சினிமாவும் நானும்

சினிமா பற்றிய கேள்வி-பதில்கள் தொடர்பதிவாய் தமிழ் வலைப்பூக்களில் பல பதிவர்களால் எழுத‌ப்பட்டு விட்ட நிலையில் கொசுறுக்கு கொஞ்சம் தமிழ் கொஞ்சும் என் வலைதளத்திலும் (அழைப்பு இல்லாவிடினும்) இப்பதிவை இடுவது தார்மீக கடமை ஆகிறது. இனி கேள்வி-பதில்கள்:

1-அ) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
கிட்டதட்ட மைனஸ் ஒரு வயதில். ஆம். அம்மாவின் வயிற்றிலிருந்த போது. அபிமன்யுவுக்கு கிருஷ்ணன் பத்மவியூகம் சொன்னது போல‌. படம்: வைதேகி காத்திருந்தாள்.

1‍‍-ஆ) நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், நினைவில்லை. கலவையாய் பல படங்கள் வந்து போகின்றன. எதுவென்று சரியாய்ச் சொல்ல முடியவில்லை.

1-‍‍‍இ) என்ன உணர்ந்தீர்கள்?
அப்படிக் கலவையாய் வந்து போகும் படங்கள் அனைத்திலும் பொதுவான அம்சமாய் இருந்த அதிரடி சண்டைக்காட்சிகளும், நடிகைகளின் தொப்புள்காட்சிகளும்.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
பெங்களூர் ஃபேம் லிடோ திரைப்பட அரங்கில் நண்பர்களுடன் நேற்றிரவு இரண்டாம் ஆட்டம் பார்த்த கெளதம் வாசுதேவ் மேனனின் வாரணம் ஆயிரம்.

3-அ) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது?
மணிரத்னத்தின் அல்லது கமல்ஹாசனின் நாயகன். இது படத்தை நான் பார்க்கும் முப்பதாவது அல்லது அதற்கு மேற்பட்ட தடவையாக இருக்கலாம். கணக்கு வைத்துக் கொள்ள‌வில்லை.

3-ஆ) எங்கே?
என் வீட்டில், தனிமையில், மடிக்கணிணியில், குறுந்தகட்டில். எனக்கு பிடித்த இது போன்ற பழைய படங்களின் குறுந்தகடுகளை சேகரித்து வைத்திருக்கிறேன்.

3-‍‍‍இ) ன்ன உணர்ந்தீர்கள்?
த‌மிழின் ஆகச்சிறந்த படம் என்பதை மேலும் ஒரு முறை உறுதி செய்து கொண்டேன். இது போன்ற படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதை ஒரு மனப்பயிற்சியாகவே கருதுகிறேன்.

4) மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
கமல்ஹாசனின் குருதிப்புனல். இதுவரை உலக தரத்தில் தமிழில் புனையப்பட்ட ஒரே திரைக்கதை என்பதாலும் அதில் ஒளிந்திருக்கும் தொழில்நுட்ப நேர்த்திக்காகவும்.

5-அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
குஷ்புவின் கற்பு பற்றிய கருத்துக்களும் அதற்கான அதீத எதிர்வினையும். அவர் சொன்னது உண்மை என்பது தான் பிரச்சனை - அதன் விலை எப்போதும் அதிகம்.

5-ஆ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சந்தேகமில்லாமல் இயக்குநர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களின் ஜிம்மிக்ஸ் வேலைகள். அன்றைய ஜென்டில்மேன் தொடங்கி நாளைய ரோபோ வரை.

6) தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
காலச்சுவடு, உயிர்மை, தீராநதி முதல் குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் வரை சினிமா தொடர்பாய் வரும் அனைத்தையும் பாகுபாடின்றி‌ - தினத்தந்தி உட்பட.

7) தமிழ் சினிமா இசை?
இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா.

8-அ) தமிழ் தவிர வேறு இந்திய மொழி சினிமா பார்ப்பதுண்டா?
சிறுவயதில் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகும் மாநில மொழி படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். தற்போது இந்தி படங்கள் மட்டும்.

8-ஆ) அதிகம் தாக்கிய படங்கள்?
Lagaan, Taare Zameen Par, Black, A Wednesday, Fashion, Fire, Water, Dil Se, Guru, Mathrubhoomi, Swadesh, Samay, Tahaan, Sarkar, Satya மற்றும் Sholey.

