இந்தியா மதச் சார்பற்ற நாடா?


“Hindus, Muslims, Parsis, Christians, all are Indians. Religion is a private matter.”
- Mahatma Gandhi (Delhi in his prayer meeting, July 15, 1947)

2015 குடியரசு தினத்தை ஒட்டி மோடி தலைமையிலான மத்திய அரசின் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தில் இந்திய அரசியல் சாசன முகப்புரையின் (Preamble) புகைப்படம் இடம் பெற்றது. அதில் ‘Secular’, ‘Socialist’ ஆகிய சொற்களைக் காணவில்லை. இந்தியாவை இந்துத்துவ, முதலாளித்துவ நாடாக முன்வைக்கும் உள்நோக்கோடு தான் அந்த விடுபடலை மத்திய அரசு செய்தது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தியா குடியரசு ஆன போது எழுதப்பட்ட அரசியல் சாசனத்தின் முகப்புரை அது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமாளித்தார்.


ஆனால் அதிலுமே உள்நோக்கு இருந்தது - அதாவது அக்காலத்தே இந்தியா Secular, Socialist நாடு கிடையாது என்கிறார். அக்கூற்று உண்மையா? அதைப் பாதி உண்மை என்று சொல்லலாம். ஆனால் பாதி உண்மை முழுப் பொய்யை விட ஆபத்தானது.

இந்தியா மதச்சார்பற்ற நாடா? என்ற கேள்வி மறைமுகமாக மறுபடி மறுபடி நம் தேசக் குடிமக்களின் மனங்களில் எழுகிறது. அதற்கு விடை தேடும் முயற்சி இது.

*

‘மதச்சார்பின்மை’ என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்லான ‘Secular’ என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி “Not connected with religious or spiritual matters” என்று பொருள் சொல்கிறது. அதாவது “மதத்துடனோ, ஆன்மீகத்துடனோ தொடர்பற்ற” என்ற அர்த்தம். பொருள்முதல்வாதத்தை ஒட்டிய ‘Saeculum’ என்ற லத்தீன் சொல் தான் இதன் வேர்.

சமகால அரசியல் சூழமைவில் எந்த ஒரு மதத்தோடும், மத நிறுவனத்தோடும் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளாத ஓர் அரசைக் குறிக்க ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இன்று பெரும்பாலான நாடுகள் அதிகாரப்பூர்வமாக ஏதேனும் ஒரு மதத்தைப் பின்பற்றுபவை. காரணம் எளிமையானது அந்நாடுகளில் பெரும்பான்மை அல்லது முழுக்கவே அந்த மதத்தினர் தான் பிரஜைகளாக இருப்பர்.

உதாரணமாய் இங்கிலாந்து முதலான பல அதிகாரப்பூர்வமாக கிறிஸ்துவ நாடுகள். பாகிஸ்தான் உள்ளிட்ட பல அதிகாரப்பூர்வமாக இஸ்லாமிய நாடுகள். கம்போடியா போன்ற சில அதிகாரப்பூர்வமாக புத்த மத நாடுகள். இஸ்ரேல் யூத நாடு. இந்து நாடு என்ற ஒன்று இன்றைய தேதியில் இந்தப் பூமியில் கிடையாது. (2008 வரை நேபாளம் இருந்தது. இப்போது அதுவும் மதச்சார்பற்ற நாடு.) அதைப் போல அதிகாரப்பூர்வமாக எந்த மதச்சார்பும் இல்லாத நாடுகளும் உண்டு. இந்தியா அதில் முதன்மையானது.

மதச்சார்பற்ற நிலைப்பாட்டை “எந்த மதத்தையும் நெருங்காத” என்று வர்ணிப்பதை விட “எல்லா மதங்களையும் அரவணைத்துப் போகக்கூடிய” என்று சொல்வது தான் இன்றைய யதார்த்தத்திற்கு நெருக்கமானது. இந்தியாவும் அப்படி இருக்க வேண்டும் என்பதே நமது அரசியல் சாசனத்தை வகுத்தளித்த முன்னோடிகளின் எண்ணமும்.

“மதச்சார்பற்ற” நிலைப்பாடு குறித்து இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்கிறது?

நம் இந்திய அரசியல் சாசனத்துக்கு Preamble ஒன்று உண்டு. அதாவது முகப்புரை. சாசனத்தின் சாரமாய் அதைக் கொள்ளலாம். 1973ல் நடந்த கேசவானந்த பாரதிக்கும் கேரள மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி இந்த முகப்புரையும் சாசனத்தின் பகுதியாகவே கருதப்படுகிறது. 1949ல் முதன் முதலில் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது முகப்புரையில் ‘Secular’ என்ற சொல் இடம்பெறவில்லை. அது இந்தியாவை “Sovereign Democratic Republic” என்று வர்ணித்தது. அதாவது இறையாண்மை வாய்ந்த மக்காளாட்சிக் குடியரசு!

