மோடி எதிர்ப்பு : ஒரு கடிதம்

எனது மோடி எதிர்ப்புக் கட்டுரைகளுக்கு எதிர்வினையாய் ட்விட்டர் வழி அறிமுகமான நண்பர் இந்திரஜித் ஃபேஸ்புக் தனிப்பேச்சில் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த விஷயத்தில் என்னைத் தொடர்ந்து வாசிக்கும் பலருக்கும் அதையொட்டிய கேள்விகள் மனதில் இருக்கும் என்று தோன்றுவதால் அவற்றை இங்கே பகிர்கிறேன்:

***

அன்பான குருநாதருக்கு, 

நீங்கள் சமீப காலங்களில் எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கொள்கையேற்று அதை உங்களால் முடிந்த அளவு பிசிறில்லாமல் செவ்வனே செய்கிறீர்கள். ஆனால் என் போன்ற பார்ப்பனர் அல்லாத, ஜாதிக் கொடுமையால் பாதிக்கப்படாத இதுவே உன் ஜாதி, உன் மதம் என அடையாளம் காட்டப்பட்டு வளர்க்கப்பட்ட சிலரின் பொது எண்ணமாக சில கருத்துக்களை வைக்கலாம் என்ற பிரயாசம் எனக்குள் வெகுநாட்களாக உண்டு. 

இங்கு வரும்வரை அரசியல் என்றால் என் பார்வையில், அதிமுகவுக்கு ஓட்டுப் போடுவது என்பதைத் தவிர வேறொன்றும் கிடையாது (தந்தை தீவிர அதிமுக அனுதாபி). ஆனால் இப்போது உங்களைப் போன்ற நடுநிலையாளர்களின் தொடர் முயற்சியால் மோடிக்கு ஓட்டுப் போட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றுமளவு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இதற்கு கண்டிப்பாக நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். 

நீங்கள் எழுதுவதற்கும் நிஜமான கள வாழ்வியல் முறைக்கும், நிறைய வித்தியாசம் உண்டு. அதை கண்கூடாக உணர்ந்திருக்கிறேன். சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற விஷயத்தில் மட்டுமே உங்கள் பார்வை இருக்கிறது. அதனால் மற்றவற்றை கவனிக்க தவறுகிறீர்கள் (or) தேவையில்லை என்று நினைக்கிறீர்கள். அவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் டாமினேஷன் அளவுக்கதிகமாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்று நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவர்களை பெரும்பான்மை ஆக்குவதற்கான பாதையை திறந்துவிட முயற்சியோ என ஐயப்படுகிறேன. 

உடனே இந்து என்று ஒரு மதமே கிடையாது. அது வைணவம் சைவம் என்று புரியாத பழங்கதை பாடம் எடுக்கவேண்டாம். ஏனென்றால் அம்மா அப்பா வில் ஆரம்பித்து கடவுள் என்பது வரை எல்லாமே ஒரு நம்பிக்கைதான். டி.என்.எ டெஸ்ட் எடுத்து ஊர்ஜிதப்படுத்துவதில்லை. ஒருவேளை, இஸ்லாமியர் அதிகமானாலோ கிறிஸ்துவம் அதிகமானாலோ நம்மிடம் இருக்கும் மத சகிப்புத்தன்மை அவர்களிடம் இருக்கும் என்ற உறுதியை நீங்கள் தரத் தயாராக இருக்கிறீர்களா. ஏனென்றால் கோவிலில் நடந்த என் திருமணத்திற்கு உள்ளே கூட வராமல் வெளியே நின்ற என் நெருங்கிய பிறமத நண்பர்களே முதன்முதலில் எனக்குள் இந்த சந்தேகத்தை விதைத்தார்கள்! 

