மண்மகள் [தீபாவளி சிறப்புச் சிறுகதை]

*******

அதன் பெயர் வைதேக ராஜ்யம்.

கங்கையும் சிந்து நதியும் போட்டிபோட்டுப் படுகையமைத்து வளப்படுத்தும் பெருநிலப்பிரதேசம். வாழும் குடிகட்கு வாரி ஈந்த அப்பூமி ஆளும் அரசனுக்கு ஓரவஞ்சனை செய்திருந்தது. வைதேக நாட்டை அப்போது ஆண்டு வந்தவன் சீரத்வாஜன். அவன் மனைவி சுனன்யை. அந்நாட்டை அடுத்து ஆட்சிப் பரிபாலனம் செய்ய அத்தம்பதியர்க்கு புத்ரபாக்கியம் இல்லை.

அவர்கள் காத்திருந்தார்கள்.

*******

அதன் பெயர் தர்பைப்புல் தீர்த்தம்.

மஹாவிஷ்ணு மனங்கொண்ட மஹாலக்ஷ்மி அதில் வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை. மாமுனியான க்ருத்சமத மகரிஷிக்கு அதன் மேல் மிகுந்த ப்ரேமை. பல்வேறு மந்திர உச்சாடனங்களால் அதனைப் பரிசுத்தப்படுத்தி தவம் புரிந்து வந்தார். தன் தர்மபத்தினியின் வயிற்றில் சாட்சாத் மஹாலக்ஷ்மியே வந்து பிறக்க வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு.

அவர்கள் காத்திருந்தார்கள்.

*******

அவன் பெயர் ராவணேஸ்வரன்.

லங்கையின் மகராஜன். பிறப்பால் பாதி அசுரன்; மீதி பிராமணன். தவம் புரிந்து பிரம்மனிடம் வரம் பெற்றவன். கிட்டதட்ட சாகாவரம் - தெய்வங்களாலோ தேவர்களாலோ அசுரர்களாலோ மிருகங்களாலோ மரணம் சம்பவிக்காத வரம். அவனது மனைவி மண்டோதரி கற்பின் திறத்தால் அவனைக் காத்து வந்தாள். அது நாள் வரை அவர்களுக்குக் குழந்தையில்லை.

அவர்கள் காத்திருந்தார்கள்.

*******

கறுத்துச் சிவந்த ரத்தத்துளிகளால் ஆனது அந்தப் பொன் பானை. தவம் பல புரிந்து, வரம் பல பெற்ற ரிஷிகளும், முனிகளும் தத்தம் இறுதிக்கணங்களில் சிந்திய ரத்தம். நல்லதோ கெட்டதோ, மிக அற்புதமானதும் அரிதானதுமான சேகரம் அது. லங்கேஸ்வரன் ராவணனுக்கு அது நெடுநாள் பழக்கம் – தான் செல்லும் இடமெல்லாம் அப்பானையை எடுத்துச் சென்று, கொல்லும் முனிவர்கள் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் ஒரு துளியை அதில் சேர்த்து வந்தான். அன்றைய திகதியில் ஈரேழுலகிலும் மிகக்கடுமையான விஷம் எனப் பேர் பெற்றிருந்தது அது. மஹா ஆலகாலம்!

ராவணேஸ்வரன் முனிவர்களை மட்டும் குறி வைத்து அழிக்க மிக முக்கியக் காரணம் அவர்கள் தபஸ்விகள் என்பதே. தான் தவம் மூலமாகவே அத்தனை பலங்களையும் பெற்றவன் என்கிற ஆதார பயம். வேறெந்த மானுடனும் தவம் மூலம் அதனை அடைந்துவிடலாகாது என்பதற்காகவே தவம், யோகம், யாகம், ஹோமம் நடக்கும் இடங்களை அழிப்பதிலேயே கண்ணாய் இருந்தான் அவன். அவனது அநீதிச் செயல்களின் அடையாள நீட்சியே அந்த அழகிய‌ பொன் குருதிப் பானை.

