 (2)]. பாராளுமன்ற அவைகளில் உறுப்பினர் ஒருவர் தகுதிநீக்கம் செய்யப் பட்டால் அதில் ஜனாதிபதியின் முடிவே இறுதியானது. அவர் முடிவெடுக்கும் முன் தேர்தல் ஆணையத்தின் அலோசனையைப் பெற வேண்டும் [பிரிவு 103 (1) & 103 (2)].

பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டவரைவு (Bill) நிறைவேற்றப்படுவதிலும் நிராகரிப்படுதலிலும் ஜனாதிபதியின் பங்கு முக்கியமானது. நிதி சம்மந்தமானது தவிர (Money Bill) ஒரு சட்ட வரைவு பாராளுமன்றத்தின் ஒரு அவையில் அங்கீகரிக்கப்படு இன்னொரு அவையில் நிராகரிப்பட்டால் இரு அவைகளையும் கூட்டாக அழைத்துத் தீர்மானிக்கச் சொல்லும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு [பிரிவு 108 (1) & 108 (3)]. நிதி சம்மந்தமானது தவிர சட்ட வரைவு பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதை அவர் காத்திருப்பில் வைக்கலாம். அல்லது மாற்றங்கள் சிபாரிசு செய்து பாராளுமன்ற மறுபரிசீலனைக்கு அனுப்பலாம் [பிரிவு 111]. அப்படி அனுப்பப்பட்ட சட்ட வரைவு மாற்றங்களோடோ அஃதின்றியோ திரும்ப அவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால் அதை ஏற்க வேண்டும்.

உதாரணமாய் 2006ல் ஜனாதிபதியாய் இருந்த அப்துல் கலாம் சில அலுவலகங்களில் பதவி வகித்தால் பாராளுமன்ற உறுப்பினராய் இருக்க முடியாது என்ற சட்டத்தைத் தளர்த்தி சில அலுவலகங்களுக்கு விலக்கு அளித்து சட்ட வரைவை மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்தது. அது பாராளுமன்றத்தில் ஒப்புதல்பெற்று கலாமுக்கு அனுப்பப் பட்டது. அவர் அதைத் திருத்தச் சொல்லி திருப்பி அனுப்பினார். ஆனால் மன்மோகன் அரசு திருத்தம் இன்றி மீண்டும் அனுப்பியது. கலாம் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

இது மேலோட்டமாகக் கள்ள ஆட்டம் போலத் தோன்றினாலும், இரண்டு முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேண்டும். மக்களுக்கு நல்லதில்லை என்பதாய்த் தோன்றும் சட்டங்களை நிறைவேற்ற விடாமல் ஜனாதிபதியால் தாமதிக்கமுடியும். இன்னொன்று மறுபரிசீலனைக்குத் திரும்ப அனுப்புவதன் மூலமாய் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் மீண்டும் அந்த விஷயம் தொடர்பாய் சிந்திக்க வைக்க முடியும்.

அரசை நம்பவில்லை எனில் சட்ட வரைவைத் திருப்பி அனுப்பாமல் ஒப்புதலும் அளிக்காமல் வைத்திருப்பதே சிறந்த வழி. ஜனாதிபதி இத்தனை காலத்துக்குள் பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதன் மூலம் சட்ட வரைவை நிறுத்தி வைக்கலாம். இதற்கு Pocket Veto என்று பெயர். உதாரணமாய் 1986ல் ஜெயில் சிங் ஜனாதிபதியாக இருந்தபோது (அப்போது பிரதமர் ராஜீவ் காந்தி) அரசுக்கு கடிதங்களை இடையில் நிறுத்தி பாகுபாடாய் அவற்றைக் கையாள அதிகாரம் அளிக்கும் தபால் துறை தொடர்பான சட்ட வரைவு ஒன்று ஒப்புதலுக்காக அவரிடம் வந்தது. அவருக்கு அது சரியாய்ப்படவில்லை. அதனால் அதற்கு பதிலளிக்காமல் நிறுத்தி வைத்தார்.

