இறுதி இரவு [சிறுகதை]


இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ” - திருக்குறள் (913)

“கன்னிப் பொணம் விழுந்திருச்சு!”

ஊர் முழுக்க இதே பேச்சாய் இருந்தது. டீக்கடையில், பொதுக் கழிப்பிடத்தில், வீட்டுத் திண்ணையில், முச்சந்திக் கிணற்றடியில், சீட்டுக் கச்சேரியில், எல்லா இடங்களிலும்.

“குப்பனுக்கு சொல்லி விட்டாச்சா?”

விஷயம் கேள்விப்பட்டவர்களின் முதல் கேள்வி இதுவாகவே இருந்தது. இறந்தது யார்? எப்படிச் சாவு நடந்தது? என்றெல்லாம் பிற்பாடு தான் பேச்சு தொடங்கியது.

“சடங்கு எப்ப நடக்குதாம்?”

“இதென்னய்யா புதுசாக் கேட்கறீங்க? எப்பவும் போல இன்னிக்கு ராத்திரி தான்.”

கண்களில் மின்னும் ஆர்வத்தை மறைத்தபடி மெல்லிய குரலில் கிசுகிசுத்தார்கள்.

அந்தப் பெரிய வீட்டில் பிணம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி தரையில் ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்திருக்க, ராமசாமி மட்டும் பிணத்தின் முகத்தைப் பார்க்க வாகாக மரச்சேர் போட்டு அமர்ந்து கொண்டு தோளில் இருந்த துண்டின் முனையைச் சுருட்டி வாய்க்கும் மூக்கிற்கும் மத்தியில் வைத்திருந்தார்.

ஏற்கனவே அழுதிருப்பதும் இனியும் அழத் தயார் என்பதையும் அது சொல்லியது. அவர் வயதொத்தோர் வந்து பிணத்தை வணங்கி விட்டு இரக்கத்துடன் அவரைப் பார்க்கையில் மட்டும் பருத்த அவர் உடல் மெல்லக் குழுங்கி விம்மல் எழுந்தது.

“ஐயா, குப்பனுக்கு சொல்லி விட்றலாமா?”

தயக்கத்துடன் கோயில் பூசாரி அவரது அருகில் வந்து கேட்க, அவரை நிமிர்த்து கண்ணுக்குக் கண்ணாக ஒரு பார்வை பார்த்தார் ராமசாமி. பின் தலையசைத்தார்.

அவர் மறுப்பார் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாய் இருந்திருக்கும்.

*


டிஜிட்டல் இந்தியா இன்னும் எட்டிப் பாராத கிராமம். நூறு வீடுகள் இருந்தால் அதிகம். அழுக்குத் துணிகளை வெள்ளாவியில் வெளுக்க, சிகை திருத்த, மயிர் சிரைக்க, மலக்கிடங்கை, சாக்கடையைச் சுத்தம் செய்ய, சுடுகாட்டில் விழும் பிணங்களை எரிக்க இருக்கும் சிலர் தவிர பெரும்பாலும் ஒரே சாதியினர் தான்.

இறந்தது ஊராட்சித் தலைவர் ராமசாமியின் பேத்தி ரம்யா. பரம்பரையாய் அவர் குடும்பமே ஊர் நல்லது, கெட்டதுகளை முன்னின்று நடத்தி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல்கள் எல்லாம் வந்து விட்ட பிறகு அவரே நின்று போட்டியின்றி பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். ரொம்பவும் மரியாதைப்பட்ட குடும்பம்.

அந்தக் கிராமத்தில் ஒரே ஒரு அரசு ஆரம்பப் பள்ளி இருக்கிறது. அதற்கு பொறுப்பு ஓர் ஆசிரியரும், ஒரு சத்துணவு ஆயாவும் தான். கொஞ்சம் வசதி கொண்டவர்கள் பக்கத்து ஊரில் இருக்கும் அரசு மேனிலைப் பள்ளிக்குத் தம் பிள்ளைகளை அனுப்பிப் படிக்க வைத்தார்கள். தினம் ஆறு கிமீ சைக்கிள் மிதித்துப் போய் வர வேண்டும்.

ரம்யா பக்கத்து டவுனில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்தாள். பத்து ஆண்டுகள் முன் ராமசாமி சகாய விலைக்கு வாங்கிப் போட்ட அம்பாஸ்டர் கார் காலையில் அவளைக் கொண்டு போய் பள்ளியில் விட்டு வரும்; மாலையில் மீண்டும் போய் அழைத்து வரும். ஊராருக்கு அதுவே ஓர் அதிசயம்.

ராமசாமிக்குப் பேத்தியின் மீது ரொம்பப் பிரியம். அவள் ஆசைகளுக்கு ஒருபோதும் அவர் மறுப்புச் சொன்னதில்லை. எதற்கும் அவள் அடம் பிடிக்க நேர்ந்ததில்லை.

பிறந்த நாளுக்கு ஆயிரம் ரூபாய் விலையில் சுடிதார் துணி எடுப்பாள். புதுப்படம் ரிலீஸானால் முதல் நாளே தியேட்டரில் சென்று பார்ப்பாள். ஊரில் எல்லோரிடமும் இப்போது பரவலாய் செல்ஃபோன் வந்து விட்டது என்றாலும் பாட்டுக் கேட்கும், படம் எடுக்கும் வசதியுடன் பெரிய தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவள் அவள் ஒருத்திதான். அவள் கேட்டாளென அறையையொட்டி மேற்கத்தியக் கழிவறை கட்டிக் கொடுத்தார். இப்போது கொஞ்ச நாளாய் அம்பாஸிடர் காரை மாற்ற வேண்டும் எனச் சொல்லி வந்தாள்; கார்களைப் பற்றி வெளியே விசாரித்துக் கொண்டிருந்தார்.

அவள் வயதுக்கு வந்த போது ஊரழைத்து கறி விருந்து போட்டார் ராமசாமி. இதற்கே இப்படி என்றால் கல்யாணத்துக்கு என்ன செய்வாரோ என வாயைப் பிளந்தார்கள். இப்போது அதற்கு வாய்ப்பில்லையே என்று ஊர் ‘உச்’ கொட்டி ஆதங்கப்பட்டது.

ரம்யாவுக்கும் தாத்தா பிரத்யேகம். அம்மாவிடம் கூட அத்தனை ஒட்டுதல் இல்லை. வயதுக்கு வந்த நான்காண்டுகளாகத் தான் அம்மாவிடம் நெருக்கம் வந்திருக்கிறது.

பிணத்தைக் கண்ணாடிப் பெட்டியில் வைப்பது எல்லாம் அவ்வூரில் வழக்கமில்லை. இதற்கு முன் காலில் சீழ் பிடித்து இறந்த வேலாயிக் கிழவிக்குத் தான் நோய்த் தொற்று வந்து விடக்கூடாது என சர்க்கார் உத்தியோகக்காரனான அவள் மகன் கண்ணாடி பெட்டியை டவுனிலிருந்து வரவழைத்திருந்தான். அதைப் பார்த்த போது ராமசாமி தான் போய்ச் சேர்ந்தால் கண்ணாடிப் பெட்டியில் வைத்திருந்து எடுத்துச் செல்ல வேண்டும் எனச் சொல்லி வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

ஆனால் இப்போது அது அவரது பேத்திக்குத் தான் உபயோகப்பட்டிருக்கிறது என நினைத்துக் கொண்டதும் பொங்கலாய் வந்த அழுகையை அடக்கி உதடு கடித்தார்.

