ரஜினி Vs எஸ்ரா : ஒரு விவாதம்

இயல் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஒரு பாராட்டு விழாவை உயிர்மை ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதன் அழைப்பிதழ் கடந்த இரு நாட்களாக ஃபேஸ்புக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில் ரஜினியின் படம் எஸ்ராவின் படத்தை விடப் பெரிதாகப் போட்டிருப்பதைக் கண்டித்து எழுத்தாளர் ஞாநி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அதையொட்டி நிகழ்ந்த விவாதம் இது.

*******


Gnani Sankaran கேவலமாக இருக்கிறது. விருது பெற்ற எழுத்தாளன் படத்தை அவனைப் பாராட்ட வருகிற ரஜினி படத்தை விட சின்னதாகப் போடுவதும் அவனை செருப்பால் அடிப்பதும் ஒன்றுதான்.

Saravanakarthikeyan Chinnadurai‎ @Gnani Sankaran யாரால் அதிக‌ கூட்டம் கூட்ட முடிகிறது என்ற அளவுகோலின் அடிப்படையிலேயே விளம்பர உருவங்கள் அமைகின்றன. இதிலென்ன பிழையிருக்கிறது? தமிழ்ச்சமூகத்துக்கு, அதன் கலை வளத்துக்கு, ரஜினிகாந்தின் பங்களிப்பைக் காட்டிலும் எஸ்.ராமகிருஷ்ணனுடையது அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதை நிரூபிக்க வேண்டிய இடம் விளம்பரப்பலகைகள் அல்ல. ஒருவகையில் விளம்பரங்கள் கலர் மிட்டாய் காட்டி குழந்தைகளை இழுக்கும் வேலை தான். அதில் தரமான, ஆரோக்கியமான இனிப்புகளைக் காட்டிலும் ஜிகினாத்தனங்கள் தான் நன்கு விலை போகும். நமக்கு கூட்டம் தானே முக்கியம்.

இது அவமதிப்பாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் தவறாகத் தோன்றவில்லை. இதன் வழி இன்னும் பல புதிய மற்றும் நல்ல வாசகர்களை எஸ்.ரா. அடையவே வாய்ப்புகள் அதிகம். அதற்காகவேனும் இதைச் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. ஒருவேளை ரஜினியின் படத்தை விட எஸ்ராவைப் பெரிதாகப் போட்டிருந்தால் அது புரட்சியாக இருந்திருக்கும். ஆனால் அடுத்த படி திரைப்பிரபலங்கள் இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளுக்கு வருவார்களா எனத் தெரியாது. அவர்களுக்குத் தேவை விளம்பரம் என்கிற எலும்புத்துண்டு. அதைத் தூக்கி எறிந்து விட்டு இலக்கியத்துக்கு வேண்டுமென்கிற நல்ல ரசனைக்கூட்டத்தை அவர்களிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

Vaa Manikandan தன் சொத்தை விற்று பத்திரிக்கை நடத்தி இலக்கியம் நடத்தியவர்கள் வாழ்ந்த சூழல் தமிழ் இலக்கியத்தில் இருந்தது. கூட்டம் சேர்ப்பதுதான் நோக்கம் என்றால் ரெக்கார்ட் டேன்ஸ்க்கும் கூட கூட்டம் சேரும். எழுத்தாளனின் எழுத்துக்கள் அவனது எழுத்தின் வீச்சின் அடிப்படையில் மக்களை அடைய வேண்டுமே தவிர 'ஏஜண்ட்'கள் மூலம் அல்ல.

