பெண் எழுத்தாளர்கள் - ஒரு விவாதம்

நாஞ்சில் நாடன் ஆனந்த விகடனின் கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்ட நம்பிக்கையூட்டும் இளம் எழுத்தாளர்கள் பட்டியல் பற்றி ஜெயமோகன் சொன்ன கருத்துக்களை (http://www.jeyamohan.in/?p=56339) எழுத்தாளர் சந்திரா ஃபேஸ்புக்கில் கண்டித்திருந்தார் (https://www.facebook.com/chandra.thangaraj.5/posts/10201976355401591). நான் இவ்விஷயத்தில் ஜெயமோகம் பக்கம் தான். அது குறித்து சந்திராவுடன் அந்தப் பதிவில் நிகழ்த்திய விவாதத்தை இங்கே பதிகிறேன்.


Chandra Thangaraj : பெண்களை பொதுவிலும் தனியிலும் அவமதிக்கும் செயல் மிகக்கொடூரமானது. பெண் எழுத்தாளர்கள் குறித்து ஜெயமோகன் எழுதிய விசயங்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை. அவரது பட்டியலில் என் பெயர் இடம்பெற்றிருந்தாலும் பெண் எழுத்தாளர்கள் குறித்த அவரது நிலைப்பாட்டால் அதை நான் மறுத்தலிக்கிறேன்.தார்மீக ரீதியாக என் எதிர்ப்பை பதிவுசெய்கிறேன்.

Saravanakarthikeyan Chinnadurai : ஜெமோ சொல்வது அவமானப்படுத்ததும் நோக்கில் அல்ல என்பதே என் புரிதல். அது ஒரு ஃபேக்ட். குறைந்தபட்சம் அவரது நேர்மையான அவதானிப்பு. பெண் என்ற காரணத்தால் நிறையப் பேருக்கு ஊடகங்களில் சுலபமாய் ஸ்பேஸ் கிடைத்து விடுவது உண்மை தானே? அவர்களில் சிலர் மெடியாக்கர் படைப்பளிகளே. அதே அளவு திறமையுடன் இருக்கும் ஆண் நுழைந்திருக்க முடியாத இடத்தில் அவர்கள் எளிமையாக சம்மணமிட்டு அமர்ந்திருக்கின்றனர். அங்கீகாரம் பெறுகின்றனர். அது பாரபட்சமான அணுகுமுறை அல்லவா? அப்படி நடப்பதே இல்லை எனச் சொல்வீர்களா?

Chandra Thangaraj : பெண் எழுத்தாளர்கள் மீடியாவில் அப்படி எங்கே சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? மீடியா அப்படியே பயன்படுத்தினாலும் பெண் குரல்கள் பொதுவெளிக்கு தேவைதானே. எத்தனை பெண் எழுத்தாளர்கள் எழுத்தால் பெண் என்ற காரணத்தால் குறுக்கு வழியில் பிரபலமாகி வீடு, கார், பதவி,புகழ் என்று புகழ் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

Saravanakarthikeyan Chinnadurai : தமிழ் மீடியாவில் பிரபலமாவதன் மூலம் மல்ட்டிப்ளெக்ஸ் இண்டர்வெலில் பாப்கார்ன் கூட வாங்க முடியாது. நான் சொல்வது பணமோ அதிகாரமோ அல்ல. வாய்ப்பு. பிரசுரமாகவும், வாசிக்கபப்டவும், கவனிக்கப்படவும் ஒருவருக்கு கிட்டும் வாய்ப்பு. மிக எளிமையாகச் சொன்னால்: ஒரே அளவு சுமாரான திறமை கொண்ட இரு படைப்பாளிகள் இருந்தால் அதில் பெண்ணின் எழுத்து பிரசுரம் ஆகவும் அதற்கு visibility அதிகம் கிடைக்கவும் தான் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதே என் புரிதல் + அனுபவம். நேரடி பெயர்கள் சொல்ல விருப்பம் இல்லை. இந்தச் சூழல் கூட இல்லை என்கிறீர்களா? ஆணோ பெண்ணோ திறமை மட்டுமே தான் அங்கீகாரம் பெறக் காரணம் என்கிறீர்களா தமிழில் இருக்கும் அத்தனை பேருக்கும்? (பணத்தின், செல்வாக்கின் வாயிலாக அங்கீகாரம் பெற்றவர்களை விட்டு விடலாம். அது இரு பாலினத்திலும் உண்டு. நான் சொல்வது மற்றவர்கள்.)