ரொம்ப அதிகமில்லை என்றாலும் ராமசாமியின் சொத்துக்களுக்கு ஒரே வாரிசு ரம்யா தான் என்பது அவர் பிரியத்துக்கு ஒரு காரணம்; தந்தை இல்லாத பெண் குழந்தை என்பது இன்னொரு காரணம். அவள் பிறந்த மூன்று ஆண்டுகளில் தொண்டையில் புற்று நோய் வந்து இறந்து போனார் அவள் அப்பா. மகன் இறந்ததை விட ரம்யாவை இந்த வயதில் விட்டுப்போய் விட்டானே என்பதுதான் அதிக துக்கம் தந்தது அவருக்கு.

அடுத்தது இப்போது ரம்யாவும். மகனாவது எல்லாம் அனுபவித்து விட்டுப் போனான். ரம்யா இப்போது தான் புதிதாய் மலர்ந்த பூந்தளிர். பதினேழு என்பது சாகும் வயதா?

அதுவும் நிறைந்த பொங்கல் நாளில். ஊரில் இருக்கும் பாழடைந்த டாக்கீஸில் பழைய படம் தான் போடுவார்கள் என்பதால் புதிதாய் ரிலீஸான ரஜினி முருகன் பார்க்க பக்கத்து டவுனுக்கு சினேகிதிகளுடன் காரில் போனவள் ராஜ்கிரண் உயிரோடு எழுந்தமரும் காட்சியில் பக்கத்தில் இருந்த தன் தோழியிடம் நெஞ்சு வலிக்கிறது எனச் சொல்லி இருக்கிறாள். அந்தக் காட்சியின் அழுத்தம் தாளாது தான் பூஞ்சை மனசுக்காரியான ரம்யா அப்படிச் சொல்கிறாள் போல என நினைத்து மேலோட்டமாய் ஆறுதல் சொல்லிய தோழி கவனிக்காது இருந்து விட, கொஞ்சம் நேரத்தில் அவள் மீதே ரம்யா சரிந்து விழுந்ததும் தான் நிலைமையின் விபரீதம் உறைத்திருக்கிறது.

உடனடியாய் அலறியடித்து ரம்யாவின் செல்ஃபோனிலேயே ராமசாமிக்குத் தகவல் சொல்லி விட்டு அவரது உத்தரவுப்படி அருலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காசை வாரி இறைத்து கண்ணாடியும் பளிங்கும் கொண்டு கட்டி பதிலாய் வருபவரிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆஸ்பத்திரி!

பொங்கல் நாள் என்பதால் பெரிய டாக்டர்கள் யாருமில்லை. மருத்துவமனையோடு இணைக்கப்பட்டிருந்த மெடிக்கல் காலேஜிலிருந்து ப்ராக்டீஸுக்கு வந்திருந்த ஓர் இளமையான டாக்டர் சில்லிட்டிருந்த ரம்யாவின் நெஞ்சில் ஸ்டெத்தாஸ்கோப் வைத்துப் பார்த்து விட்டு நீண்ட நேரம் முன்பே உயிர் பிரிந்து விட்டது என்றார்.

மாரடைப்புதான் மரணத்துக்குக் காரணம் என்றார்கள். இந்த வயதிலா எனக் கேட்டால் வெளியே எந்த அறிகுறியும் தெரிய வராமல் நீண்ட காலமாய் அவளது இருதயத்தில் கோளாறு இருந்திருக்கக்கூடும் எனச் சொன்னார்கள். மேலே பேச ஏதுமிருக்கவில்லை.

போன காரிலேயே ஊருக்கு எடுத்து வந்து விட்டார்கள். அதற்குள் ஊருக்கு விஷயம் தெரிந்து வீட்டில் கூட்டம் கூடி விட்டது. ஊரின் பணக்காரப் பெண் குழந்தை எனில் இயல்பாக எழும் பிரம்மிப்பும் பொறாமையும் அவள் பிணத்தின் மீதும் தொடர்ந்தது.

*

சுந்தரம் மாலையிலிருந்து ஓடி ஆடி வேலைகள் செய்து கொண்டிருந்தான். விலை அதிகம் என்பதால் இழவு வீட்டில் தொலைந்து விடலாகா என்பதால் ரம்யாவின் செல்ஃபோனைப் பொறுப்பெடுத்துக் கொண்டு அதில் வரும் அழைப்புகளுக்கும் பொறுமையாய்ப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். ரம்யா எப்படி இறந்தாள் என்பதைக் குறைந்தபட்சம் இருபது பேருக்கேனும் இன்று விளக்கி இருப்பான்.

ராமசாமி அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி தான் இருந்தார். ஆறு மாதம் முன் அவருக்கு மகள் முறை வரும் விமலா தன் மகன் சுந்தரத்துக்கு ரம்யாவைக் கல்யாணம் செய்து வைக்கும் பேச்சை எடுத்த போது அவர் பிடி கொடுக்கவில்லை.

“இப்பத் தானே ஸ்கூலுக்குப் போறா, ப்ளஸ் டூ முடிக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்.”

சொத்தும் சொந்தமும் விட்டுப் போகக்கூடாது எனப் பதினாறு வயதிலிருந்து நிச்சயம் செய்து வைத்துக் கொள்வது அந்த ஊரில் சகஜம் தான். ஆனால் ராமசாமிக்கு மனம் ஒப்பவில்லை. சுந்தரத்திற்கு நல்ல வேலை ஏதும் இல்லை. நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான். விமலாவின் குடும்பத்தில் வசதியும் அவ்வளவாய் இல்லை.

ராமசாமி வெளியூரில் பெரிய இடமாய்ப் பார்க்க நினைத்தார். விமலாவிடம் அதை வெளிப்படையாக அவரால் சொல்ல முடியவில்லை. மழுப்பிக் கொண்டிருந்தார்.

இவனுக்கே ரம்யாவை நிச்சயம் செய்திருக்கலாமோ என இன்று தோன்றாமலில்லை.

குப்பனிடம் கூட யார் யாரிடமோ எண் விசாரித்து, கடைசியில் ஏதோ வொர்க் ஷாப் நம்பர் ஒன்றைப் பிடித்துப் பேசி விட்டு “வர ஒரு மணி நேரம் ஆகுமாம்” என்றான்.


*

குப்பன் பிணந்தழுவுபவன். கன்னிப் பிணத்தை அப்படியே அடக்கம் செய்தால் அதன் ஆன்மா நிம்மதியுறாது அலையும் என்பது ஊர் ஐதீகம். அதனால் அதைக் கன்னி கழித்த பின் தான் எரிக்கவோ புதைக்கவோ செய்வர். பல நூறாண்டுப் பழக்கம் அது.

முதல் ராத்திரி என்பது போல் இறந்து போன பெண்ணுக்கு அது கடைசி ராத்திரி.