Balasubramanian Ponraj எஸ்.ராமகிருஷ்ணன் “பாபா” படத்திற்கு வசனம் எழுதிய சமயத்தில் கோவையில் விஜயா பதிப்பகம் நடத்திய விழாவில் கேட்ட கேள்விக்கு, “என் நண்பன் ஒருவன் பொதுக்கழிப்பறை நடத்தி வருகிறான். அவனைப் பார்க்க சென்ற சமயத்தில் சில நிமிடங்கள் அவன் வெளியே போனபோது நான் சில்லறை வாங்கிப் போட்டிருக்கிறேன். அதைப் போலத்தான் இதுவும் என்றார்.” இப்போது பாவம் கழிப்பறைக்கு உள்ளேயே சென்றுவிட்டார். சினிமா மோகத்தை தமிழர்களின் சாபம் என்று நம் இலக்கிய முன்னோர்களால் சொல்லி வளர்க்கப்பட்ட நமக்கு இந்த உயிர்மை, சாரு மாதிரியான கோடம்பாக்கத்தில் குச்சி ஐஸ் விற்கிற இலக்கியவாதிகள், இலக்கிய உலகத்திற்குள்ளும் இந்த சினிமா மோகத்தை உருவாக்கிவிட்டார்கள். புத்தகம் படிப்பது கூட இல்லை என விழா மேடையில் சொன்ன சசிகுமாரை புத்தக வெளியீட்டிற்கு அழைத்தவர்கள் இந்த உயிர்மைக்காரர்கள். உயிர்மை அடுத்த கூட்டத்திற்கு நமீதாவை அழைத்தால் தமிழ் இலக்கியம் இன்னும் உயரத்திற்கு செல்லும். க.நா.சு, சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தனை எல்லாம் முன்னோடிகள் பட்டியலில் இருந்து கழற்றி வைத்துவிட்டு ஜிகினா நாயகர்களுக்கு இலக்கிய அபிஷேகம் செய்கிறார்கள்.

Saravanakarthikeyan Chinnadurai‎ @Vaa Manikandan தமிழ் எழுத்தாளன் என்றென்றைக்கும் பிச்சையெடுத்துத் தான் ஆக வேண்டும் என்பது உங்கள் விருப்பம் போலும். எவன் த‌யவையும் எதிர்பாராது பாரதி 39 வயதில் செத்துப் போனது தான் அவனைக் கொண்டாடக் காரணம் எனச் சொல்லப்படுமெனில், மன்னிக்கவும். நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை. பாரதி ஒருவேளை சமூகச் சமரசங்களில் இறங்கியிருந்தாலும், அவன் மகாகவி தான். அதில் மாற்றமில்லை.

இப்படித்தான் இந்த விளம்பரத்தையும் எடுத்துக் கொள்கிறேன். இது இலக்கியம் சுமூகமாய்ப் பரவ ஓர் அமைப்பு செய்து கொள்ளும் சமூகச் சமரசம் மட்டுமே. இதில் எந்த வகையிலும் அந்த அமைப்போ, பதிப்பாளரோ, எழுத்தாளரோ குறைந்து விடவில்லை.

கூட்டம் சேர்ப்பது என்று நான் நான் விசிலடிச்சான் குஞ்சுகளைச் சொல்லவில்லை, அன்று ரஜினிக்காக மட்டும் நிகழ்ச்சிக்கு வரும் நூறு பேரில் பத்து பேர் பேர் எஸ்.ரா. பக்கம், நல்ல இலக்கியம் பக்கம் இழுக்கப்பட்டாலே இந்த தாழ்த்திக்கொள்தலின் நோக்கம் நிறைவேறி விட்டது என்று அர்த்தம். அவர்களைத் தான் கூட்டம் என்கிறேன். கூட்டம் சேர்க்க, நிறையப் பேரைப் படிக்க வைக்க எழுத்தில் சமரசம் செய்தால் அது நிச்சயம் விமர்சனத்துக்குரியது தான். இது அப்படியல்லவே.

இல்லை. நல்ல வாசகன் தானாகத் தேடி வருவான் என்று காத்திருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் அதில் ஒருவித ஈகோ தெரிகிறது. நான் பெரிய சிந்தனையாளன், நீ வேண்டுமானால் என்னைத் தேடி வா என்கிற அசட்டுத்திமிர். அதை மீறி வெளியே வர‌ அசாத்ய மனமுதிர்ச்சியும் புரிந்துணர்வும் வேண்டும். சும்மா எதற்கெடுத்தாலும் குதிக்கிற பதட்டச்சாயை பிரயோஜனமில்லை.