Saravanakarthikeyan Chinnadurai : //மீடியா அப்படியே பயன்படுத்தினாலும் பெண் குரல்கள் பொதுவெளிக்கு தேவைதானே.// இதைத் தான் சொல்கிறேன். தேவையா இல்லையா என்பது அடுத்த விவாதம். தரம் என்பதைத் தாண்டி பெண் குரலுக்கு பெண் குரல் என்பதற்காகவே முக்கியத்துவம் இருக்கிறது என்பது நடைமுறை உண்மை. அதைத் தான் ஜெமோ சொல்கிறார். நானும் அப்படி இருக்கிறதாகவே உணர்கிறேன்.

Chandra Thangaraj : என்னோட 22 வயதில் எழுதிய கதை ”புளியம் பூ”, நான் எழுதிய இரண்டாவது கதை அது. ஒரு நாளிதழில் முத்திரைக் கதையாக செலக்ட் செய்யப்பட்டது. ஆனால் கடைசிவரை அந்த இதழ் வெளியிடவில்லை. எனக்கு எழுதுவதில் இருந்த ஆர்வம் போய்விட்டது. பத்திரிகை,சினிமா பணியில் கவனத்தை திருப்பிவிட்டேன். மீண்டும் என்னுடைய 27 வது வயதில் கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து அந்தக் கதை காலச்சுவடில் புதுமைபித்தன் நினைவுச் சிறுகதையில் இரண்டாம் பரிசைப் பெற்றது. அந்தப் போட்டிக்கு கதை அனுப்பும்போது பெயரிடப்படாமல் வெறுமனே தொலைபேசி எண்ணை மட்டுமே குறிக்கச் சொல்லியிருந்தார்கள். நான் யார் என்று தெரியாமல்தான் நடுவர்கள் என் கதையைத் தேர்ந்தெடுத்தார்கள். பின் தொடர்ந்து விடாமல் கதைகள் எழுதினேன். உண்மையில் ஒரு ஐந்து வருடம் நான் பெண் என்பதாலே பின்தங்கிவிட்டேன் என்பது உண்மை. நான் பெண் என்பதால் சினிமாவில் எத்தகைய போராட்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை வேறு விளக்க வேண்டுமா?

Saravanakarthikeyan Chinnadurai : துரதிர்ஷ்டவசமாக நீங்கள் ஒருவர் மட்டுமே உலகம் இல்லையே சந்திரா! அது ஒரு பொதுவான கருத்து. அந்தக் கருத்து பெரும்பான்மைக்குக் கூட பொருந்த வேண்டும் என்பதில்லை. குறிப்பிடத் தகுந்த அளவு கணிசமான அளவில் நடக்கிறது என்பது தான் சொல்ல வருவது. ஜெமோ கூட உங்களைத் தன் பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் அதில் நீங்கள் இல்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம் தான். விரல் நீட்டப்படுவது உங்களை நோக்கியோ பொதுவாக பெண் படைப்பாளிகளை நோக்கியோ அல்ல. பெண் என்ற லைசென்ஸுடன் தகுதிக்கு மீறி எளிதாக வாய்ப்பு பெற்றவர்களைப் பற்றி மட்டும் தான்.

Saravanakarthikeyan Chinnadurai : இன்னொரு விஷயம் பெண் என்பதால் வாய்ப்பு தரப்படுகிறது என்றால் ஆபாசமான பொருள் எடுக்க வேண்டியதே இல்லை. அது அந்த குறிப்பிட்ட ஊடகத்தில் பெண் எழுத்து வந்தால் நல்லது என்ற நினைப்பில் எடுக்கப்பட்ட முடிவாகவும் இருக்கலாம். அல்லது பெண்கள் இவ்வளவு பங்கு எடுக்க வேண்டும் என்பதன் காரணமாகவும் இருக்கலாம். அல்லது பொதுவாக பெண் எழுத்து என்பதன் மீதான மாய மரியாதையாகவும் இருக்கலாம். விஷயம் அது அந்தப் பிரதியின் தனிப்பட்ட தகுதி தாண்டி, பெண் குரல், பெண்ணிய கருத்து, பெண் எழுத்து என்கிற லேபிள்களுக்காக ஏற்கப்படுவதும் அங்கீகரிக்கப்படுவதும் பற்றியது.