வாரிசு அடிப்படையில் ஒரே குடும்பத்தினர் செய்து கொண்டிருக்கும் இத்தொழிலை இப்போது கடந்த இருபதாண்டுகளாக அந்த ஊரில் மேற்கொண்டிருப்பவன் குப்பன்.

குப்பனுக்கு நாற்பது வயதாகிறது. கல்யாணம் இல்லை. குடும்பம் இல்லை. தனிக் கட்டை. உண்மையில் இந்தத் தொழிலின் காரணமாகவே அவனுக்குத் திருமணம் ஆகவில்லை. அவன் அப்பனின் காலம் வரை இத்தொழிலுக்கு ஒரு மதிப்பிருந்தது.

சாமி காரியம் என்று தான் சொல்வார்கள். கோயில் வரி வசூலில் குறுந்தொகை இவர்கள் குடும்பத்துக்கு மாதாமாதம் வந்து சேர்ந்தது. அது போக பிணந்தழுவப் போகும் வீடுகளில் புது வேட்டி, சட்டை எடுத்துக் கொடுத்து கணிசமாய் தட்சணை தருவார்கள். இத்தொழிலில் பெரிய வருமானம் இல்லை என்றாலும் கிட்டும் பணம் குடும்பம் நடத்தப் போதுமானதாய் இருந்தது முந்தைய தலைமுறை வரைக்கும்.

குப்பன் இப்போது தனி ஆள் தான் என்றாலும் வரும்படி போதவில்லை. குப்பன் மேல் வருமானத்துக்காக பக்கத்து ஊர் வொர்க் ஷாப் ஒன்றில் வெல்டிங் வேலைக்குப் போகத் தொடங்கினான். பிறகு அது பிரதான வருமானமாகி, தொழிலின் வருமானம் இரண்டாம்பட்சமாகி விட்டது. குடும்பக் கடமையாகவே தொழிலைத் தொடர்ந்தான்.

குப்பனுக்கு இப்போது ஒருமுறை பிணந்தழுவப் போனால் ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. இது பெரிய வீடு என்பதால் இம்முறை அதிகம் கிடைக்கும். சாராயம் மட்டும் தான் குப்பனுக்கான அதிகபட்ச செலவு. தன் சோக்காளி ரத்னத்துடன் எப்போதாவது இரவில் போய் குடித்து விட்டு வருவான். ஆனால் தொழிலுக்கு வருகையில் குடிக்கக்கூடாது. அது சடங்கின் முக்கியச் சம்பிரதாயங்களில் ஒன்று.

குப்பன் தான் அவன் பரம்பரையிலேயே முதன்முதலில் பள்ளிக்கூடம் சென்றவன். எந்த மூதாதையர் மிச்சமோ படிப்பு நன்றாகவே வந்தது. ஊர் ஆரம்பப் பள்ளியில் ஐந்தாவது வரை படித்து முடித்ததும் மேற்கொண்டு படிக்க பக்கத்து ஊருக்கு அனுப்ப எண்ணி, தந்தை மரணத்துக்குப் பின் ஊர் முக்கியஸ்தராய் அப்போது தலையெடுத்துக் கொண்டிருந்த இளவட்டமான ராமசாமியைப் போய்ப் பார்த்தார் குப்பனின் அப்பன்.

"உன் மகன் படிக்கப் போயிட்டா உன் தொழிலை யார் பார்ப்பாங்க, சொல்லு!"

அவரின் தோளில் கைபோட்டு ராமசாமி சொன்ன வார்த்தைகளை உடன் சென்றிருந்த சிறுவனான குப்பன் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். அவருக்கு இது போன்ற ஊர் வழக்கங்களில் மிகுந்த பிடிப்பு இருந்தது. அவற்றில் மிகப் பிடிவாதமாய் இருந்தார்.

"காச விட்டெறிஞ்சா கீழ்சாதிக்காரங்க செய்வாங்க. இல்லங்கல. ஆனா பொணமாக் கூட நம்ம சாதிப் புள்ளைக ஒடம்ப வேற எவனும் தொட உடலாமா, சொல்லு?"

“…”

“இது சாமி காரியம். உன் குடும்பத்தோட உரிமை. இதை நீயே விட்டுத் தரலாமா?”

“…”

"உன் மகனுக்கு என்ன வேணுமோ அதை ஊர் பாத்துக்கும். நீ கவலைப்படாமப் போ."

"சரிங்கயா" என்று மட்டும் தான் குப்பனின் தந்தையால் அப்போது சொல்ல முடிந்தது.

ஊர் என்ன பார்த்துக் கொண்டது என யோசித்துப் பார்ப்பான் குப்பன். ஒன்றுமில்லை தான். ராமசாமி அன்று ஒதுக்கி வைத்துப் பேசிய கீழ்சாதிக்காரர்களுக்கும் தனக்கும் நிலைமையில் என்ன வித்தியாசம் என அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வான்.

*

தொழிலில் இறக்கும் முன் குப்பனுக்குக் கல்யாணம் செய்து பார்த்து விட வேண்டும் என்று தான் அவன் அப்பன் முயற்சி செய்தான். இருபது வயதிலேயே பெண் பார்க்கத் துவங்கினான். ஓரிரண்டு இடம் ஜாதகம் சாதகமின்றி தட்டிப் போனது. குப்பனுக்கோ அவன் அப்பனுக்கோ ஜோதிடக் கட்டங்கள் பற்றிய கவலை இல்லை என்றாலும் பெண் வீடுகளில் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பொருத்தம் பார்த்தார்கள்.

அப்போது ஊரில் ஒரு கன்னிப் பிணம் விழுந்தது. அப்பன் குப்பனை அழைத்தான்.

“இன்னிக்கு ராத்திரி நீ தான் போய் சடங்கைச் செய்யனும்”

குப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏன்? நீ போகல?”

“எனக்கு முடியல”

அப்பன் தலையைக் குனிந்து கொண்டான். தனக்குக் கல்யாணம் செய்து வைக்க அப்பன் அவசரம் காட்டியதன் காரணம் குப்பனுக்கு அப்போது தான் புரிந்தது.

குப்பன் போனான். அவனை விடப் பெரிய பெண். வயதிலும் சரி, சரீரத்திலும் சரி. ஏதோ வீட்டுச் சண்டையினால் விஷம் குடித்துத் தற்கொலை செய்திருந்தாள்.

அப்போதெல்லாம் ஊரில் எவ்விதமான மரணம் எனினும் பிரேதப் பரிசோதனைக்கு எல்லாம் போவதில்லை. ஊர்க் கட்டுப்பாடு அப்படி. சொத்துப் பிரச்சனைகள், புருஷன் பெண்டாட்டி சண்டைகள் எல்லாம் ஊர்ப் பஞ்சாயத்தில் தான் தீர்ந்து கொண்டிருந்தன.

அதனால் காவல் துறையோ நீதிமன்றமோ ஊருக்குள் நுழைய வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது. மீறியவர்களை ஊரை விட்டு பல்லாண்டு ஒதுக்கி வைத்தனர்.