காடதிர உறுமும் புலி புல்லைத் தின்னுமா என்பது அதற்கு பசி வ‌ந்தால் தானே தெரியும். பார்க்கலாம்.

Krishna Prabhu ‎/-- இதன் வழி இன்னும் பல புதிய மற்றும் நல்ல வாசகர்களை எஸ்.ரா. அடையவே வாய்ப்புகள் அதிகம். --/

நிச்சயமாக அடையட்டும் சரவணா. அதில் பிரச்சனை இல்லை. ஆனால், ஒருவருடைய ஆளுமை அளவுக்கு மீறி உருவாக்கப்படுவதில் சமூகத்திற்கான துரோகமும் அடங்கியிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் அல்லவா. மேலும், "தெருவில் போகிறவர்களை கை பிடித்து இழுக்கக்கூடிய விபச்சாரிக்கு நிகராக இலக்கியவாதி விமர்சிக்கப்படுவது" ஒன்றும் நமக்குப் புதிதில்லையே.

Gnani Sankaran ‎"இது அவமதிப்பாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் தவறாகத் தோன்றவில்லை." என்கிறாரொருவர் இந்த விவாதத்தில். அவமதிப்பு தவறாகத் தோன்றாத மனநிலைக்கு ஒரு தலைமுறை போய்விட்டதென்றால் அதை விட சமூகச் சீரழிவு வேறென்ன இருக்க முடியும்?

Saravanakarthikeyan Chinnadurai‎ @Gnani Sankaran எதன் பொருட்டு ஓர் அவமதிப்பை ஏற்கிறோம் என்பது பொறுத்தது அது. இப்படி gereric ஒப்பாரிகளை வைக்காமல் case-by-case basisல் விஷயங்களை அணுகுவதே சிறந்த தர்க்கமாக இருக்க முடியும்.

குமுதத்தில் எழுதியதை விட உங்கள் நிஜமான வாசகர்களை அவமதிக்கும் செயல் என்ன இருந்து விட முடியும். ஆனால் அதை நான் தவறென நினைக்கவில்லை. மிகச்சுலபமாக இருபது லட்சம் வாசகர்களை உங்கள் கருத்துக்கள் சென்றடைய நீங்கள் செய்து கொண்ட ஒரு சமூகச் சமரச‌ம் அது. அதில் எந்தப் பிழையுமே இல்லை. அதுவே எழுத்தின் உள்ள‌டக்கத்தில் சமரசம் செய்ய அழுத்தம் வந்த போது ஏற்காமல் வெளியேறினீர்கள் என்பது தான் முக்கியம். இங்கு மனுஷ்யபுத்திரனும், எஸ்.ராமகிருஷ்ணனனும் நீங்கள் குமுதத்தில் எழுதியது போன்ற‌ அதே சமூகச் சமரசத்தைத் தான் இந்த விளம்பரத்தில் செய்திருக்கிறார்கள். நோக்கம் ஒன்று தான். பிறகெப்படி இதை மட்டும் தவறென சொல்லவியலும்?

Poovannan Ganapathy திருமண விழாவை வாழ்த்த வருபவர்களை வரவேற்கும் கட் அவுட்டுகள் போல ஆகி விட்டதே அழைப்பிதழும் கழக இல்ல திருமணங்களில்(என் உறவினர் பலரின் திருமணங்களில் பார்த்தது)முதலில் முழு பக்க கலைஞர்/செயலலிதா படம்,கடைசியில் முழு பக்க இசுடாலின் படம்,நடுவில் அவர்கள் வசிக்கும் மாவட்ட மந்திரி,செயலாளர்களின் பாதி பக்க படங்கள் இருக்கும். அதையாவது ஒரு சாதனையாளர் ஒரு சாதாரண மக்களின் திருமணதிற்கு வருவதால் அவருக்கு அதிக மரியாதை தரபடுகிறது என்று ஒரு மாதிரியாக சப்பை கட்டு கட்டி ஏற்று கொள்ளலாம்.