மண்டோதரிக்கு இதிலெல்லாம் உவப்பில்லை. அவள் பயந்திருந்தாள். தனது அழிவினைத் தானே தேடிக் கொள்கிறான் ராவணன் என்பது அவளுக்கு நன்கு புரிந்திருந்தது. அவளும் எவ்வளவோ சொல்லிப்பார்த்து விட்டாள். லங்கேஸ்வரன் கேட்பதாயில்லை. மாயாசுரன் மகளும் விடுவதாயில்லை. இந்தப் பிணக்கின் காரணமாக அவர்கள் இருவரும் சற்று அந்நியமாய்த் தான் நடந்து கொள்கிறார்கள் - அந்தரங்கமான அந்தப்புரத்திலும் கூட. அப்புறம் புத்ரவிருத்திக்கு வழியேது?

ராவணன் இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. அவனுக்குப் பழைய சோறு இனிக்கத் தொடங்கியிருந்தது. அந்தி ஓய்வு வேளைகளில் தன் முதல் மனைவியான தன்யமாலினியின் மஞ்சத்தில் தஞ்சமடையத் தொடங்கியிருந்தான். இது தவிர, வெளியே வேறு ஏற்பாடுகள் செய்வதாகவும் மண்டோதரி தனது தோழிமார்கள் மூலம் கேள்வியுற்றாள். அது அவளை மிகவும் மனக்கிலேசமடையச் செய்தது. ராவணனால் மண்டோதரியை முழுவதுமாகவும் புறக்கணிக்க இயலவில்லை.

மனம் மயக்கும் மாலை வேளைகள் அவனைப் பார்த்து கொக்கரித்துச் சிரித்தன.

*

ராவணன் அன்று லீலை நடத்தப் போனது க்ருத்சமத ரிஷியின் ஆசிரமத்திற்கு.

அசுர சேனையுடன் குடிலின் கதவுடைத்து ராவணன் உள்நுழைந்த நண்பகல் வேளையில் ரிஷி தன் மனைவியுடனான நிதான சம்போகத்தின் மத்தியிலிருந்தார். சம்பவம் தந்த அதிர்ச்சியில் ரிஷி பதறியோடி மிச்சத்துகில் தேடியணிந்தார். அவர் மனைவி அவமானத்தில் குறுகி உள்ளறைக்கு ஓடி மறைந்தாள். பிருஷ்டம் குலுங்க அவள் ஓடுவதைப் பார்த்த ராவணன் கைதட்டி பலமாய் நகைத்தபடி சொன்னான் – “மெல்ல‌! மெல்ல‌ ஓடுங்கள்! நாங்கள் யாரும் பார்க்கவில்லை”.

“ராவணா...!” – இயலாமையின் உச்சஸ்தாயியில் அதட்டினார் க்ருத்சமத ரிஷி.

“கெட்ட வேளையில் வந்து விட்டேனா? கெட்ட வேலையில் இருந்தீர் போலிருக்கிறது?”

ராவணன் கேட்க அவனைச் சூழ்ந்திருந்த‌ அசுர சேனை கும்பலாய்ச் சிரித்தது.

“ராவணேஸ்வரா போய் விடு. ரிஷி சாபத்திற்கு ஆளாகாதே” – இது க்ருத்சமதர்.

“இங்கென்ன‌ வேலை எனக்கு. என் அந்தப்புர சேடிப்பெண்களே உம் பத்தினியை விட‌ வடிவானவர்கள்.”

மறுபடியும் கும்பல் சிரிப்பு.

“என் போன்ற முனிகளை ஏன் துன்புறுத்துகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?”

“நீங்கள் ஏதோ தர்ப்பைப்புல் நீரில் மந்திரம் போட்டு வைத்திருக்கிறீர்களாமே. ஊரெல்லாம் அதைப் பற்றித் தான் கதை கதையாய்ப் பேசிக் கொள்கிறது. அதை மட்டும் கொடுத்து விடுங்கள் ரிஷியே. நான் என் வழியே போய் விடுகிறேன்.”

க்ருத்சமத ரிஷி துல்லியமாய் அதிர்ந்தார். அது அவரது ஆயுட்கால லட்சியம். இன்னும் சரியாய் சொல்லப்போனால் அவர் உயிரே அது தான். மூச்சுக்காற்று. இவனோ வேறேதும் வேண்டாம் அதை மட்டும் தா என்று அகங்காரமாய்ப் பேசுகிறான்.