Chandra Thangaraj : //”விரல் நீட்டப்படுவது உங்களை நோக்கியோ பொதுவாக பெண் படைப்பாளிகளை நோக்கியோ அல்ல. பெண் என்ற லைசென்ஸுடன் தகுதிக்கு மீறி எளிதாக வாய்ப்பு பெற்றவர்களைப் பற்றி மட்டும் தான்”// அதிகாரம் இருக்கிறது என்பதற்காக பெண்களை பாலியல் சுரண்டல் செய்பவர்களும், குறுக்குவழியில் முன்னேறுபவர்களும், ஜால்ராக்களும், திருடர்களும், போக்கிரிகளும், கூட்டிக்கொடுப்பவர்களும், கொலைகாரர்களும், துரோகிகளும், கொள்ளைக்காரர்களும், ஊழல்வாதிகளும், என்று கணக்கில் எடுத்தால் ஆண்கள்தான் அதிகம் இருப்பார்கள் இல்லையா? அப்படிப்பார்த்தால் சமூக வாழ்வின் நன்மைக்காக ஜெமோ அவர்கள் ஆண்களின் இத்தகைய குறுக்குவழிகள் குறித்துதானே கவலைப்படவேண்டும் தன் விமர்சனத்தை வைக்க வேண்டும். பெண்களின் அத்தகைய செயலை குறிப்பிடுவதென்றால் அதற்கு தனிப்பதிவுதானே இடவேண்டும்.நாஞ்சில் பட்டியலில் பெண் படைப்பாளிகளைப் பற்றி பேசும்போது குறிப்பிடவேண்டிய அவசியம் என்ன?

Saravanakarthikeyan Chinnadurai : அந்தப் பதிவே அப்படி பின்வாசல் வழி உள்ளே வரவிட்டவர்களைப் பற்றியது தான்; அப்படி உள்ளே வந்த அந்தப் பெண் படைப்பாளிகளைப் பற்றியதல்ல. சொல்லப்போனால் நாஞ்சில் நாடலின் பட்டியலிலேயே அப்படி நுழைந்து விட்ட ஒரு பகுதியை அவர் பகடி தான் செய்கிறார். உதா : 1. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலம்கெட்ட காலத்திலே?’ என்று ஜகாவாங்கிவிடுவார்கள். 2. பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை. 3. இவர்களைச் சேர்த்த அடிப்படையில் பாவம் தமிழச்சி தங்கபாண்டியனையும் கனிமொழியையும் சேர்த்திருக்கலாம். | ஆக ஜெமோ சொல்ல வரும் விஷயம் தான் முக்கியம். அவர் தகுதியற்ற பெண் படைப்பாளிகள் இருப்பதாய் நினைத்தால் அதற்கு காரணமாக பெரும்பாலும் ஆண்கள் தான் இருப்பார்கள் என்பதையும் ஒப்புக் கொள்வார்.

Chandra Thangaraj : //இன்னொரு விஷயம் பெண் என்பதால் வாய்ப்பு தரப்படுகிறது என்றால் ஆபாசமான பொருள் எடுக்க வேண்டியதே இல்லை. அது அந்த குறிப்பிட்ட ஊடகத்தில் பெண் எழுத்து வந்தால் நல்லது என்ற நினைப்பில் எடுக்கப்பட்ட முடிவாகவும் இருக்கலாம். அல்லது பெண்கள் இவ்வளவு பங்கு எடுக்க வேண்டும் என்பதன் காரணமாகவும் இருக்கலாம். அல்லது பொதுவாக பெண் எழுத்து என்பதன் மீதான மாய மரியாதையாகவும் இருக்கலாம். விஷயம் அது அந்தப் பிரதியின் தனிப்பட்ட தகுதி தாண்டி, பெண் குரல், பெண்ணிய கருத்து, பெண் எழுத்து என்கிற லேபிள்களுக்காக ஏற்கப்படுவதும் அங்கீகரிக்கப்படுவதும் பற்றியது.// ஒப்பிட்டளவில் பார்த்தால் பெண்களின் குரல்கள் எழுத்துகள் மிகக் குறைந்த அளவே மீடியாவில் ஒலிக்கிறது சரவணன். பெண் என்பதால் அவர்கள் உடனே கவனத்திற்கு உள்ளாவது வேண்டுமானால் நடக்கலாம். அது பெண்களின் தவறு அல்ல. சமூகத்தின் கியூரியாசிட்டி. பார்றா இந்தப் பெண்ணுக்கு அறிவு கூட இருக்கா என்ற ஆச்சர்யப்பார்வை அது. உண்மையாகவே காலம்கடந்து நிற்க வேண்டுமானால் அந்த படைப்பின் திறன் மட்டுமே காரணம். யார் இடத்தையும் யாரும் தட்டிப்பறிக்கவே முடியாது எழுத்துலகில்.