ஆனால் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர முன்மொழியப்படும் சட்ட வரைவுகளை (Amemdment Bills) ஜனாதிபதி திருப்பி அனுப்ப முடியாது [பிரிவு 368 (2)]

நிதி தொடர்பான சட்ட வரைவுகளில் தான் ஜனாதிபதிக்கு உரிமை இல்லையே தவிர மத்திய அரசின் பிற முக்கிய நிதி விவகாரங்களில் அவரது கை உண்டு. ஆண்டு தோறும் நிதிநிலை அறிக்கையை (Annual Budget) ஜனாதிபதியே இரு அவைகளிலும் முன்வைக்க வேண்டும் [பிரிவு 112 (1)]. ஜனாதிபதியின் ஒப்புதல் இன்றி மானியக் கோரிக்கை (Demand for Grant) ஏதும் எழுப்ப முடியாது [பிரிவு 113 (3)]. சொல்லப்பட்டதை விட கூடுதல் மானியம் ஒரு நிதியாண்டில் வழங்கப்பட்டிருந்தால் ஜனாதிபதி அதை பாராளுமன்ற அவைகளில் முறையாய்த் தெரியப்படுத்த வேண்டும் [பிரிவு 115 (1)].

நிதி தொடர்பாய் மேலும் சில அதிகாரங்களும் அவருக்கு உண்டு. இந்திய எதிர்கால நிதி (Contingency Fund of India) ஒன்றை உருவாக்கி எதிர்பாராத செலவினங்களுக்கு அதை ஒதுக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு [பிரிவு 267]. பாராளுமன்ற அவைகளில் வரிகளில் மாற்றம் கொண்டு வரும் சட்டவரைவுகள் ஜனாதிபதியின் சிபாரிசுடன்தான் கொணர முடியும் [பிரிவு 274 (1)]. நிதி ஆணையத் (Finance Commission) தலைவரையும் உறுப்பினர்களையும் ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 280 (1)]. நிதி ஆணையத்தின் சிபாரிசுகளை பாராளுமன்ற அவைகளில் ஜனாதிபதியே முன்வைப்பார் [பிரிவு 281].

அவசரச் சட்டங்கள் (Ordinance) இயற்றுவதிலும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத போது தேவை இருப்பதாக உணர்ந்தால் ஜனாதிபதி அவசரச் சட்டங்கள் போடலாம் [பிரிவு 123 (1)]. அவசரச் சட்டங்களில் அரசியல் சாசனம் மீறப்படவில்லை என்பதை ஜனாதிபதி பரிசீலித்து உறுதி செய்ய வேண்டும். அதற்கான தார்மீகப் பொறுப்பு அவருடையது. ஆனால் அப்படியான ஜனாதிபதியால் போடப்பட்ட அவசரச் சட்டங்கள் யாவும் மீண்டும் பாராளுமன்றம் கூடிய ஆறு மாதத்துக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவசரச் சட்டங்களை எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதி திரும்பப் பெறலாம் [பிரிவு 123 (2) (b)].

இந்தியாவின் நீதித் துறையிலும் (Judiciary) ஜனாதிபதி அதிகாரம் செலுத்த முடியும். உச்சநீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 124 (2)]. உச்சநீதிமன்ற நீதிபதி தன் ராஜினாமாவைக் கைப்பட ஜனாதிபதிக்கே எழுத வேண்டும் [பிரிவு 124 (2) (a)]. உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் நியமிக்கப்படுவதற்கான தகுதிகளுள் ஒன்று அவரை ஒரு சிறந்த நீதிபதியாக ஜனாதிபதி கருத வேண்டும் [பிரிவு 124 (3) (c)]. உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் உத்தரவைப் பாராளுமன்ற அவைகளின் ஒப்புதலுக்குப் பின் ஜனாதிபதியே போட வேண்டும் [பிரிவு 124 (4)]. உச்சநீதிமன்ற நீதிபதி ஜனாதிபதி முன்னால் தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் [பிரிவு 124 (6)].