சுதந்திரத்தை ஒட்டி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பொருட்டு அமைக்கப் பட்ட அரசியல் நிர்ணய சபையில் ‘Secular’ என்ற சொல்லை சாசனத்தில் சேர்க்க வேண்டும் எனப் பலரும் பல முறை கோரிக்கை எழுப்பினர். (பதிவு செய்யப்பட்ட சபை விவாதங்களில் ‘Secular’ என்ற சொல் 67 முறை வருகிறது.) ஆனால் அம்பேத்கர் அவற்றை நிராகரித்தார். நேருவும் அதை ஏற்றார். அதற்குக் காரணம் இருந்தது.

அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது பீகாரைச் சேர்ந்த பேராசிரியர் கே.டி. ஷா - லண்டனில் பொருளாதாரம் பயின்றவர், பிற்பாடு 1952ம் ஆண்டு ராஜேந்திர பிரசாத்திற்கு எதிராக முதல் ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர் - மூன்று முறை இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 15 நவம்பர் 1948 அன்று ‘Secular Federal Socialist’ ஆகிய சொற்களைச் சாசனத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர், “நாம் தொடர்ந்து பல காலமாக, பல தளங்களிலும் நம்முடையது மதச்சார்பற்ற அரசு என்று சொல்லி வருகிறோம். அது உண்மை எனில் பிற்காலத்தில் நேரக்கூடிய எந்த ஒரு தவறான புரிதலையும் தவிர்க்கும் பொருட்டு ‘Secular’ என்ற சொல்லை நாம் ஏன் சாசனத்தில் சேர்க்கக்கூடாது?” எனக் கேட்டார்.

அவரது கோரிக்கை அதற்கு ஓராண்டு முன் பிரிவினையின் போது வகுப்புவாதத்தை முன்னிட்டு நடந்த கலவரங்களை ஒட்டிஎழுந்த நியாயமான கவலையின் பாற்பட்டது.

அதை மறுத்துப் பேசிய அம்பேத்கர், ‘Socialist’ என்ற சொல்லை ஏன் சேர்க்கக்கூடாது என்பதற்கான தன் தர்க்கத்தை மட்டும் முன்வைத்து ‘Secular’ என்ற சொல் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விட்டார். வாக்கெடுப்பில் அத்தீர்மானம் தோல்வியுற்றது.

அம்பேத்கர் அரசியல் சாசனத்தை அரசின் பல்வேறு உறுப்புகள் ஒழுங்காய்ச் செயல் பட வழிகாட்டும் ஒரு கருவியாகவே பார்த்தார். அரசு பின்பற்ற வேண்டிய அரசியல் சித்தாந்தம் என்ன என்பதை சாசனம் சொல்ல வேண்டும் என அவர் கருதவில்லை. அரசின் கொள்கைகள், சமூக, பொருளாதார நிலைப்பாடுகள் எல்லாம் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றாற் போல் மக்களே தீர்மானிக்க வேண்டும், அவற்றைச் சாசனத்தில் சேர்த்தால் அது மக்களாட்சியை ஒட்டுமொத்தமாக அழித்து விடும் எனக் கருதினார். இன்று சோஷியலிஸம் நல்ல விஷயமாகப்படுவது போல் நாளை முதலாளித்துவம் நல்ல கருத்தியலாக மக்களுக்குத் தோன்றலாம். அப்போது மாறிக் கொண்டு அதைப் பின்பற்றுவதற்கான வசதியை சாசனம் அளிக்க வேண்டும் என அவர் நினைத்தார்.

அதனாலேயே அம்பேத்கர் ‘Socialist’ என்ற சொல்லை சாசனத்தில் சேர்க்க இணங்க வில்லை. அதற்கு இன்னொரு காரணமும் சொன்னார். அது தேவையற்ற மிகை நடவடிக்கை (Superflueous) என நினைத்தார். அதாவது பிரிவு 31 உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் (Fundamental Rights), அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் (Directive Principles of State Policy) இவற்றின் மூலம் சோஷியலிஸத்தை ஏற்கனவே சாசனத்தில் கொண்டு வந்தாயிற்று. அச்சொல்லை வெளிப்படையாகச் சேர்ப்பதன் மூலமே அவ்வியல்பைக் கொண்டு வர வேண்டும் என்ற அவசியமில்லை எனக் கருதினார். இந்தக் காரணத்தை ‘Secular’ என்பதற்கும் நீட்டித்துப் பார்க்கலாம்.