“நீங்களாகக் கொடுத்து விட்டால் எந்தச் சேதமும் இல்லை. தரச் சம்மதமில்லையென்றால் நீங்கள் என் வாளுக்கும் உங்கள் பத்தினி என் சேனைக்கும் பலியாக நேரிடும். பின் நானே அதைத் தேடி எடுத்துச்செல்வேன். எப்படி வசதி?”

சொல்லிக் கொண்டே ராவணன் தன் இடைக்கச்சில் செருகியிருந்த உறையினின்று வாளை உருவினான். பல்லாயிரம் உயிர் கண்ட அந்தக் கொலை வாள் க்ருத்சமதர் குடிலின் மதியவேளை மங்கலொளியில் மழுப்பலாய்ப் பளபளத்தது.

அதுவரை உள்ளிருந்த க்ருத்சமத ரிஷியின் மனைவி வேளியே ஒடி வந்தாள்.

“கொடுத்து விடுங்கள். எல்லாவற்றையும் விட உங்கள் உயிர் தான் முக்கியம்”

க்ருத்சமத ரிஷி தயக்கத்துடன் கை காட்ட, ராவணன் வசமானது தர்ப்பைப்புல் தீர்த்தம் தாங்கிய கமண்டலம். க்ருத்சமதர் செய்வதறியாது திகைத்து நின்றார். அவர் கண்களில் நீர் கோர்த்து நின்றது. துடித்த உதடுகளை கடித்தடக்கிக் கொண்டார்.

“ராவணா, இந்த தர்ப்பைப்புல் தீர்த்தமே உனக்கு எமனாக வரும். இறுதிக்கணங்களில் என்னை நினைத்துக் கொள்வாய்.”

கையறுநிலையின் விளிம்பிலிருந்த க்ருத்சமதர் என்ற பெயர்கொண்ட அந்த தவத்திரு மகரிஷி ஸ்பஷ்டமாய் சாபமிட்டார்.

ராவணன் அடுத்து செய்தது அவனது ஒட்டுமொத்த வாழ்வின் ஆக மோசமான தவறு – அந்த தர்ப்பைப்புல் தீர்த்தத்தை தனது குருதிப் பானையில் கலந்தான். பின் ஓர் இடைவெளி விட்டு பிரபஞ்சமே அதிரும் பெருஞ்சிரிப்பை வெடித்தான்.

*

ராவணனைக் காட்டிலும் அதிகமாய் மண்டோதரி வெறுத்த விஷயம் ஒன்று இருந்ததென்றால் அது அந்தப் பொன் பானை தான். க்ருத்சமதர் குடிலில் நடந்த விஷயங்களைக் கேள்வியுற்றதும் மண்டோதரி விடுவிடுவென அறைக்குச் சென்றாள்.

அந்தப் பொன் பானை கொடூரத்தின் கம்பீரம் வீசி தனிமையில் வீற்றிருந்தது. மண்டோதரி ஒரு கணம் தான் யோசித்தாள். கொடிய விடமென அறியப்பட்ட அந்தப் பானையின் அடக்கத்தை ஒரே மூச்சில் தன் தொண்டையில் கவிழ்த்துக் கொண்டு எச்சில் விழுங்கினாள். வேகவைத்த‌ நத்தையொத்த மென்வயிற்றில் ஒரு பிரளயமே நடக்க, மறுகணம் மூர்ச்சையானாள்.

*

கடல் சூழ்ந்த லங்கா தீவின் மையமான அரண்மனை அல்லோகலப்பட்டது.

ராவணனின் பட்டமகிஷி விடமருந்தி விட்டாள் என்கிற செய்தி வனாந்திர நெருப்பு போல் அந்தக் கையகல‌ தேசமெங்கும் பரவியது. தொலைவிலெங்கோ அட்டூழியம் செய்வதில் மும்முரமாயிருந்த ராவணனிடம் தகவலறிவிக்க அசுர வீரர்கள் விரைந்தோடினர். தன் பாவங்களை சற்று ஒத்திப் போட்டுவிட்டு அலறித்துடித்து அரண்மனை வந்தடைந்தான் ராவணன்.