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இல்லாத சமயம் ஜனாதிபதி அவரது பணிகளைக் கவனிக்க மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரை நியமிக்கலாம் [பிரிவு 126]. ஓய்வு பெற்ற உச்சநீதிமற்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு எடுத்துக் கொள்ளச் செய்யலாம். அவர்களது சம்பளத்தையும் அதிகாரங்களையும் அவரே தீர்மானிப்பார் [பிரிவு 128]. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம் தில்லியில் அல்லது வேறு இடங்களில் நடக்கச் செய்யலாம். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அவசியம் [பிரிவு 130]. முக்கிய மக்கள் பிரச்சனைகளில் உச்சநீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி கோரலாம் [பிரிவு 143 (1)]. உச்சநீதிமன்றம் ஜனாதிபதி அனுமதியுடன் நீதிமன்ற நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரலாம் [பிரிவு 145 (1)]. உச்சநீதிமன்ற அலுவர்களின் சம்பளம், விடுமுறைகள் போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வர இந்திய ஜனாதிபதியின் ஒப்புதல் தேவை [பிரிவு 146 (2)].

சிஏஜி (CAG) என்றழைக்கப்படும் கம்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரலானது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் அரசுகள் நிதியளிக்கும் நிறுவனங்களின் செலவுகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பு. 2ஜி ஊழல், கோல்கேட் ஊழல் மாட்டுத் தீவன ஊழல் போன்ற முறைகேடுகளை சிஏஜி தான் கண்டறிந்தார்கள். ஜனாதிபதிக்கு இதன் செயல்களில் பங்குண்டு. சிஏஜியை ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 148 (1)]. சிஏஜி ஜனாதிபதி முன்னிலையில் தான் பதவிப் பிரமாணம் எடுப்பார் [பிரிவு 148 (2)]. தணிக்கை மற்றும் கணக்குத் துறை அலுவலர்கள் தொடர்பான விதிமுறைகளை ஜனாதிபதி சிஏஜியுடனான ஆலோசனையின் பேரில் உருவாக்க வேண்டும் [பிரிவு 148 (5)]. சிஏஜியின் ஆலோசனைப்படி ஜனாதிபதி எதிர்பார்க்கும் முறைகளில் மத்திய, மாநிலக் கணக்குகள் இருக்க வேண்டும் [பிரிவு 150]. சிஏஜி மத்திய அரசின் கணக்குகளை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதைப் பரிசீலித்து, பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சமர்ப்பிப்பார் [பிரிவு 151 (2)].

மாநில அளவிலும் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் உண்டு. ஆளுநர் அவர் அடியாள் தான். ஜனாதிபதியே மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பார் [பிரிவு 155]. ஜனாதிபதி விரும்பும் வரையிலும் ஆளுநர் பதவியில் தொடரலாம் [பிரிவு 156 (1)]. ஆளுநர் தன் ராஜினாமாவைக் கைப்பட ஜனாதிபதிக்கு எழுத வேண்டும் [பிரிவு 156 (2)]. ஓர் ஆளுநர் இரண்டு மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்டால், அவருக்கான சம்பளத்தில் அந்த இரு மாநிலங்களின் பங்கு என்ன என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார் பிரிவு [158 (3ஏ)].

மக்கட்தொகை கணக்கெடுப்பிற்குப் பின்னான சட்டசபைத் தொகுதிகள் மறுசீரமைப்பு எப்போது அமலுக்கு வருகிறது என்ற தேதியை ஜனாதிபதி அறிவிப்பார் [பிரிவு 170 (3)]. இரு மாநில சட்டசபைகளில் ஒருவர் ஒரேசமயத்தில் உறுப்பினராக இருக்கவியலாது. ஏதேனும் ஒரு சமஉ பதவியை அவர் முன்பே ராஜினாமா செய்யவில்லை எனில் இரு சட்டசபைகளிலும் உறுப்பினர் பதவியை இழப்பார். இது தொடர்பான விதிகளை ஜனாதிபதியே உருவாக்குகிறார் [பிரிவு 190 (2)]. இது பாராளுமன்றம் போன்றதே!