நேருவுக்கும் ‘Secular’ என்பதைச் சாசனத்தில் சேர்ப்பதில் விருப்பம் இருக்கவில்லை.

ஆகஸ்ட் 12, 1949 அன்று ‘Secular’ என்ற சொல்லைச் சாசனத்தில் சேர்ப்பது பற்றிய விவாதத்தில் சற்று கடுமையாகவே எதிர்வினையாற்றுகிறார் நேரு - “இங்கே ஒரு சொல் பல முறை முன்வைக்கப்படுகிறது. அதற்கு என் பலமான எதிர்ப்பைப் பதிய விரும்புகிறேன். இந்த அவை அச்சொல்லைக் கவனமாக ஆராய வேண்டும். இந்த அரசு பாகிஸ்தானை, இஸ்லாமியர்களை, அதை, இதை என ஆற்றுப்படுத்தப் போகிறதா? அச்சொல்லின் பொருள் என்ன எனத் தெளிவாக அறிய விரும்புகிறேன்.”

தொடர்ந்து “அந்த வார்த்தையை இங்கு அடிக்கடி பயன்படுத்தும் கனவான்களிடம் நான் பணிவுடன் கெஞ்சிக் கேட்பது, அதனைப் பயன்படுத்தும் முன் ஏதாவது ஓர் அகராதியைப் புரட்டிப் பாருங்கள் என்பதே. ஒவ்வொரு கட்டத்திலும் அது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. எனக்கு அது புரியவில்லை. அதற்குப் பெரும் முக்கியத்துவம் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது (சாசனத்தில்) தொடர்புடைய எல்லா இடங்களிலும் (மறைமுகமாகக்) கொண்டு வரப்பட்டு விட்டது. அதைத் தாண்டி நாம் மதச்சார்பற்ற அரசு என்று (வெளிப்படையாகச்) சொல்லிக் கொள்வதன் மூலம் இந்த உலகிற்கு எதை அளிக்க முயல்கிறோம்?” என்றார்.

அப்படி ஏற்கனவே சாசனத்தில் மதச்சார்பின்மை பயின்று வரும் இடங்கள் எவை?

அரசியல் சாசனத்தின் 15(1), 15(2)வது பிரிவுகள் எந்த விஷயத்திலும் மதரீதியாகப் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது. 16(2)வது பிரிவு குறிப்பாய் அரசு வேலை வாய்ப்புகளில் மதிரீதிப் பாகுபாடு கூடாது என்கிறது. 23(1)வது பிரிவு கட்டாயப் பொதுச்சேவையில் மக்களை ஈடுபடுத்துவதற்கு அரசுக்கு உரிமை உண்டு என்று சொல்லும் போது அதிலும் மத அடிப்படையிலான பாகுபாடு கூடாது என்கிறது.

தனி மனிதர்களின் மதச் சுதந்திர உரிமைகளை 25(1)வது பிரிவு பேசுகிறது. அதாவது யாரும் எந்த மதத்தையும் நம்பவும், பின்பற்றவும், பரப்பவும் செய்யலாம். எந்த மதமும் தனக்கான அமைப்புகளை ஏற்படுத்துதல், அவற்றுக்கான சொத்துக்களைச் சேர்த்தல், நிர்வகித்தல் போன்றவற்றுக்குச் சுதந்திரத்தை அளிப்பது பிரிவு 26. மதத்தை நிர்வகிக்கும், பரப்பும் செலவுகளுக்கு வரிவிதிப்பு கூடாது எனப் பிரிவு 27 சொல்கிறது.

அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் எந்த மதப் போதனைகளும் நடக்கக்கூடாது என்கிறது 28(1)வது பிரிவு. (மதத்தைப் போதிக்கும் கல்வி நிலையங்களுக்கு அரசுப் பணத்தை செலவழிக்கக்கூடாது என்றும் கொள்ளலாம்.) 28(3)வது பிரிவு அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்தில் படிக்கும் எவரும் அந்நிறுவனம் நடத்தும் மத வழிபாடுகளில் அல்லது நடவடிக்கைகளில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறது. அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் இடம் மறுக்கப்படக்கூடாது என்கிறது பிரிவு 29(2). சிறுபான்மையினர் தமக்கான கல்வி நிறுவனங்களை அமைக்கவும், நிர்வகிக்கவும் உரிமை உண்டு என்கிறது பிரிவு 30(1). கல்வி நிறுவனங்களுக்கு உதவி அளிப்பதில் அதை நிர்வகிப்பது சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் பாகுபாடு கூடாது என்கிறது 30(2)வது பிரிவு.

