காசு பணம் துட்டு மொபைல் மொபைல்

சென்ற வார‌ குங்குமம் இதழில் (8.6.2015) வெளியான மொபைல் பேமெண்ட் பற்றிய என் கட்டுரையின் முழு வடிவம்.

*

மதுமிதா. வயது 25. பெங்களூரில் கார்பரேட் ஊழியை. பெருநகரங்களில் தூவிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு துகள். அதே சமயம் நவீனத்தின் பிரதிநிதி. ஆட்டோ சவாரி, தள்ளு வண்டி, பெட்டிக் கடை போன்றவற்றிற்குத் தவிர அவர் கடைசியாய் எப்போது கரன்சி நோட்டை, செக் புக்கை, டெபிட் / க்ரெடிட் கார்டைப் பயன்படுத்தினார் எனக் கேட்டால் புருவம் சுருக்கித் தீவிரமாய் யோசிக்கிறார்.


 தினமும் பயணிக்கும் மெட்ரோ ரயில் டிக்கெட், வார இறுதியில் போகும் சினிமா டிக்கெட், மாதா மாதம் எலக்ட்ரிசிட்டி பில், அவ்வப்போது பயணிக்கும் டேக்ஸி, தீரும் போதெல்லாம் மொபைல் ரீசார்ஜ், சொந்த ஊருக்குப் பஸ் டிக்கெட், ஆன்லைன் ஷாப்பிங் செலவுகள், சென்னையில் கல்லூரி பயிலும் தம்பிக்கு அனுப்பும் பணம் என எல்லாமே இன்று அவர் செய்வது மொபைல் பேமெண்ட்டாகவே. அதாவது தன் ஸ்மார்ட்ஃபோனின் வழியாக இந்தப் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து கொள்கிறார்.

இவர் ஓர் உதாரணம். ஸ்மார்ட்ஃபோன் வருகைக்குப் பிறகு கடந்த ஐந்தாண்டுகளில் உலகம் முழுக்க பாரம்பரிய பணப்பரிவர்த்தனை முறைகள் மெல்லக் காலாவதியாகி வருகின்றன. குறிப்பாய் அமெரிக்காவில் மொபைல் பேமெண்ட் காட்டுத்தீ போல், எபோலா தொற்று போல், நடிகையின் செல்ஃபி போல் வேகமாய்ப் பரவி வருகிறது.

மனித குலம் தோன்றிய காலம் முதல் பணம் என்னென்ன அவதாரங்களை எடுத்து உள்ளது எனச் சுருக்கமாகப் பார்க்கலாம். விவசாயம் மட்டுமே இருந்த காலத்தில் முதலில் பண்ட மாற்று தான் பணப் பரிவர்த்தனை முறை. அரிசிக்கு பருத்தி, பருப்புக்குக் கிழங்கு என. பிறகு உலோகவியல் உருப்பெற்றதும் பொன், வெள்ளி போன்றவை பணமாகப் பயன்பட்டன. சுரங்கவியல் தோன்றியதும் ரத்தினங்களும் இதில் சேர்த்து கொண்டன. பிறகு நாணயங்கள் உருவாக்கப்பட்டன. நீண்ட காலமாக இதுவே பணமாக நிலைபெற்றிருந்தது. பிறகு காகிதத் தொழில்நுட்பம் வந்ததும் கரன்ஸி நோட்டுகள் வந்தன. இன்றும் நாணயங்களும் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கின்றன. பிறகு வங்கிகள் முதிரத் துவங்கியதும் செக், டிடி என வசதிக்கேற்ப முறைகள் உருவாயின. கணிப்பொறியியல் வளர்ந்ததும் ஏடிஎம் கார்ட்கள், டெபிட் கார்ட்கள், க்ரெடிட் கார்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் இணையம் வந்ததும் ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் வந்தன. பிறகு அதற்கும் ஒருபடி மேலே போய் பணத்தையே மறுதலித்த மாற்று பணமான பிட்காயின் போன்றவை வந்தன.

இன்று உலகமெங்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் பெருக்கத்தைத் தொடர்ந்து மேற்சொன்ன எல்லாமே பின்னுக்குத் தள்ளப்பட்டு மொபைல் பேமெண்ட் முறைகள் அவ்விடத்தைப் பிடிக்கத் துவங்கி உள்ளன. நீங்கள் கவனித்தால் தெரியும் பணத்தின் பரிணாம வளர்ச்சி என்பது விஞ்ஞானத்தின் வளர்ச்சியுடன் கைகோர்த்தே நிகழ்ந்திருக்கிறது!