முதலில் உலகமெங்கிலும் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தங்களிடம் இருக்கும் சிறுபான்மையினரை பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை வைத்துக்கொண்டே இருங்கள். பிறகு நீங்கள் மட்டும் ஏன் காட்டுவாசியாக இருக்கிறீர்கள் என கேளுங்கள். ஏனென்றால் உலகம் முழுவதும் இவர்களின் எண்ணம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பதுதான் என்னுடைய அசைக்க முடியாத எண்ணம் (யூகம்). ஏனென்றால் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் எங்கள் பகுதியில் அக்யூஸ்ட்டுகளும் பெரும்பாலும் கிறிஸ்தவர்களே. அதனால் பிறமத தாக்கங்கள் மனிதனை நல்லவனாக மாற்றிவிடும் என நீங்கள் நம்பினால் அதுவும் வீண்நம்பிக்கையே. இங்கு மதமாற்றத்திற்காக அவர்கள் "எதுவேண்டுமானாலும்" செய்ய தயாராக இருக்கிறார்கள். இவர்கள் அதிகமாகும்போது ஜனநாயகம் கேள்விக்குரியாகும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னுள் உண்டு. உங்களைப் போன்ற நடுநிலைவாதிகளுக்கு என்னுடைய கருத்து (அறிவுரைனே வச்சிக்கலாம்) என்னவென்றால், சாதி மதம் பார்க்காமல எல்லா தவறுகளையும் சாடவேண்டும், அதேபோல் பாராட்டவும் முன்வர வேண்டும். 

இல்லையென்றால் கலைஞரின் ஓட்டு பகுத்தறிவு & நடுநிலைக்கும், உங்களைப் போன்ற முற்போக்காளர்களின் பகுத்தறிவு & நடுநிலைக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லாமே போய்விடும். (இப்பொழுதே கூட வித்தியாசம் தெரியவில்லை) அதனால் ஜனநாயகமும் என்மதமும் இன்னும் சற்றுநாள் பிழைத்திருப்பதற்கு மோடி போல் ஒருவர் தேவை என்றே நினைக்கிறேன். அவர் செய்ததாக நீங்கள் சொல்லும் குஜராத் அக்கிரமங்களில் அவர் பங்கு இருக்காது என்றே முழுமையாக நம்புகிறேன். 

உங்களைப் போன்ற எழுத்து நடை எனக்கு வரவில்லை. ஆனால் நீங்கள் நான் சொல்லவருவது என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். தவறாக எதுவும் எழுதியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் பதில் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எழுதியது தவறென்று சுட்டிக் காட்டவில்லை. இது ஒரு சாமானியனின் புலம்பல். அவ்வளவுதான்.

நன்றி,

இந்திரஜித் குருசாமி.

***

டியர் இந்திரஜித்,

முதலில் ஒரு விஷயம் புரியவில்லை. நான் உள்ளிட்ட சிலர் மோடியை எதிர்க்கும் காரணத்தாலேயே அவரை ஆதரிக்கத் தோன்றுகிறது என்று சொல்வதன் தர்க்கமே புரியவில்லை. நாங்கள் யாரும் சொந்த வாய்க்கால் வரப்புத் தகராறு காரணமாக அவரை எதிர்க்கவில்லையே, சித்தாந்த அடிப்படையிலும் அவரது குற்றப்பின்னணி காரணமாகவும் மட்டும் தானே எதிர்க்கிறோம். ஒன்று அதை ஏற்க வேண்டும், அல்லது நம்பாது விட வேண்டும். ஆனால் அதுவே ஆதரிக்கக் காரணம் ஆகிறது என்பதில் அர்த்தமே இல்லை. காதலை எதிர்க்க எதிர்க்கத் தான் காதல் அதிகரிக்கும் என்ற நாலாந்தர தமிழ் மசாலா சினிமா வசனம் போல் இருக்கிறது இந்த நிலைப்பாடு. 