மதங்கள் தாண்டிய இணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பரப்புவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை எனப் பிரிவு 51A(e) வரையறுக்கிறது. சட்டசபை, மக்களவைத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் மத அடிப்படையில் எவரும் விடுபடக்கூடாது என்பது 325வது பிரிவு. இப்படி அரசியல் சாசனம் முழுவதும் மதச் சுந்திரமும், மதச் சமத்துவமும், மதப்பாகுபாடின்மையும் உறுதி செய்யப்படுகிறது.

இவை போக முகப்புரையில் Justice, Liberty, Fraternity, Equality ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது அரசு அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி வழங்க வேண்டும்; சிந்தை, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு - இவற்றில் சுதந்திரம் தர வேண்டும்; படிநிலையிலும், வாய்ப்பிலும் சமத்துவம் பேண வேண்டும்; (குடிமக்களிடம்) தனிமனித கண்ணியத்தையும், தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உறுதி செய்து சகோதரத்துவத்தைப் பரப்ப வேண்டும்.

ஆக, தனியாய் அச்சொல்லைச் சேர்ப்பது அவசியமற்றது என அம்பேத்ரும் நேருவும் நினைத்தார்கள். அச்சொல்லைச் சேர்க்கத் தயங்க இன்னொரு காரணமும் இருந்தது.

மதச்சார்பின்மையின் அசல் வடிவான ஐரோப்பிய மதச்சார்பின்மையானது இருபுறம் கூரான கத்தி. ஒருவகையில் வறட்டுத்தனமானது. மதம் எப்படி அரசில் நுழையாதோ அப்படியே அரசும் மதத்தில் நுழையாது. இரண்டும் தனித்தனியாகச் செயல்படும் Dichotomy நிலவும். அது தான் அங்கே மதச்சார்பின்மை என்று அழைக்கப்படுகிறது.

அது இந்தியாவுக்குச் சரிபட்டு வராது. இங்கே சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் ஏராளம். அவர்களது பாதுகாப்பும், சமூக மேலெழுதலும் நமக்கு முக்கியமானது. முற்றான மதச்சார்பின்மை என்பது அதற்கு எதிராக அமையும். அதனால் அம்பேத்கர் ‘Interventionist Secularism’ என்ற வடிவையே விரும்பினார் என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது மத விஷயங்களில் தலையிடும் மதச்சார்பற்ற அரசு.

உதாரணமாய் மதச்சமத்துவத்தைப் பேசினாலும் இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனம் ஆதரிக்கிறது, சிறுபான்மையினருக்கான சலுகைகளை அளிக்கிறது. சிறுபான்மையினர் நம்பிக்கைகளைப் பாதிக்கும் Uniform Civil Code-ஐ ஆதரிக்கவில்லை. இந்தச் சூழலில் வெளிப்படையாக ‘மதச்சார்பற்ற’ என்று போட்டுக் கொள்ள முடியாத நிலை இருந்தது.

மதச்சார்பற்ற கோரிக்கை போல் இந்து நாடாக்கும் கோரிக்கையும் அன்று இருந்தது. சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன் 5 ஜூன் 1947 அன்று பிரபலத் தொழிலதிபரான ப்ரஜ்மோகன் பிர்லா வல்லபாய் படேலுக்கு எழுதுகிறார், “பிரிவுண்ட பகுதி முஸ்லிம் அரசு. ஹிந்துஸ்தானத்தை நாம் இந்து தேசமாக அறிவித்து இந்து மதத்தை அரசு மதமாக அறிவிக்க இது சரியான நேரம் அல்லவா?”. அதற்கு 10 ஜூன் 1947 அன்று படேல், “நான் அப்படி நினைக்கவில்லை. சிறுபான்மையினரின் பாதுகாப்பு நம் முக்கியப் பொறுப்பு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த அரசு சாதி, மதம் கடந்து எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும்.” என்று பதில் எழுதினார். (அப்படிப் பட்ட படேலைத் தான் இந்துத்துவ முகமாக பாஜககாரர்கள் முன்வைக்கிறார்கள்.)