ஆனால் இங்கு பொருளாதரதிர்க்காக நோபெல் பெற்ற சென்/கபில் தேவ் அவர்கள் மருத்துவத்தில் இந்தியாவின் உயரிய விருதான பி சி ராய் விருது கிடைத்த தன நண்பனின் பாராட்டு விழாவிற்கு வருகிறார் என்றால் இது நடக்குமா .உலகிலேயே உயரிய விருதை பெற்றாலும் அவரவர் தொழிலுக்கு இருக்கும் கௌரவங்களை யாரும் விட மாட்டார்கள்.ஆனால் எழுத்தாளர்கள்.

Poovannan Ganapathy பாரதி சமூக சமரசங்களில் இறங்கியிருந்தால் கண்டிப்பாக மகா கவி கிடையாது வாலி தான்.

தம்பையா என்று ஒரு சரும நோய் நிபுணர் பெரியார் சாலையில் அறுவது ஆண்டுகள் மருத்துவம் பார்த்து வந்தார்.அவரிடம் மருத்துவம் பார்த்து கொள்ள அவரை வீட்டிற்கு ரஜினி அழைத்த போது அதை மறுத்து விட்டார். அதனால் நடு இரவில் ரஜினி சென்று அவரிடம் அவரது இல்லத்தில் வைத்தியம் பார்த்து கொள்வார். தம்பையா தான் உதாரணம்,ரஜினி கூட செல்லும் பாக்கியம் கிடைக்கிறதே என்று மாதகணக்கில் பார்க்க வேண்டிய நோயாளிகளை, வேலைகளை மறந்து விட்டு அவருடன் சிங்கப்பூரில் வசிக்கும் மருத்துவர்கள் அல்ல. அவருக்கு விருது கிடைத்து அதற்க்கு பாராட்டு தெரிவிக்க ரஜினி போனால் அதை அவர் எப்படி சாதாரணமாக எதிர்கொள்வாரோ அப்படி எதிர்கொள்கிறவன் உண்மையான எழுத்தாளன்.

ரஜினி வந்து பாராட்டினால்,அவர் படத்தை போட்டு கூட்டம் சேர்க்க அனுமதி தந்தால் அது விருதை விட சிறந்தது என்று எண்ணுவது,புளகாகிதம் அடைவது.

Anand Indira ஏதோ ரஜினி வருவதால் தான் நமக்கு இப்டி ஒரு விழாவே நடப்பது தெரிகிறது, இல்லையென்றால் இது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்.

Gnani Sankaran @Saravanakarthikeyan Chinnadurai நான் குமுதத்தில் எழுதுவத்ம் ரஜினி படத்தை எஸ்.ரா படத்தை விடப் பெரியதாகப் போடுவதும் எப்படி ஒன்றாகும் ?குமுதம் வாசகர்களிடம் என் எழுத்தை எடுத்துச் செல்லும் வாகனம். அதை நான் பயன்படுத்துகிறேன். அது போன்ற பல வாகனங்களைப் பயன்படுத்துகிறேன்.இதில் எந்த சமரசமும் இல்லை.ஆனால் அதற்காக அந்த வாகனங்கள் மாபெரும் இலக்கிய, சமூக சேவை செய்கின்றன என்று சொல்லி என்னை விடப்பெரியவர்களாக அவற்றை நான் தூக்கிப் பிடித்துக் கொண்டாடினால்தான் சமரசம். அப்படிக் கொண்டாடினால்தான் நான் என் வாசகர்களை அவமதித்தாகும். என் எழுத்தை பிரசுரிக்கும் இதழ்களை அதே தருணத்தில் அவற்றின் வேறு கோளாறுகளுக்காக விமர்சிக்கும் உரிமையை நான் எப்போதும் பயன்படுத்திவந்திருக்கிறேன்.