அடுத்து உங்கள் கடிதத்தில் சொல்லி இருக்கும் மொத்த விஷயங்களின் தொனிக்குமே காரணம் நீங்களே ஒப்புக் கொள்வது போல் "ஜாதிக் கொடுமையால் பாதிக்கப்படாத, இதுவே உன் ஜாதி, உன் மதம் என அடையாளம் காட்டப்பட்டு வளர்க்கப்பட்ட" ஒருவராக நீங்கள் இருப்பது தான். எப்படி வளர்க்கப்பட்டாலும் 18 வயதுக்கு மேல் உலகத்தை நாம் நம் சொந்த புத்தியுடன் சொந்த அனுபவங்களின் வழியே தான் அணுகுகிறோம். அப்போது நாம் நம்மை, நம் புரிதல்களை, நிலைப்பாடுகளை மெல்ல மறுபரிசீலனை செய்யும் சுதந்திரம் வாய்க்கிறது. ஆனால் இந்தியச் சூழலில் பெரும்பாலும் யாரும் மாறுவதில்லை. அவர்கள் இறுதி வரையிலும் தம் சாதியை, மதத்தை இறுகப் பிடித்துக் கொள்கின்றனர். நான் தொடர்ந்து சொல்லி வரும் மோடியை ஆதரிக்கும் பெரும்பாலானோர் மனதளவில் இந்துத்துவா என்பது இந்த அடிப்படையில் தான். அவர்கள் அனைவரும் உங்களை ஒத்த பின்புலத்தில் வளர்க்கப்பட்டவர்கள் தாம். மோடியின் வருகைக்குப் பின் அவர்கள் தயக்கமின்றி தம்மை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

"அவர் செய்ததாக நீங்கள் சொல்லும் குஜராத் அக்கிரமங்களில் அவர் பங்கு இருக்காது என்றே முழுமையாக நம்புகிறேன்" என்று நீங்கள் சொல்லி இருப்பதன் அடிப்படை மட்டும் என்னவென நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். என் தமிழ் பேப்பர் - வட்ட மேஜை மாநாடு கட்டுரைகள் எல்லாம் தொடர்ந்து படித்து வருவதாய்ச் சொல்கிறீர்கள். இது போக எனது குஜராத் 2002 கலவரம் நூலையும் வாங்கி இருக்கிறீர்கள் என்பதால் அதையும் படித்திருக்கிறீர்கள் என எடுத்துக் கொள்கிறேன். நூலிலும் கட்டுரைகளிலும் பல இடங்களில் மோடிக்குக் கலவரங்களில் தொடர்பு இருப்பதைப் பற்றி தெளிவாகவும் தரவுகளின் அடிப்படையிலும் சொல்லி இருக்கிறேன்.  அதைத் தாண்டி நீங்கள் மோடிக்கு இதில் தொடர்பில்லை என நம்புகிறீர்கள் எனில் நீங்கள் அப்படி நம்ப விரும்புகிறீர்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதாவது மோடியின் மற்ற நற்செய்திகள் எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் இந்தக் கலவரக் கறை மட்டும் உறுத்துகிறது. அதனால் ஏதாவது ஒன்றை (அது பொய்யோ மெய்யோ) இறுகப் பற்றியபடி ஒரு துர்சொப்பனம் போல், மலக்கிடங்கு போல் அதைக் கடந்து விடவே விரும்புகிறீர்கள். நீங்கள் உண்மையை நேருக்கு நேர் சந்திக்க மறுக்கிறீர்கள்.

