படித்தது / பிடித்தது - 4

மனித வணக்கம்

தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீக சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்ச‌மங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண செளகர்யமே, வாழ்!

மகளே. ஓ மகளே!
நீயும் என் காதலியே
எந்தம்மை போல..
எனைப்பிரி ந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத்
தேடுவாயா?

நண்பா, ஓ நண‌பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உன‌தம்மணத்தின் விளம்பரங்கள்
மதமென்றும் குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சக‌வாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து,
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்,
ஆம்.
நாளை உன் வரியில்
நான் தெரிவேன்.

-கமல் ஹாசன்

நன்றி: விகடன் தீபாவளி மலர் - 2003

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்