அந்தப்புரப் பஞ்சணையில் இன்னமும் மயக்கத்தில் துவண்ட கொடியாய்க் கிடந்தாள் மண்டோதரி. ஒரு சூறாவளி போல் உள்ளே நுழைந்த லங்கேஸ்வரன், ராஜவைத்தியரை தன்னிரு கண்களாலேயே எரித்து விடுபவனைப் போல் பார்த்தான்.

அமைதி தோய்ந்த முகத்துடன் தலை குனிந்தபடி பேசினார் ராஜவைத்தியர்.

“சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். இது விடமில்லை வேந்தா. இவ்வளவு காலமாய் நீங்கள் சேர்த்து வந்த‌ பாவம்.”

“என்ன?”

“அரசிக்கு தற்போது சாதாரண பித்த மயக்கம் தான். கவிச்சி வீசும் பச்சை மனித ரத்தம் குடித்து வந்த அருவருப்பினாலும், அஜீரணத்தாலும் ஏற்பட்டது மட்டுமே. இன்னும் ஒருநாழிகையில் மஹாராணி தெளிந்துவிடுவார். ஆனால் அரசர்க்கரசே,"

ஒரு கணம் தயங்கி யோசித்த ராஜவைத்தியர் பின் த‌னக்குள் ஏதோ முடிவு செய்தவர் போல் பெருமூச்சுடன் தொடர்ந்தார்.

“உங்கள் அடிமை உங்களுக்கே அறிவுரை சொல்லுதல் தகாது. ஆனாலும் மனம் கேட்காமல் சொல்கிறேன். மண்டோதரி உமது பட்டத்தரசி. மனதிற்குந்த மங்கை. அவரை கவனித்துக் கொள்வது உங்கள் கடமை. வேந்தே, நீங்கள் நினைக்கலாம் அவளுக்கு இங்கே என்ன குறையென்று. பொன்னும், பொருளும், பஞ்சணையும், படாடோப அரண்மனையும், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் ஏவல‌டிமைகளும் மட்டுமே ஒரு பெண்ணுக்கு சுகத்தினைத் தந்து விடாது. கொஞ்ச நாட்கள் அவரது விருப்பம் போல் நடந்து கொள்ள முயலுங்கள். அன்பினைக் காட்டிலும் மிகப்பெரிய ஔடதம் இவ்வுலகில் வேறில்லை.”

“...”

ராஜவைத்தியர் தம் பரிவாரங்களுடன் அவ்விடம் அகன்றார். ராவணன் கல்லாய்ச் சமைந்திருந்தான். அவன் மனமோ மிக இளகிக் கனிந்திருந்தது. இதே வேறொரு சமயமாய் இருந்திருந்தால் ராஜவைத்தியரின் தலை தரையில் உருண்டிருக்கும்.

மருந்தின் வீரியத்தில் மயக்கமுற்றுப் படுத்திருக்கும் மண்டோதரியைப் பார்த்தவாறே நெடுநேரம் அங்கு நின்றிருந்தான்.

*

ராவணன் அன்றிரவு மண்டோதரியை அனிச்சையாய்த் தேடி வந்தான்.

மண்டோதரி வைத்தியத்தின் பலனாய்க் களைத்திருந்தாள். உடலெங்கும் பரவியோடும் நரம்புகள் தோறும் மின்னலாய் வலி தெறித்தது. ஆனால் நெடுநாள் கழித்து ராவணன் தானே அவளைத் தேடி வந்திருந்தது கிறக்கத்தை ஊட்டியிருந்தது.

அன்றைய கலவி அவர்கள் இருவருக்குமே புதிதாய் இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கைபிடித்து புத்தம் புதியதான ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பெயர் சொர்க்கமாய் இருக்கலாம் என நினைத்து இருவரும் தமக்குள் சிரித்துக் கொண்டனர். இடைப்பட்ட ஊற்றுக்களில் நீராடித் திளைத்தான் அவன். தடையாய் வந்த பாறைகளில் கண்மூடிக் கிடந்தாள் அவள். உச்ச கணத்தில் ராவணன் தன்னை குழந்தையாய் உணர்ந்தான்; மண்டோதரி தன்னை தெய்வமாய் உணர்ந்தாள்.