சட்டசபையில் (நிதி தொடர்பில்லாத) ஒரு சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால் அவர் அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் [பிரிவு 200]. ஜனாதிபதி திருத்தங்கள் சொல்லி மீண்டும் சட்டசபைக்கு அதை அனுப்பி வைத்தால் அவர்கள் பரிசீலித்து திருத்தங்களை ஏற்றோ ஏற்காமலோ மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் [பிரிவு 201]. மாநிலங்களுக்கு அவசரச் சட்டங்கள் ஆளுநர் கொண்டு வரும் போது ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் [பிரிவு 213 (1)].

மாநில அளவிலான நீதித் துறையிலும் ஜனாதிபதிக்குச் செல்வாக்குண்டு. ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியையும், மற்ற நீதிபதிகளையும் ஜனாதிபதி தான் தீர்மானிப்பார் [பிரிவு 216]. உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதியே நியமித்து உத்தரவிடுவார் [பிரிவு 217 (1)]. உயர்நீதிமன்ற நீதிபதி தன் ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கே கைப்பட எழுத வேண்டும் [பிரிவு 217 (1) (a)]. உயர்நீதிமன்ற நீதிபதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய முடியும் [பிரிவு 217 (1) (b)]. உயர்நீதிமன்ற நீதிபதியை ஜனாதிபதி உச்சநீதிமன்றத்துக்கோ பிற உயர்நீதிமன்றங்களுக்கோ இடமாற்றம் செய்ய முடியும் [பிரிவு 217 (1) (c) & 222 (1)]. உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது தொடர்பாய்க் கேள்விகள் எழுந்தால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் ஆலோசித்த பின் ஜனாதிபதி முடிவெடுக்கலாம் [பிரிவு 217 (3)]. உயர்நீதிமன்ற நீதிபதி இன்னொரு உயர்நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டால் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய கூடுதல் சம்பளம் பற்றி ஜனாதிபதி தீர்மானிப்பார் [பிரிவு 222 (2)]. உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இல்லாத சமயம் ஜனாதிபதி அவரது பணிகளைக் கவனிக்க மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரை நியமிக்கலாம் [பிரிவு 223]. உயர்நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் குவிந்தாலோ நிலுவையிலிருக்கும் வழக்குகள் அதிகரித்தாலோ கூடுதல் நீதிபதிகளைத் நியமிப்பது பற்றி ஜனாதிபதி முடிவெடுக்கலாம் [பிரிவு 224 (1)].

உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தம் பணிகளைச் செய்ய முடியாத சூழலில் ஜனாதிபதி அவரது பணிகளைக் கவனிக்க தற்காலிகமாக ஒரு நீதிபதியை நியமிக்கலாம் [பிரிவு 224 (2)]. ஓய்வு பெற்ற அம்மாநில அல்லது வெளிமாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு எடுத்துக் கொள்ளச் செய்யலாம். அவர்களது சம்பளத்தையும் அதிகாரங்களையும் அவரே தீர்மானிப்பார் [பிரிவு 224A].

மாநிலங்கள் மட்டுமின்றி யூனியன் பிரதேசங்களின் மீதும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. யூனியன் பிரதேசங்களை ஜனாதிபதியே ஒரு நிர்வாகியின் மூலம் ஆட்சி செய்ய வேண்டும் [பிரிவு 239 (1)]. ஒரு மாநில கவர்னரை அதன் அருகிருக்கும் ஒரு யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் ஜனாதிபதி நியமிக்கலாம் [பிரிவு 239 (2)].