மொபைல் பேமெண்ட் என்பது என்ன? கரன்சி / செக் / கார்ட் எதுவும் இல்லாமல் செல்பேசியின் வழியாகவே பணத்தைச் செலுத்துவது தான் மொபைல் பேமெண்ட் எனப்படுகிறது. இதில் முக்கிய விஷயம் இரு தரப்பிலுமே கார்ட் எண் அல்லது வங்கிக் கணக்கு விபரங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.

மொபைல் பேமெண்ட் என்பது நான்கு வெவ்வேறு முறைகளில் செயல்படுகிறது.

ஒன்று எஸ்எம்எஸ் மார்க்கம். உங்கள் மொபைல் நிறுவனம் குறிப்பிட்ட சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செaய்திருக்கும் (உதாரணமாய் மின்சார வாரியம்). நீங்கள் மொபைல் பேமெண்ட் வழி மின் கட்டணம் செலுத்த முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு மாதா மாதம் மின் கட்டணத்தை செலுத்த குறிப்பிட்ட எண்ணுக்கு குறிப்பிட்ட சொல்லுடன் தொகை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். மொபைல் நிறுவனம் மின்வாரியத்தின் கணக்குக்கு உங்கள் பெயரில் தொகையைச் செலுத்தி விடும். அடுத்த மாத மொபைல் பில்லில் அந்தத் தொகையை சேர்த்து விடுவார்கள் (ப்ரிபெய்ட் எனில் உங்கள் பேலன்ஸில் கழித்துக் கொள்வர்).

அடுத்தது இதிலேயே இன்னும் கொஞ்சம் நேரடியான பணம் செலுத்தும் முறை. எஸ்எம்எஸ் அனுப்புவதற்குப் பதிலாக குறிப்பிட்ட சேவையாளரின் (உதா: பேருந்து முன்பதிவு) தளத்துக்குப் போய் மொபைல் பேமெண்ட் முறையைத் தேர்ந்ததும் இன்னார் தான் பணம் செலுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த ஒரு முறை மட்டுமே செல்லுபடியாகும் கடவு எண் (OTP – One Time Password) ஒன்று உங்கள் செல்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அத்தளத்தில் இதை உள்ளிட்டால் கட்டணம் செலுத்தப்பட்டு விடும். பிறகு முந்தைய முறையைப் போலவே உங்களிடமிருந்து மொபைல் நிறுவனம் பணத்தை வசூலித்துக் கொள்ளும்.

மூன்றாவது முறை ஆன்லைன் வாலட். வாலட் என்பது பணப் பையைக் (பர்ஸ்) குறிக்கும் ஆங்கிலச் சொல். உங்கள் வங்கி எண் அல்லது க்ரெடிக் கார்ட் தொடர்பான தகவல்களை இந்த ஆன்லைன் வாலட் நிறுவனத்திடம் கொடுத்து ஒரு கணக்கைத் துவக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வலைதளம் / செயலி மூலம் பணம் செலுத்த வேண்டி வந்தால் அங்கே இந்த ஆன்லைன் வாலட்டைத் தேர்ந்தால் போதுமானது. இதிலும் ஒரு முறை மட்டுமே செல்லுபடியாகும் கடவு எண்ணோ உங்களுக்கு மட்டுமே தெரிந்த பின் நம்பரோ (PIN) உள்ளிட்டால் தான் பணப்பரிவர்த்தனை பூர்த்தியாகும். இன்று மொபைல் பேமெண்ட்டில் மிகப் பிரபலமாக இருக்கும் முறை இதுவே. பேபால், கூகுள் வாலட் என பல நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு வருகின்றன.