Saravanakarthikeyan Chinnadurai : //உண்மையாகவே காலம்கடந்து நிற்க வேண்டுமானால் அந்த படைப்பின் திறன் மட்டுமே காரணம். யார் இடத்தையும் யாரும் தட்டிப்பறிக்கவே முடியாது எழுத்துலகில்.// ஆம். நீண்ட கால அடிப்படையில் இது தான் நிஜம். ஆனால் இன்று இந்த அவசர உலகில் உடனடி ஊடக வெளிச்சம் கிடைப்பதும் முக்கியமாகிறது. புதுமைப்பித்தனையும் பாரதியையும் செத்த பிறகு கொண்டாடியது போல் இன்றும் ஒரு படைப்பாளி தான் கொண்டாடப்பட காத்திருக்க வேண்டும் என்று சொல்வது நியாயமா? அதனால் தான் சமகாலத்திலேயே கூட தகுதியானவர்களே வாய்ப்பு பெற வேண்டும், கொண்டாடப்பட வேண்டும் என்று நினைப்பின் பின் உள்ள நோக்கம். மற்றபடி, இந்த பெண்ணிய இட ஒதுக்கீட்டில் உள்ளே நுழைந்த மலிவான, பலவீனமான படைப்புகளை காலம் கிழித்தெறியும் என்பது நிஜமே. குறுகிய காலப் புகழைக் கூட அவற்றுக்கு நல்க வேண்டுமா என்பதே ஆதங்கம்.

*

தொடர்ந்து இது குறித்து ஜெயமோகன் எழுதியிருக்கும் மேலும் இரு பதிவுகள்: 1) http://www.jeyamohan.in/?p=56437 2) http://www.jeyamohan.in/?p=56554

Comments

Sankar said…
அரட்டை போன்ற நல்ல தரமான பெண் டுவிட்டருக்கும் கூட, அவர் பெண் என்பதாலேயே சில பாலோவர்கள் முதலில் கிடைத்திருப்பார்கள். அதன் பொருள், அவர் தகுதி குறைந்தவர் என்பதல்ல. அவரின் பாலினம் அவருக்கு ஒரு சிறு விதத்தில் (அவருக்குப் பிடிக்காவிட்டாலும்) உதவியிருக்கிறது. அதேபோல அதே பாலினம் அவருக்குப் பிடிக்காவிட்டாலும், அவருக்குச் சில இடைஞ்சல்களையும் தந்திருக்கும். இரண்டையும் மறுப்பது பிழை.

பெண் பெயரில் எழுதினால் அங்கீகாரம் கிடைப்பது ஓரளவு எளிது என்பதால்தான் சில ஆண்களும் கூட போலியாகப் பெண் பெயரில் டுவிட்டரிலோ, ஏன் இதழ்களிலும் கூட எழுதுகிறார்கள்.

சில நேரங்களில் சில பெண்ணிய வாதிகள் குருட்டுத்தனமாக எல்லாவற்றையும் எதிர்ப்பார்கள். அப்படி ஒரு நிகழ்வாகவே இதையும் என்னால் கருத முடிகிறது.
தம்பி அதிசயமா நல்ல பதிவ எழுதிட்ட..இந்த மாதிரி எழுது.அரசியலுக்கு நீ சரிபட்டு வர மாட்ட..வர்ட்டா
Anonymous said…
ஜெயமோகன் சரியான விஷயம் பற்றி, சரியான தருணத்தில், சரியாகவேதான் எழுதியிருக்கிறார். இதில் ஆத்திரப்பட ஏதுமில்லை.

சுருக்கமாகச் சொன்னால், இலக்கியத் தகுதிவாய்ந்த எழுத்துதான் நல்ல எழுத்தென முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எப்போதும் – எழுதியவர் பெண்ணா, ஆணா என்பது முக்கியமல்ல. நல்ல இலக்கியம் என்கிற வகையன்றி, வேறுகாரணம் கொண்டு, மீடியா தரமில்லாத எழுத்தையோ அதை எழுதியவரையோ நிறுவமுயன்றால்- அது ஆணெழுத்தோ, பெண்ணெழுத்தோ - அது நெடுநாளுக்குத் தங்காது. அதை இந்தத் தமிழுலகம் தாங்காது!
-ஏகாந்தன்
http://aekaanthan.wordpress.com

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்