தில்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் தனி சட்டசபை உண்டு என்பதால் அதில் ஜனாதிபதியின் அதிகாரங்களைத் தனியாக நம் அரசியல் சாசனம் பேசுகிறது. தில்லி யூனியன் பிரதேசச் சட்டசபையில் இயற்றும் சட்டத்தை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் [பிரிவு 239AA (3) (c)]. தில்லி துணை நிலை ஆளுநருக்கும், அமைச்சரவைக்கும் ஒரு விஷயத்தில் கருத்து ஒற்றுமை இல்லை எனில் ஜனாதிபதியிடம் அதை எடுத்துச் சென்று அவரது வழிகாட்டுதலைக் கோரலாம் [பிரிவு 239AA (4)]. தில்லி முதல்வரை ஜனாதிபதி நியமிப்பார். முதல்வர் ஆலோசனைப் படி அவரது அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார். ஜனாதிபதி விரும்பும் வரை அவர்கள் பதவியில் நீடிக்கலாம் [பிரிவு 239AA (5)]. ஜனாதிபதிக்கு தில்லி யூனியன் பிரதேச அரசு சரியாகச் செயல்படவில்லை எனத் தீர்மானமாக நம்ப இடமிருந்தால் அவர் அந்த அரசின் அதிகாரங்களை நீக்கலாம் [பிரிவு 239AB]. புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடர் நடக்காத போது ஜனாதிபதி அனுமதியுடன் தற்காலிகச் சட்டம் இயற்றலாம் [பிரிவு 239B (1)]. ஜனாதிபதி உத்தரவின் பேரில் அந்தத் தற்காலிகச் சட்டம் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் [பிரிவு 239B (2) (b)].

ஜனாதிபதி அந்தமான் & நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா & நாகர் ஹவேலி, டாமன் & டியூ, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் அமைதி, முன்னேற்றம், நல்லாட்சியை உறுதி செய்ய விதிமுறைகளைக் கொண்டு வரலாம் [பிரிவு 240 (1)]. மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்க்க அவசியமெனில் மாநிலங்களின் மன்றத்தை (Interstate Council) அமைக்க நமது ஜனாதிபதிக்கு உரிமையுண்டு [பிரிவு 263].

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணியாளர்களையும் மேலும் சில மத்திய அரசு அலுவலர்களையும் தேர்வு செய்யும் பொறுப்பு யூபிஎஸ்சி என்ற மத்திய பொதுப் பணி ஆணையத்தினுடையது (Union Public Service Commission). ஜனாதிபதி அனுமதியுடன் ஆளுநர் கோரிக்கை விடுத்தால் மாநிலத் தேவைகளையும் யூபிஎஸ்சி கவனிக்கலாம். [பிரிவு 315 (4)]. யூபிஎஸ்சியின் தலைவர் உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 316 (1)]. யூபிஎஸ்சியின் தலைவர் இல்லாத போது அவரது பணிகளைக் கவனிக்க உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கலாம் [பிரிவு 316 (1A)]. யூபிஎஸ்சி உறுப்பினர் தன் பதவி விலகலைக் கைப்பட ஜனாதிபதிக்கு எழுத வேண்டும் [பிரிவு 316 (2) (a)]. யூபிஎஸ்சி உறுப்பினரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு [பிரிவு 317 (1)]. யூபிஎஸ்சி உறுப்பினர் எண்ணிக்கை, பணிகளை காலத்திற்கேற்பத் தீர்மானிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு [பிரிவு 318]. யூபிஎஸ்சி தன் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு அளிக்க வேண்டும் [பிரிவு 323 (1)].

இந்தியாவின் விதியை நிர்ணயிப்பவை தேர்தல்கள் தாம். அதை நடத்துவது தேர்தல் ஆணையம் (Election Commission). அதிலும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. தலைமைத் தேர்தல் ஆணையரையும் பிற தேர்தல் ஆணையர்களையும் ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 324 (2)]. மண்டலத் தேர்தல் ஆணையர்களையும் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நியமிப்பார் [பிரிவு 324 (4)]. தேர்தல் ஆணையம் கேட்டால் அலுவலர்களை ஜனாதிபதி ஏற்பாடு செய்ய வேண்டும் [பிரிவு 324 (6).]