எஸ்.ராவின் பாராட்டு விழாவுக்கு ரஜினியை அழைப்பதை நான் விமர்சிக்கவே இல்லை. எஸ்.ராவோடு பழக்கமே இல்லாதவர்கள் கூட அவர் எழுத்தை அறிந்திருந்தால் பாராட்ட அழைக்கப்படலாம். ரஜினியும் எஸ்.ராவும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். ரஜினி படத்தில் எஸ்.ரா வேலை செய்திருக்கிறார். அவர் பாராட்ட வருவதால் கூட்டத்துக்கு வரக்கூடிய ரஜினி ரசிகர்கள் லட்சம் பேரில் புதிதாக் ஒரு ஆயிரம் பேர் எஸ்.ராவைப் படிக்க ஆரம்பித்துவிடுவதிலும் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. பாராட்டுக்குரிய எஸ்.ரா படத்தை விட பெரிய சைசில் ரஜினி படம் போடப்பட்டிருப்பது எஸ்.ராவுக்கு அழைப்பை அச்சடித்தவர்கள் செய்யும் அவமதிப்பு என்பதே என் கருத்து. இதில் எந்த மாற்றமும் இல்லை. இது அவமதிப்புதான், ஆனால் தவறு இல்லை என்று நீங்கள் சொல்வது துளியும் ஏற்கமுடியாதது.

Saravanakarthikeyan Chinnadurai‎ @Gnani Sankaran குமுதத்தில் எழுதுவதில் எங்கே சமரசம் வருகிறது என்றால், குமுதம் போடும் அரைகுறை கவர்ச்சிப் படங்களை, கிசுகிசு பாணி அவதூறுகளை, ஒரு பக்க அரசியல் சார்புகளை விமர்சிக்க முடியாது என்ற வகையில். அப்படியே விமர்சனம் செய்தாலும் வழக்கமான கடுமையுடன் எழுதிவிட முடியாது. குமுதத்தையே ஒட்டுமொத்தமாய்ப் புனிதப்படுத்திவிட்டா உள்ளே நுழைய முடிந்தது? உங்களுடைய ஸ்பேஸ் என்று அவர்கள் ஒதுக்கிய நான்கு பக்கங்களுக்குள் தானே உங்கள் அதிகாரம் ஜெயிக்க முடிந்தது. இது சமரசம் இல்லையா?

அன்றைய தேதியில் மொத்த குமுதத்தின் உள்ளடக்கத்திலுமே தரமானதெனில் உங்கள் ஓ பக்கங்கள் தான். உண்மையில் அந்த 168 பக்கங்களின் ஸ்டார் நீங்கள் தான். அதற்காக அட்டைப்படத்தில் உங்களைப் போடாமல் த்ரிஷாவைப் போடுகிறார்களே என உங்கள் வாசகன் என்ற முறையில் நான் பொங்கிக் கொண்டிருக்க முடியுமா?

அவ்வளவு ஏன், உங்கள் கட்டுரையிலேயே ஒரு நடிகையைப் பற்றி எழுதினால் அவரது படத்தைப் பெரிதாகப் போட்டு உங்கள் படம் வழக்கமான ஸ்டாம்ப் சைஸ் அளவில் தான் வெளியாகும். இதுவும் ஒருவகையில் அவமதிப்பு தான். ஆனால் அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? அது நடைமுறை யதார்த்தம் என்பது மட்டுமல்லாது ஒரு வெகுஜனப் பத்திரிக்கையின் தர்மமாகவும் கருதப்படுகிற‌து.