நான்காவது மொபைல் பேமெண்ட் முறை NFC (Near Field Communication). இது போல் இரு கருவிகள் சம்பாஷித்துக் கொள்ளும் தொழில்நுட்பம். கிட்டத்தட்ட உங்கள் மொபைலையே புறரீதியாகவும் கார்ட் போலவே பயன்படுத்தும் முறை இது. ஆன்லைனில் அல்லாமல் நீங்கள் பணம் செலுத்த நேரும் சூழல்களில் இம்முறை பயன்படும். இதிலும் மேற்சொன்ன முறை போல் முன்கூட்டியே உங்கள் வங்கிக் கணக்கை அல்லது க்ரெடிட் கார்டை பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கடைக்காரர் NFC தொழில்நுட்பம் செயல்படும் ஒரு சிறுகருவியை (Terminal) வைத்திருப்பார். க்ரெடிட் கார்ட் தேய்க்க கடைகளில் வைத்திருக்கும் இயந்திரத்திற்கு ஒப்பானது இது. நீங்கள் தொகை செலுத்த வேண்டுமெனில் அந்த இயந்திரத்தின் அருகே NFC தொழில்நுட்பம் கொண்ட உங்கள் ஸ்மார்ட்ஃபோனைக் காட்ட வேண்டும். அது இன்ன கணக்கு எனப் புரிந்து கொண்டு அதில் தொகையை எடுத்துக் கொள்ளும். இதிலும் கூட சில இடங்களில் பாதுகாப்புக்காக PIN உள்ளிட வேண்டி இருக்கும்.

ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களில் நீண்ட காலமாகவே NFC வசதி இருந்தாலும் (கூகுள் வாலட் இந்த முறையிலும் செயல்படும்) ஐஃபோன் 6-ல் ஆப்பிள் பே என்ற பெயரில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதும் தான் இந்த மொபைல் பேமெண்ட் முறை பரவலாய்ச் சூடு பிடித்திருக்கிறது. இது PINக்குப் பயனரின் பதிலாக கை ரேகையைப் பயன்படுத்துவதால் கூடுதல் பாதுகாப்பு கொண்டிருக்கிறது. தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் சாம்சங் பே என்ற பெயரில் களத்தில் குதித்திருக்கிறது.

இந்தியாவில் திரையரங்கக் குழுமமான பிவிஆர் நிறுவனம் இரு ஆண்டுகளுக்கு முன்பே ப்ளாக்பெரி நிறுவனத்துடன் இணைந்து இதை அறிமுகம் செய்தது. எல்லா நிறுவனங்களும் இந்த மொபைல் பேமெண்ட் வளர்ச்சியின் மூலம் எப்படிப் பணத்தை அள்ளலாம் எனத் திட்டமிட்டு வருகின்றன. ஃபேஸ்புக்கும் விரையில் தனது சொந்த மொபைல் பேமெண்ட் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

2013ம் ஆண்டின் முடிவில் 24.5 கோடி பேர் உலகெங்கிலும் மொபைல் பேமெண்ட் வசதியைப் பயன்படுத்துபவர்களாய் இருந்தனர். 2017ல் இது இரு மடங்காகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மட்டும் சுமார் 500 பில்லியன் டாலர் பணப் பரிவர்த்தனை மொபைல் பேமெண்ட் மூலம் நடந்துள்ளது. அமெரிக்காவில் இதன் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் ஒப்பீட்டளவில் அத்தனை வேகமில்லை என்றாலும் சீரான அதிகரிப்பு இருக்கிறது.

மொபைல் பேமெண்ட் என்றதும் படித்தவர்கள், நகர்ப்புறத்தவர்கள் தான் இதனைப் பயன்படுத்துவர் வேண்டும் என்ற தொனி வரக்கூடும். ஆனால் உண்மையில் பாமரர்கள், கிராமப்புறத்தினருக்கு இதன் பயன் இன்னும் கூடுதலானது. மொபைல் பேமெண்ட் வசதி என்பது தொடங்கியதன் பிரதானக் காரணங்களில் ஒன்று அதன் வசதி என்பதைத் தாண்டி வங்கிக் கணக்கு, க்ரெடிட் கார்ட் போன்ற விபரங்களை சில்லறை வணிகங்களில் ஈடுபடுகையில் அனாவசியமாய்ப் பகிரத்தயங்கியது தான்.

மொபைல் பேங்கிங் - மொபைல் பேமெண்ட் இரண்டுக்குமான முக்கிய வித்தியாசம் நாம் யாருக்கு பணம் செலுத்துகிறோமோ அவருக்கு நம் வங்கிக் கணக்கோ க்ரெடிட் கார்ட் பற்றியோ தெரியாது (சில கேஸ்களில் வங்கிக் கணக்கே சம்மந்தப்படாது).