பட்டியலின மற்றும் பழங்குடியின நலனைப் பாதுகாக்க தேசிய ஆணையங்கள் உண்டு. அவை ஜனாதிபதியின் நேரடிப் பார்வையில் இயங்குபவை. பட்டியலின ஆணையத்தின் (Scheduled Castes Commission) உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் பணிகளை ஜனாதிபதியே தீர்மானிப்பார் [பிரிவு 338 (2)] பட்டியலின ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதியே தீர்மானிப்பார். [பிரிவு 338 (3)]. பட்டியலின ஆணையத்தின் செயல்பாடுகளை ஆண்டுதோறும் அறிக்கையாக்கி ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்க வேண்டும் [பிரிவு 338 (5) (d)]. பட்டியலின ஆணையத்தின் அறிக்கையை முன்வைத்து செய்யப்பட்ட நடவடிக்கைகளை பாராளுமன்ற அவைகளின் முன் ஜனாதிபதி வைக்க வேண்டும் [பிரிவு 338 (6)].

பழங்குடியின ஆணையத்தின் (Scheduled Tribes Commission) உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் பணிகளை ஜனாதிபதியே தீர்மானிப்பார் [பிரிவு 338A (2)]. ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதியே தீர்மானிப்பார் [பிரிவு 338A (3)]. பழங்குடியின ஆணையத்தின் செயல்பாடுகளை ஆண்டுதோறும் அறிக்கையாக்கி ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்க வேண்டும் [பிரிவு 338A (5) (d)]. அந்த அறிக்கையை முன்வைத்து செய்யப்பட்ட நடவடிக்கைகளை பாராளுமன்ற இரண்டு அவைகளின் முன் இந்திய யூனியனின் ஜனாதிபதி வைக்க வேண்டும் [பிரிவு 338A (6)].

சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து சிபாரிசு அளிக்கும் ஓர் ஆணையத்தை ஜனாதிபதி அமைக்க முடியும் [பிரிவு 340 (1)]. அந்த அறிக்கையை முன்வைத்து எடுக்கட்ட நடவடிக்கைகளை பாராளுமன்ற அவைகளில் பாரத நாட்டின் ஜனாதிபதி சமர்ப்பிப்பார் [பிரிவு 340 (3)].

ஆளுநரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒரு மாநிலத்தின் பட்டியலின மற்றும் பழங்குடியினச் சாதிகளை ஜனாதிபதி அறிவிப்பார் [பிரிவு 341 (1) & 342 (1)]. மொழிச் சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார் [பிரிவு 350B (1)]. சீரான இடைவெளிகளின் மொழிச் சிறுபான்மையினர் பிரச்சனைகளை ஜனாதிபதிக்கு இந்தச் சிறப்பு அலுவலர் அறிக்கையாகத் தயாரித்து அளிக்க வேண்டும். ஜனாதிபதி அதை பாராளுமன்ற இரு அவைகளின் முன் வைப்பார் [பிரிவு 350B (2)].

இங்கே அமைப்பு வைத்திருக்கும் இந்தியக் குடிமகனல்லாத எவரும் ஜனாதிபதியின் அனுமதியின்றி வெளிநாட்டு அரசுகளிடமிருந்து எந்தப் பட்டத்தையும் ஏற்கக்கூடாது [பிரிவு 18 (3)]. அவர்கள் ஜனாதிபதியின் ஒப்புதலின்றி அந்நிய அரசுகளிடமிருந்து எந்த வடிவத்திலும் நிதி உதவியும் ஏற்கக்கூடாது [பிரிவு 18 (4)]. தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை மன்னிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு [பிரிவு 72 (1)]. உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்யப் பெற்றவர்களையும், ராணுவ நீதிமன்றங்களில் தண்டனை பெற்றவர்களையும் அவர் மன்னித்து விடுவிக்கலாம். இதில் பிரதமர் அல்லது மக்களவை அங்கீகாரம் எல்லாம் தலையிட முடியாது.