முதல் முறை என்பதால் அப்பன் சில சூதானங்கள் சொல்லிக் கொடுத்திருந்தான்.

ஆர்வமும் ஆசையும் ஒரு சேரக் கலந்த ஒரு மனநிலையில் தான் அன்று தொழிலில் ஈடுபட்டான். பிறகு அதெல்லாம் மெல்ல மெல்ல வடிந்து பழகி விட்டது. ஆனால் இத்தனை ஆண்டுகளில் எப்போதும் அதைச் செய்ய அருவருத்த நினைவில்லை.

அவன் அப்பன் சொல்வார் எப்போதும், “நாம சேர்றது பிணத்தை இல்ல. சாமியைத் தான். நாமும் சாமி ஆயிடறோம் அப்போ. நாம சிவன். அங்க கிடக்கறது அம்மன். அது தவிர வேற நினைப்பு வரக்கூடாது. முழு மனசா நம்மை ஒப்படைக்கனும்.”

இத்தனை ஆண்டுகளும் குப்பன் அப்படித் தான் தன்னை ஒப்புக் கொடுத்து வந்தான். ஒன்றா இரண்டா, மொத்தம் பதினேழு கன்னிப் பிணங்கள். பதினேழு அம்மன்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அம்மன். எல்லாவற்றையும் தனித்தனியாய் அடையாளப்படுத்த முடியும் குப்பனால். இதோ இப்போது ரம்யா பதினெட்டாவது.

ஆனால் உயிர் கொண்ட ஒரு பெண்ணின் சூடு? அதில் தகிக்கும் உணர்ச்சி? அதன் திகட்டாத அசைவுகள்? அவர்கள் எழுப்பும் சப்தம்? அணைப்பின் வழி கடத்தப்படும் துடிப்பு? அவற்றை எல்லாம் ஒருபோதும் குப்பன் அறிந்தவனில்லை. அதெல்லாம் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்ய முயன்று தோற்பான். அது தன் வாழ்வில் ஒருபோதும் வாய்க்காதா என எண்ணி ஏங்குவான். இரவுகளை அவன் வெறுத்தான்.

அந்த ஊரிலும் அவன் வேலைக்குப் போகும் ஊரிலும் உடம்பை விற்கும் பெண்கள் இருப்பதாய்த் தெரியவில்லை. டவுன் வரைக்கும் தேடிப் போகும் வசதியும் இல்லை.

அப்பன் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வரும். “காசு கொடுத்து பொம்பளையைக் கூடறதும் இருட்டுல பொணத்தைக் கூடறதும் ஒண்ணுனு சொல்லி இருக்காராம் ஒரு பெரியவரு. அவரு பாவம், தெரியாம சொல்லி இருக்காரு. நாம தான் மன்னிக்கனும். அவர் சொல்லு நம்மள மாதிரி பொணந்தழுவறவங்கள அவமதிக்கல. செத்துப் போன பொம்பளைங்களத் தான் மானபங்கப்படுத்திட்டாரு. காசு வாங்கிட்டு உடம்புச் சுகம் கொடுக்கற பொம்பளைங்களோட இந்தச் சாமிகள இணை வெச்சுப் பேசிட்டாரு, பாரு.”

ஆனால் குப்பனுக்கு வேறு மாதிரி தோன்றும். உண்மையில் அந்த விபச்சாரிகளுடன் ஒப்பிடப்பட வேண்டியது பிணங்களை அல்ல; பிணந் தழுவும் தங்களைத் தான் என நினைப்பான். இருவருமே காசுக்காகத் தானே ஓர் உடம்புடன் கூடிக் கிடக்கிறோம். இரண்டு வர்க்கத்துக்குமே அதனால் தான் திருமணம் என ஒன்று ஆகாதிருக்கிறது.

பிறகு உயிருடன் இருக்கும் பெண்களைப் பற்றி எதிர்மறையாகக் கற்பனை செய்யத் தொடங்கினான் குப்பன். அவர்கள் உடல் மோசமாய் வீச்சமடிக்கும் என்றும், உடலின் வெப்பம் அசௌகர்யமானது என்றும் நம்பத் தொடங்கினான். உயிர் பிரியும் போது தான் உடம்பின் அத்தனை அழுக்குகளும் வெளியேறி அவர்கள் புனிதமடைகிறார்கள் என நினைத்துக் கொண்டான். ராட்சசிகளை தினமும் புணரும் மற்றவர்களை விட எப்போதேனும் தேவதைகளைப் புணரும் தானே ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று சொல்லிக் கொண்டான். அதைக் கேட்டு ரத்னம் விழுந்து விழுந்து சிரிப்பான்.

ஒரு கட்டத்தில் உயிருடன் இருக்கும் பெண்களைத் தன்னால் விரும்பிப் புணரவே முடியாது என எண்ண ஆரம்பித்தான் குப்பன் - அப்படிப் புணர்ந்தால் தான் செத்துப் போவேன் என்றும். அப்படி நினைக்கும் போது கண்ணோரம் நீர் சுரந்து வழியும்.

குப்பன் தொழிலில் இறங்கிய பின் அவனுக்குப் பெண் தர யாரும் முன்வரவில்லை. வருமானம் இல்லை என்பது ஒருபுறம். இத்தொழிலை யாரும் விரும்பவில்லை என்பது இன்னொருபுறம். நாகரீக வளர்ச்சி ஊருக்குள் எட்டிப் பார்த்து இச்சடங்கைக் கேலி செய்யத் தொடங்கி இருந்தது. பழங்காலக் காட்டுமிராண்டிச் செயல் என்பது போன்ற விமர்சனங்கள் ஊர் இளைஞர்கள் மத்தியில் எழத் தொடங்கி இருந்தன.

கடைசியாய் அவன் அப்பன் ஒருமுறை நெருங்கிய உறவுக்காரப் பெண் ஒருத்தியை குப்பனுக்கு மணம் செய்விக்க முயற்சி செய்ய, அவள் “குப்பனுக்கு என்னைக் கட்டி வெச்சீங்கன்னா நாண்டுக்கிட்டு சாவேன். அப்புறம் பொழப்பைப் பார்க்கற வழக்கமா என் பொணத்தை வேணா அவன் என்ன வேணா பண்ணிக்கட்டும்” என ஆவேசமாய்ச் சொன்னாள். அதோடு அவன் அப்பன் தன் முயற்சிகளை நிறுத்திக் கொண்டார்.

கொஞ்ச காலத்தில் செத்தும் போனார். அப்புறம் யாரும் அக்கறைப்படவில்லை.

ராமசாமி அப்பனிடம் சொன்ன “என்ன வேணுமோ” என்பதில் திருமணம் இல்லையோ என நினைத்துக் கொண்டான். அல்லது பிணந்தழுவுபவனுக்கு உயிரோடு பெண்ணைக் கட்டி வைத்தால் கையாளத்தெரியுமா என நினைத்து விட்டாரோ! எப்படி இருந்தாலும் அவனுக்கு அவர் மீது எந்த கோபமும் வெறுப்பும் இருக்கவில்லை. மதிப்பு தான்.