மோடி நேரடியாய் 2002 குஜராத் கலவரங்களில் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்பதை நான் ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் தர்க்கப்பூர்வமாக நம்புகிறேன். அது தண்டனைக்குரிய குற்றம். அந்த செயலைச் செய்தவர் பிற்பாடு அவர் வெறுக்கும் இனத்தின் மேல் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்று அஞ்சுவதால் தான் அவரை எதிர்க்கிறேன். அதில் பாதிக்கப்பட்டது இந்துக்களா முஸ்லிம்களா என்பதைத் தாண்டி அது மனிதத்தன்மை இல்லாத செயல் என்பது என் கருத்து. கவனியுங்கள், இதே போன்ற கலவரத்தை ஒரு முஸ்லிம் முதல்வர் இந்துக்களின் மீது நிகழ்த்தி விட்டு இப்போது பிரதமர் பதவிக்காக போட்டி போட்டிருந்தாலும் இதே மதவெறியைக் காரணம் காட்டி இதே வீச்சுடன் எதிர்த்திருப்பேன். அதில் நெல்முனையளவும் சந்தேகமே இல்லை. ஆனால் நான் கேட்கிறேன், அப்படி ஒரு முஸ்லிம் முதல்வர் இந்துக்களின் மீது கலவரம் நடத்தி விட்டு பத்தாண்டுகளாக தன் மாநிலத்தில் வளர்ச்சியைக் காட்டி இருந்தால், தேச நலன் என்று சொல்லிக் கொண்டு இன்று மோடியை ஆதரிக்கும் உங்களைப் போன்ற இந்துக்கள் யாராவது அந்த முஸ்லிம் முதல்வரையும் நாடு வளர்ச்சியுறும் என்பதற்காக பரந்த மனதுடன் ஆதரிப்பீர்களா? நிச்சயம் மாட்டீர்கள். அதனால் தான் சொல்கிறேன், மோடியை ஆதரிக்கக் காரணம் தேச வளர்ச்சி என்று பலரும் சொல்வது வேஷம். உள்ளே மத வெறியே மேலோங்கி நிற்கிறது.

அடுத்து மோடியை நான் எதிர்க்கிறேன் என்பதன் அர்த்தம் முஸ்லிம்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆதரிக்கிறேன் என்பதல்ல. அந்த மதத்திலிருக்கும் அடிப்படைவாதத்தின் மீதும், இறைவனின் பெயரால் தீவிரவாதத்தில் அம்மத்தினர் சிலர் ஈடுபடுவதையும் நடுநிலையிலுள்ள எவரும் ஏற்கவோ ஆதரிக்கவோ மாட்டார்கள். நானும் அப்படித் தான். அதெல்லாம் மாறத்தான் வேண்டும். அவர்களில் பலருமே அதை ஏற்றுக் கொள்வர் என்றே நம்புகிறேன். ஆனால் நான் இந்த முறை அரசியல் பேச வந்தது ஒரு க்ரிமினலை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று மக்களிடம் சொல்லிப் புரிய வைக்கத் தானே ஒழிய ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்ட அல்ல. அப்படியே நான் பேசத் தொடங்கினாலும் முதலில் என் மதமான இந்து மதத்திலிருந்து தான் தொடங்க வேண்டும். அப்புறம் தான் இஸ்லாம், கிறிஸ்துவம் எல்லாம். மாற்றம் என்பது சொந்த வீட்டிலிருந்து தானே துவங்க வேண்டும்! ஆனால் அது முற்றிலும் வேறு விஷயம், இப்போது தேர்தலை ஓட்டி நான் பேசும் பிரச்சனைக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. 

அடுத்து முஸ்லிம், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பெருகி அல்லது அவர்களின் கை ஓங்கி இந்துக்கள் அடிமையாய் வாழ நேருமோ என்ற உங்கள் கவலை குறித்து: நான் என் பதின்மங்களிலிருந்து நாத்திகன் தான். ஆனால் மதம் என் வாழ்க்கையை விட்டு முழுவதுமாய் நீங்கி விடவில்லை. என்னுடன் வாழ்பவர்கள் இந்து மதத்தில் தீவிர பற்றும் நம்பிக்கையும் உடையவர்கள். அவர்களுக்காக நான் கோயிலுக்குப் போகிறேன், பூஜைகள் செய்கிறேன், பண்டிகைகள் கொண்டாடுகிறேன், சடங்குகள் கடை பிடிக்கிறேன், திருநீறு இட்டுக் கொள்கிறேன். இதெல்லாம் போக எனக்கே இந்து மதத்தின் சில தத்துவார்த்த விஷயங்களில் ஆர்வம் உண்டு. வாய்ப்புக் கிடைக்கையில் அவற்றை வாசிக்கிறேன். இந்து புராண மற்றும் இதிகாசக் கதைகளில் பேரார்வம் உண்டு. சிவனைப் பிடிக்கும். முதுமையில் 107 சிவாலயங்களுக்கு ஒரு சுற்றுலா போல் செல்லும் எண்ணம் கூட உண்டு. அந்த வகையில் ஓர் இந்து என்றும் என்னைச் சொல்ல வேண்டும். ஆனால் நான் இந்து வெறியன் அல்ல. இந்து மதம் என்ன ஆகுமோ என்ற கவலை எனக்கு ஒருபோதும் இல்லை. என் வரையில் இந்து மதம் என்பது வளமான தத்துவங்கள், ஆழமான நெறிகள் கொண்ட ஒரு நல்ல வாழ்க்கை முறை மட்டுமே.