சாசனத்தின் முகப்புரை “கடவுளின் பெயரால்…” என்று தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை கூட எழுப்பப்பட்டது. ஹெச்வி காமத், “In the name of God, We the People of India….” என முகப்புரையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிர்ணய சபையில் கொண்டு வந்தார். (இஸ்லாமியரான மௌலானா ஹஸ்ரத் மொஹானி கூட அதை ஆதரித்தார் என்பது தான் சுவாரஸ்யம்.) அம்பேத்கரும் ராஜேந்திர பிரசாத்தும் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொல்லி அவரை வலியுறுத்தினர். ஆனால் காமத் பிடிவாதமாக இருந்தார். வாக்கெடுப்பில் தீர்மானம் தோற்றது.

(பிற்பாடு ஜனாதிபதி பதவியேற்கும் போது சொல்லப்படும் பிரமாணத்தில் “In the name of God…” எனச் சேர்க்க வேண்டுமென இதே ஹெச்வி காமத் மற்றும் மஹாவீர் தியாகி தீர்மானம் கொண்டு வந்த போது அம்பேத்கர் ஒப்புதலுடனே அது நிறைவேறியது. அது பதவியேற்கும் தனி நபர் விருப்பம் தொடர்புடையது. ஆனால் சாசன முகப்புரையில் கடவுள் என்ற மதச் சித்தாந்தம் நுழையக்கூடாது என்று நினைத்தார் அம்பேத்கர்.

உண்மையில் அன்று அரசியல் நிர்ணய சபை மூன்று பிரிவுகளாகப் பிரிந்து கிடந்தது. இந்தியாவை இந்து நாடாக ஆக்கி விட வேண்டும் என்பது முதல் கோஷ்டி; அரசியல் சாசனத்திலேயே இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னது அடுத்த கோஷ்டி; இந்தியா மதச்சார்பற்ற நாடுதான், ஆனால் அதை சாசனத்தில் சேர்க்க வேண்டியதில்லை என்ற கடைசிக் கோஷ்டி. அம்பேத்கரும், நேருவும் இந்த மூன்றாவது கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். அதிர்ஷ்டவசமாக இந்த மூன்றாவது நிலைப்பாட்டுக்கே அன்றைய அரசியல் நிர்ணய சபையில் ஆதரவு அதிகம் இருந்தது.


அதனாலேயே ‘Secular’ என்ற சொல்லைச் சேர்க்காமலேயே அரசியல் சாசனச் சட்டம் 26 நவம்பர் 1949 அன்று வெளியானது. (அதைத் தான் மோடி அரசு விளம்பரத்தில் பயன்படுத்தி இருந்தது.) ஆனால் இன்றைய அரசியல் சாசனத்தில் ‘Secular’, ‘Socialist’ ஆகிய சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவை எப்போது, எப்படி உள்ளே வந்தன?

அதைக்கொண்டு வந்தவர் இந்திரா காந்தி! ஆம். ஜவஹர்லால் நேருவை விட அவரது புத்திரியான இந்திரா காந்தி மதச்சார்பின்மை கொண்டவர் அல்ல என்பது நேற்று வரலாறு வாசிக்கத் துவங்கிய குழந்தை கூட சொல்லி விடும். ஆனாலும் வரலாறு இப்படியான பல வினோதங்களைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு தான் நகர்கிறது.

இந்தியாவில் எமர்ஜென்ஸி என்றழைக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனம் அமலில் இருந்த போது கொண்டு வரப்பட்ட 42வது சட்ட திருத்தத்தின் மூலம் ‘Secular’, ‘Socialist’ ஆகிய சொற்கள் அரசியல் சாசனத்தின் முகப்புரையில் நுழைக்கப்பட்டன. இந்திய ஒன்றியம் “SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC” ஆனது. 2 நவம்பர் 1976 அன்று கொண்டு வரப்பட்ட இந்தச் சட்ட திருத்தம் தான் இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 101 சட்ட திருத்தங்களில் மிக அதிகப் பிரிவுகளை மாற்றியதும், மிக சர்ச்சைக்குள்ளானதும் ஆகும். அந்தச் சட்ட திருத்தத்தை ஒரு ‘குட்டி அரசியல் சாசனம்’ என்றே சொல்வார்கள். மத்திய அரசின் பலத்தை உச்ச நீதிமன்றத்தை விட அதிகமாக்குவது, மாநில அரசு அதிகாரங்களைக் குறைப்பது போன்ற நோக்குகளுடன் கொண்டு வரப்பட்ட அந்த மாற்றங்கள் இந்தக் கட்டுரைக்கு அவசியமற்றது என்பதால் நாம் சாசன முகப்புரையில் செய்யப்பட்ட மாற்றத்தைப் பற்றி மட்டும் கவனிக்கலாம்.