அடுத்து வரவிருப்பது தான் ஜனாதிபதியின் பிரம்மாஸ்திரம். ஜனாதிபதியே இந்திய அரசியல் சாசனப்படி அதிகாரத்தின் உச்ச பீடம் என நிரூபிக்கும் பிரிவுகள். தொடர்ந்து பல முறை சர்ச்சைக்குள்ளானதும் பிரச்சனைக்குள்ளானதுமான சில அதிகாரங்கள். இந்தியாவில் அசாதாரணச் சூழல் நிலவுகிறதென ஜனாதிபதி நம்பினால் அவர் தேசம் முழுமைக்கோ குறிப்பிட்ட பகுதிக்கோ அவசர நிலைப் பிரகடனத்தைக் கொண்டு வர முடியும் [பிரிவு 352 (1)]. 1962 சீனாவுடனான யுத்தத்தின் போதும் 1971 பாகிஸ்தான் உடனான போரின் போதும் இந்தியாவில் அவசர நிலை கொண்டு வரப்பட்டது என்றாலும் மிகப் பிரபலமானது 1975ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலைப் பிரகடனம் தான். ஏன் அதை இந்திரா கொண்டு வந்தது என்கிறோம்? ஏன் அன்றைய ஜனாதிபதியான ஃபக்ருதின் அலி அஹமத் கொண்டு வந்தது என சொல்லவில்லை? அன்று அவசர நிலைப்பிரகடனத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஃபக்ருதின் தான். ஆனால் மத்திய கேபினெட்டின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இருந்தால் தான் ஜனாதிபதி அவசர நிலையைக் கொண்டு வர முடியும் [பிரிவு 352 (3)]. அதனால் இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்ஸி என்கிறோம்.

கவனிக்க வேண்டியது மத்திய அரசு விரும்பினாலும் ஜனாதிபதி அவசர நிலையைக் கொண்டு வருவதை எதிர்க்க முடியும்; பிரகடனத்தில் கையெழுத்திட மறுக்கலாம். மக்களவையும் அவசர நிலையை ஏற்க வேண்டும். மக்களவை அங்கீகரிக்கவில்லை எனில் அந்தப் பிரகடனத்தை ஜனாதிபதி திருப்பிப் பெற முடியும் [பிரிவு 352 (7)]. அவசர நிலைப் பிரகடனம் அமலில் இருக்கும் போது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது என்பதை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். [பிரிவு 359 (1)]. பிரிவு 21 சொல்லும் வாழ்வதற்கான உரிமை (Right to life or personal liberty) மட்டும் மிஞ்சும்.

அவசர நிலையின் போது ஜனாதிபதி மாநிலப் பட்டியலில் 66 விஷயங்களில் (Subjects) சட்டங்கள் கொண்டு வரலாம். நிதி தொடர்புடைய சட்ட வரைவுகளை ஜனாதிபதி அங்கீகரிக்கலாம். மக்களவை பதவி காலத்தை ஓராண்டு வரையிலும் நீட்டிக்கலாம்.

இதைப் போலவே ஜனாதிபதிக்கு இருக்கும் இன்னொரு பெரும் அதிகாரம் மாநில அரசைக் கலைக்கும் உரிமை. ஆளுநர் அறிக்கைப்படி ஒரு மாநிலத்தில் அசாதாரணச் சூழல் நிலவுகிறதென ஜனாதிபதி ஏற்றால் அங்கு சட்டசபையைக் கலைக்கலாம் [பிரிவு 356 (1)]. ஆட்சியைக் கலைத்த பிறகு மாநிலத்தின் அதிகாரத்தை பாராளுமன்ற ஒப்புதலின் படி ஜனாதிபதி எடுத்துக் கொள்ளலாம் [பிரிவு 357 (1)]. அரசியல் சாசன வழிகாட்டலின்படி மத்திய அரசு சொல்லும் திசையில் மாநில அரசு செயல்பட வில்லை என்றால் ஜனாதிபதி ஒரு மாநில அரசைக் கலைக்கலாம் [பிரிவு 365].

நாட்டில் நிதி வசதி அடிப்படையில் ஸ்திரமற்ற தன்மை நிலவினால் ஜனாதிபதி பொருளாதார அவசர நிலைப் பிரகடனத்தைக் கொண்டு வரலாம் [பிரிவு 360 (1)]. உதாரணமாய் சென்ற ஆண்டு பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது நாட்டில் மக்கள் சந்தித்த பொருளாதாரச் சிக்கல்களை முன்வைத்து அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பொருளாதார அவசர நிலையைக் கொண்டு வந்திருக்க முடியும்.