கூடலுக்குப் பின் இரவு வெகுநேரம் கண் விழித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

*

ஒரு பௌர்ணமியும், ஓர் அமாவாசையும் மௌனமாய்க் கடந்திருந்தன.

அன்று நீராட அசோகவனத்திலிருந்த பொய்கையில் இறங்கிய மண்டோதரி வாயிலெடுத்து மயக்கமானாள். மறுபடியும் அரண்மணை களேபரமானது. ராஜவைத்தியர் வரவழைக்கப்பட்டார். ராவணேஸ்வரனுக்கு அந்த‌ அவசரச்சேதி பறந்தது.

இம்முறை வைத்தியர் அதிக சிரமப்படவில்லை. மண்டோதரியின் நாடி பிடித்துப் பார்த்தவரின் முகத்தில் உடனடியாக ஒரு சிறுபுன்னகை அரும்பியது. குழப்பமுற்றுப் பதற்றத்துடன் சூழ்ந்திருந்தவர்களைப் பார்த்து பொதுவாக அறிவித்தார் -

"எல்லாம் நல்ல விஷயம் தான். லங்கா தேசத்தின் ராணி தாயாகப் போகிறார்."

ராவணன் குதித்தான்; மக்கள் குதூகலித்தனர்; லங்கை கொண்டாடியது.

*

அன்றைய பின்னிரவில் மண்டோதரியின் தகப்பனும் மாபெரும் கட்டிடக் கலைஞனுமான மாயாசுரன் லங்கேஸ்வரனை தனிமையில் சந்தித்தான். முதுமையில் காய்த்த த‌ன் முகத்தை அவன் அன்றைக்கு கவலையால் முக்காடிட்டிருந்தான்.

“என்ன, ஒரு மாதிரி இருக்கிறீர்கள், மாமனாரே?"

“ராவணா, உனக்கு ஒரு கெட்ட செய்தி வைத்திருக்கிறேன்.”

“ராவணனுக்கு கெட்ட செய்தியா? சொல்லுங்கள் கேட்கலாம்.”

“விளையாட்டல்ல இது; விபரீதம்!”

“ம். தொடருங்கள்.”

“மண்டோதரிக்குப் பிறக்கவிருக்கும் குழந்தை ஆபத்தானது.”

“என்ன சொல்கிறீர்கள்?”

“ஆம். அது தான் உனக்கு எமன், ராவணேஸ்வரா.”

“ஆ...!”

“தவிர, இந்நாட்டை, நம் குலத்தையே அழித்து விடும்.”

“நிஜமாகவா?”

“கிரகங்கள் பொய் சொல்லாது, ராவணா.”

“அப்படியென்றால்?”

“குழந்தையைக் கொன்று விட வேண்டும்.”

“என்ன?”

“கொல்லப்பட்ட சிசு கூட இம்மண்னில் புதைபடக்கூடாது.”

“...”

“அதன் ஒரு துளி ரத்தம் கூட உனக்கு மரணத்தைப் பரிசளிக்கும்.”

ராவணன் ரௌத்திரமானான். உடனடியாய்க் கிளம்பினான்.

*

அது ஓர் அட்சர சுத்தமான கொலைவெறிச்செயல். பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என இருதயம் படைத்த எந்த மனிதனாலும் அதைச் செய்யவியலாது. தெய்வ நிந்தனை மிகப்பழகிய‌ ஓர் அரக்கனுக்கு மட்டுமே அது சாத்தியம்.

உறங்கிக் கிடந்த மண்டோதரியின் கீழாடை விலக்கி யோனிக்குள் கை நுழைத்து சிசுவைக் கருவறுத்தான் ராவணன். செங்குருதி பொங்கத் துடித்த சிசுவினை தயாராய் வைத்திருந்த பேழையில் சர்வ ஜாக்கிரதையாய் இட்டு மூடினான்.

மண்டோதரி ரத்த வெள்ளமானாள். அவள் கதறல் தேச எல்லை வரை கேட்டது. சேடிகள் அலறி ஓடி வர, ராவணன் அலட்டிக் கொள்ளாமல் ஒரு மலர் பறித்த முகபாவத்துடன் மிக‌ நிதானமாய் தனது பிரதம‌ தளபதியை அழைத்தான்.