இந்திராவுக்கு அப்படி என்ன இதில் அக்கறை? அது ஓர் அரசியல் விளையாட்டு!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அதன் அதீத மக்கட்தொகை ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி நம்பினார். அதனால் 1975 எமர்ஜென்ஸியின் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

சுமார் 62 லட்சம் பேர் அப்படிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது ஜெர்மனியில் நாஜிக்கள் யூதர்களுக்குச் செய்ததை விட 15 மடங்கு அதிகம். (சல்மான் ருஷ்டி Midnight’s Children நாவலில் இச்சம்பவத்தைப் பதிவு செய்திருப்பார். சுதந்திர இந்தியாவின் குறியீடான கதை நாயகன் சலீம் சினய் தனக்குக் கட்டாயக் கருத்தடை அறுவை செய்யப்பட்டதும் “No longer connected to history” என்று சொல்வான்.)

தம் நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாய் மருந்து வாங்க வந்த ஏழைகள் பலரையும் கருத்தடை செய்து கொண்டால் தான் மருந்து எனக் கட்டாயப் படுத்தினர். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது இஸ்லாமியர்களே. இஸ்லாமியர்களைக் குறி வைத்தே இத்திட்டத்தை சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் கொண்டு வந்தனர் என்ற வாதமும் உண்டு. அதனால் இந்திரா காந்தி அரசுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என்ற பிம்பம் இருந்தது. அடுத்த தேர்தலுக்கு முன் அதை நீக்கும் பொருட்டு, தான் சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டவள் என்றுணர்த்த இந்திரா காந்தி கொண்டு வந்தது தான் ‘Secular’ என்ற சொல்லை சாசன முகப்புரையில் சேர்க்கும் நடவடிக்கை.

‘Socialist’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டதும் அப்படித்தான். இந்திரா அரசு ஏழைகளுக்கு எதிரான அரசு என எதிர்கட்சியான மொரார்ஜி தேசாய் தலைமையிலான நிறுவன காங்கரஸால் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்படி இல்லை, தானும் ஏழைப் பங்காளி என்பதைக் காட்டிக் கொள்ள அந்த வார்த்தையைச் சேர்த்தார் இந்திரா காந்தி.

இப்படித் தான் சரியான விஷயம் தவறான காரணத்தை முன்னிட்டு நடந்தேறியது!

*

11 மார்ச் 1994ல் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கும் எஸ்ஆர் பொம்மைக்கும் நடந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பானது அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை தவறாய்ப் பிரயோகிப்பதைத் தடுப்பது தொடர்பான மைல்கல் தீர்ப்பு என்றாலும் அது இந்தியாவின் மதச்சார்பின்மை பற்றிய முக்கிய விஷயங்களையும் விவாதிக்கிறது.

கர்நாடகாவில் 1989ல் ஜனதா கட்சி, லோக் தளம் கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதுக் கட்சி உருவானதையொட்டி நடந்த சில குழப்பங்களால் மத்திய அரசு எஸ்ஆர் பொம்மை அரசுக்குப் பெரும்பான்மை இருந்தும் ஆட்சியைக் கலைத்தது. அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடந்த இதே மாதிரியான ஆட்சிக் கலைப்புகளையும் ஒட்டி பொம்மையின் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மாநில ஆட்சிக் கலைப்பு விவகார வழக்கில் எப்படி மதச்சார்பின்மை உள்ளே வந்தது? பாபர் மசூதி இடிப்பை ஒட்டி நாடு முழுக்க கலவரங்கள் வெடித்ததால் பிஜேபி ஆட்சி செய்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் மத்திய அரசு 356வது பிரிவைப் பிரயோகித்து ஜனாதிபதி ஆட்சியைக் கொணர்ந்தது. அதனால் பொம்மை வழக்கில் மதச்சார்பின்மை என்பதும் விவாதப் பொருளானது.

உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் மதச்சார்பின்மை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று என்றும் அரசு விவகாரங்களில் மதத்திற்கு எந்த இடமும் இல்லை என்றும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டது. ஒரு குடிமகன் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு, ஆனால் ஓர் அரசு தனிமனிதர்களின் அத்தகு மதத் தேர்வைப் பொருட்படுத்தாது எல்லோரையும் சமமாகவே பாவிக்க வேண்டும் என்றது. எந்த மாநில அரசாவது மதச் சார்புக் கொள்கைகள் கொண்டிருந்தாலோ, மத ஆதரவுச் செயல்களில் ஈடுபட்டாலோ அது அரசியல் சாசனத்தை மீறும் காரணத்தால் 356வது பிரிவைப் பிரயோகித்து ஆட்சியைக் கலைக்கலாம் என்றது அந்தத் தீர்ப்பு.