*

ஏழெட்டு ஆண்டுகள் முன் இறந்த பெண்ணின் அண்ணன் - படித்து வெளியூரில் நல்ல வேலையில் இருப்பவன் - பிணந்தழுவுதல் நடந்ததை அறிந்து அது சட்ட விரோதம் எனப் போலீஸில் புகார் அளிக்க, அவர்கள் வந்து பிணத்தைத் தோண்டி எடுத்து, போஸ்ட்மார்டம் செய்து, பெரிய பிரச்சனை ஆனது. குப்பனை ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை எனச் சாதித்தான். கடைசியில் ராமசாமி தலையிட்டு கொஞ்சம் பணம் செலவழித்து விஷயத்தை அமுக்கினார்.

அதிலிருந்து தான் இப்படிப் பிணங்களைப் புதைக்காமல் எரிக்கும் வழக்கம் வந்தது.

அந்தப் பையனின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள். போலீஸுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இனி ஊரில் நிகழும் தற்கொலை போன்ற சாவுகளை முறையாய் போலீஸுக்குச் சொல்லி பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என முடிவானது. அதனால் இயற்கையாய்ச் செத்துப் போகும் கன்னிப் பெண்களுக்கு மட்டுமே பிணந்தழுவுதல் என அரைமனதுடன் ராமசாமி முடிவெடுத்து அறிவித்தார்.

அதிலிருந்து குப்பனின் வேலையும் குறைந்து விட்டது. முன்பெல்லாம் வருடம் ஒரு சடங்கேனும் இருக்கும். இப்போது இரண்டாண்டுக்கு, மூன்றாண்டுக்கு ஒன்று என்றாகி விட்டது. மருத்துவ வளர்ச்சியில் இளவயதில் இயற்கைச் சாவுகள் குறைந்து விட்டன.

குப்பனுக்கும் வேறு வருமானம் இருந்ததால் அது குறித்துக் கவலைப்படவில்லை. அவனுக்கும் தலையெல்லாம் நரை விழுந்து உடல் தளரத் தொடங்கி இருந்தது.

ஓராண்டு முன் ராமசாமி அழைக்கிறார் எனச் சொன்னதும் போய்ப் பார்த்தான் குப்பன்.

“ஏன் குப்பா, உனக்கப்புறம் தொழிலை யார் கவனிக்கறது?”

“தெரியலைங்கய்யா.”

“யாராச்சும் ஒருத்தர் செஞ்சு தானே ஆகனும், குப்பா!”

“ஆனா இப்ப எல்லாம் சடங்கு நடக்கறதே கம்மி ஆகிடுச்சுங்களேய்யா!”

“ஆனா அததுக்குனு ஆள் இருக்கனும்ல. உனக்கும் வயசாகுது.”

“…”

“நான் ஒரு யோசனை சொல்றேன் கேக்கறியா”

“சொல்லுங்கய்யா”

“கஷ்டப்படற நம்ம பயலுக யாராவது வீட்ல இருந்து ஒரு பையனைத் தத்தெடு.”

“ஐயா…”

“என்ன?”

“இப்படி திடுதிப்புனு கேட்டா ஒண்ணும் சொல்லத் தோணலைங்கய்யா.”

“சரி, யோசி. ஒரு வாரம், பத்து நாள்ல பதில் சொல்லு”

தயக்கமாய்த் தலையாட்டினான் குப்பன்.

“நம்ம தேனப்பன் மகன் சரியான வருவானா? விளைச்சல் இல்லாம நஷ்டத்துல தான் இருக்கான். அவன் குடும்பத்துக்கு உதவுனாப்லயும் ஆச்சு, நம்ம வேலையும் ஆச்சு.”

“ஐயா, அந்தப் பையன் ஸ்கூலுக்குப் போறானுங்களே?”

“அதெல்லாம் பாத்துக்கலாம் குப்பா. ஒத்த ஆளை விட ஊர் தான முக்கியம்!"

குப்பனின் தோளில் கைப் போட்டு அழுத்தினார். தன் அப்பனிடம் முப்பது வருடம் முன் ராமசாமி இளந்தாரியாய்ப் பேசின காட்சி நினைவுக்கு வந்தது குப்பனுக்கு.

"விட்றக் கூடாதப்பா, நம்ம வழக்கத்தை. அதும் என் காலத்துல."

அப்பன் சொன்ன கதைகள் நினைவுக்கு வந்தன. குப்பனின் ஓட்டனுக்குக் குழந்தை இல்லை. அது வெள்ளைக்காரர் காலம். ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நிதி வசூலித்து மதராஸ் மாகாணத்திலிருந்து காசு கொடுத்து ஒரு நடன மங்கையை ஊருக்கு வரவழைத்து ஓராண்டு ஓட்டனோடு இருக்கச் செய்து ஆண் குழந்தை பெற வைத்திருக்கிறார்கள். குப்பனும் அப்பனும் அப்படி ஆட்டக்காரி பெற்ற பரம்பரை தான். அதற்கும் சில தலைமுறைகள் முன் ஒருவருக்கு ஐந்தும் பெண் மகவுகளாக இருக்க, ஊர் கூடி இரண்டாம் மணம் செய்வித்து ஆண் பிள்ளை பெறச் செய்திருக்கிறார்கள்.

இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் தத்தெடுக்கச் சொல்கிறார்கள்.

குப்பனுக்கு மனம் ஒப்பவில்லை. அதனால் சரியாகப் பதில் சொல்லாமல் நழுவி வந்தார். ராமசாமியும் பார்க்கும் போதெல்லாம் விடாமல் நினைவூட்டியே வந்தார்.

போன வாரம் சனிக்கிழமை சந்தையில் பார்த்த போது இதையும் சொல்லி விட்டார் -

“பையனை வளர்த்து ஆளாக்க உனக்கு மொடையா இருந்தா அந்தப் பொறுப்பை ஊர் பார்த்துக்குமப்பா. நீ அடையாளத்துக்கு உம் புள்ளைன்னு வெளிய சொல்லு, போதும்.”

குப்பன் சங்கடத்துடன் சிரித்துக் கொண்டானே ஒழிய பதில் ஏதும் சொல்லவில்லை. தன்னைப் போல இன்னொருவன் வாழ்வும் அழிவதில் அவனுக்கு விருப்பமில்லை.

*

வொர்க் ஷாப்பில் வேலை முடித்து சைக்கிள் எடுக்கும் போது தான் அவனுக்கு சேதி கிடைத்தது. ராமசாமியின் பேத்தி ரம்யா என்றதும் சற்றுத் திடுக்கிட்டுத் தான் போனான் குப்பன். எல்லோருக்கும் நீதி சொன்ன அவர் வீட்டிலேயே தொழிலுக்குத் தான் போக வேண்டி வந்து விட்டதே எனச் சற்று வருத்தமாய்த் தான் இருந்தது.

அந்தப் பெண்ணைத் திருவிழாவிலும் சந்தையிலும் ஓரிரு முறை தெருவிலும் பார்த்திருக்கிறான். அழகான, செழிப்பான பெண். அவளுக்கு இருக்கும் காதோரப் பூனை மயிர் எல்லாம் நம் பக்கத்துப் பெண்களுக்கே கிடையாது என நினைத்துக் கொள்வான். சீக்கிரத்தில் கல்யாணமாகி வயிற்றைத் தள்ளி இருக்க வேண்டியவள்.