உலகில் இன்று வயது வந்தோரில் பாதி பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை (2011 சென்சஸ் கணக்குப்படி இந்தியாவில் இது 45.6%). இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வங்கிக் கணக்கு அவசியப்படாதோர், வங்கிக் கணக்குக்குத் தேவையான பணமோ, ஆவணங்களோ இல்லாதவர்கள், வங்கி வசதி நுழைய இயலாத சூழலில் வாழ்பவர்கள். ஆனால் இவர்கள் யாவருக்கும் - சிறிதோ பெரிதோ – தினப்படி பணப் பரிவர்த்தனை என்பது அவசியமானது. இன்று அது முழுக்க கரன்சி நோட்டுக்களை நம்பியே இருக்கிறது. ஆனால் தொலைதூரப் பரிவர்த்தனைகளுக்கு அது உதவாது. இங்கே தான் மொபைல் பேமெண்ட் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

வங்கிகளைப் போல் அல்லாமல் ஸ்மார்ட்ஃபோன்கள் இன்று பட்டி தொட்டி எங்கும் ஊடுருவி விட்டன. அதனால் நகர்புறத்தைப் போல், படித்தவர்கள் போல் ஏடிஎம், ஆன்லைன் பேங்கிங், க்ரெடிடிட் கார்ட், மொபைல் பேங்கிங் எனப் படிப்படியாக முன்னேறாமல் நேரடியாகவே மொபைல் பேமெண்டுக்குள் நுழைந்து விட்டனர்.

இன்னொருபுறம் வங்கிகள் வரவியலா பிரதேசங்களில் மொபைல் பேமெண்ட் மூலமே சில தனியார் நிறுவனங்கள் வங்கிக் கணக்குகள் தொடங்கித் தருவதும் நடக்கிறது. இன்று சென்னையில் பணிபுரியும் ஒரு கூலித் தொழிலாளி பிஹாரில் இருக்கும் தன் மனைவிக்கு மொபைல் பேமெண்ட் மூலம் மாதா மாதம் பணம் அனுப்ப முடிகிறது.



Mobile Payment Forum of India (MPFI) என்ற அமைப்பு இந்தியாவில் மொபைல் பேமெண்ட் குறித்த விதிமுறைகளை உருவாக்கி நெறிப்படுத்தி வருகிறது. கறுப்புப் பணம் போன்றவற்றிற்கு மொபைல் பேமெண்ட்கள் வழிகோலி விடக்கூடாது என்பதற்காக.

மொபைல் பேமெண்ட் முறைகளைப் பின்பற்ற ஆதரவான விஷயங்கள் பலவும் எதிரான சங்கதிகள் சிலவும் உண்டு. செல்ஃபோன் பயனர்களின் எண்ணிக்கை (இன்று உலகம் முழுக்க 130 கோடி க்ரெடிட் / டெபிட் கார்ட்கள் இருக்கின்றன. ஆனால் 500 கோடி பேர் செல்ஃபோன் வைத்திருக்கின்றனர்), வங்கிக் கணக்கற்றவர்களின் எண்ணிக்கை, மொபைல் பேமெண்ட்டின் எளிமை மற்றும் சுலபத்தன்மை, மின் சாதனங்களை பயன்படுத்தும் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கூட்டம் மக்கட் தொகையிலும் செலவுகள் செய்வதிலும் பெரும்பகுதியாய் இருப்பது, இணையப் பயன்பாட்டின் வளர்ச்சி ஆகியன இதற்கு ஆதரவாக இருக்கின்றன. மொபைல் பேமெண்ட் போன்ற விஷயங்களை அறிந்து, ஓரளவேனும் புரிந்து பயன்படுத்துமளவு படிப்பறிவு இல்லாமல் இருப்பது, மொபைல் பேமெண்ட்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள், பல்வேறு செல்ஃபோன் மாடல்களில் மொபைல் பேமெண்ட்கள் இயங்கும் முறை (உதாரணமாய் NFC தொழில்நுட்பம் விலை அதிகமான ஸ்மார்ட் ஃபோன்களில் மட்டுமே உள்ளது) ஆகியன எதிர்மறையாய் அமைந்துள்ளன.

அடுத்த பத்தாண்டுகள் மொபைல் பேமெண்ட் யுகமாய் அமையும். எங்குமே நோட்டுக்களோ, கார்டுகளோ அவசியப்படாது என்பதால் இன்னும் கொஞ்சம் நாட்களில் பர்ஸ் என்ற விஷயமே இல்லாமல் போய்விடக்கூடும். மேக்புக் லேப்டாப்களின் வழி ஆப்பிள் நிறுவனம் சிடியைக் கொன்றதைப் போல் மொபைல் பேமெண்ட் வழி க்ரெடிட் கார்டையும் ஒருநாள் கொன்றிடக் கூடும். யார் கண்டார்!

***

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்