அதே போல் இஸ்லாமும், கிறிஸ்துவமும் அவரவர் வாழ்க்கை முறைகள். இதில் ஒருவர் தம் மதத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையாய் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார் எனில் அது அவரது முதிர்ச்சியின்மை தான். ஆனால் அது சட்டப்பூர்வமாய் தவறில்லை எனும் போது அதில் எதிர்க்க ஏதுமில்லை என்பதே என் கருத்து. தவிர, அது மற்ற மதத்தினர் இந்துக்கள் மீது மட்டுமல்ல, இந்துக்களும் பழங்குடியினர் மீது செய்து வருவது தான். மதமாற்றம் உங்களுக்கு கசந்தால் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறதே எனக் கவலையுற்றால் அதை விடத் திறமையாய் இந்து மதத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி / தேவையான சேவைகள் செய்து மதமாற்றத்தைத் தடுப்பது தான் நியாயமான வழி.

 மற்றபடி அதில் பதற்றம் கொள்வதில், வன்முறை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தக்கன பிழைக்கும் என்பது மதத்துக்கும் பொருந்தும் என்பதே என் அபிப்பிராயம். 

அதனால் அவர்கள் பெரும்பான்மையாகி நாம் சிறுபான்மையாவோம் என்பதே இப்போதைக்கு உங்கள் மிகுகற்பனை மட்டுமே. என்வரையில் இந்தியா என்ற தேசம் ஒருபோதும் இந்துஸ்தானமாகவோ முஸ்லிம்களின் தேசமாகவோ ஆகாது. ஆகவும் கூடாது. உண்மையில் அதை உறுதிப்படுத்தத் தான் இந்தப் போராட்டம் எல்லாம். அதனால் மோடிக்கு ஓட்டு போட்டால் தான் இந்து மதமும், இந்திய தேசமும் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பது ரஜினிகாந்த் வந்து அநியாயங்களைத் தட்டிக்கேட்பார் என பாமர சினிமா ரசிகன் நம்பிக் கொண்டிருப்பதைப் போன்றது தான். அப்படி மோசமான நிலையில் இந்து மதமும் இல்லை, இந்தியாவும் இல்லை.

வேற்று மதத்தவர்கள் ஒழிந்த அல்லது அடிமைப்பட்ட ஓர் இந்துஸ்தானம் அமைப்பது உங்கள் ஆழ்மன ஆசை இல்லை எனில் நீங்கள் இந்து மத பாதுகாப்பு என்கிற கோணத்தின் அடிப்படையில் மோடியை ஆதரிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இந்து மதம் எந்தத் தனி மனிதனின் ஊன்றுகோலும் இல்லாமலே நடமாடும்.

இறுதியாக கலைஞருடனான ஒப்பீடு. அவர் அரசியல்வாதி; நான் எழுத்தாளன். அவர் பகுத்தறிவும், முற்போக்கும் பேசுவதால் ஓட்டு விழும். எனக்கு அடி தான் விழும். 

-CSK 

***

Comments

Pokkirism said…
//நான் என் பதின்மங்களிலிருந்து நாத்திகன் தான்//.... //சிவனைப் பிடிக்கும்//
#சத்தியமா நான் ஊமை இல்லைங்கோ!
Unknown said…
அருமையான விளக்கங்கள்................. இதுபோன்ற சில அறியாத சகோதரர்களின் உளக்குமுறலை தீர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது ............. ரைட்டர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்