த்ரிஷாவை அட்டையில் போட்டால் தான் இதழ் விற்கும் என்பது குமுதம் ஆசிரியர் குழுவின் கணக்கு. இருபது லட்சம் பேரை விழிப்புணர்வுக்குக் கொண்டுவர குமுதத்தில் எழுதுவது ஓர் எளிய மார்க்கம் என்பது உங்கள் புரிதல். குமுதம் அட்டைப்படத்திலும், உங்கள் கட்டுரையின் நடிகை படத்திலும் நீங்கள் மேற்கொண்ட அதே சமரசத்தைத் தான் எஸ்.ராமகிருஷ்ணன் தன் விழா அழைப்பிதழில் செய்து கொண்டிருக்கிறார்.

Ramesh Sadasivam ‎@Saravanakarthikeyan Chinnadurai இந்த விழாவை பொறுத்தவரை, எஸ்.ரா தான் நாயகன். அவர் படத்தை பெரிதாக போடுவதை விட்டுவிட்டு, பாராட்ட வருபவர் படத்தை பெரிதாக போடுவது என்பது விழாவின் நாயகனுக்கு அவமதிப்புத் தான். குமுதம் ஒரு பத்திரிகை, ஒவ்வொரு வாரமும் இவர் படத்தையே பெரிதாக போட்டுக் கொண்டிருந்தால் பத்திரிகையில் அந்த வார சுவாரஸ்யம் என்னெவென்று சொல்லமுடியாமல் போய்விடும். ஓ பக்கங்கள் தொடர் ஆரம்பித்த இதழை, ஞானி அவர்கள் படம் போட்டுத்தான், விளம்பரம் செய்திருந்தார்கள். (பத்திரிகை கடைகளில் தொங்க விடபடும் விளம்பரங்கள்). உங்கள் வாதம் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக உள்ளது.

Gnani Sankaran @Saravanakarthikeyan Chinnadurai கஷ்டப்பட்டு வலிந்து வாதாடுகிறீர்கள். குமுதத்தில் நான் எழுதுவதும் எஸ்.ரா பாராட்டு விழா அழைப்பில் அவரை விட ர்ஜினி படம் பெரிதாகப் போடப்படுவதும் சம்மானவையோ ஒன்றோ அல்ல. குமுதம் என்னைப் பாராட்டுவதற்காக என் கட்டுரையை வெளியிடவில்லை. அப்படி என்னைப் பாராட்டி அது ஒரு கட்டுரை வெளியிட்டு அதில் என்னைப்பாராட்டுபவர் படத்தை என் படத்தை விடப் பெரிதாகப் போட்டால் அது தப்புதான். குமுதத்தின் என் காலம் என்பது இதழியல். உலகம் முழுவதும் காலம் எழுதும் காலமிஸ்ட் படத்தை மக் ஷாட்டாகவும், அந்தத வார காலத்தில் இருக்கும் விஷயம் தொடர்பான படத்தைப் பெரிதாகப் பொடுவதும் இதழியல் மரபு. குமுதம் என் காலம் தொடங்கிய சில வாரங்கள் என் படத்தைப் பிரும்மாண்டமாகப் போட்டார்கள். அது இதழியல் மரபு அல்ல என்பதால், நான்தான் அதை மாற்றி மக் ஷாட் வைக்க்ச் சொன்னேன்.

குமுதத்தில் எழுதும்போதும் குமுதத்தை விமர்சிக்கும் என் உரிமையை நான் இழக்கவோ விட்டுத்தரவோ இல்லை. ரஜினிக்காக எஸ்.ரா வேலை பார்ப்பதும் நான் குமுதத்தில் எழுதுவதும் ஒன்றல்ல. சினிமாவில் ரஜினிக்குப் பிடித்ததைத்தான் எஸ்.ரா எழுதிக் கொடுத்தாக்வேண்டும். குமுதம் விரும்புவதை நான் எழுதுவதில்லை.நான் விரும்புவதையே நான் எழுதுவேன். அது முடியாதென்றால் விலகிக் கொள்கிறேன். அவர்கள் விரும்புவதை எழுதுபவனாக மாறுவதில்லை.ஆனந்தவிக்டன் குஷ்பு பற்றிக் கவிதைப் போட்டி நடத்திய சமயத்தில் நான் அதே குழுமத்தின் ஜூனியர் போஸ்ட் இதழில் பொறுப்பாசிரியராக இருந்தபோது என்று தணியும் இந்த குஷ்பு மோகம் என்ற கட்டுரையில் கிண்டலடித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் சமரசங்கள் கிடையாது.