பல்வேறு யோசனைகளியே மெல்ல சைக்கிள் மிதித்தபடி இருட்டத் தொடங்கிய வேளையில் ஊர் வந்து சேர்ந்தான் குப்பன். சடங்குக்குக் தேவையான எலுமிச்சம் பழம், தேங்காய், வாழைப்பழம், கற்பூரம், ஊதுபத்தி, தீப்பெட்டி, விபூதி, குங்குமம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டான். அவன் ஏதும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. போய் நின்றதுமே கடையில் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுத்து விட்டார்கள்.

குப்பன் வீட்டினுள் நுழைந்ததும் அழுது அடங்கி பொரணி பேசத் தொடங்கி இருந்த ஊர்ப் பெண்கள் எழுந்து கொண்டனர். முணுமுணுத்தபடி கலைந்து சென்றனர்.

ராமசாமிக்கு வணக்கம் வைத்தான் குப்பன். அவன் கண்களில் ஏதும் ஏளனம் உண்டா என்று பார்ப்பதைப் போல் அவனை உற்றுப் பார்த்தார் ராமசாமி. தேசலான விளக்கு வெளிச்சத்தில் ஏதும் தெரியவில்லை. ஆமோதிப்பாய்க் கையசைத்து வைத்தார்.

தன் மணிக்கட்டைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்து விட்டு ராமசாமி சொன்னார் -

“பூசாரி ஒன்பதரை மணிக்கு மேல தான் சடங்கு நடக்கனும்னு நேரங்குறிச்சுக் கொடுத்திருக்கார். இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. குப்பா, சாப்டியா நீ?”

“சடங்குக்கு முன்ன சாப்பிடறதில்லங்கய்யா. முடிச்சு வீடு போய் பாத்துக்குவேன்.”

ராமசாமி ஏதும் பேசவில்லை. வீட்டு ஆட்களின் பக்கம் திரும்பிக் கண் காட்டினார்.

சுந்தரம் உட்பட நான்கைந்து ஆண்கள் கண்ணாடிப் பெட்டியைத் திறந்து, பிணத்தை எடுத்துப் பக்கத்து அறைக்கு எடுத்துச் சென்று கோரைப் பாயை விரித்துக் கிடத்தினர்.

சுந்தரம் ரம்யாவின் தோள்களைப் பிடித்துக் கொண்டு வந்தான். உடல் துவண்டாலும் இன்னும் உயிர் இருப்பது போலவே அத்தனை பொலிவாய் இருந்தது அவளது முகம்!

ஆண்கள் எல்லோரும் அறையை விட்டு வெளியேறி விட ரம்யாவின் அம்மாவும் வீட்டுப் பெண்களும் உள்ளே சென்று புதுப் புடவை கட்டி விட்டு, பூச்சூடி அவளை அலங்கரித்தனர். கிட்டத்தட்ட முதலிரவுக்குத் தயாராவது போலவே அந்த இறுதி இரவுக்கும் தயாராக வேண்டும். உடலெங்கும் சந்தனம் பூசுவது முக்கிய வழக்கம்.

பிணந்தழுவி எழுந்தவன் உடல் முழுக்க சந்தனம் ஒட்டி இருக்கும். ஒழுங்காய்க் கன்னி கழிந்தது என்பதற்கு அதுவே அடையாளம். மேலும் உறுதியான அடையாளம் தேடி திருப்திப்பட்டுக் கொள்பவர்களும் உண்டு என்றாலும் சந்தனம் மாறாவழக்கு.

எல்லாம் முடிந்து பெண்கள் வெளியே வந்தனர். ரம்யா அம்மா கண்ணெல்லாம் நீர் கொண்டிருந்தாள். அக்காள் முறைக்காரி ஒருத்தி அவளை ஆறுதலாய் அதட்டினாள்.

“என்னத்துக்கு அழுகை இப்போ? அழுததெல்லாம் போதும். நம்ம ரம்யாவுக்கு நல்ல மோட்சம் கிட்டத் தானே எல்லாம் ஏற்பாடு பண்றோம். இப்ப அழுதா சாமி குத்தம்.”

குப்பன் மௌனமாய் அங்கே நின்றிருந்தான். பெண்கள் எல்லோரும் கிளம்பினர்.

ராமசாமி பெரிய தாம்பாளத் தட்டில் தயாராய் வைத்திருந்த புது வேட்டி சட்டையின் மேல் பழம், வெற்றி பாக்கு வைத்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து நீட்டினார். குப்பன் அவரை வணங்கி விட்டு அந்தத் தட்டை வாங்கிக் கொண்டான்.

எல்லோரும் கிளம்பலாம் என ராமசாமி சைகை செய்தார். மீதமிருந்த ஆண்களும் காலை தயாராக வேண்டிய நேரத்தைக் கேட்டுக் கொண்டு கலையத் தொடங்கினர்.

குப்பன் தட்டிலிருந்து பணத்தை மட்டும் எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அறைக்குள் நுழையத் தயாரானான். ராமசாமி போயிருந்தார். கடைசியாய் வெளியேறிக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு திடீரென அந்த யோசனை வந்தது.

ரம்யாவின் செல்ஃபோனைப் பார்த்தான். முக்கால்வாசிக்கு மேல் சார்ஜ் இருந்தது. யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு மெல்ல நகர்ந்து பிணம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குப் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை சற்று விலக்கி செல்ஃபோன் கேமெராவை உயிர்ப்பித்து, பிணத்தைக் கோணம் பார்த்து வைத்தான்.

*

குப்பன் உள்ளே நுழைந்து கதவை சாத்தித் தாளிட்டான். ரம்யா கீழே கிடத்தி வைக்கப் பட்டிருந்தாள். கையிலிருந்த சாமான்களை ஓரமாய் வைத்து விட்டு அவளை நோக்கி நடந்து அவள் கால்புறமாய் நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்கினான்.

பிறகு எழுந்து சரசரவென வேலையைத் தொடங்கினான். தேங்காய் எடுத்து உடைத்து நீரை ஒரு சொம்பில் பிடித்து அதை அறையைச் சுற்றித் தெளித்தான். பிறகு கொண்டு வந்திருந்த சிறிய விபூதிப் பொட்டலத்தை உடைத்து தட்டில் கொட்டி விட்டு கற்பூரம் கொளுத்தி அவளை நோக்கி கடிகாரச்சுற்றில் மூன்று முறையும் கடிகார எதிர்ச்சுற்றில் மூன்று முறையும் காட்டினான். அதை அவள் காலடியில் வைத்து விட்டு ஊதுபத்தி கொளுத்தி அதையே அதே போல் அவளை நோக்கிக் காட்டி விட்டு, வாழைப்பழச் சீப்பில் ஒன்றின் முனைத்தோல் உரித்து அதில் குத்தி விபூதித் தட்டருகே வைத்தான்.

விபூதியும் குங்குமமும் எடுத்து ஏற்கனவே சந்தனம் பூசிக் காய்ந்திருந்த அவள் நெற்றியில் பூசினான். தன் நெற்றியிலும் பட்டையாய் விபூதி பூசிக் கொண்டான்.

