சில சிந்தனைகள் - 7

நேற்று ஈரோடு ரயில் சந்திப்பின் முதலாவது நடைமேடையிலிருந்த புத்தகத் தள்ளு வண்டி ஒன்றில் (பெயர் ஹிக்கின்பாத்தம்ஸ்!) எனது 'சந்திரயான்' புத்தகம் விற்பனைக்கு இருந்தது. புத்தகக்காட்சி, வலைதளம் தவிர்த்து எனது புத்தகம் விற்பனையிலிருப்பதைக் காணும் முதல் வெளியிடம் இது தான். கடைக்காரரிடம் ஒரு மெலிதான புன்னகையுடன் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ('ஆத்தர்' என்கிற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினேன்), மருதனின் 'இரண்டாம் உலகப் போர்' வாங்கிக் கொண்டு நகர்ந்தேன். "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க" என்பது இது தான் போலும். ‌

கிழக்கின் வீச்சும் ரீச்சும் எப்போதும் தனி தான்.

*******

ரெண்டு தான் நான் படிக்கும் பா.ராகவனின் முதல் ஃபிக்ஷன் எழுத்து. கதையின் முடிவு தவிர்த்து (அது எனக்குப் புரியவில்லை!) நாவல் முழுக்கவே படிப்பதற்கு மிகச்சுகமான அனுபவமாக இருந்தது. கல்லூரி காலத்தில் திரைப்படங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த‌ போது என்னிடம் குறைந்தபட்சம் இருபது திரைக்கதைகளுக்கான ஒன்லைன்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ஒரு பெண் இரண்டு ஆண்களோடு வாழ்கிறாள் என்று கிட்டதட்ட இதே கதைக்களம் தான். கடந்த ஜனவரியில் நடந்த கிழக்கு எழுத்தாளர் பட்டறையின் போது தன்னுடைய நடை கிராமங்களில் கிழவிகள் கதை பேசும் வக்கணையான நடை என்று ராகவன் குறிப்பிட்டார்.

அது வரிக்கு வரி இந்நாவலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

*******

கடந்தசில நாட்களாய் ராவணன் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 'உசிரே போகுதே' தவிர எதுவும் பெரிதாய் ஈர்க்கவில்லை. பார்க்கலாம். இடையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா'வை மறுஆய்வு செய்ததில் 'ஆரோமலே' பாடலில் வரும் ஆரம்ப இசையும் உடன் இணைந்த அல்ஃபோன்ஸ் ஜோசப் குரலும் முக்கியத்துவம் பெறுகிறது ('ஹோசன்னா'வை ஏற்கனவே அங்கீகரித்து விட்டேன் என்பது என் தீவிர வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்). மற்றபடி, அந்த ஆல்பம் குப்பை என்ற எனது முந்தைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஏ.ஆர்.ஆர். எது போட்டாலும் கொண்டாடும் ஆசாமிகளிடையே அவரின் திறமையை கணக்கில் கொண்டு அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கும் என் போன்றவர்களே அவரது நிஜமான விசுவாசிகள் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

*******

பாலகுமாரனின் கல்லூரிப்பூக்கள் சினிமாத்தொழிலை அதன் அரசியலை அக்கு வேறு ஆணிவேறாக கழற்றிக் காண்பிக்கிறது. சினிமாவின் எந்தத் துறையென்றாலும் அதனுள் நுழைய ஒருவன் / ஒருத்தி இழக்க வேண்டியவை, பழக்க வேண்டியவை என்னென்ன‌ என்பதற்கு இதன் கதாபாத்திரங்கள் போகிற போக்கில் பதிலிறுக்கின்றன. சில இட‌ங்கள் தவிர உண்மைக்கு வெகு அருகே வரும் சம்பவங்களைக் கோர்த்து எழுதப்பட்டிருக்கும் சுவாரசியமானதொரு நாவல். வாசகர்களுக்கு சிபாரிசிக்கிறேன்.

*******
சுற்றமும் நட்பும் சூழ்ந்த‌ அபிப்பிராய பேதங்களுக்கு மத்தியில் கிட்டதட்ட ஒரு மாத வயதான‌ என் மகனுக்கு ஒரு வழியாக பெயர் வைத்தாகி விட்டது - ஞானி. ஆங்கிலத்தில் ஜீனியஸ் அல்லது தமிழில் அறிவாளி என்பதைக் குறிக்கும் பெயர்ச்சொல்லான‌ இதன் மூலம் சமஸ்கிருதம் என்றாலும் ஆயிர‌க்கணக்கான ஆண்டுகளாக ஒரு தமிழ்ச்சொல் போலவே சுவீகரிக்கப்பட்டு நம் கவிதைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது - குறிப்பாய் பாரதி. மற்றபடி, என் ஆதர்சங்களான 'இசை ஞானி', 'கலை ஞானி' ஆகியோரின் பெயர்களிலிருந்து ரெண்டாம் பாதியை மட்டும் பெயர்த்தெடுத்து வைத்துக் கொண்ட‌தாகவும் கொள்ளலாம்.‌ யூகங்களுக்குத் தான் முடிவேது?

Comments

வலைஞன் said…
"ஞானி", ஞாலம் போற்ற, ஞாயிறு உள்ள வரை வாழ்க!!
ஜெய் said…
// 'உசிரே போகுதே' தவிர எதுவும் பெரிதாய் ஈர்க்கவில்லை. பார்க்கலாம். //

இந்த “பார்க்கலாம்” எனக்குப் பிடித்து இருக்கிறது CSK.. ஏனென்றால், போகப்போகதான் ரஹ்மானின் பாடல்களுக்கு நாம் fine tune ஆவோம் என்பதே உண்மை.. ஒரு சில பாடல்கள் முதல் முறையே பிடிக்கும்.. ஹொசான்னா, வீரா இந்த வகை..(இவை சீக்கிரம் அலுத்துப்போகவும் வாய்ப்புண்டு..!!) சிலது முதலில் பிடிக்காது.. ஆனால், பல நாள் கேட்டபின், எப்போதுமே பிடிக்கும்..

அதிகம் பிடிக்கவில்லையென்றாலும், சில நாட்கள் கேட்கவும்.. (குறைந்தது இரண்டு வாரம்).. பின், எல்லா பாடல்களும் பிடிக்கும்.. குறிப்பாக, காட்டுச்சிறுக்கி கூடிய சீக்கிரமே பிடிக்கும்..

// இடையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா'வை மறுஆய்வு செய்ததில் 'ஆரோமலே' பாடலில் வரும் ஆரம்ப இசையும் உடன் இணைந்த அல்ஃபோன்ஸ் ஜோசப் குரலும் முக்கியத்துவம் பெறுகிறது //

இதுதான் உதாரணம்.. ரஹ்மான் பாடல்களில், கவனிக்காத விஷயங்கள் சில முறை கேட்ட பின்னே கவனிக்கப்படுகின்றன.. இது எல்லா ரசிகர்களுக்குமே நடப்பதே...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்