எனவே பாராட்டு விழா அழைப்பிதழில் எஸ்.ரா படத்தை விட ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டது அவமதிப்பு. தவறு. இதை எத்தனை சுற்றி வளைத்து வாதிட்டாலும் மாற்றிவிடமுடியாது. ரஜினிக்கான பராட்டுவிழா அழைப்பில் எஸ்.ரா பாராட்டிப்பேச வந்தால், அதில் எஸ்.ரா படத்தைப்பெரிதாகப் போட்டாலும் ( போடமாட்டார்கள் !) அதையும் தவறென்றுதான் சொல்வேன். . இத்துடன் நான் இந்த விவாதத்திலிருந்து விடைபெறுகிறேன்.

Saravanakarthikeyan Chinnadurai‎ ‎@Gnani Sankaran நன்றி!

Ramki Jay கோயிஞ்சாமியின் புரிதல் : ரஜினி, எஸ்.ராமகிருஷ்ணன், ஞாநி, குமுதம் எல்லோரும் சமம். ஆகவே எல்லோரையும் சமமாக ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள். எல்லோர் படத்தையும் பெரிசா போடுங்க....இல்லாங்காட்டி சின்னதா போடுங்க... இல்லாங்காட்டி... போடவே போடாதீங்க. நமக்கென்ன போஸ்டர் டிசைன் பண்றவனுக்கே தலைவலி!

*******

Comments

rathinamuthu said…
அருமையான விவாதம்.
Anonymous said…
I dont have any knowledge on SR or Gnani. But Nice counters by Savaravana karthikeyan. - Ravi
இதெல்லாம் எங்கே நடக்குது?!
ஞாநி! குசேலனை ஏன் சூப்பர் படம் என்று குமுதத்தில் எழுதினார் என்று நீங்கள் கேட்டிருக்கலாமே சி.எஸ்.கே? :-)
@யுவகிருஷ்ணா
அது அவர் ரசனை சம்மந்தப்பட்டதல்லவா!
//அது அவர் ரசனை சம்மந்தப்பட்டதல்லவா!//

நிச்சயமாக இல்லைன்னு நெனைக்கிறேன் :-)
@யுவகிருஷ்ணா

எனக்கு அதன் பின்ன‌ணி தெரியாது. உண்மையில் அவர் பாராட்டினார் என்பது கூட நீங்கள் சொல்லித்தான் தெரியும்.

மொழி படத்தை விதந்தோதி விட்டு பருத்திவீரன், சிவாஜி இரண்டு படங்களையும் ஒரே தட்டில் வைத்து எடை போட்டு குப்பை என்றார் என்பது மட்டும் நினைவிருக்கிறது. எனக்கோ பருத்தி வீரன் பிடிக்கும், சிவாஜி சுமார், மொழி பிடிக்காது. அதனால் ரசனை அடிப்படையில் ஞாநியோடு பெருந்த அளவில் வேறுபடுகிறேன் என்ற அர்த்தத்தில் அப்படிச் சொன்னேன்.
@Ganshere said…
<
யுவகிருஷ்ணா said...

ஞாநி! குசேலனை ஏன் சூப்பர் படம் என்று குமுதத்தில் எழுதினார் என்று நீங்கள் கேட்டிருக்கலாமே சி.எஸ்.கே? :-)
>


இதுவும் சரவணனின் "குமுதத்தில் எழுதியதை விட உங்கள் நிஜமான வாசகர்களை அவமதிக்கும் செயல் என்ன இருந்து விட முடியும்." என்ற கருத்தைப்போல தான் உள்ளது.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்