பரத்தை கூற்று :‍ கிருஷ்ண பிரபு - 2

பரத்தை கூற்று வெளியீடு பற்றி பதிவர் கிருஷ்ண பிரபுவின் பதிவு இது:

*******

http://thittivaasal.blogspot.com/2010/10/blog-post_19.html

*******

Tuesday, October 19, 2010 Posted by கிருஷ்ண பிரபு at 2:09 AM

அகநாழிகை புத்தக வெளியீடு


விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாவகே சாரு நிவேதிதா வந்திருந்தார். அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே CSK வந்துவிட்டார். எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்கிறேன் என்றால் CSK வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நான் அங்கு இருந்தேன். ஞாயிறன்று முரளி வருவதாகச் சொல்லி இருந்தான். அவனுக்கான புத்தகம் வாங்கவே கொஞ்சம் சீக்கிரம் சென்றிருந்தேன். அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே அமைந்தது. புதுக்கவிதை எழுதும் 'சா முத்துவேல், யாத்ரா, வேல்கண்ணன், பெஸ்கி' என்று பல நண்பர்களையும் நீண்ட நாள் கழித்து பார்க்கக் கிடைத்தது. சா முத்துவேலுக்கு இளமை திரும்பியிருந்தது. என்னுடைய பொறாமையை மறைக்காமல் அவரிடம் தெரியப்படுத்தினேன்.

குறித்த நேரத்தை விட கொஞ்சம் தாமதமாக விழா தொடங்கியது. சாரு பேச ஆரம்பித்தார். 'பரத்தை கூற்று' - புத்தகத்தை முதலில் சிறுகதைத் தொகுதி என்று நினைத்தாராம். கவிதை என்றதும் வருவதற்கு தயக்கமாக இருந்தது என்றார். என்னை வெளியிட அழைத்ததற்காக CSK-வைப் பாராட்டுகிறேன் என்றார். அதன் பிறகு உலக இலக்கியம், உலக எழுத்தாளர்கள், உலகக் கவிதை, உலகப் படம் என்று என்னென்னமோ பேசினார். அவற்றில் பதிவாகியிருக்கும் பாலியல் தொழிலாளிகளின் வலிகளை உணர்துவதற்காக பல மேற்கோள்களைக் காட்டினார். 'வைரமுத்து, இளையராஜா, கமல்ஹாசன்' போன்ற பிரபலமானவர்களைப் பற்றி ஏற்கனவே பல சந்தர்பங்களில் பகிர்ந்து கொண்ட அதே கருத்துக்களை இங்கும் பகிர்ந்து கொண்டார். அவர்களுக்கு வழங்கிவரும் அடைமொழி குறித்த தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார்.

ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் பேசியவர் கடைசி ஐந்து நிமிடங்கள் 'பரத்தை கூற்று' கவிதை புத்தகத்திற்காக எடுத்துக் கொண்டார். ஒருசில கவிதைகளை வாசித்துக் காண்பித்தார். "சுஜாதா இருந்திருந்தால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி இருப்பார். அப்படிப்பட்ட கவிதைகள் நிறைய இருக்கிறது. அவர் எவ்வளவோ கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மனுஷ்யபுத்ரனைத் தவிர மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பரத்தைகளின் வலி கவிதைகளில் இல்லை" என்று அனைவருக்கும் நன்றி கூறி உரையை முடித்தார்.

70-ற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்ததால் நாங்கள் விட்ட மூச்சுக்காற்றே அறையை உஷ்ணமாக்கியது. சுற்றியிருந்த வெக்கையும், உள்ளிருந்த புழுக்கமும் வெளியில் வந்தவுடன் கரைந்து சென்றது போல இருந்தது. நண்பர்களிடம் விடைபெற்று பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். முன் பார்த்திராத நபரிடம் "இங்கு நிற்கும் வண்டிகள் உதயம் திரையரங்கு செல்லுமா?" என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே அருகில் அழைத்து உட்காரச் சொல்லி என்னைப் பற்றி விசாரித்தார். இது போன்ற தருணங்களில் சொல்வதற்கென்றே தயார் செய்து வைத்திருந்த வரிகளை வார்த்தை பிறழாமல் சொல்லிக் கொண்டிருந்தேன். இடையில் ஒரு சில கேள்விகளைக் கேட்டார். அதற்கும் சலிக்காமல் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தேன். ஒரு நிலையில் போதும் என்று நிறுத்திவிட்டு அவரைப் பற்றி விசாரித்தேன்.

சென்னைவாசி. பெயர் பிரபா என்றார். மெட்ராஸ் பல்கலையில் 'சங்ககால இலக்கியம்' பற்றி Phd செய்து கொண்டிருக்கிறாராம். 'பரத்தை கூற்று' என்றதும் ஆவலுடன் வந்திருந்தேன். "எதிர்பார்த்த அளவிற்கு இல்லை" என்றார். இதற்குள் பேருந்து வரவும் உள்ளே சென்று கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டோம். மின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஈரத்தரை நகர்ந்து கொண்டிருந்தது.

உங்களை புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்தேன். அதனால் தான் உங்களைப் பற்றி விசாரித்தேன் என்றார். அவரைப் பார்த்த ஞாபகம் எனக்குக் கொஞ்சமும் இல்லை.

"இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த மாதிரி விழாவிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. புத்தகம் படிக்கிறீங்க இல்ல... அதுவே போதும்..." என்று அவர் சொல்லியதும் நான் அதிர்ந்தேன்.

"நான் முண்டியடித்து எந்த ரிஸ்கும் எடுக்கலையே!" என்றேன்.

"இரண்டு மணி நேரம் பயணம் செய்து வரீங்க இல்ல... அதைச் சொன்னேன்..." என்றார்.

பிரபா எழுதி "கண்ணாடி" என்ற கவிதைப் புத்தகமும், "பல்பம், பிஞ்சுகள்" ஆகிய குறு நாவல்களும் வெளிவந்துள்ளதாம். NCBH - ல் கிடைக்கிறது என்றார். உதயம் திரையரங்கைப் பார்த்ததும் எழுந்து கொண்டேன். வண்டி நின்றதும் கீழே இறங்கி அவரைப் பார்த்துச் சிரித்தேன். என்னைப் பார்த்து கையசைத்தார். எந்திரன் படத்தின் போஸ்டரை சில நொடிகள் மறைத்தவாறு பேருந்து என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தது.

Comments

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet

பொச்சு