“பரத கண்டத்தின் வடப்புறம் ஏதேனும் கண்காணா தேசத்தில் கொண்டு போய் இதனைப் புதைத்து விடு.”

“அப்படியே ஆகட்டும் அரசே!”

“முக்கியமாய், மிக முக்கியமாய் லங்கைக்குள் இதன் துளி ரத்தம் கூட சிந்தக்கூடாது.”

உள்ளங்கையடக்க குற்றுயிர்ச்சிசுவுக்கு அப்பெரிய பேழையெதற்கு என யோசித்தவாறே கிளம்பினான் அந்த தளபதி.

விதி சிரித்தது.

*

அசுர தளபதி பேழையைப் புதைத்துக் கிளம்பிய அந்த பரத கண்ட தேசத்தின் பெயர் வைதேக நாடு.

*

புத்திர பாக்கியம் வேண்டி நடத்தும் யாகத்தின் ஒரு பகுதியாக வைதேக நாட்டின் மன்னன் சீரத்வாஜன், தனது தர்மபத்தினி சுனன்யையுடன் பூமி தானம் செய்து அதில் மாடு பூட்டி ஏர் உழுதான். எட்டாம் சுற்றில் ஏர் மண்ணில் புதையுண்ட எதிலோ மாட்டி நகர மறுத்தது. தோண்டிப்பார்க்க அந்தப் பேழை அகப்பட்டது. சீரத்வாஜன் அப்பேழையைத் திறக்க உத்தரவிட்டான்.

பேழையைத் திறந்து பார்க்க, உள்ளே பிறந்து கொஞ்சம் நேரமேயான ஓர் அழகிய பெண் குழந்தை கைகால்களை அசைத்த படி கிடந்ததது. பிரபஞ்ச ஐஸ்வரியங்கள் அனைத்தையும் சேர்த்துக் குழைத்துச் செய்தது போல் பிரகாசித்தது அதன் முகம்.

முக்கியமாய், அந்த விசித்திரப் பெண் குழந்தை அழவே இல்லை.

“உன் யாகத்தின் நோக்கம் பூர்த்தியடைந்தது. இவள் இனி உங்கள் குழந்தை” என்றனர் சூழ்ந்திருந்த முனிவர்கள்.

மன்னன் சீரத்வாஜன் உழுவதை நிறுத்தி விட்டு குழந்தையை கையில் ஏந்தினான். குழந்தை வெள்ளையாய்ச் சிரித்தது.

“அந்த மஹாலக்ஷ்மியே உங்கள் குழந்தையாய் வந்து சேர்ந்திருக்கிறாள். இவள் முகத்தில் தாண்டவமாடும் தேஜஸ் அதைக் காட்டிக்கொடுக்கிறது” என்றார் ஒரு மூத்த‌ ரிஷி. மற்ற ரிஷிகள் அதனை ஆரவாரத்துடன் ஆமோதித்தனர்.

அப்படியொரு குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் அரச தம்பதியர் கூத்தாடினார்கள்.

“குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம்?” என்று தன் மனைவி சுனன்யை கேட்ட கேள்விக்கு வைதேக நாடு என்ற மிதிலை தேசத்தின் மன்னரான சீரத்வாஜன் என்று அத்தேசப் பிரஜைகளால் அன்போடு அழைக்கப்பட்ட ஜனகர் உரத்துச் சொன்னார் –

"சீதை".

*******

(loosely based on Sarga 8 of Adbhuta Rāmāyaṇa, a sanskrit text attributed to Śrīmad-Vālmīki)

Comments

Kaarthik said…
இது சிறுகதையா இல்லை புராணக் கிளைக்கதையா

அட்சர சுத்தமான கொலைவெறிச்செயல் - பயங்கரம் !
Anonymous said…
>>உறங்கிக் கிடந்த மண்டோதரியின் கீழாடை விலக்கி யோனிக்குள் கை நுழைத்து<<
சந்தேகம் இல்லை! இது நீர் எழுதிய கதைதான்!!
பிரதீபன் said…
தன் மகளையே வா ????., இராவணன் ????

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்