பிறகு எழுந்து நின்று ரம்யாவின் பிணத்தையே சற்று நேரம் பார்த்தான். அப்போது அவள் கண்களில் அசைவு இருந்தாற் போல் பட்டது. பிணங்களில் உயிர்ப்பைத் தேடும் தன் பிரமையை நினைத்து விரக்தியாய்ச் சிரித்துக் கொண்டான் குப்பன்.

தன் சட்டையைக் கழற்றி அருகில் இருந்த நாற்காலியின் மீது போட்டான். தன் மீது மெல்லிய வேர்வை வீச்சத்தை உணர்ந்தான். வேட்டியை மடித்துக் கட்டினான். பிறகு சுற்றிப் பார்த்து சுவற்றில் இருந்த ஸ்விட்ச்போர்ட் பக்கம் வந்து விளக்கைணைத்தான்.

*

சுமார் ஒரு மணி நேரம் போயிருக்கும். அறையின் தாழை நீக்கி விட்டு வெளியே வந்தான் குப்பன். அவன் முகம் முழுக்க வேர்த்திருந்தது. கதவை வெளியே சாத்தித் தாழிட்டு விட்டு வேகமாய் நடந்து வெளியேறினான். அவன் முகம், கை, கால் என எல்லாவற்றிலும் சந்தனம். அவன் சென்ற பின்பும் அவ்விடத்தில் சந்தனம் கமழ்ந்தது.

அதை நுகர்ந்தது அப்போது வரையிலும் விழித்துக் காத்திருந்த சுந்தரம் மட்டும் தான்.

பிணந்தழுவி முடிந்ததும் ஏதும் பேசாமல் போய் விடுவார்கள். சாமி மலையேறுவது போலத் தான். பிறகு அடுத்த நாள் காலை தான் கதவைத் திறந்து பார்க்க வேண்டும். அதுவும் சங்கடம் தவிர்க்க பெண்கள் தான் முதலில் போய்த் திறந்து பார்ப்பார்கள்.

அவன் சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்துக் கொண்டே அந்த அறையை அணுகி பக்கவாட்டு ஜன்னலில் லாவகமாய்க் கை விட்டு செல்பேசியை எடுத்தான். வேகமாய் பின்புறம் இருந்த கழிவறைக்குள் சென்று கதவை மூடினான்.

மூச்சு வாங்கியது. செல்ஃபோன் திரையைப் பார்த்தான். இன்னும் வீடியோ பதிவாகிக் கொண்டு தான் இருந்தது. அதை நிறுத்தியதும் சேமிப்படையத் தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலான வீடியோ என்பதால் அதற்குச் சற்று நேரம் பிடித்தது.

டவுனிலிருந்து வரும் அவன் நண்பர்களின் செல்ஃபோன்களில் எத்தனையோ கலவி வீடியோ பார்த்திருக்கிறான். அவனும் அப்படி ஒரு செல்ஃபோன் வாங்க வேண்டும் என நினைத்துக் கொள்வான். மாலை இழவு சேதி கேட்டு இங்கு வந்து ரம்யாவின் செல்பேசியைப் பார்த்ததும் நாமே வைத்துக் கொள்ளலாம், தாத்தா என்ன கேட்கவா போகிறார்! என்று தான் நினைத்தான். இப்போது தானே வீடியோ எடுத்து விட்டதை நினைத்துப் பூரித்தான். அதுவும் வழக்கமான ஒன்றல்ல; காணக் கிடைக்காதது.

வீடியோ சேமிப்படைந்து முடிந்ததும் கை நடுக்கத்துடன் அதை ஓட்டிப் பார்த்தான்.

ரம்யா கீழே கிடத்தி வைக்கப்பட்டிருந்தாள். குப்பன் உள்ளே நுழைந்து கதவை சாத்தித் தாளிட்டான். கையிலிருந்த சாமான்களை ஓரமாய் வைத்து விட்டு அவளை நோக்கி நடந்து அவள் கால்புறமாய் நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்கினான்.

பிறகு எழுந்து தேங்காய் எடுத்து உடைத்து நீரை ஒரு சொம்பில் பிடித்து அறையைச் சுற்றித் தெளித்தான். - அசுவாரஸ்யமாய் வீடியோவைத் தள்ளி வைத்தான் சுந்தரம்.

விபூதி எடுத்து அவள் நெற்றியில் பூசினான். தன் நெற்றியிலும் பூசிக் கொண்டான்.

பிறகு எழுந்து நின்று ரம்யாவின் பிணத்தையே சற்று நேரம் பார்த்தான். மெல்லிசாய் சிரித்துக் கொண்டான். தன் சட்டையைக் கழற்றி அருகில் இருந்த நாற்காலியின் மீது போட்டான். வேட்டியை மடித்துக் கட்டினான். பிறகு சுற்றிப் பார்த்து சுவற்றில் இருந்த ஸ்விட்ச்போர்ட் பக்கம் வந்து… அவ்வளவு தான். இருள் சூழ்ந்தது. முற்றிலும் இருள்.

இந்தச் சடங்கை விளக்கணைத்துத்தான் நிகழ்த்துவார்களா! வீடியோ ஓடும் முள்ளைத் தள்ளித் தள்ளி முழு ஒரு மணி நேரமும் வைத்துப் பார்த்தான். ம்ஹூம். எதுவும் இல்லை அதில். அட்சர சுத்தமாய் இருள். கடைசியாய் செல்ஃபோனை சுந்தரம் கையில் எடுத்த பிறகான ஓரிரு நிமிடம் மட்டும் வெளிச்சத்தில் பதிவாகி இருந்தது.

ஏமாற்றமாய்க் கழிவறைச் சுவற்றில் குத்தினான். பற்களைக் கடித்தபடி செல்ஃபோனை அணைத்து சட்டைப்பையில் போட்டுக் கொண்டு, அடிவயிற்றில் ஒரு மணி நேரமாய் முட்டிய சிறுநீரை எக்கி முக்கிப் பெய்து விட்டு, சுத்தமாயிருந்த பீங்கான் குவளையில் எரிச்சலாய்க் காறி உமிழ்ந்து விட்டு, தண்ணீர் கூட ஊற்றாமல் வெளியேறினான்.

*

மறுநாள் அதிகாலை பெண்கள் எழுந்து தாழிடப்பட்டிருந்த அறைக் கதவைத் திறந்து உள்ளே போய் ரம்யாவைக் குளிப்பாட்டி தயார் செய்தனர். காலையில் சுடுகாட்டில் முதல் பிணமாய் எரித்து விட்டு, வெட்டியான் நீட்டிய நோட்டில் கையெழுத்துப் போட்டு, துணி போட்டு மூடிய ஒரு சட்டியில் ரம்யாவின் சாம்பலை வாங்கிக் கொண்டு, காய்ந்த கண்ணீர்த்தடக் கன்னத்துடன் வீடு வந்து சாய்ந்தார் ராமசாமி.