8-‍‍‍இ) தமிழ் தவிர வேறு உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
ஜேம்ஸ் பாண்ட், ஜாக்கி சான், ஜுராஸிக் பார்க் தொடங்கி தொலைக்காட்சியிலும் குறுந்தகட்டிலும் பல ஆங்கிலப்படங்கள். அவ்வப்போது திரையரங்கில்.

8‍‍‍‍-‍‍‍ஈ) அதிகம் தாக்கிய படங்கள்?
Jurassic Park, Titanic, Troy, Island, Independence Day, Water World, Day After Tomorrow, Wall-E, Johnny English, Behind The Enemy Lines, E.T., Apocalypto மற்றும் Gladiator.

9-அ) தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
கல்லூரி நாட்களில் உண்டு. உடன் படித்த அழகப்பன் (அவன் தந்தை திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர்) என்ற சினேகிதனின் மூலமாக.

9-‍‍‍ஆ) என்ன செய்தீர்கள்?
ராஜ்மோகன் என்ற இயக்குநரின் முதல் படத்திற்கு நான்கு பாடல்கள் எழுதினேன். சில பல காரணங்களால் அந்தப் படம் பாதியில் கைவிடப்பட்டது.

9-இ) பிடித்ததா?
கிட்டதட்ட. கனவுத்தொழிற்சாலையின் அரசியல் உணர்ந்தே அத‌ற்குத் தயாரானேன். ஆத்மசுத்தியோடு அங்கு செயல்பட இயலாது.

9-ஈ) அதை மீண்டும் செய்வீர்களா?
வாய்ப்பு கிடைத்தால் செய்வேன். சினிமாவுக்காக அல்ல என் சுயந‌லத்துக்காக. அது தரும் புகழ் எனும் மூலதனத்துக்காக. அதனால் என் நிஜ எழுத்துக்கள் மேலும் வாசிக்கப்படும் என்பதற்காக.

9-உ) தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
உதவாது. சினிமா என்னால் மேம்பட இரண்டு விஷயங்கள் சாத்தியப்பட வேண்டும். நான் இயக்குநராக இருக்க வேண்டும் நானே தயாரிப்பாளாராகவும் இருக்க வேண்டும்.

10) தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பாலா, சேரன், அமீர், செல்வராகவன், கெளதம், முருகதாஸ், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், சசிகுமார், ராதாமோகன், சுசி க‌ணேசன், சிம்புதேவன், வெங்கட் பிரபு, விஜய், ராம், வெற்றிமாறன் - என்ன சொல்கிறீர்கள்?

11-அ) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு எப்படியிருக்கும்?
சினிமாவுக்கான‌ பண‌த்தை மேலும் கூடுதாலாய் புத்தகங்கள் வாங்கவும், நேரத்தை பார்க்காமல் விடுபட்ட சில நல்ல‌ தமிழ் படங்களை குறுந்தகட்டில் பார்க்கவும் செலவிடுவேன்.

11-ஆ) தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டின் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும், பிரபல வாரப்பத்திரிக்கைகளும் சில வலைப்பூக்களும் இழுத்து மூடப்படும். "இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்ற புகழ்மிக்க சொற்றொடர் மறக்கப்படும்.

திரையரங்குகளில் எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களுக்கு முன்பதிவு நடக்கும். அடுத்த தமிழக முதல்வர்களின் எண்ணிக்கை சரியும். வேலையற்ற இளைஞர்கள் அனைவரும் வேலையிழப்பார்கள். புதிதாய் அறிமுகம் ஆகிற‌வர்களிடம் பேச விஷயமிருக்காது.

புதிய சிகையலங்காரங்கள் உற்பத்தியாகாது. கல்லூரி விழா கலை நிகழ்ச்சி்கள் களையிழக்கும். கார்பரேட் கம்பெனிகளின் சைவ வகை வார இறுதி கொண்டாட்டங்கள் ஜாகை மாற்றுவார்கள். இளைஞர்கள் பெண்களைக் கவர சுயமாய் யோசிக்க வேண்டியது இருக்கும்.

அரிவாள் தயாரிப்பு தொழில் சுணங்கும். சாதி அரசியல்வாதிகளுக்கு சினிமாவை அச்சுறுத்தவோ எதிர்த்து அறிக்கை விடவோ காரணம் கிடைக்காது. இரவுக்காட்சி முடிந்து திரும்புபவர்களை வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கும் பாலியல் தொழிலாளிகள் வேறு மார்க்கம் பார்ப்பார்கள்.