இந்தக் கட்டுப்பாடு அரசுக்குப் பொருந்துவது போல் தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். ஏதேனும் கட்சியோ அமைப்போ மதச்சார்பின்மைக்குக் கேடு செய்வது போன்ற விஷயங்களை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்டால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயலாகவே கருதப்படும் என்று சொன்னது. (இக்கணக்குப்படி பார்த்தால் பாஜக ஒருபோதும் தேர்தலில் போட்டியிட முடியாது!)

ஒன்பது நீதிபதிகள் கொண்ட குழு இந்த வழக்கை விசாரித்தது. அதில் ஏழு பேர் மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் பகுதியாக இருக்கிறது என்று தீர்ப்பெழுதினர். நீதிபதி ஏஎம் அஹமதி மதச்சார்பின்மை 42வது சட்டத் திருத்தத்தின் வழி திடீரென புகுத்தப்பட்டதல்ல, தொடக்கத்திலிருந்தே அது சாசனத்தில் பொதிந்துள்ளது என்றார். சமத்துவச் சமூக ஒழுங்கை அடைய சாசனம் தேர்ந்தெடுத்த வாகனமே மதச்சார்பின்மை என்றார் நீதிபதி கே ராமசாமி.

அரசு விளம்பரத்தில் ‘Secular’, ‘Socialist’ ஆகிய சொற்கள் இல்லாத பழைய சாசனத்தின் முகப்புரை இடம்பெற்றது ஒருவேளை உள்நோக்கமற்ற செயலாகக் கூட இருக்கலாம். ஆனால் பனைமரத்தின் கீழ் அமர்ந்து பால் குடிப்பது ஒரு பொறுப்பான அரசு செய்யும் செயல் அல்ல. ஏற்கனவே அதன் மீது சிறுபான்மைச் சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர் மீதும் வஞ்சகம் கொண்டிருப்பதான குற்றச்சாட்டுகள் நிலவும் போது இவ்விஷயத்தில் கவனமாய் இருந்திருக்க வேண்டும். என்ன செய்து விடுவார்கள் என்ற தெனாவட்டில் வேண்டுமென்றே தம் நிலைப்பாட்டை அறிவிக்கும் அரசின் அயோக்கியத்தனமாகவே படுகிறது. எப்படி இன்றைய சாசன வடிவத்தைப் பின்பற்றவில்லையோ அப்படியே மோடியின் படம் அல்லாது நேருவின் படத்தை விளம்பரங்களில் அச்சிடுவார்களா?


இவ்விவகாரம் பற்றிப்பேசிய மோடி, 2009ல் அரசியல் சாசனத்தின் 60ம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் போது தான் குஜராத் முதலமைமைச்சராக இருந்ததையும், ஒரு யானையின் மீது அரசியல் சாசனத்தின் பிரதியை வைத்து அதன் முன்னால் தான் நடந்ததையும் குறிப்பிட்டு சாசனத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு வலியுறுத்தவே அப்படிச் செய்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் இம்மாதிரி ஜிகினாக் குறியீடுகளை விட நிஜத்தில் சாசன வரிகளைப் பின்பற்றுவதே அதற்கான உண்மையான மரியாதை.

*

அரசியல் சாசனம் என்பது நம் தேசம் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லும் திசைகாட்டி. அது இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை உறுதிப்படுத்துகிறது. அதைச் செயல்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது என்றாலும் ஒரு வகையில் அது கோட்பாடு மட்டுமே. நடப்பு எப்படி இருக்கிறது என்பதும் முக்கியம். அப்படிப் பார்த்தால் இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்றழைப்பதில் தயக்கங்கள் உள்ளன.