அன்றிரவு தான் அந்தச் செய்தி வந்து சேர்ந்தது. குப்பன் தன் வீட்டிலேயே தூக்கு மாட்டிக் கொண்டானாம். உள்ளே தாழிட்டுக் கொண்டிருந்ததாலும் உடன் யாரும் இல்லாததாலும் விஷயம் தெரியவில்லை. வழக்கமாக குடிக்க உடன் செல்லும் சோக்காளியான ரத்னம் இரவு போய்க் கதவு தட்டிய போது தான் பதிலில்லாததால் சந்தேகப்பட்டு கதவை உடைத்திருக்கிறார்கள். பார்த்தால் விட்டத்தில் கயிறு மாட்டி தொங்கிக் கொண்டிருந்திருக்கிறான். அப்போதே பிணம் வாடை அடிக்கத் தொடங்கி விட்டதாம். குப்பனின் வேட்டி முழுக்க மலமும் மூத்திரமும் சுக்கிலமும் பரவி இருந்ததாம். உடம்பு முழுக்கப் பரவிக் காய்ந்திருந்த சந்தனத்தால் கூட அவற்றின் வீச்சத்தை மட்டுப்படுத்த முடியவில்லை எனக் கண்டவர்கள் அங்கலாய்த்தனர்.

அனேகமாய் முந்தைய இரவு பிணந்தழுவி விட்டு ராமசாமி வீட்டிலிருந்து அங்கே திரும்பிய சிறிது நேரத்திலேயே நடந்திருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர்.

ராமசாமிக்கு ஏதும் புரியவில்லை. சுந்தரத்தை அழைத்து விசாரித்து வரச் சொன்னார்.

சுந்தரம் கேட்டதும் வெலவெலத்து விட்டான். சட்டை அணிந்து கிளம்பினான். பிறகு ஏதோ யோசனை வந்தவனாய் அணைத்து வைத்திருந்த ரம்யாவின் செல்ஃபோனைத் தேடி எடுத்து உயிர்ப்பித்து முந்தைய இரவு பதிவு செய்த வீடியோவை ஓடவிட்டான்.

இருள் பகுதி வந்ததும் சத்தத்தை உச்சமாக்கி காதில் வைத்துக் கொண்டவன் சற்று நேரத்தில் அதிர்ந்தான். சந்தேகத்தில் மீண்டும் வீடியோவை முன்னோட்டிக் கேட்டான்.

ரம்யாவின் குரல் பலகீனமாய் ஒலித்துத் தேய்ந்தது அதில் துல்லியமாய்க் கேட்டது -

“ஐயோ, யாரு நீங்க? வேண்டாம், பயமா இருக்கு. ப்ளீஸ், விட்டுடுங்க. ஐயோ!”

***

Comments

Hari Rahman said…
ஒரு வலிமையான தாக்கம்.. மூளைக்குள் மின்னல்வெட்டியது போன்ற வார்த்தைகள்.. ஒரு சில வரிகளை திரும்ப திரும்ப வாசித்தேன்..
முடிவு பெரிய அதிர்ச்சியைத் தந்தது.. அதிலிருந்து மீள சில நாட்கள் எடுக்கும்..
Anonymous said…
இது போன்ற சடங்குகள் இன்னுமா நடக்கின்றன ? நிச்சயம் ஒரு தாக்கம் தான்.
ஒவ்வொரு வரியும் காட்சிகளாக கண்முன் வந்து சென்றது. அருமை. :-)
படித்து முடித்ததும் உடலில் ஏற்பட்ட நடுக்கம் அடங்க சில மணிநேரமானது. அப்படியொரு அதிர்ச்சியான முடிவு. ஒவ்வொரு வரியும் காட்சியாகவே மூளையில் பதிந்தது.
Mahendran Thiru said…
அருமை... குப்பனின் பாத்திரம் அத்துனை வீரயமானது.
manickam said…
அருமை. முடிவு சுந்தரத்தை போலவே சிலிர்க்க வைத்தது. சரி. இது இன்று எங்கு நடைமுறையில் உள்ளதா என்ன.
Subha shiny said…
அதிர்வலை..அருமை
அருமையான நடை.. ஆரம்பித்ததிலிருந்து கண்களை அகற்றமுடியாத சுவாரஸ்ய கதை நகர்த்தல்.... ஸ்ரீவிஜி.
Unknown said…
மீளமுடியவில்லை கதைத்தாக்கத்திலிருந்து...
karunakaran said…
இன்னும் அதிர்ச்சியில் இருண்டு மீளவில்லை. கருணாகரன்
Unknown said…
apa antha ponnu savalaya bro....
கையாளப்பட்ட சொற்கள்... அருமை...
வாசிக்க வாசிக்க சிலிர்க்க வைக்கிறது.
க்ளைமேக்ஸ் சூப்பர்
Raguparan said…
முடிவு எதிர்பாராதது,
சிறந்த கதை,
சடங்குபற்றிய விடயம் வாசித்த முதலே,இம்மாதிரி
சடங்குகள் சமகாலத்தில் உள்ளனவா என்ற சந்தேகத்துடன் தான் மீந்த கதையை படிக்க முடிந்தது.

தவிரவும்,எக்காலமேனும் இம்மாதிரி சடங்குகள் இருப்பதே
பிசகென்றும் தோன்றியது.

கதாபாத்திரங்கள்,அவர்கள் சுபாவத்தை அவர்கள் வாய்
வழியே வாசகர்களுக்கு கடத்துவதில் ஆசிரியர் கதுக்காய்
இருந்துள்ளார்.

கையாளப்பட்ட சொற்கள் , முக்கியமாய் சுளிவு ஏற்படா வண்ணம் " சுக்கலம் " என்ற சொல் உபயோகம் யாவும் சிறப்பு.
Antony Vincent said…
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசிக்க ஆரம்பித்தேன். தெளிவான விளக்கம் ஒரு இடத்தில் கூட தொய்வு இல்லை. வாசித்து முடித்ததும் ஒருவித படபடப்பு. க்ரைம் நாவல் மாதிரியான ஒரு திகில் கடைசியில். Superb CSK
Anonymous said…
It tooks a hour to understand climax....hits hard🥺
P.jayabalan said…
இப்படி ஒரு வித்தியாசமான கதைக்களத்தை நான் எந்த சிறுகதையிலும் இதுவரை படித்ததில்லை கதையோட்டம் தங்கு தடை இன்றி செல்கிறது தெளிந்த நீரோடை என்பதற்கு இந்த சிறுகதையே சாட்சி கணையாழி போன்ற நவீன இலக்கிய பத்திரிகைகளில் இது போன்ற வித்தியாசமான கதைகளை நான் படித்திருக்கிறேன் எனினும் இதைப் போன்ற ஒரு கதைக்களத்தை நான் இப்போதுதான் அறியப்பெறுகிறேன் பிணம் தழுவுதல் என்ற விஷயம் உண்மையிலேயே வித்தியாசமான நம்ப முடியாத ஒரு விஷயமாக உள்ளது கதைக்காக இதை பயன்படுத்தி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் எதுவும் எதுவாயினும் உங்கள் எழுத்து வன்மைக்கு நான் தலை வணங்குகிறேன் பாராட்டுங்கள்

Popular posts from this blog

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்