பொதுவாய் வன்முறையும் வல்லுறவும் குறையும். கலவரங்கள் சினிமா தவிர்த்த வேறு காரணங்கள் சொல்லி நிகழும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் பொருளாதாரம் குறையும். ரீமிக்ஸில் புண்ணாகும் காதுகள் பிழைக்கும்.

யாரை யார் வைத்திருக்கிறார் என்ற பொது அறிவு மங்கும். மக்களின் புன்னகையோ கண்ணீரோ அதன் பயன்பாடு வீழும். ஷகீலா படங்களின் மவுசு பகற்பொழுதிலும் கூடும். தயாரிப்பாளர் விநியோகஸ்தர் தற்கொலைகள் குறையும்.

செல்பேசி ரிங் டோன், காலர் ட்யூன் வினோதங்கள் அகலும். இளம் கதாநாயகர்களைத்தேடி சென்னைக்கு ரயிலேறும் பதின்வயது பெண்டிர் எண்ணிக்கை குறையும். நமது தேசிய அடையாளமான பஞ்ச் டயலாக்கள் வழக்கொழியும்.

க்ரேஸி மோகன், எஸ்.வி.சேகர் நாடகங்களும், சங்கீத கச்சேரிகளும், நாட்டிய அரங்கேற்றங்களும் முக்கியத்துவம் பெறும். வீட்டிலிருக்கும் பெண்களின் சீரியல் அழுகை மேலும் அதிகமாகும். கோயில்களில் மட்டும் பாலபிஷேகம் நடக்கும். இது போன்ற சினிமா சார்ந்த தொடர் பதிவுகள் பெருகும்.

மதன், சுஹாசினி மழுப்ப வேண்டிய அவசியமில்லை. வசனமெழுதும் எழுத்தாளர்கள் கதாநாயகன், இயக்குநர் புராணம் பாடுவது நிற்கும். நடிகைகள் த‌விர்த்து பெண் கவிஞர்களுக்கு கோயில் கட்டுவார்கள். எழுத்தாளர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைப்பார்கள் (இது மட்டும் நப்பாசை).

எல்லாவற்றுக்கும் மேலாக நேரடியாக சினிமாவை மட்டுமே நம்பி வாழும் சில ஆயிரம் தொழிளாலர்கள் வீட்டில் அடுத்த வேளை அடுப்பெரியாது.

பின்குறிப்புகள்:
1. பதினொன்றாவது கேள்வி தான் மூலவர் - மற்றவை உற்சவ மூர்த்திகள்.
2. இத்தொடர் பதிவுக்கு வித்திட்ட நாகார்ஜுனன் அவர்களுக்கு நன்றி.
3. இப்பதிவைத்தொடர இவர்களை அழைக்கிறேன்:

Comments

good da..!! can't comment everything..!! (i'm busy :-))
some questions for u?
1. wot u think abt Vaarnam Aayiram? ( be frank; i hope so.)
2.I believe you dont tease vijay here (Q.10) :-)
3. some more ur thoughts about Fashion (Movie).
4. I m worried abt ur musical judgement..:-)
viki said…
hahaha..minus oru vayadhil!!!super !
.இன்று Changeling பார்த்தேன்.மகனை தொலைத்த தாயின் கண்ணீர் மனதை என்னவோ செய்து விட்டது.Gia படத்திற்கு பிறகு மிகவும் ஆழமான கதாபாத்திரம் Angelina Jolie க்கு .அருமையாக செய்திருக்கிறார்.பல இடங்களில் கண்ணீர் விட வைத்து விட்டார்.ஆனால் இந்த படம் ஒரு ஆஸ்கார் கூட வாங்கவில்லை (ஜோலிக்கு நிச்சியம் கொடுத்திருக்க வேண்டும்).ஆனால் ஆழமான உணர்வுகள் இல்லாத slumdog போன்ற படங்கள் எட்டு ஆஸ்கார் வாங்கும் போது நகைக்கவே தோன்றுகிறது.(ருத்ரன் அவர்கள் கூட இதையே சொல்லியிருந்தார்).அதென்னவோ பெண்களின் உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் மனதை உலுக்கி விடுகிறது(ஹிந்தியில் பாஷன் படத்திற்கு பிரியங்காவும் கங்கனாவும் இரண்டு தேசிய விருதுகள் வாங்க அதுவே காரணம்..அவ்வாறு பல படங்கள் சொல்லலாம்.நன்றி.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்