பொருளாதார அவரச நிலைப் பிரகடனம் இதுவரையிலும் அறிவிக்கப்பட்டதில்லை.

ஜனாதிபதிக்கு சில சிறப்பு விலக்குகள் உண்டு. தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதில், கடமையைச் நிறைவேற்றுவதில் ஜனாதிபதி எந்த நீதிமன்றத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவர் அல்லர் [பிரிவு 361 (1)]. பதிவியிலிருக்கும் போது ஜனாதிபதியின் மீது கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்த முடியாது [பிரிவு 361 (2)]. பதவியிலிருக்கும் போது ஜனாதிபதியைக் கைது செய்ய முடியாது [பிரிவு 361 (3)]. பதவியிலிருக்கும் போது ஜனாதிபதியின் மீது எந்தக் குடிமை வழக்குகளும் பதிய முடியாது [பிரிவு 361 (4)].


ஆக, ஜனாதிபதிக்கு உண்மையில் பல அதிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் அதைப் பயன்படுத்துவதும் செய்யாததும் அவர் கைகளில் தான் இருக்கிறது. கணிசமான ஜனாதிபதிகள் மத்திய அரசின் கைப்பாவைகளாக இருப்பதைத் தான் காண்கிறோம். ஒன்று தனக்கு அந்தப் பதவியை அளித்த நன்றியுணர்வுக்காக; அல்லது இரண்டாம் முறை தான் ஜனாதிபதி தேர்தலில் நிற்க மத்திய அரசும் பிற கட்சிகளும் ஆதரவாய் இருக்க வேண்டும் என்பதற்காக. அப்படியானவர்களின் செயலின்மையால் தான் ஜனாதிபதி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று பரவலாய்க் கருதப்படுகிறது. அதனாலேயே ஜனாதிபதி தேர்தல் நடப்பதையும், அதில் பங்கேற்போரையும், அதன் முடிவுகளையும் மக்கள் மட்டுமல்ல; ஊடகங்களுமே ஆர்வமாய்க் கவனிப்பதில்லை.

செயலின்மை என்பது தாண்டி அரசியல் சாசனத்தில் 356வது பிரிவைப் பயன்படுத்தி மாநில ஆட்சிகளைக் கலைப்பதில் மத்திய அரசுகளின் அரசியல் ரீதியான காய் நகர்த்தல்களுக்கு உறுதுணையாய் ஜனாதிபதிகள் இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மை இருந்தும் 1977 மற்றும் 1991 என இருமுறை அப்படிக் கலைக்கப்பட்டிருக்கிறது. எம்ஜிஆர் (1980) மற்றும் ஜானகியின் (1989) அரசுகளும் கலைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது தமிழகத்தில் தேர்தல் வந்தால் பிஜேபி ஜெயிப்பது போல் இருந்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமி அரசைத் தாட்சண்யமின்றி இந்நேரம் கலைத்திருப்பார்கள். மத்திய - மாநில அரசு உறவு மேம்பட உண்டாக்கப்பட்ட சக்கரியா கமிஷன் இப்படி ஜனாதிபதிகள் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதைச் சுட்டி இருக்கிறது.

நாம் வாழும் காலத்தில் கேஆர் நாராயணனை ஓரளவு துடிப்பாய்ச் செயல்பட்ட ஜனாதிபதி என்று சொல்ல முடிகிறது. அப்பதவியின் எல்லைகள் வரை சென்று தன் அதிகாரங்களை ஓரளவு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அப்படியான ஒருவர் மத்திய அரசுக்குக் குடைச்சல் கொடுப்பவராகவே இருக்க முடியும்.

அதனால் தான் இப்போது அரசுக்குத் தலையாட்டுபவர்களே ஜனாதிபதி ஆகிறார்கள்!

***

(உயிர்மை - ஆகஸ்ட் 2017 இதழில் வெளியானது) 

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்