நாடாளுமன்றத்தில் பெரும்பலம் பெற்று இன்று ஆட்சியிலிருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓர் இந்துத்துவச் சார்பு அரசு என்பது அதன் கடந்த மூன்றாண்டு செயல்பாடுகளிலிருந்து திரும்பத் திரும்ப நாம் அறிய வரும் செய்தி. சாத்தியமான இடங்களில் எல்லாம் அது மதத்தை நுழைக்க முயல்கிறது. ரம்ஜான் மாதம் தொடங்குவதற்கு முந்தைய தினம் மாட்டுக் கறி விற்பனைக்கு இக்கட்டு ஏற்படுத்தும் சட்டத்தைப் பிறப்பிக்கும் ஒரு மதவாத அரசு இது. “இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் தேசத்திற்கு அந்நியர்கள்” என்ற கருத்துக் கொண்ட ஒருவர் தான் தற்போது அதன் ஜனாதிபதி வேட்பாளர். இந்த ஆட்சியில் இந்து அடிப்படைவாதிகளும் உடன் சாதியவாதிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தமக்கு ஒரு பெரிய வாய்ப்புக் கிட்டியிருப்பதாக எண்ணித் தைரியமாக தம் அராஜகங்களை மேற்கொள்கின்றனர். மாடு காக்க மனித வேட்டையாடும் கோ ரட்சகர் ஆதிக்கத்தில் இன்று வாழ்கிறோம்.

அரசை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. இன்று இந்தியா முழுக்க மக்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே நீடிக்க வேண்டும் என்று பெரும்பான்மை தீர்ப்பளிக்குமா என்பது சந்தேகம் தான். தேச முன்னேற்றம் என்ற பெயரில் 2014ல் மோடியைப் பாரதப் பிரதமராக ஆட்சியில் அமர்த்தியதன் பின், 2017ல் யோகி ஆதித்யநாத்தை உத்திரப் பிரதேச முதல்வராக ஆட்சியில் அமர்த்தியதன் பின் நம் போல் சாதாரணர்கள் மனதில் ஒளிந்திருக்கும் மித மதவாதம் காரணமில்லையா என நம்மை நாமே கேட்டுச் சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.

நேரு Discovery of India புத்தகத்தில் “Composite Culture” என்ற விஷயத்தைப் பேசுகிறார். அதாவது தொகுப்புக் கலாசாரம். மேற்கின் மதச்சார்பின்மையிலிருந்து வேறுபட்ட நேருவிய மதச்சார்பின்மையை நாம் அச்சொல்லின் வழியே புரிந்து கொள்ள முயல வேண்டும். 1947ல் பசு வதைப்பிரச்சனை தொடர்பாய் ராஜேந்திர பிரசாத்திற்கு எழுதிய மடலில் இப்படிச் சொல்கிறார்: “பெரும்பான்மை இந்துக்களின் மென்னுணர்ச்சியானது நம் நடவடிக்கைகளை நூறு வழிகளில் பாதிக்கும். ஆனால் நாம் இந்தியாவை ஒரு தொகுப்பாகப் பார்க்கிறோமா இந்து நாடாகவா என்பதே வித்தியாசத்தை ஏற்படுத்தும்.”

“இந்தியா மதச்சார்பற்ற நாடா?” எனக் கேட்டால் ஒற்றைச்சொல் பதில் “ஆம்” என்பதே. ஆனால் அது அப்படியே தொடர்வது நாம் மனசாட்சிப்படி நடப்பதில் தான் இருக்கிறது.

***

(உயிர்மை - ஜூலை 2017 இதழில் வெளியானது)

Comments

பாவம் தம்பி நீங்க!நீங்களும்தான் மதசார்பின்மை ஹிந்தி எதிர்ப்பு,பசுக்கறி ஆதரவுன்னு பொங்கிட்டுதான் இருக்கீங்க.மூன்றாவது அணியோ காங்கிரசோ ஆட்சிக்கு வரணும்னு மாடா உழைக்குறீங்க..ஹ்ம்ம்..இருந்தும் என்ன தம்பி செய்ய?இப்ப பாருங்க மூன்றாவது அணியின் பெரும் தூணாய் பிரபலமான முகமாய் இருந்த ஒரே ஆளான நிதிசும் மோதியோடு ஐக்கியமாகிட்டாரு!இப்ப so called மத சார்பற்ற தலைமைக்கு ரெண்டே சாய்ஸ்தான்!கொழந்த ராகுல் அல்லது பேட்டை ரவுடி மமதா!அய்யோ பாவம் தம்பி உங்களைப்போன்றவர்களின் நிலைமை!2019 தேர்தல் பிஜேபிக்கு cakewalk ஆ இருக்க போகுது!எல்லா சரக்கையும் இப்பவே கட்டுரையா எழுதி தீர்த்துடாம கொஞ்சம் கொஞ்சமா எழுதுங்க...இன்னும் எத்தன வருசம்...ம்... 2017+2+5=2024 வரைக்கும் நீங்க புலம்பியாகணும்.சரக்கை அதுக்குள்ள காலி பண்ணிடாதீங்க தம்பி.வர்ட்டா...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்